தமிழீழம்தான் தமிழருக்கான தீர்வு - எமது தலைவிதியை நாமேதான் தீர்மானிக்க வேண்டும்



எமது தலைவிதியை நாமேதான் தீர்மானிக்க வேண்டும்

! அதை எதிரிகளோ, துரோகிகளோ, சந்தர்ப்பவாதிகளோ தீர்மானிக்கக் கூடாது !

சுயநலமிக்க உலக நடைமுறைக்குள் எமது இனத்தின் விடுதலை முடக்கப்பட்டிருக்கின்ற இன்றைய நிலைமையில், அதிலிருந்து உடனடியாக மீளவேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கின்றது. உலக வரலாற்றில் எந்தவொரு தேசத்தின் விடுதலையும் மிக இலகுவாக கிடைத்ததாக சரித்திரம் இல்லை. அனைத்து விடுதலைப் போராட்டங்களும் பல தியாகங்களையும், சோதனைகளையும், சவால்களையும் தாண்டியே வெற்றி பெற்றன. சவால்களையும், சோதனைகளையும் தாண்டமுடியாத பல விடுதலைப்போராட்டங்கள் தோற்றுப்போன வரலாறுகளும் உண்டு.

இதுவரை நமது தமிழீழ விடுதலைக்காக நாம் இழந்தவை அதிகம். விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் பன்மடங்கு வரலாம். ஆனால், இறுதிவரை நம் விடுதலை உணர்வினைமட்டும் சிறிதளவேனும் இழக்கக் கூடாது. சவால்களை எதிர்கொண்டு, இழப்புக்களையும் வலிகளையும் தாங்கி விடுதலை அடையும்வரை போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு தளராத மனவுறுதியுடன் இறுதிவரை போராடினால்தான் விடுதலையென்ற இனிய விடியலை நாம் காணமுடியும்.

இலங்கை சுதந்திரம் பெற்றதன் பிற்பாடு, சிங்களவர்களால் தமிழர்கள் மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்டு, பின்னர் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்தொழித்து இலங்கையை தனிச்சிங்கள நாடாக ஆக்குவதற்கு முனைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதற்கெதிரான தமிழர்களின் அகிம்சைவழிப் போராட்டங்கள் பயனற்றுப்போன யில்தான் "ஆயுதப்போராட்டம்" என்பது முனைப்புப்பெற்றது.

தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் தலைமையிலான இந்திய அரசும் தனது ஆதரவினைக் கொடுத்திருந்தது.ஆனால் துரதிஷ்டவசமாக அவரது மறைவின் பிற்பாடு காலப்போக்கில் இந்தியாவின் ஆதரவு என்பதும் தமிழரிடமிருந்து கைநழுவிப்போனது. தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கென இருந்த ஒரேயொரு சர்வதேச ஆதரவும் அற்றுப்போய்விட்ட நிலையில் தமிழர்கள் தனித்துநின்றே போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அன்றிலிருந்து இன்றுவரைக்கும் எந்தவொரு சர்வதேச நாடும் தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. மாறாக, சிங்கள அரசிற்கு தமது முழு ஆதரவினையும் வழங்கி தமிழரின் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கவே முற்பட்டன. சுயநலமிக்க சர்வதேச நாடுகளின் செயற்பாடுகளினால் தமிழரின் போராட்டத்திற்கு ஏற்படுத்தப்பட்ட சவால்கள் சிங்களத்தினால் ஏற்படுத்தப்பட்ட சவால்களையும் விஞ்சின. சர்வதேச நாடுகளின் இரட்டைவேடம், துரோகத்தனங்களினால்தான் இன்று எமது போராட்டம் பெரும் பின்னடைவைச் சந்தித்து நிற்கின்றது.

முழு உலகமுமே கைகட்டி வேடிக்கை பார்த்துநிற்க, தமிழர்கள் அநியாயமாக கொன்றொழிக்கப்பட்டார்கள். மனிதநேயம், மனித உரிமைகள் என வாய்கிழியப் பேசும் ஐ.நா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களும், உலக நாடுகளும் சிங்கள அரசின் அப்பாவித் தமிழர்கள் மீதான கொலைவெறியாட்டத்தினை தடுத்துநிறுத்தாமல், தமது மறைமுக ஆதரவினையே கொடுத்திருந்தார்கள். குறிப்பாக முள்ளிவாய்க்கால் சம்பவம், அதாவது ஒரு பேரழிவு நடந்தேறப்போகின்றது என்பதனை முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதை தடுத்துநிறுத்தவோ அல்லது அப்பாவி மக்களைக் காப்பாற்றவோ எந்தவொரு நாடும் முயற்சிக்கவில்லை என்பது கவலைக்குரியது. ஓயாத அலைகள்-03 நடவடிக்கை மூலம் புலிகள் ஆனையிறவினைக் கைப்பற்றிய பின்னர் யாழ் நகரின் நுழைவாயிலினை எட்டிநின்று யாழ்குடாநாட்டில் இருந்த முப்பதினாயிரம் படையினரையும் முற்றுகையிட்டிருந்தபோது அப்படையினரினைக் காப்பாற்ற பாய்ந்தடித்து உதவ முன்வந்த இந்தியா இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் மிகப்பெரிய பேரழிவு ஆபத்துக்குள் சிக்கியிருந்தபோது அவர்களைக் காப்பாற்ற பெயரளவுக்கேனும் முயற்சிக்கவில்லை. அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் கைவிரித்து நிற்க அவர்களின் மெளனம் சிங்கள அரசிற்கு சம்மதத்தினை தெரிவிக்க நடந்தேறியதுதான் வன்னி அவலம். அதன்பின் அப்போர்க்குற்றங்களை மூடிமறைக்கவும், சிங்கள அரசினைக் காப்பாற்றவும் அதன் பங்காளிகளாய் இப்பொழுதும் அயராது முயற்சிக்கின்றனர். அது அவர்களின் சுயநலன்களுக்கானதாகவே அமைந்தாலும் உலக நீதியின் மீதுள்ள நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக்கி இருக்கின்றது. அண்மையில் அமெரிக்காவின் செனட் சபையினால் வெளியிடப்பட்ட கொள்கையறிக்கையும் இதனையே வெளிப்படுத்துகின்றது. இவ்வாறான செயற்பாடுகளால் ஈழத்தமிழர்கள் விடயத்தில் சர்வதேசம் இழைத்த தவறினை, உலக நீதியின்மேல் ஏற்பட்டுள்ள சந்தேகத்தன்மையினை, "தமிழர்கள் மீதான இலங்கையின் இன அழிப்பு : அனைத்துலக சட்டங்களின்கீழ் தமிழர்களின் உரிமைகளைக் காப்பதில் அனைத்துலகத் தோல்வி" ( The Tamil Genocide by Srilanka : The Global failure to Protect Tamil Rights Under International Law ) என்ற தனது நூலின் மூலம் அனைத்துலக சட்டவல்லுநரும் பேராசிரியருமான பிரான்சிஸ்.ஏ.போய்ல் ( Francis .A. Boyle ) அவர்கள் வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றார்.
இன்றுள்ள உலக நடைமுறைப்படி அனைத்து நாடுகளுமே தம் நாடு சார்ந்த சுயநலக் கொள்கைகளுடனேயே செயற்படுகின்றன. இவ்வாறிருக்கையில், ஈழத்தமிழர்களின் விடயத்தில் சர்வதேசம், தமிழருக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் நியாயமாக செயற்படுமென்பது கேள்விக்குரியதாகவே இருக்கும்.

தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக, பலமாக இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு பெரும் பின்னடைவினைச் சந்தித்து அவர்களின் செயற்பாடுகள் முற்றுமுழுவதுமாக இல்லாமற்போய்விட்டதாக சொல்லப்படும் இன்றைய நிலைமையில், தமிழருக்கான நிரந்தரத்தீர்வு என்ற பெயரில் தீர்வில்லாத மிக மட்டமான தீர்வினை முன்வைத்து அதன்மூலம் தமிழர்களை திருப்திப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அந்த மட்டமான தீர்வினை வாய் நிறைய புன்னகைதவழ இரு கையேந்தி வாங்கிக்கொண்டு "தமிழருக்கான தீர்வு கிடைத்துவிட்டது" என உலகம் முழுதும் தம்பட்டமடிக்க தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்ற பெயரில் ஒரு தரப்பினர் சிங்கள அரசினாலும், இந்தியா மற்றும் சில நாடுகளாலும் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டு வருகிறார்கள். அதில் துரோகிகளும், விலைபோனவர்களும், சந்தர்ப்பவாதிகளும்தான் அடங்கியிருப்பார்கள் என்பது வெளிப்படையாகவே ஊகித்துக் கொள்ளக்கூடிய விடயம்.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், சிங்களத்தின் இராணுவவெற்றி பங்குபோடப்பட்டு அதன் பங்காளிகளாக தமிழின அழிப்பின் நாயகர்கள் மஹிந்தவும், சரத் பொன்சேகாவும் தேர்தல் களத்தில் எதிரெதிராக நிற்பது தென்னிலங்கையில் சுவாரஷ்யமான அரசியல் நிலைமையினை தோற்றுவித்துள்ளது.
ஆனால், யார் அதிகாரபீடம் ஏறினாலும், தமிழருக்கு நியாயமான தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதனை தமிழர்கள் கடந்தகால வரலாறுகளின் மூலம் நன்கே உணர்ந்திருக்கின்றார்கள் என்பதோடு தம் இனத்தின் இரத்தக்கறைபடிந்தவர்கள் நிற்கும் இத்தேர்தலில் "எவர் வந்தால் என்ன?!" என்ற எண்ணத்தோடு பெரும்பாலும் ஆர்வமற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள். ஆனாலும், போடப்படும் தமிழர் வாக்குகள் அனைத்தும் மகிந்த மாத்தையாவை பழிதீர்க்கும் நோக்குடனேயே வாக்குப்பெட்டிகளில் நுழையும் என்பதும் உறுதி.

சர்வதேச நாடுகளும் தம் பங்கிற்கு தமது சுயநலன்களுக்கு ஏற்றவாறாக யார் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு தமது ஆதரவினை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் காட்டிவருகின்றன. பெரும்பாலும், ஜனாதிபதித் தேர்தலின் பின் நாடாளுமன்றத் தேர்தலும் நடாத்தப்பட்டு, அதன்பின் தமிழருக்கான தீர்வு நாடகம் அரங்கேற்றப்படலாம். அதை மகிந்த சகோதரர்கள் அரங்கேற்றுவார்களா? அல்லது ரணில் - பொன்சேகா கூட்டணி அரங்கேற்றுமா என்பதனை தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும். எவர் தீர்வை முன்வைத்தாலும் தீர்வு என்ன என்பது தொடர்பிலும் அதனை தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற பெயரில் ஏற்றுக்கொள்ளப்போவது யார்? என்பது தொடர்பிலும் ஈழத் தமிழ்மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம்.

இன்று, தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூட தமிழர்களின் மத்தியில் தனது பிரதிநிதித்துவத்தினை இழந்து நிற்கின்றது. தமது நிலையில்லாத முடிவுகளாலும், விலைபோகும் தன்மையினாலும் தமக்குரிய ஸ்தானத்தினை இழந்து, நம்பிக்கைத்தன்மையினை இழந்து சிங்களத்தினதும் இந்தியாவினதும் தாளத்துக்கு ஆடும் கூத்தாடிகள்போல் நடந்துகொள்வது உண்மையிலேயே கேவலமான ஒரு விடயம். இதற்குள்ளும் இலங்கையின் பாராளுமன்றத்தில் திரு.கஜேந்திரன் அவர்கள் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமிழீழத் தேசியம், தமிழரின் வரலாற்று உரிமை தொடர்பாக துணிச்சலாக தெரிவித்திருந்த கருத்துரைகள் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய, வரவேற்கத்தக்க விடயந்தான்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புமேல் நமக்கிருக்கின்ற நம்பிக்கையை இழக்கின்ற நிலைமையை அவர்களே ஏற்படுத்திவருகின்றார்கள். தமிழர்களின் வாக்கு வலிமையினால் ஒன்றிணைந்த கூட்டமைப்பு... இன்று தமது சுயநலன்களுக்காக கூறுபட்டு குழறுபடிபண்ணி நிற்பதானது... வருந்தத்தக்கதும், கண்டிக்கத்தக்கதுமானதாகும். தமிழரின் தலைவிதியை, தன்மானத்தினை அடகுவைக்க....,விலைபேச இவர்கள் யார்??? என்ற கேள்வியுடன்... அவர்களுக்கான தீர்ப்பை தீர்மானிக்கப்போவதும் நம் தமிழ் மக்களே!

"தமிழர்களுக்கான தீர்வு" என்பது தமிழர்களின் சுயநிர்ணய உரிமை,பூர்வீக நிலப்பரப்பு, கலாச்சார பாரம்பரிய விழுமியங்கள் என்பவற்றினை உறுதிப்படுத்துவதுடன் மிக முக்கியமாக, தம்மைத் தாமே ஆளும் உரிமையை அளிப்பதாக அமையவேண்டும். அதனைத் தவிர்த்து சில்லறைத்தனமான விடயங்களை அடக்கிய தீர்வு முற்றாக நிராகரிக்கப்படவேண்டியது. மீறி அதைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களானால், காலப்போக்கில் சிங்கள ஆதிக்கத்தின் நிரந்தர அடிமைகளாக தமிழர்கள் ஆகவேண்டிய இழிநிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாததாகிவிடும்.
தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை வலியுறுத்தி தமிழர்களின் ஒரே விருப்புத் தீர்வாக"தமிழீழம்" என்பதே அமையும் என்பதனை சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்த,தெரியப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் வரவேற்கப்படவேண்டியவை. வெறும் வாக்குப் பதிவுகளோடு இவை நின்றுவிடாமல், ஈழத் தமிழர்கள் தனித்து நாடு அமைத்து, தம்மைத்தாமே ஆளும் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கு தமிழினத்துக்குள்ள வரலாற்று உரிமையை சர்வதேசத்திற்கு வலியுறுத்தி அவ்வுரிமையை வென்றெடுப்பதற்கு தொடர்ந்தும் பலவழிகளில் போராடும் வகையிலும் தொடரப்படவேண்டும்.

இத்தனை வருடங்களாய் போராடியதும், இவ்வளவு தியாகங்களை பண்ணியதும் சிங்கள வல்லாதிக்கம் திணிக்கும் மட்டமான தீர்வை ஏற்றுக்கொள்வதற்காக அல்ல... நமது தாய்மண்ணின், நமது தமிழினத்தின் விடுதலைக்காகவும் விடிவுக்காகவும் தான்!

எம் இனத்தின் தலைவிதியை நாமேதான் தீர்மானிக்கவேண்டுமே தவிர, அதை தீர்மானிப்பது எதிரியாகவோ அல்லது ஈனத் துரோகிகளாகவோ, சுயநலமிக்க சர்வதேச சதிகார நாடுகளாகவோ இருக்கக்கூடாது. அடிமைப்பட்டுப் போவதற்காகவா... இத்தனை நாளும் போராடினோம்? இவ்வளவு இழப்புக்களையும் தாங்கிக்கொண்டோம்?

எனவே, ஈழத் தமிழர்களிற்கான ஒரே தீர்வாக "தமிழீழம்" என்ற தனிநாட்டுத் தீர்வு மட்டுமே அமைய முடியும் என்பதனை இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுவோம்! அவ்வாறில்லாமல் வேறேதும் "வெற்றுத் தீர்வு" தமிழர்கள்முன் வைக்கப்பட்டால், அதனை முற்றுமுழுதாக நிராகரித்து "தமிழீழம்" என்ற இலட்சியத்தினை அடையும்வரை போராட்டம் தொடரும் என்பதை அறிவிப்போம்!

"தமிழீழம்தான் எமது தீர்வு" என்ற ஆணித்தரமான கோரிக்கையுடன் உலகெங்கும் உள்ள தமிழர்கள் போராடத் தயாராகுங்கள்!

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

பருத்தியன்...

மாவீரர் நாள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம்தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுறுத்தும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.


வரலாறு
விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.

தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

தமிழீழம்
மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெறுகின்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப் படுகிறார்கள்.



கொடியேற்றுதல்

மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத்தேசியக் கொடி தமிழீழத் தேசியத்தலைவர் வே. பிரபாகரன் அவர்களாலும், மாவீரர் குடும்ப உறுப்பினர்களாலும் தமிழீழத்தில் உள்ள அந்தந்தத் துயிலும் இல்லங்களில் ஏற்றப்படும். புலம்பெயர் நாடுகளில் மாவீரர் குடும்ப உறுப்பினார்களால் நிகழ்வு நடைபெறும் மண்டபத்தில் ஏற்றப்படும்.

கொடியேற்றப்படும் போது புதுவை இரத்தினதுரை அவர்களால் எழுதப்பெற்ற ஏறுது பார் கொடி ஏறுது பார்... என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.

மாவீரர் நாள் உரை



மாவீரர்நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்படுகிறது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலி பரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்றுக் கொண்டோர்ர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு செவிமடுக்கப்படுகிறது.


மாவீரர் நாள் பாடல்

மாவீரர் நாள் அன்றும் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். இந்த பாடல் புதுவை இரத்தினதுரை அவர்களால் இயற்றப்பட்டது. வர்ணராமேஸ்வரன் அவர்கள் பாடியது. ஈகச்சடரேற்றும் பொழுது இது பாடப்படுகிறது, அல்லது ஒலிபரப்படுகிறது.[1] இந்தப் பாடல் பின்வருமாறு தொடங்கிறது:



மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!


மாவீரர் குடும்ப கௌரவிப்பு
மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கௌரவிக்கப் படுகிறார்கள். முன்னர் இந்தச் செயற்பாடு தமிழீழத்தில் மட்டுமே கடைப்பிடிக்கப் பெற்றது. தற்போது சில ஆண்டுகளாக வெளிநாடுகளிலும் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெறுகிறது.

தமிழீழத்தில்
ஒரு மாவீரனின் நினைவுச்சின்னம் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கௌரவ விருந்தினர்களாகக் கவனிக்கப் படுவார்கள்.










புலம்பெயர் நாடுகள்
அதற்கென மாவீரர் வாரத்தின் ஒரு நாளையோ அன்றி மாவீரர் நாளையோ தேர்ந்தெடுத்து அந்த நாளில் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப் படுவார்கள்.







கார்த்திகைப் பூ
கார்த்திகைப் பூதேசியத்தின் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இலங்குவது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டு கலாச்சாரத்தின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக்கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு.



இந்த வகையிலேயே தமிழர்களின் தேசியப்பூவாக, கார் காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர்.

ஆண்டுவாரியான எண்ணிக்கை

விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் ஆண்டு வாரியான பட்டியல் பின்வருமாறு:

ஆண்டு மாவீரர் எண்ணிக்கை
1982 01
1983 15
1984 50
1985 188
1986 320
1987 518
1988 382
1989 419
1990 965
1991 1622
1992 792
1993 928
1994 378
1995 1508
1996 1380
1997 2112
1998 1805
1999 1549
2000 1973
2001 761
2002 46
2003 72
2004 80
2005 56
2006 1002
2007 860 அக்டோபர் வரை
2008
2009

படை நடவடிக்கைகளின்படி மாவீரர்களின் எண்ணிக்கை
படைநடவடிக்கைகளின்படி வீரச்சாவடைந்த மாவீரர்கள் பட்டியல் பின்வருமாறு:

நடவடிக்கை மாவீரர் எண்ணிக்கை
ஆகாயக் கடல் வெளிச் சமர் 604
மணலாறு 233
தவளை நடவடிக்கை 460
கொக்குத்தொடுவாய் 175
இடிமுழக்கம் 181
சூரியகதிர் (ரிவிரச) 438
ஓயாத அலைகள் ஒன்று 315
சத்ஜெய 2 நடவடிக்கையும் அதன் மீதான எதிர்த்தாக்குதல்களும் 100
சத்ஜெய 2 நடவடிக்கையும் அதன் மீதான எதிர்த்தாக்குதல்களும் 133
பரந்தன் ஆனையிறவு 193
வவுணைதீவு 103
கிளிநொச்சி, பரந்தன் மீதான ஊடுருவித் தாக்குதல் 300
ஓயாத அலைகள் இரண்டு 403
ஜெயசிக்குறு படைநடவடிக்கையும் அதன்மீதான எதிர்த்தாக்குதலும் 2146
ஓயாத அலைகள் மூன்று 1336
ஓயாத அலைகள் நான்கு 181
தீச்சுவாலை முறியடிப்புச் சமர் 141

நன்றி : கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா

பழியைத் துடைக்க பகீரதப் பிரயத்தனம் கலைஞரின் முயற்சி பலிக்க வாய்ப்பில்லை

ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழக முதல்வர் கலை ஞர் கருணாநிதியின் "அங்கிடுதத்தி"த் தனத்தால் அவ ருக்குத் தீராப்பழி ஏற்பட்டுவிட்டது. "உலகத் தமிழினத் தின் தலைவர்" என்று தன்னைத் தமிழினம் மதிக்கும் என்றுதான் இதுகாறும் கருதி வந்தார் கலைஞர் கருணா நிதி. ஆனால் ஈழத் தமிழர்கள் வரலாற்றில் பேரவலத்தை மிக மோசமான போரியல் அழிவுகளை சந்தித்துக் கொண்டிருந்தபோது, தன்னுடையதும் தனது குடும்பத் தினதும் சுயநல அரசியலுக்காகத் தமிழர்களை நட்டாற்றில் விட்டு, பெரும் பழியைச் சுமந்து கொண்ட அவரை "தமிழினத்தின் தலைவிதி" என்று நொந்து சபிக்கும் நிலையிலேயே உலகத் தமிழர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசியல் அணிகள் தொடர்பான கணக்கு வழக்குகள், கூட்டல் கழித்தல்கள், இன்றைய நிலையில் கலைஞர் கருணாநிதியின் காட்டில் நல்ல மழை என்ற நிலைமையை ஏற்படுத்தினாலும் ஈழத் தமிழர்களை அந்தரிக்க விட்டு அதற்காகத் தமது அரசியலில் "அந்தர் பல்டி" அடித்த கலைஞரை உலகத் தமிழினம் எந்தக் கட்டத்திலும் மன்னிக்காது என்பது அவருக்கு நன்கு தெரியும்; புரியும்.

எப்படியும் தமது இறுதிக் காலத்துக்கு முன்னர் அந்தப் பழியைத் துடைத்து அழித்துவிடலாம் என்ற நப்பாசை யில் அவ்வப்போது சில ஆரவாரங்களைப் பண்ணுவது இவரது அரசியல் தகிடுதத்தமாக இருந்து வருகிறது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சர்வதேச செந்தமிழ் மாநாடு என்றெல்லாம் "கப்ஸா"பண்ணிப் பார்த்தார். ஈழத் தமிழர் விடயத்தில் தம்மீது விழுந்துள்ள பழியைத் துடைப்பதற்கு அவர் நடத்தும் கபட நாடகமே இந்த மாநாடு என்பது பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டமையை அடுத்து சற்று அடங்கிப்போனார்.

இப்போது "நம் மௌன வலி யாருக்குத் தெரியப் போகின்றது?" என்ற தலைப்பில் ஈழத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்து ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரவலத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் தலைவரையும் குற்றம் சுமத்தி அவர் வெளியிட்ட அறிக்கையும் இதேமாதிரியில் விவகாரத்தைத் திசை திருப்பும் எத்தனமின்றி வேறில்லை.

இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்து கொண்டிருந்தபோது கொன்றொழிக்கப் பட்டுக் கொண்டிருந்தபோது அத்தகைய கொழும்பு அரசின் அத்துமீறிய போக்கை ஆதரித்து, அங்கீகரித்து, அதற்கு உதவி, ஒத்தாசை வழங்கி, உறுதுணையாகச் செயற்பட்டது இந்திய மத்திய அரசு புதுடில்லி நிர்வாகம்.

இலங்கை விவகாரத்தில், அப்படி இந்திய மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளே தனது மாநில அரசின் முடிவும் கூட என்றும் பகிரங்கமாக அறிவித்ததன் மூலம், இலங்கையின் தமிழின அழிப்புக்குத் துணைபோன, இந்திய மத்திய அரசுக்கு முழு அளவில் முண்டு கொடுத்து, அந்த மத்திய அரசின் பழி பாவத்தில் தன்னையும், தனது இயக்கத்தையும், கட்சிக்காரர்களையும் பங்குதாரர் ஆக்கிக் கொண்டார் கலைஞர்.

இப்போது அதிலிருந்து வெளியே வர பழியைத் துடைக்க பகீரதப் பிரயத்தனம் பண்ணுகின்றார். ஆனால் அவை எல்லாம் எடுபடாமல், அவரின் கோமா ளித்தனங்களாக அர்த்தம் பண்ணப்படுகின்றமைதான் அவருக்கு இன்று நேர்ந்துள்ள அவலமாகும்.
இலங்கைத் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட போது, அதற்குத் துணைபோன புதுடில்லி ஆட்சிப் பீடத்துக்கு முண்டு கொடுத்து, தனது அரசியல் பிழைப்பை லாபகரமாக நடத்திய கலைஞர், அச்சமயம் மறுபக்கத்தில், மனித சங்கிலிப் போராட்டம், தமிழக எம்.பிக்கள் கூண்டோடு இராஜிநாமா என்ற கபட நாடகம், மூன்று மணி நேரம் நடத்திய சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்ட நடிப்பு, இலங்கையில் யுத்த நிறுத்தம் வந்துவிட்டது என்ற பித்தலாட்ட அறிவிப்பு, பல கட்சிப் பிரதிநிதிகளையும் புதுடில்லிக்குக் கூட்டிச் சென்று இந்திய மத்திய அரசை மிரட்டுவது என்ற கோணங்கித்தனம் என அவ்வப்போது அடித்த அரசியல் "பல்டி"கள் அல்லது "ஸ்டண்ட்"கள் பலப்பல.
அவை எவையுமே அப்போதும் சரி, பின்னரும் சரி எடுபடவேயில்லை என்பதுதான் யதார்த்தம்.

இப்படித் தீராப்பழி தம்மீதும், தமது குடும்பம் மீதும் விழுந்திருப்பதால், அதையெண்ணி இப்போதாவது நொந்து அழுவதற்கான மனச்சாட்சியை அவருக்கு இறைவன் கொடுத்திருக்கின்றான் போலும். அதனால்தான், தமது பிந்திய இந்த அறிக்கைக்குள் வேறு ஏதோ உளறிக்கொட்டியிருந்தாலும் கூட, அதன் தலைப்பை "நம் மௌன வலி யாருக்குத் தெரியப் போகின்றது?" என்று வரைந்திருக்கின்றார் அவர்.

வன்னியிலே தமிழினம் கதறக் கதறக் கொன் றொழித்து அழிக்கப்பட்டபோது, அதன் கதறலை செவி மடுக்கத் தவறி அதன் அவலத்தை உணரத் தவறி சுயலாப அரசியல் நடத்திய இத்தகைய தலைவர்களுக்கு உண்மையில் மனச்சாட்சி இருந்து, அதில் ஏற்படக்கூடிய மௌனவலியை உணரும் பக்குவம் அவர்களின் பிரக்ஞைக்கு உண்டா என்பது சந்தேகமே. அப்படி அவர் களுக்கு மௌன வலி நேர்ந்தாலும் அதைத் தமிழினம் உணர்ந்து, புரிந்து கொள்வதற்கு அதில் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.

17 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தேர்தலைச் சந்திக்க மஹிந்தர் தயாரா?


"ஆடு நனைகின்றது என ஓநாய் அழுததாம்!" இந்தப் பேச்சு மொழி போல இருக்கின்றது நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற சுதந்திரக் கட்சி மாநாட்டில் அக்கட்சியின் தலைவ ரும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியுமான மஹிந்த ராஜ பக்ஷ, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குறித்து அதன் பெயர் குறிப்பிடாமல் பூடகமாகத் தெரிவித்த கருத்து.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பிரதான கட்சி, ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்காக பல சிறிய கட்சி களின் பின்னாலும், தரப்புகளின் பின்னாலும் ஓடித்திரிவது கவ லைக்குரியது, வேதனைக்குரியது என்ற சாரப்பட அவர் கூறிய கருத் துத்தான் ஆடு நனைவது குறித்து ஓநாய் கவலைப்படுகின்ற பேச்சுமொழியை நமக்கு நினைப்பூட்டி நிற்கின்றது.
ஒரு ஜனநாயக நாட்டில் செயல்திறன் மிக்க எதிர்க்கட்சியின் அவசியம் குறித்து இந்த மாநாட்டில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது இங்கு இல்லாமை குறித்து நீலிக்கண்ணீரும் வடித் திருக்கின்றார். நல்ல கேலிதான் போங்கள்........!

இந்த நிலைமைக்கு யார் பிரதான காரணம்? யார் சூத்திர தாரி? எதிர்க்கட்சிகளும் அவற்றின் தலைவர்களுமா? அல்லது பதவி ஆசை காட்டி ஆள்களை கட்சி தாவ வைக்கும் கைங்கரி யத்தை இலங்கையின் சரித்திரத்திலேயே ஒப்புயர்வற்ற நிலை யில் கனகச்சிதமாக சாதனையாகச் செய்து முடித்திருக்கும் ஜனாதிபதியா?

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு இன்று சுமார் நூற்றிப்பத்து அமைச்சர்கள். "பல்டி" அடித்தவர்கள் எல் லோருக்கும் "அமைச்சர் பதவி" என்ற எலும்புத்துண்டை வீசும் ஜனநாயக அரசியலின் கீழ்த்தரத்தைக் குடைந்தெடுத்து அரி யணை ஏற்றிய "சரித்திர நாயகர்"யார்?

எந்தப் பிரதான எதிர்க்கட்சியைத்தான் இதில் தப்பவிட்டார் அவர்? ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்று எல்லாவற்றையுமே "பதவி ஆசை" என்ற அஸ்திரத்தைப் பயன்படுத்தி, துண்டுபட வைத்த சீமான் அவரன்றோ.....?

ஏதோ இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் அதில் சிக்காமல் எஞ்சி நிற்கின்றது. அதற்கும் காரணம் உண்டு. முன்னர் நெல்லிக்காய் மூடையின் வாய் திறக்காமல் வன்னியில் போடப்பட்ட முடிச்சு அவர்களைச் சிதறவிடாமல் வைத்திருந் தது. இப்போது முடிச்சு அவிழ்ந்துவிட்டதான நிலைமை தோன்றினாலும், சாக்கை விட்டுச் சிதறினால் மிக விரைவில் வரக்கூடிய பொதுத் தேர்தலில் காணாமல் போய்விடுவோம் என்ற பீதியில் நெல்லிக்காய்களே மூடைக்குள் சிதறாமல் தாமாக அடங்கிக் கிடக்கின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சிகளைச் சார்ந் தோருக்கெல்லாம் "அமைச்சுப் பதவி" என்ற ஆசையைக் காட்டி விலைபேசி அக்கட்சிகளை உடைத்தமை மட்டுமல்லா மல், இலங்கைத் தீவில் நீதி, நேர்மையான ஆட்சி மற்றும் சுதந் திரமான தேர்தல்களுக்கான அடிப்படையாக விளங்கும் அரச மைப்பின் 17 ஆவது திருத்தத்தையே நடைமுறைப்படுத் தாமல் இழுத்தடித்து வருகின்றார்.

அப்படிச் செய்துகொண்டு, ஜனநாயகத்தில் பிரதான எதிர்க்கட்சிகளின் பங்களிப்புக் குறித்து "ஆடு நனைவதுபோல" அவர் கவலைப்படுவது அர்த்தமற்றது; அபத்தமானது.
பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. ஜனாதிபதித் தேர்த லுக்கான பொது வேட்பாளராக, முப்படைகளின் சிரேஷ்ட அதி காரி பதவியிலிருந்து இன்று ஓய்வுபெறும் ஜெனரல் சரத் பொன் சேகாவை நிறுத்துவதற்கு ஓடித்திரிவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி மாநாட்டில் பெயர் குறிப்பிடாமல் நையாண்டி செய்துள்ள போதிலும், ஐ.தே.க. தலைமையின் அந்த முடிவு ஜனாதிபதியைக் கலங்க வைத்திருக்கின்றது என்பது மட்டும் வெளிப்படையாகத் தெரிகின்றது.

நேற்று முன்தினம் நடைபெற்ற மாநாட்டில் வைத்துத்தான், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே நடத்துவதா என்பது பற்றிய தமது முடிவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார் எனப் பல தரப்பிலும் கூறப்பட்டு வந்தது. ஆனால் ஜனாதிபதி அத்தகைய அறிவிப்பை விடுக்க வில்லை. அந்த விவகாரத்தைத் திறந்த விடயமாக அவர் விட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்தும் எண்ணத்தை அவர் அங்கு அறிவிக்காமல் கோடி காட்டாமல் விட் டமைக் குப் பல்வேறு காரணங்கள் ஊகமாகக் கூறப்படுகின்றன.
ஜனாதிபதித் தேர்தல் பற்றிய அறிவிப்பை சோதிட சாஸ் திரக் கணிப்புகளின்படி சுபநேரத்தில் விடுக்க அவர்காத் திருக்கின்றார். ஏழு, எட்டு நாட்களில் அந்த அறிவிப்பு வரும் என்கின்றனர் ஒரு சாரார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே நடத்துவதற் கான உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுப்பதற்கான அதி காரம், அவரது தற்போதைய பதவிக் காலத்தின் நான்கு ஆண் டுகள் முடியும்போது அதாவது இன்னும் சில தினங்களில் அவருக்கு வரும். அப்போதே அந்த அறிவிப்பை அவர் விடுப்பார் என்கின்றனர் வேறு சிலர்.

ஆனால், அத்தேர்தலை முற்கூட்டியே நடத்தி வெற்றி வாகை சூடும் உறுதியோடு இருந்த ஜனாதிபதிக்கு, எதிர்க்கட் சிகளின் பொதுவேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவின் திடீர் அரசியல் எழுச்சி கிளம்பியிருக்கின்றமை பெரும் அதிர்ச் சியைத் தந்துள்ளது. அதனால் தமது முன்னைய முடிவு குறித்து மீள் பரிசீலனை செய்வதற்காக அவர் அத்தேர்தல் பற்றிய அறிவிப்பை விடுக்கும் முன்னைய திட்டத்தில் இருந்து சற்றுப் பின்வாங்கியிருக்கின்றார் என்கின்றன எதிர்க் கட்சி வட்டாரங்கள்.

இதில் எதுவும் உண்மையாக இருக்கலாம். ஆனால், நேற்று முன்தினம் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாநாட்டில், "ஜனா திபதித் தேர்தலா, பொதுத் தேர்தலா, எது முதலில் நடத்தப்பட வேண்டும்?" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எழுப்பிய கேள்விக்கு, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான அவரது கட்சி உறுப்பினர்கள் "ஜனாதிபதித் தேர்தலே!" என்று ஏக குரலில் பலத்த ஆரவாரத்தோடு பதிலளித்த பின்னர், அத் தேர் தலை முற்கூட்டியே அறிவித்து நடத்தாமல், அவர் பின் வாங்க முடியாது என்பது திண்ணம்.
அப்படிப் பின்வாங்குவாராயின், எதிர்க்கட்சிகளின் பொது வேட் பாளர் என்ற எழுச்சி கண்டு அவர் அதிர்ந்து போய்விட்டார் என்று தான் அர்த்தம்.

அதேசமயம், நீதியான நியாயமான சுதந்திரமான சுயாதீனமான தேர்தல்களுக்கு வழிசெய்யும் அரசமைப்பின் 17 ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்திக்கொண்டு அத்தகைய தேர்தலுக்கு அவர் செல்வாராயின், ஜனநாயகக் கட்டமைப்பில் எதிர்க்கட்சிகளில் பங்குபணி தொடர் பாக இப்போது "தத்துவம்" பேசும் அவருக்கு, அதற்கான தகுதி உள்ளதாகக் கருதமுடியும். அதற்கு அவர் தயாரா?

வரவிருக்கும் நவம்பர்27... தரவிருக்கும் தகவல்...எதிர்பார்ப்புக்கள் என்னாகும்...???

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் நாள் , மாவீரர் வாரத்தின் இறுதி நாள்; தாயக விடுதலைக்காக தம்முயிரினை ஈந்த மாவீரர்களின் புனிதக் கல்லறைகளில் சிரந்தாழ்த்தி, மலர்தூவி, ஒளிதீபமேற்றும் உன்னதநாள்; நம் தாயக விடுதலைக்காக இதுவரை நாம் இழந்தவற்றை மீள்நினைத்து இழந்த மாவீரர்களின் இலட்சியக் கனவினை ஈடேற்ற அவர் வழிச்சுவடு தொடருவோம் என உறுதியெடுத்துக் கொள்ளும் வீரநாள்; ஈழத்தமிழர்கள் அனைவரிற்கும் ஒரு எதிர்பார்ப்பினைக் கொடுக்கும் நாள்; அன்றுதான் நம் தேசியத்தலைவர் அவர்களின் கருத்துக்களை அவரது உரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் அரிய நாள். அந்நாளில், ஒட்டுமொத்த உலகமுமே தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் என்ன சொல்லப் போகின்றார் என ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்.

ஆனால் இந்த வருடம், தேசியத்தலைவரின் உரையில் என்ன விடயம் இருக்கும் என்பதைவிட தேசியத்தலைவர் அதிமேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உரை நிகழ்த்துவாரா???... இல்லையா??? என்ற கேள்வியுடன்கூடிய எதிர்பார்ப்பே எல்லோர் மத்தியிலும் காணப்படுகின்றது. ஏனெனில், கடந்த மே மாதம் 17ஆம் திகதி முள்ளிவாய்க்கால் துயரச்சம்பவங்களின் பிற்பாடு, தேசியத்தலைவர் அவர்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்குரிய ஐயப்பாடுகளுக்கும் கேள்விகளுக்கும் இன்றுவரைக்கும் தீர்க்கமான,தெளிவான எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. அன்றைய சம்பவத்தின்போது அங்கு இருந்தவர்களால்கூட எதையுமே உறுதியாகக் கூற முடியாதளவுக்கு இப்பொழுதும் அவ்விடயம் மர்மமாகவே தொடர்கின்றது.
இந்த நிலையிலேயே, இம்முறை தலைவர் அவர்களால் வருடந்தோறும் நிகழ்த்தப்படும் மாவீரர்தின உரை நிகழ்த்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை. தமது மான்புமிகு தலைவரின் மீள்வரவுக்காக... அவர் "மீண்டும் வருவார்" என்ற நம்பிக்கையுடன் முழுத் தமிழினமுமே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.



எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கைகள் எதிர்பார்க்கப்படுபவையேயன்றி உறுதியாகக் கூற முடியாதவை. அந்தவகையில், எதிர்வரும் மாவீரர் தினத்தன்று தலைவர் அவர்களின் உரை நிகழ்த்தப்படுமா என்பதும் உறுதியாகக் கூறமுடியாத ஒரு விடயமாகவே காணப்படுகின்றது. இந்த விடயம் இப்படியே இருக்க, தலைவரின் உரை நிகழ்த்தப்பட்டால் அல்லது நிகழ்த்தப்படாவிட்டால் என்ற இரு நிலைமைகளைப் பற்றியும் அதனாலான விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது பற்றியும் அவசியம் ஆராயவேண்டியுள்ளது.

தேசியத் தலைவர் தோன்றி தனது உரையை நிகழ்த்துவாரானால், தமிழர்களுக்கு அதைப்போன்றதொரு மிக மகிழ்ச்சியான விடயம் வேறெதுவுமே இருக்கமுடியாது. இவ்வளவு நாட்களாய் மனமுடைந்துபோய் சோர்ந்துபோய் இருந்தவர்கள் அனைவரையும் அதன்பின் மீள எழுச்சிகொள்ள வைப்பதாக அது அமையும். ஒட்டுமொத்த தமிழர்களும் புத்துணர்ச்சியோடு தலைவன்பின் அணிவகுத்து நிற்கத் தயாராவார்கள். தலைவன் வழிநின்று அடுத்தகட்ட விடுதலைப் போராட்டங்களை மிக எழுச்சியோடு தொடர முனைவார்கள். சிங்கள தேசத்திற்கு அது கலக்கத்தினைத் தோற்றுவிக்கலாம். சர்வதேசத்திற்கு ஆச்சரியத்தினை உருவாக்கலாம். ஈழவிடுதலைப் போராட்டம் மீண்டும் ஒரு முன்னேற்றகரமான பரிமாண மாற்றத்தினைப் பெறலாம். இவையெல்லாம் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் மீண்டும் தோன்றினால் சாத்தியப்படக்கூடிய விடயங்களாக அமையக்கூடியவை.
ஆனால் எதிர்மாறாக, வரவிருக்கும் மாவீரர் தினத்தன்று தேசியத்தலைவர் தோன்றவில்லையாயின், தற்பொழுதும் மனந்தளராமல் இருக்கும் பலரும் மனமுடைந்து சோர்வடைந்து போகக்கூடிய பாதகமான சாத்தியப்பாடுகளும் காணப்படுகின்றன. கடந்த மே 17 தொடங்கி இன்றுவரை தொடரும் மர்மமான கேள்விகளுக்கு தாமாகவே பதில்களை கண்டுகொள்ள எத்தனிப்பார்கள். தலைவர் வருவார் என நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு அந்த ஏமாற்றம் பெரும் மனமுடைவினைக் கொடுக்கலாம். இதன் காரணமாக இனிவரும் காலங்களில் புலம்பெயர் தேசங்களில் தொடரப்படும் மக்கள் போராட்டங்களில் ஒரு தொய்வுநிலைகூடத் தோன்றலாம். பல தரப்பினராலும், புலிகளின் தலைவர் இல்லை என்ற முடிவுகள் எடுக்கப்படலாம். இது இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பெரும் தாக்கத்தினை உண்டுபண்ணக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன .இவ்வாறாக, பல பாதகமான விளைவுகள் தலைவர் அவர்கள் தோன்றாதவிடத்தில் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றன.

மொத்தத்தில், வரவிருக்கும் மாவீரர் தினத்தில் தேசியத்தலைவர் தோன்றி உரை நிகழ்த்த வேண்டும் என்பதே நம் எல்லோருடையதும் அங்கலாய்ப்பாய் இருப்பதனை உணரமுடிகின்றது. மேலோட்டமாகப் பார்க்கும் போதும் அதனாலான விளைவுகளை மேலோட்டமாக நோக்கும்போதும் தேசியத் தலைவர் தோன்றினால் மேலே குறிப்பிட்டதைப் போன்று அனைத்து விதத்திலும் நன்மைகளே என்று தோன்றலாம்.
ஆனால் நாம் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, இன்றைய நிலைமையில் தலைவர் அவர்கள் தோன்றுவதற்கான புறச்சூழ்நிலைகள் உருவாகவில்லை என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளை அறிந்திருந்தும்,அவர்களின் போராட்டம் நியாயமானது என்பதனை உணர்ந்திருந்தும் சர்வதேசம் தமிழர்களின் தாயக விடுதலைப் போராட்டம் சிதைக்கப்படுவதற்கு சிங்களத்திற்கு தனது முழுமையான ஆதரவினைக் கொடுத்திருந்தது. ஏனெனில், தமிழர்களுக்காக போராடிய புலிகளை சர்வதேசம் அச்சத்துடனேயே நோக்கியது. அவர்களின் அபரிதமான வளர்ச்சியும், செயற்திறனும், கட்டமைப்புக்களும் அவர்களை அச்சங்கொள்ள வைத்தன. அத்தோடு நாடுகளுக்கிடையிலான பிராந்திய வல்லாதிக்கம் மற்றும் வர்த்தகப் போட்டிகளும் சேர்ந்துகொண்டன. இவற்றின் காரணமாகவே, புலிகளுக்கு பயங்கரவாத முத்திரையைக் குத்தி, தடைகளை விதித்து அவர்களை அழிப்பதற்குரிய வழிமுறைகளை தேடிக்கொண்டிருந்தது. வன்னி மீதான போரினை சாதகமாக பயன்படுத்தி தமது நீண்ட நாள் கனவினை நிறைவேற்றிக் கொண்டது சர்வதேசம். தமிழருக்கான தீர்வு என்பதனை விட புலிகளை அழிக்கவேண்டும் என்பதிலேயே சர்வதேசம் அதிக கரிசனை கொண்டிருந்தது என்பதனை கடந்த வரலாறு நமக்கு மிகநன்றாகவே புரியவைத்திருக்கின்றது.

வன்னிப் போரின் பிற்பாடு புலிகளின் செயற்பாடுகள் அற்றுவிட்டதான நிலையில், சர்வதேசம் தற்போது தமது கவனத்தினை "தமிழர்களின் தீர்வு" என்பதன்மீது அக்கறைகொள்வதாக காட்டிக்கொள்கின்றது. அவை எந்தளவுக்கு உண்மைத் தன்மையோடு இருக்கும் என்ற சந்தேகம் இருந்தாலும், இவ்வாறான சர்வதேச மாறுதல்கள் தற்போதைய நிலைமையில் அவசியமானவையாகவே கருதப்படுகின்றன. இவற்றின் விளைவாக தற்பொழுது சிங்கள அரசு பெரும் அரசியல்,பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு வருவதனையும் சர்வதேசத்தின் நெருக்குதல்களுக்கு முகம்கொடுத்து வருவதனையும் நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்தியாவின் மெளனம் மற்றும் சீனா, ரஷ்யாவின் சிறீலங்கா ஆதரவுக் கொள்கை என்பன பாதகமானதாக இருந்தாலும் செல்வாக்குமிக்க மேற்குலக நாடுகளின் மாற்றங்கள் ஈழத் தமிழர்களிற்கு சாதகமானதாகவே அமைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் தொடந்தால் அவை எதிர்காலத்தில் மிகச்சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

ஆயினும், சர்வதேசம் புலியெதிர்ப்புக் கொள்கையிலிருந்து இன்னும் விடுபடவில்லையென்பது, புலிகள் மீதான தடைகளை அவர்கள் அகற்றாமல் இருப்பதிலிருந்தும்; ஆயுதப் போராட்டம் மீண்டும் தொடங்கலாம் என்ற அச்சம் சர்வதேச முக்கியஸ்தர்களினால் வெளியிடப்பட்டதிலிருந்தும் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் என்பதனை சர்வதேசம் இன்னும் ஏற்கத் தயாராகவில்லை. தமிழர்களின் பிரச்சினையினையும் அவர்களுக்காக புலிகள் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தினையும் சர்வதேசம் வேறுபடுத்தியே பார்க்கின்றது. தலைவரின் மீள்வரவென்பது புலிகளின் மீள்தோற்றமேயாகும். இந்நிலையில் தலைவர் அவர்கள் வெளிப்பட்டால் சர்வதேசம் தற்போது கொண்டிருக்கும் தமிழர் சார்பான ஆதரவுக் கொள்கையை கைவிட்டு மீண்டும் புலிவேட்டைக்கு புறப்பட்டுவிடும். இதனால் புலிகளின் மீள்தோற்றம் முளையிலேயே கிள்ளியெறியப்படும் அபாயமும் உருவாகும். ஒரு பாரிய பின்னடைவின் பிற்பாடு, தற்போதைய சர்வதேசப் பின்னணியில் புலிகளின் வெளிப்பாடு என்பது தற்போதைக்கு சாதகமாக அமையாது என்பது தற்போதைய யதார்த்தநிலை.
அத்தோடு, முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுதப்போராட்டம் தொடர்ந்திருந்தபோதும், சர்வதேசத்தின் பார்வையில் ஏற்படாத தமிழர் சார்பான மாற்றம் தற்பொழுது ஏற்பட்டுவருகின்றது என்றே சொல்லவேண்டும். சர்வதேச மட்டத்தில் இத்தகைய மாற்றம் ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு அது ஆதரவினை அளிக்கக்கூடியதான சாத்தியங்கள் ஏற்படக்கூடும்.

இதனால் தீர்க்க தரிசனமிக்க தலைவர் அவர்கள் எல்லாவற்றையும் கருத்திற்கொண்டு மீண்டுமொரு சாதகமான நிலைமையில் அல்லது தீர்க்க தரிசனமிக்க அவரது கணிப்புப்படி.. தகுந்த சமயத்திலேயே தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் என்றே எதிர்பார்க்கலாம். அவர் வெளிப்படுவதற்கான புறச்சூழ்நிலைகள் இன்னும் உருவாகாத நிலையில் வருகின்ற மாவீரர்தினம் எவ்வாறு அமையப்போகின்றது?... எவ்வாறு அமைய வேண்டும்?? .... என்பது பற்றிப் பார்ப்போம்.

"மாவீரர் தினம்" என்பது தமிழீழ வரலாற்றில் என்றுமே முக்கியத்துவமிக்க, தமிழரின் வாழ்வோடு ஒன்றிப்போய்விட்ட தினம். இன்னும் எத்தனை ஆயிரம் வருடங்கள் ஆனாலும் கடைசி ஈழத்தமிழன் உயிர்வாழும் வரைக்கும் நினைவு கூரப்படும் இந்த புனித நாள். தன் இனத்துக்காக தம் சுய ஆசாபாசங்களை மறந்து தம் இன்னுயிரையும் துறந்த தியாகத்தின் சிகரங்களை நினைவுகூர நமக்கு வரமாக கொடுக்கப்பட்ட மாவீரர் தினத்தினை இம்முறை ஒரு வித்தியாசமான உணர்வுகளோடு, எதிர்பார்ப்புகளோடு எதிர்கொள்ளக் காத்திருக்கின்றது ஒட்டுமொத்த தமிழினமும்.

நம் தேசத்தின், நம் இனத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களின் கல்லறைகள் இன்று மண்ணோடு மண்ணாக்கப்பட்டிருக்கின்றன. அவை இருந்த அடையாளமே தெரியாமல் துடைத்தழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாவீரச் செல்வங்கள் நமது பிள்ளைகள், நமது சகோதரங்கள்,நமது உறவுகள். இவர்களின் தியாகங்களை வெறும் வார்த்தைகளால் விபரிக்கமுடியாது. தம் வாழ்வையும் உயிரையும் தன் இனத்துக்காகவே கொடுத்த வீரபுருஷர்கள் இவர்கள்.தமிழன் என்று சொல்லி நம்மை தலைநிமிர வைத்தவர்கள். இம்மாவீரர்களின் நினைவுநாளை எழுச்சியோடு அனுஷ்டிக்கவேண்டியது ஒவ்வொரு தமிழனதும் தார்மீகக் கடமை.
ஆனால் இக்கடமை என்பதனையும் தாண்டி, இம்முறை நாம் மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்கப்போகும் முறையினால் சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் பலமான செய்தியொன்றினை சொல்லவேண்டியுள்ளது.

அதாவது, சர்வதேசத்தாலும், சிங்களத்தாலும் "பயங்கரவாதிகள்" என பொய்முத்திரை குத்தப்பட்ட விடுதலைப் புலிகள், நம் மாவீரர்கள் ஏதோ விண்வெளியிலிருந்து குதித்தவர்கள் அல்லர். நமது சொந்த உறவுகள். தம் இனத்தின் அவலத்தினைக் கண்ணுற்று தாங்கமுடியாமல் போராட புறப்பட்டவர்கள். நமக்காகவே தம்முயிரையும் துச்சமென நினைத்து தியாகம் பண்ணியவர்கள். அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை. நம் விடுதலைக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள். அவர்கள் சுமந்த விடுதலைக் கனவைத்தான் நாமும் சுமக்கின்றோம். தமிழீழத் தாயகம் என்பது புலிகளின் தாகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஈழத் தமிழரினதும் தாகமும் வேட்கையும் அதுதான் என்பதனை அறுதியிட்டுக் கூறுவோம்.

இதுவரை நாட்களும் நாம் தொடர்ந்த போராட்டங்கள்தான் சர்வதேச மட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றது. மாவீரர் தினத்தினை நாம் உணர்வெழுச்சிபூர்வமாக அனுஷ்டிப்பதன்மூலம் சர்வதேசத்திற்கு பல விடயங்களினைப் புரியவைக்க முடியும்.
தலைவரின் வருகை என்ற விடயத்தில் நாம் தற்போதைக்கு கவனத்தினைச் செலுத்தாது, அவர் வழிகாட்டிய வழி தொடர்ந்து நம் வரலாற்றுக் கடமையை சரிவரத் தொடர்வோம். புலிகள் இல்லாத வெற்றிடத்தினை நாம் நன்கே உணர்கின்றோம். அவர்களின் மீள்வரவென்பதும் நமது கைகளில் உள்ள நிலையில் சர்வதேசத்தின் நிலைப்பாடுகளில் சாதகமான மாற்றத்தினைக் கொண்டுவரவேண்டிய மாபெரும் பொறுப்பு நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதனை உணர்ந்தவர்களாய் இம்முறை மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்கத் தயாராவோம்! மாவீரர்கள் சுமந்த இலட்சியக்கனவினை நிறைவேற்றும்வரை ஓயாமல் போராடுவோம் என உறுதியெடுப்போம்!


"மாவீரர்களை நாம் புதைக்கவில்லை... விதைத்திருக்கின்றோம்"

-தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்-

-பருத்தியன்-

தீர்வு என்று பேசிப் பேசியே தேர்தலில் வென்றுவிடும் சாணக்கியம்


"கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்!" என்பார்கள். அந்த மாதிரி இருக்கின்றது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண இனப்பிரச்சினைக் கான தீர்வு குறித்து வெட்டிப் பிரபலாகிப்பது. அதைப் பற்றிச் சிந்திக்கும்போது இந்தப் பழமொழிதான் நினை வுக்கு வருகின்றது.
இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கு ஆயுதம் தாங்கிய புலிகள் அமைப்பே முட்டுக்கட்டை என்று கூறிவந்தது தென்னிலங்கை. அதாவது, பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரான தமிழர்களுக்கு நியாயத் தீர்வு வழங்கும் தாராளம் பெரும்பான்மையினருக்கு இருப் பது போலவும், விடுதலைப் புலிகள்தான் தீர்வு காண இடமளிக்காது இடைஞ்சலாக இருந்து வருகின்றார்கள் என்ற மாதிரியும் தென்னிலங்கை கூறி வந்தது.

ஆனால் இப்போது புலிகளைக் கூண்டோடு அழித்து நிர்மூலமாக்கிவிட்டோம் என்று தெற்கு மார்தட்டி ஐந்து மாதங்களாகின்றன. ஆனால் தீர்வுக்கான முன்முயற்சி சற்றுக்கூட முன்நகரவில்லை.

இனி, ஜனவரியில் நடத்த உத்தேசிக்கப் பட்டிருக் கும் ஜனாதிபதித் தேர்தலுக்கும், மார்ச்சில் நடை பெற விருக்கும் என எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர் தலுக் கும் பின்னர்தான் எல்லாம் என்று அரசுத் தரப்பே உறுதி செய்துவிட்டது.

"மலையைக் கெல்லி எலியைப் பிடித்த மாதிரி" சுமார் நீண்ட மூன்று ஆண்டு காலம், ஏறத்தாழ இருநூறு அமர் வுகள் வரை மாநாடுகள், கூட்டங்கள் கூட்டி, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு தயாரித்த யோசனைத் திட் டத்துடனும், அந்தத் திட்டத்தின் சுருக்கக் குறிப்பு அடங் கிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதோடும் தீர்வுக்கான முயற்சி கிணற்றில் போட்ட கல்லாகிவிட்டது.

இனி, ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டி, அதன் பின்னர் மார்ச்சில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நாடாளு மன்றத் தேர்தலில் ஜனாதிபதியின் தற்போதைய ஆளும் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான் மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் தீர்வுக்கான நகர்வுகள் என்று கூறியிருக்கின்றார் அனைத் துக் கட்சிக் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் விதாரண.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை டைமுறைப்படுத்துவதாயின் அரசமைப்பை மாற்றியமைக்க வேண்டும். அப்படி மாற்றியமைக்கும் திட்டத்தையே அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அரசுக்கு சிபாரிசு செய்திருக்கின்றது. அப்படி அரசமைப்பை மாற்றுவதாயின் அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே, அடுத்த பொதுத் தேர்தலில் ஆளும் தரப்பு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறும் வரை அனைவரும் பொறுத்திருக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை. இப்படி விளக்கம் கூறுகின்றார் அமைச்சர் விதாரண.
இலங்கையின் தற்போதைய விகிதாசாரத் தேர்தல் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ், ஆளும் தரப்புக்கு அல்லது ஒரு கூட்டமைப்புக்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைப்பது என்பது கனவிலும் நடக்க முடியாத விடயம் என்பது நோக்கர்களுக்கு நன்கு தெரியும்.

எனவே, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று, அதன் பின்னரே இனப்பிரச் சினைக்குத் தீர்வு என்று கூறுவதும், காத்திருப்பதும், "அலை ஓய்ந்தபின் கடலில் குளிக்கலாம் என்று காத் திருப்பதற்கு" ஒத்தது என்பது தெளிவு.

அது மட்டுமல்ல, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் இதே மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியில் இருந்துகொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்துத் தமது தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தார். தாம் அதிகாரத்துக்கு வந்ததும் தென்னிலங்கை அரசியல் தரப்புகளை ஒன்று கூட்டி மூன்று மாத காலத்துக்குள் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் இணக்க யோசனையைத் தாம் பெற்று வெளியிடுவார் என அவர் உறுதியளித்திருந்தார். அதன்படி ஆட்சிக்கு வந்த அவர், தமிழர் தரப்பு மீது பெரும் போரைத் தொடுத்தாரே தவிர, தென்னிலங்கையின் இணக்கமான தீர்வு யோசனையை முன்வைக்கவில்லை.

மூன்று மாதகாலம், மூன்று வருடங்களாகியும் பலனில்லை. இப்போது அவர் பதவிக்கு வந்து நான்கு வருடங்களாகின்றன.இப்போதும் கூட அவரது அரசுக் கூட்டமைப்பில் உள்ள பதினொரு கட்சிகளும் மற்றும் இரு கட்சிகளும் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியனவும்) சேர்ந்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற பெயரில் தயாரித்த தீர்வு யோசனையையும் கூட முடக்கி வைத்துவிட்டு, அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றியீட்டுவதற்கு இனப்பிரச்சினைத் தீர்வு விவ காரத்தை துரும்பாகப் பயன்படுத்த எத்தனிக்கின்றார் ஜனாதிபதி!

தீர்வு என்று பேசிப் பேசியே தேர்தலை வென்று விடும் எத்தனத்தில்தான் ஆளும் தரப்பு மும்முரமாக இருக்கின்றது என்பது வெளிப்படையாகத் தெரியும் விடயம்.
எத்தனை காலம்தான் இப்படி ஏமாற்றுவார்களோ.......கடவுளுக்குத்தான் வெளிச்சம்......!

மேற்குலகை எதிர்க்கும் போக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்


தென்னிலங்கையில் குறிப்பிடத்தக்க அரசியல் விமர்சக ராகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும், பத்திரிகை யாளராகவும் கருதப்படுபவர்களுள் ஒருவர் விக்டர் ஐவன்.
1977 முதல் 17 ஆண்டுகள் நீடித்த ஐ.தே.கட்சியின் அதி கார யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அப்போதைய எதிரணியின் போராட்டத்திலும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவின் போக்குக்கு எதிராக நீதியை நிலை நாட்டும் திடசங்கற்ப போராட்டத்திலும் சளைக்காமல் ஈடு பட்டு மதிக்கப்பட்டவர் விக்டர் ஐவன்.

ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகவும் வேண்டப்பட்டவராகக் கருதப் படும் அவர்,இப்போது ராஜபக்ஷ அரசின் செயற்போக்குக் குறித்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சில கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.

மேற்குலகைப் பகைத்துக் கொள்ளும் இந்த அரசின் போக்கு விபரீதத்துக்கு வித்திடும் என்பதை அவர் கோடி காட்டுகின்றார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆயுத யுத்தத்தில் அரசு வெற்றிகொண்டிருப்பது உண்மைதான். இந்த அரசு வெற்றி கொள்ள வேண்டிய சவால்களில் அது பிரதான மானதுதான். ஆனால் அதற்குப் பின்னும் பல சவால்களை இந்த ஆட்சிப்பீடம் வெற்றிகொண்டாக வேண்டும். அவற்றை வெற்றிகொள்ள முடியாமல் போகுமானால், முன்னைய யுத்த வெற்றி அர்த்தமற்றதாக அபத்தமாக போய்விடும் என்று அவர் விளக்குகின்றார்.

மேற்குலகைப் பகைத்துக்கொள்ளும் அல்லது அதனை வெட்டி ஓடும் கொழும்பின் போக்கு நாட்டுக்கு நன்மை தராது. மேற்குலகைச் சார்ந்து நிற்காது விடினும் கூட, குறைந்தபட்சம் மேற்குலகுக்கு விரோதம் என்ற இறுக்கமான போக்கை அரசு கடைப்பிடிக்காமல் இருப்பதே உசிதமானது என்று சுட்டிக்காட்டுகின்றார் அவர்.

நாட்டின் பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம் என்ற கருத்துடன் தீர்க்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றது. மேற்குலகின் உதவியின்றி இலங்கையால் செம்மையாக இயங்கமுடியும் என்று பேச்சுக்குக் கூறப்பட்டாலும் கூட அது சாத்தியமற்றது என்பதே உண்மையாகும்.

சர்வதேச நாடுகளுடன் முரண்பாட்டை ஏற்படுத்தும் போக்கில் அசிரத்தையுடன் நடந்துகொண்டால் விளைவு மோசமாக அமையும் என்ற நல்ல முன்னுதாரணம் இலங் கைக்கு உண்டு என்பதையும் விக்டர் ஐவன் நினைவூட்டு கின்றார்.
"1977 ஆம் ஆண்டின் தேர்தல் மேடையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா வீற்றிருந்த வேளையில், இந்திரா காந் தியை விமர்சித்து அவரைப் பசுமாட்டுக்கு உதாரணப் படுத்தி உரையாற்றினார். அதன் காரணமாகப் பின்னாளில் இலங்கை பெரும் விலை செலுத்தவேண்டி நேர்ந்தமை மறக்கக் கூடியதல்ல.

"பிரதமர் இந்திரா காந்தியின் நிர்வாக காலத்தில் இந்தியாவுடன் இலங்கை கசப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்த வேளையில், கடும் அமெரிக்க சார்பு மற்றும் மேற்குலகைச் சார்ந்து நின்ற தனது கொள்கைப் போக்கின் மூலம் இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றே இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கையின் காரணமாகவே நிவாரணப் பொருள் களுடன் இலங்கை நோக்கி வந்த இந்தியப் படகுகளைத் திருப்பி அனுப்பும் பணிப்புரையை ஜே.ஆர்.விடுத்தார். அவரின் அந்த முடிவை நாட்டின் பொதுமக்களும் திருப்தியுடன் வரவேற்றனர். எனினும், இந்தியா, இலங்கையின் வான்பரப்பை ஆக்கிரமித்துக்கொண்டு விமானங்கள் மூலம் யாழ். குடாநாட்டுக்குள் நிவாரணப் பொருள்களை வீசியபோது, ஜனாதிபதி ஜெயவர்த்தானாவின் இந்திய எதிர்ப்புக் கொள்கைக்கு ஒத்தூதிய எந்த மேற்கு நாடும் இந்தியாவின் அச் செய்கைக்குக் கண்டனம் கூடத் தெரி விக்க முன்வரவில்லை. அந்த நாடுகளின் அப்போக்கு ஜெயவர்த்தனாவுக்கு ஆச்சரியத்தையும், ஆதங்கத்தையும், கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இறுதி யில் இலங்கை தனது பாதுகாப்புத் தொடர்பாக இந்திய அர சின் முன் மண்டியிட வேண்டிய நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியது அது.'' என்பதைச் சுட்டிக்காட்டுகின் றார் ஐவன்.

அதுமட்டுமல்ல வியட்நாமையும் அவர் உதாரணம் காட்டுகின்றார். சோவியத் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் அமெரிக்காவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியது வியட்நாம். போர் ரீதியில் அமெரிக்காவைப் பின்னடைவுக் குத் தள்ளவும் அதனால் முடிந்தது. ஆனாலும் அந்த வெற்றி யின் பின்னால் அதனால் பலம் பொருந்திய நாடாக மாற முடியவில்லை. ஏழ்மையிலேயே அது மூழ்கியது. அந்தத் துன்பியல் நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு அதுவரை தான் பகைமை பாராட்டிய அமெரிக்காவின் உதவி, ஒத்தா சைகளை யாசிக்கவேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டது.

பலம்மிக்க நாடுகள் தமக்கு எதிர்ப்புக் காட்டி நிற்கும் நாடொன்றை உடனடியாகப் பாதிப்புக்கு உள்ளாக்கி விடு வதில்லை. படிப்படியாகவே கொஞ்சம் கொஞ்சமாகவே தமது அக்கருமத்தை அவை நிறைவேற்றி முடிக்கின்றன.

இவ்விதமாகப் பெரும் பலவான்களால் ஏறி மிதித்துக் குட்டிச்சுவராக்கப்பட்ட நாடுகளை நாம் சிந்தையில் நிறுத் திக் கற்றுத் தேறவேண்டியுள்ளது என்கிறார் விக்டர் ஐவன்.
அனைத்து மேற்குலக நாடுகளும் ஓரணியில் நிற்கும் போது அந்த ஒருங்கிணைந்த பலம் இலங்கைத் தேசத் தைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும் ஆபத்து உள்ள மையை விக்டர் ஐவன் தொட்டுக்காட்டி எச்சரிக்கின்றார்.

ஆனால், புலிகளைத் தோற்கடித்த கணிப்பில் நிற்கும் கொழும்பு அதிகார வர்க்கம், அதே பாணியில் மேற்குலக மிடுக்கையும் முறியடித்து விடலாம் என்று கருதிச் செயற்படுவதாகவே தோன்றுகின்றது.

ஆட்சியில் உள்ளவர்கள் புரியும் இந்தத் தவறு, பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்ற நிலைக்கு இந்நாட்டு மக்களைத் தள்ளிவிடும் அபாயம் உண்டு.

இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் எட்டாம் ஆண்டு நிறைவில்.........!


சர்வதேசப் பொலிஸ்காரனான அமெரிக்காவையே கலங்கடித்துப் பீதிக்குள் ஆழ்த்திய நியூயோர்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரம் மற்றும் அமெ ரிக்கப் பாதுகாப்புக்கான மையத்தளமான "பென்டகன்" ஆகியவற்றின் கட்டடங்களை விமானங்கள் மூலம் மோதித் தாக்கும் சாகசம் நடத்தப்பட்டு நேற்றுடன் எட்டு ஆண் டுகள் பூர்த்தியாகிவிட்டன.



இந்தத் துணிகரத் தாக்குதல்களை ஒப்பேற்றி முடித்த வர்கள் என்று கூறப்படும் தீவிரவாதிகளின் இலக்கு எட்டப்பட்டதா, நோக்கம் நிறைவேறியதா என் பது தெரியவில்லை; தெளிவில்லை.

ஆனால் அந்தத் தாக்குதலினால் அதிர்ந்துபோன அமெரிக்க ஏகாதிபத்தியம் அதையடுத்து, அத்தாக்குத லுக்குப் பழிவாங்கப் போவதாகக் கூறிக்கொண்டு நேச நாடுகளையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு பெரும் எடுப்பில் ஆரம்பித்த "பயங்கரவாதத்துக்கு எதிரான உலகப் போர்" மட்டும் இன்னும் தனது நோக்கத்தை நோக்கி முன்னேறவேயில்லை. சுருக்கமாகச் சொல்வதானால் அந்த எத்தனம் "பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக முடிந்த கதையாக"திசைமாறிச் சிதம்பிப்போய்க் கிடக் கின்றது.

அமெரிக்கா மீதான "செப்டெம்பர் 11" தாக்குதலுக் கான சூத்திரதாரிகள் அதற்குத் திட்டமிட்ட மையம் ஆப் கான் என்ற கருதுகோளில் அந்த நாட்டையே அமெ ரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு முத லில் இலக்கு வைத்தது. அதனோடாவது அமெரிக்கா நிறுத்தியிருக்கலாம்; அடங்கியிருக்கலாம்.



அதை விடுத்து, அளவுக்கு மீறிய செருக்கோடு உல கெங்கும் "வாய்"வைத்தது அமெரிக்கா. "பயங்கரவாதத் துக்கு எதிரான போர்" என்ற கண்மூடித் தனமான குருட் டாம் போக்கிலான அப்போதைய புஷ் நிர்வாகத்தின் எதேச்சாதிகாரம் உலக அமைதிக்கே பங்கம் விளைவித்து வேட்டு வைத்தது. அமெரிக்காவுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி நிற்கின்றது.

எது பயங்கரவாதம், யார் பயங்கரவாதிகள் என்பதற்கான சரியான நுண்ணிய அளவு கோல்களைப் பயன் படுத்தி உண்மையான, நேர்மையான, தெளிவான, தீர்க் கமான முடிவுகளை எடுக்காமல், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தரப்புகளை எல்லாம் சட்ட ரீதியான நேர்மையான இறைமையுள்ள அரசுகளாகத் தன் பாட்டில் அங்கீகரித்தபடி நீதி, நியாயம், உரிமை வேண்டி தார்மீகப் பண்புகளோடு போராடும் ஏனைய தரப்புகள் எல்லாவற்றுக்கும் "பயங்கரவாதம்" என்ற முலாமைப் பூசிக்கொண்டு, அமெரிக்காவும் அவற்றின் நேச அணிகளும் செயற்பட்டன; செயற்பட்டுக் கொண் டிருக்கின்றன.

அமெரிக்காவின் இத்தகைய நேர்மைத்தன்மையில் லாத பார்வையின்கீழ் அணி திரண்ட சக்திகள், தர்மத் தின் வழி தழுவி, நியாயத்தின் பாதையில் முன்னெடுக் கப்படும் போராட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை எல் லாம் பயங்கரவாதமாகத் திரிபுபடுத்தி முத்திரை குத் தின.

நீதிக்காகப் போராடும் சக்திகளுக்கு பயங்கரவாதச் சேறு பூசிக்கொண்டு, அதேசமயம், அவற்றை நசுக்க முய லும் அடக்குமுறை அரசுகளின் இராணுவப் பயங்கர வாதத்தை மூடி மறைக்கவும் அமெரிக்கா தலைமையி லான இந்த சர்வதேச எதிர்ப்பியக்கம் நன்கு உதவியது. இதன் விளைவை உலகம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

சரியோ, பிழையோ, இராணுவ ரீதியிலான அடக்கு முறை ஆட்சியோ, இல்லையோ ஈராக்கில் அதிபர் சதாம் ஹுசைன் தலைமையில் அமைதியான ஓர் ஆட்சி முறைமை தொடர்ந்து நீடித்தது. அப்போதைய அமெ ரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் ஆக்கிரமிப்பு எதேச்சாதிகாரம் அந்த நாட்டை இன்று குண்டு வெடிப்புகளிலிருந்து மீளமுடியாத நிரந்தர இரத்த பூமியாக்கியிருக்கின்றது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் விளைவால் இன்று ஈராக்கில் தினசரி குண்டு வெடிப்புகள், தற்கொலைத் தாக்குதல் கள், அழிவுகள், பிணக் குவியல்கள், கோரங்கள், கொடூ ரங்கள். அமைதியாக விடியும் நாள் என ஒன்று இல்லை என்ற நிலைமையே அங்கு ஏற்பட்டிருக்கின்றது.

மனித குலத்திற்குப் பேரழிவைத் தரும் ஆயுதங் களை சதாம் நிர்வாகம் தயாரித்து வைத்திருக்கின்றது என்ற பொய்யைப் பிரகடனப்படுத்திக்கொண்டு அந்தத் தேசத்தை ஆக்கிரமிக்கும் "பயங்கரவாதத்தை" புரிந்தது அமெரிக்கா.

ஈராக்கை ஆக்கிரமிக்க புஷ் நிர்வாகம் முன்வைத்த காரணம் பச்சைப் பொய் என்பது அம்பலமான நிலையில் தான் ஆக்கிரமித்த ஈராக், ஆப்கான் போன்ற தேசங் களில் அதற்கு முன்பிருந்தமையை விட மிக மோச மான, மிகக் கோரமான, மிகக் கொடூரமான, மிகக் கேவ லமான நிலைமையை ஏற்படுத்திவிட்டு முன்வைத்த ஆக்கிரமிப்புக் காலை பின்வாங்கவும் முடியாமல், வைத்துப் பேணவும் முடியாமல் அல்லா டுகின்றது அமெரிக்கா.



"உலகப் பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" என்ற பெயரில் அமெரிக்கா ஆரம்பித்த மாயை யுத்தம், அமெரிக்காவையே பயங்கரவாதத் தரப்பாக மாற்றி நிற் பதே உண்மை.
"பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேசப் போர்" என்ற பெயரில் முன்னைய புஷ் நிர்வாகம் இழைத்த பாரிய தவறுகளின் தாற்பரியத்தைப் புரிந்துகொண்டு, அவற்றுக்குப் பிராயச்சித்தம் செய்து, நியாயம் புரியும் நல்ல நோக்கம் அமெரிக்காவின் புதிய ஒபாமா நிர் வாகத்துக்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்பது தான் நிஜம்.

தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை தீர்மானிக்க புதிய நடைமுறை தேவை


இந்த நாட்டின் அந்நிய செலாவணி சேமிப்புக்கு முதுகெலும்பாக விளங்கும் மலையகத் தோட்டத் தொழிலாள ரின் சம்பளப்பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் இழுபறிப்படுகின்றது.

இப்பத்தி எழுதப்படும் சமயத்திலும் நேற்று மாலை யும் இவ்விடயம் தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம் மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் மூன்றாவது சுற்றுப் பேச் சுகள் நடைபெற ஏற்பாடாகியிருந்தன.
முதல் இரண்டு சுற்றுப் பேச்சுகளும் இணக்கம் காணப் படாமல் முடிவுற்ற நிலையில் நேற்று மூன்றாவது சுற்றி லும் உடனடியாகவே தீர்க்கமான இணக்கமான முடிவு எட் டப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன என்று நேற்று முற்பகலில் பேச்சுக்கு முன்னர் கூறப்பட்டது.

எது எப்படியென்றாலும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் அடுத்த நான்கு நாள்களுக்குள் இவ்விடயத்தில் ஏதே னும் ஒருமுடிவு வந்துவிடும் என்று தாங்கள் நம்புகின்றார் கள் என மேற்படி பேச்சுகளில் பங்குபற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இலங்கையில் வறுமை நிலை உயர்வாக உள்ள பிரதேசம் மலையகமே. அந்தப் பிரதேசத் தோட்டத் தொழிலாளர்களே இலங்கையில் அதிகம் பின்தங்கிய மக்களாக உள்ளனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. நாடு முழுவதும் வறு மையின் வீதம் 14 ஆக இருக்க மலையகத்தில் மட்டும் அது 34 வீதமாக உயர்ந்து நிற்கின்றது.

உண்மையில், இலங்கையில் அபிவிருத்தியும், உதவியும், ஊக் குவிப்பும் விரைந்து வழங்கப்பட வேண்டிய பிரதேசமாக மலையகமே உள்ளது. ஆனால் அந்த மக்களின் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை வேதனம் குறித்துக் கூட எவரும் சிந்திக்கின்றவர்களாக அக்கறை காட்டுபவர்களாக இங்கு இல்லை என்பதே உண்மை.

இப்போது சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் தோட்டத் தொழி லாளர்களின் சம்பளம் பற்றிய விடயம் பெரும் சர்ச்சையாக உருவாகி இழுபடுகின்றது. 2007 இல் அவர்களின் நாள் சம் பளம் சுமார் இருநூறு ரூபாவாகத் தீர்மானிக்கப்பட்டு கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்துக்கான செயற் காலம் காலாவதியாகி சுமார் ஆறு மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் கூட வெறும் இரு நூறு ரூபா நாள் சம்பளத்துடன் அவர்கள் கையேந்தி அவலப்படும் நிலைமை நீடிக்கின்றது. இத்தகைய சொற்ப வேதனத்துடன் அவர்களைப் பணிக்கு அமர்த்தி இழுத்தடிப்பது அநியாயத்திலும் அநியாயமாகும்; அக்கிரமத்திலும் அக்கிரமமாகும்.

இந்த மலையக மக்களுக்கு உரிய காலத்தில் உரிய வேதன உயர்வை பெற்றுத்தர முடியாத, பெற்றுத்தர வக் கற்ற இந்தக் கூட்டு ஒப்பந்த முறையால் அந்த மக்களுக்கு என்ன பயன்? இப்படி மலையக மக்களின் அடிப்படைப் பிரச் சினைக்கு உரிய காலத்தில் உரிய முறையில் தீர்வு காண் பதற்கான வாய்ப்பை வழங்காத இந்தக் கூட்டு ஒப்பந்த முறைமை இனியும் தொடரத்தான் வேண்டுமா? என்ற கேள்வி மலையக மக்களிடம் எழுவது நியாயமானதே.
அத்தோடு இத்தகைய கூட்டு ஒப்பந்த ஏற்பாடு மூலம் மலையகத் தொழிலாளர்களின் வேதனத்தைத் தீர்மானிக் கும் முறைமை குறித்து பல்வேறு விமர்சனங்களும் காட்ட மாக முன்வைக்கப்படுகின்றமை இச்சமயத்தில் கவனிக் கத்தக்கதாகும்.

ஒருசில தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மட்டும் இப் படி வேதன அளவைத் தீர்மானிக்கும் கூட்டத்தில் பங்கு பற்றும் அதிகாரத்தைத் தம்வசம் வைத்துக்கொண்டு ஆட் டம் போடுவது நியாயமற்றது. பல காத்திரமான தொழிற் சங்கங்களின் கருத்துகளும், நிலைப்பாடுகளும் உள்வாங் கப்படாமல் ஒரு சில தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளி டம் முழுப் பொறுப்பும், அதிகாரமும் ஒப்படைக்கப்படுவது தவறு. அத்தகைய அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவர் கள் அதை வைத்துக்கொண்டு, மலையகத் தோட்டத் தொழி லாளர்களுக்காகத் தாங்கள் போராடுவார் கள் என வெளி வேஷத்துக்குக் காட்டிக்கொண்டு, முதலாளி மாருடன் மறை வில் இணக்கத்துக்கு வந்து, பெரும் தொகையை சுருட்டிக் கொண்டு, தொழிலாளர்களைக் காட் டிக் கொடுத்து விடு கின்றனர் என்றெல்லாம் கூட முறைப்பாடுகள் கூறப்படு கின்றன.அவற்றில் உண்மை இருக்கலாம். உண்மை இல் லாமல் போகலாம்.
தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்க விடயங்களுக் காகப் பேச்சு நடத்துவது என்பது வெகு நுட்பமான விடயம்.

"நூறு பெறவேண்டுமென்றால் நூற்றியைம்பது கேட்கவேண்டும். அப்போதுதான் நூறாவது கிடைக்கும்" என் பார்கள்.

இதுபோலவே மலையகத் தோட்டத் தொழிலாளரின் வேதனமும் நாளொன்றுக்கு 450 ரூபாவாகவாவது இருக்கவேண்டும் என்றால் ஐந்நூறு ரூபாவாக அதைக் கேட்டால்தான் இழுபறிப்பட்டு, சற்றுக் கீழிறங்கி இணக்கத்துக்கு வருவார்கள். அப்படி இணக்கத்துக்கு வந்ததும் "தினசரி ஐந்நூறு ரூபாவாக வேதனம் உயர வேண்டும்" என வற்புறுத்திய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இப்போது முதலாளிமார்களுடன் மறைமுக இணக்கத்துக்கு வந்து, பெரும் தொகையைக் களவாகச் சுருட்டிக்கொண்டு, விட்டுக்கொடுத்து, ஐந்நூறு ரூபாவுக்குக் குறைந்த தொகை நாள் வேதனத்துக்கு இணங்கிவிட்டார்கள் என்று எதிர ணியில் இருந்து சேற்றை அள்ளி வீசுகின்றார்கள். இப்படி இன்னொரு தரப்பில் விசனம் கூறப்படுகின்றது
கடந்த தடவையும் 2007 இலும் இப்படி மலையகத் தொழிலாளரின் வேதனம் தொடர்பான விடயத்தில் தோட்ட உரிமையாளர் சம்மேளனத்துக்கும் கூட்டுத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் கருத்து வேற்றுமை வந்தபோது அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷவே தலையிட்டு ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டியவரானார்.

இந்த விடயங்களைச் சீர்தூக்கிப் பார்க்கையில் மலை யகத் தோட்டத் தொழிலாளரின் வேதனத்தைத் தீர்மானிக் கும் விடயத்துக்குத் தற்போதைய கூட்டு ஒப்பந்த நடை முறைக்குப் பதிலாகப் புதிய பொறிமுறை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம் என்பது தெளிவாகின்றது.

இருப்போரின் விவரம் வெளியானால்தான் இல்லாதோரின் எண்ணிக்கை அம்பலமாகும் .!!!!


நீண்ட காலமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட் டுள்ள கைதிகள் மற்றும் காணாமல் போனோர் தொடர் பாக அடுத்த வாரம் கொழும்பில் முக்கிய மாநாடு ஒன்று நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. இதுபற் றிய தகவலை மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட் டாளரான மனோ கணேசன் எம்.பி. வெளியிட்டிருக்கின்றார்.
வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் விடுவிப்பு, மீள்குடியேற்றம் போன்ற விட யங்கள் மாதிரியே,

கைது செய்யப்பட்ட அல்லது கடத் தப்பட்ட நிலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட் டிருக்கும் கைதிகளினதும் காணாமற் போனோரினதும் பிரச்சினைகளையும் சமூகம் மறந்துவிட முடியாது என மனோ கணேசன் எம்.பி. குறிப்பிடுகின்ற கருத்து முற்றிலும் நியாயமானது; விரைந்து கவனிக்கப்பட வேண்டிய விடயமும் கூட.

அவர் சுட்டிக்காட்டுகின்றமை போல வெளியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதார மற்றும் அன்றாட, அவசர பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் அதே முக்கியத் துவம் விசேடமாகக் கூறுவதானால் அதைவிட அதிக முக்கியத்துவமும் விரைவும் கைதிகள் மற்றும் காணா மற்போனோரின் விவகாரங்களில் காட்டப்பட வேண் டும்.

நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தும் முயற்சியில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக இவ்விவகாரம் பிணைக்கப்பட்டிருப்பதை யாரும் மறந்துவிடவோ, மறைத்துவிடவோ முடியாது. தடுப்புக் காவலில் சிக்கி யோர் விடுவிக்கப்படுதலும், காணாமற் போனோர் தொடர்பில் அவர்களின் குடும்பத்தவர்களுக்குப் பொறுப்பான பதில் வழங்கப்படுவதும் புறம் ஒதுக்க முடியாத நடவடிக்கைகளாகும்.

இத்தகைய காணாமற்போனோர் பிரச்சினை என்பது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்கு மட்டும் உரியதன்று. இலங்கை முழுவதும் வியாபித்திருக்கும் ஒரு சிக்கலாகும் இது.
இந்தச் சிக்கலின் ஆழ அகலம் அல்லது பரிமாணம் கடந்த ஆறுமாத காலத்துக்குள் புதிய விஸ்வரூப வடி வத்தை எடுத்திருப்பதை எவரும் அறியாதிருக்க முடியாது.

இப்பிரச்சினையைக் கையாண்டு குறைந்த பட்சம் நியாயமான தீர்வு ஒன்றைக் காணும் முயற்சியில் ஈடு படுவதற்கு முதலில் காணாமற் போனோர் பற்றிய முறை யான பதிவுப் பட்டியல் ஒன்று தேவைப்படுகின்றது. இத் தகைய பட்டியலைத் தயாரிப்பதில் மக்கள் கண்காணிப் புக் குழு போன்றவை தமது சக்திக்கும் அப்பாற்பட்ட வகையில் மும்முரமாகச் செயற்பட்டு, பல்வேறு முயற் சிகளையும் எடுத்தனவாயினும் அவற்றின் எல்லை களுக்கு அப்பாற்பட்ட காரணங்களின் பொருட்டு அம் முயற்சி முழு அளவிலான வெற்றியை எட்டவில்லை என்பதே உண்மையாகும்.

காணாமற்போனோரின் பட்டியலை முழுமையாகத் தயாரிப்பதற்கு முதலில் இலங்கைத் தீவில் உயிருடன் இருப்போரின் பட்டியல் அல்லது விவரம் அவசிய மாகும். வன்னிக்கு அப்பாற்பட்ட இடங்களில் வாழ்வோர் பற்றிய தகவல்களைத் திரட்டுவதும் அவர்களின் இருப்புப் பற்றிய விவரங்களை உறவினர்கள் உறுதிப் படுத்திக் கொள்வதும் இயன்ற காரியம்தான். ஆனால் வன்னியில் சிக்குண்டுள்ள லட்சக் கணக்கான தமிழ் மக்கள் விடயத்தில் நிலைமை அப்படியல்ல. முதலில் அங்கு தடுப்பு முகாம்களில் யார், யார் இருக்கின்றார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டால்தான் இல்லாமல் போனோர் அல்லது காணாமல் போனோர், "மாயமாக" மறைந் தோர், கொல்லப்பட்டோர் போன்றோரின் விவரம் அம் பலத்துக்கு வரும்.

தடுப்பு முகாம்களில் "சிறை" வைக்கப்பட்டுள்ள சுமார் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பேரின் பெயர், விவரங்கள் மற்றும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட் டால்தான், காணாமற் போனோரின் பட்டியலின் உண் மையான "பருமன்" தெளிவாகும்.

கடந்த 7 ஆம் திகதி மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழு சந்தித்தபோதும் இத்தகைய பட்டியலை வெளி யிடும்படியே வற்புறுத்தியது. அதற்கு அரசுத் தரப்பு கொள்கை அளவில் இணங்கியது என்று கூறப்பட்டாலும், அந்த உறுதிமொழி நடைமுறையில் செயற்படுத்தப் படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேற்படி தடுப்பு முகாம்களுக்கு எதிரணி அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதி கள் போன்ற தரப்பினர் செல்வதற்குக் கடும் கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கின்றது.
அதேசமயம், வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டிருப்போர் மற்றும் காவலிலும், சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவோர் பற்றிய எண் ணிக்கைகள் தொடர்பான விடயங்களில் தொடர்ந்தும் குளறுபடியான செய்திகளே வெளிவருகின்றன.

வன்னிப் பெருநிலப்பரப்பை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து முற்றாக மீட்டாயிற்று என அரசு அறி வித்து நான்கு மாதங்கள் கடக்கப்போகின்றன. எனினும், இதுவரை வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டி ருப்போரின் முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் பகி ரங்கப்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது. அது வெளிவரும்போதுதான் காணாமற்போனோர் பற்றிய உண்மை ரூபம் அம்பலமாகும்.

அந்தப் பட்டியல் வெளியாகும்போதுதான் மக்கள் கண்காணிப்புக் குழு போன்ற கட்டமைப்புகளின் உண் மையான பணி பன்மடங்கு சுமையோடு ஆரம்பமாகும் என்பதும் திண்ணம்.

வேண்டாம்... இனி ஒரு கருணா... இனி ஒரு டக்ளஸ்...!: ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை

மனிதர்களாக மாறி எம் மக்களை வாழ வையுங்கள்! வேண்டாம் இனி ஒரு கருணா... இனி ஒரு டக்ளஸ்... இனி ஒரு துரோகி... பாவம் எம் மக்கள் தாங்கும் சக்தியை இழந்துவிட்டார்கள்.இவ்வாறு இன்றைய ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகையில் வெளியாகிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் தற்காலிகமாக ஓய்வுக்கு வந்துள்ள நிலையில், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களை இலக்கு வைத்து சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் உளவியல் போருக்கு தெரிந்தோ, தெரியாமலோ நம்மவர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட இன உணர்வுடன் கூடிய ஒற்றுமை உணர்வு திட்டமிட்ட வழிகளில் சிதைக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப் போர்க் களத்தில் தம்மைப் பலியாக்கிக்கொண்டு, தமிழீழக் கனவோடு துயிலுறங்கும் பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள், தெரிந்துகொண்டே எதிரிகளை அழிப்பதற்காகத் தம்மையே தகர்த்துக் கொண்ட கரும்புலிகள், துரோகிகளால் பலியாகி கொள்ளப்பட்ட போராளிகள், அறுதிவரை மக்களுக்காகப் போராடிக் களப்பலியான தளபதிகள், அத்தனை பேரையும் காத்து நின்று கடைசிச் சொட்டு நீருக்கும் தலை வணங்காமல் உயிர் துறந்த பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் எனத் தமிழீழ விடுதலைக்காகத் தவம் இயற்றியவர்களின் புனிதங்கள் புலம்பெயர் தேசங்களில் விலை பேசப்படுகின்றன.

வன்னி அவலங்களின்போது கூட மடியை இறுக்கிப் பிடித்துக் கொண்ட பல கொடை வள்ளல்கள் கணக்குக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். 'கடைசியாகச் சேர்த்த காசு கணக்கில் வரவில்லையாம்'. இப்படியெல்லாம் புரட்சிக் கொடி பிடிக்கும் இவர்கள் யார்? என்று விசாரித்துப் பார்த்ததில் விடுதலைப் போராட்ட காலங்களில் அவர்கள் தாயகத்து மக்களுக்காகக் கிள்ளியும் கொடுக்காதவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல்களும் வெளிவருகின்றன.

விடுதலைப் புலிகளின் ஆட்சிப் பகுதி சுருங்கி, முல்லைத்தீவு நோக்கி மக்களும் புலிகளும் நகர்ந்தபோது புலம்பெயர் தேசம் பொங்கி எழுந்தது. போராட்டங்கள் வெடித்தது. சிங்களக் கொலைக்கரங்களில் சிக்கித் தவித்த தமிழீழ மக்களைக் காப்பாற்றக் கோரி வீதி மறியல் போராட்டங்கள் நடாத்தப்பட்டன.

தமிழீழ நிலத்தில் கால் பதித்தறியாக புலம் பெயர் தேசத்துக் குழந்தைகளும் புலிக் கொடியோடு போர்க் களம் புகுந்தனர். விதிகளை மீறிய போராட்டங்களால் பலர் சிறைக் களம் புகுந்தனர். சிலர் தண்டிக்கப்பட்டனர். ஆனாலும், புலம்பெயர் தேசத்தில் புலிகளின் ஆட்சிப் பொறுப்பி லிருந்த பலர் காணாமல் போனார்கள். அல்லது, அடி வேலிகளில் மறைந்து நின்று ஆர்ப்பாட்டங்களின் ஆழம் பார்த்தனர். எல்லாம் முடிந்த பின்னர் இப்போது அவர்களும் தம் பங்கிற்குக் கடை வைக்க முயல்கிறார்கள்.

முள்ளி வாய்க்கால் முடிவுக்குப் பின்னர் இருண்டு போனது ஈழத் தமிழர்களின் எதிர்காலம் என்று ஒப்பாரி முழங்கிய போதும், 'தானைத் தலைவன் எம்மோடு இருக்கிறான்' என்ற வீர முழக்கத்துடன் புலம்பெயர் தேசம் ஆர்ப்பரித்தது. சிங்கள தேசம் ஆடித்தான் போனது. 'இதோ, புலிகளின் கதை முடிந்துவிட்டது' என்று வெற்றி முழக்கமிட்ட ராஜபக்ஷக்கள் முகம் வெளிறி நின்றார்கள். ஆம், புலம் பெயர் தமிழர்களின் பலம் அவர்களை மீண்டும் ஒரு போர்க் களம் நோக்கிப் பயணிக்க வைத்தது.

புலம்பெயர் தேசங்களில் வாழும் புல்லுருவிகள் விசேட விமானத்தில் கொழும்பிற்கு அழைக்கப்பட்டார்கள். விருந்துபசாரங்களும் களியாட்டங்களும் தாராளமாகவே வழங்கப்பட்டது. உல்லாசப் பயணமாக யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது குக்கிராமங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். உயர் அதிகாரிகளுடன் சமபோசனம் அளிக்கப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டு, மீண்டும் அவரவர் தேசம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதோ, வந்துவிட்டார்கள். கேட்டுப் பாருங்கள் யாழ்ப்பாணத்து நிலமையை... கேட்டுப் பாருங்கள் யாழ். மக்களின் வாழ்க்கைத் தரத்தை... புலிகளின் பின்னரான வன்னி மக்களின் நிலைகூட 'இந்து ராம்' வெட்கப்படும் அளவிற்கு பெருமையுடன் விளித்துக் கூறுகிறார்கள்... என்ன அவர்களுக்குப் புலம்பெயர்ந்த நீங்களும் கொஞ்சம் கொடுத்துதவினால் தேவலோக வாழ்க்கைதான் ... என்று ஒரு பட்டியலை நீட்டுவார்கள்... நீங்கள் ஏமாளிகளாக இருந்தால்... அவர்கள் காட்டில் பண மழைதான் போங்கள்.

இவர்கள் மட்டும்தான் என்று முடிவு கட்டிவிடாதீர்கள்... இன்னமும் பலர் புறப்பட்டிருக்கிறார்கள்... வதந்திகள் பரப்ப... துண்டுப் பிரசுரங்கள் அடித்து இருட்டோடு இருட்டாக ஒட்ட... சொந்தப் பிரச்சனைக்கும் 'துரோகிகள்' பட்டம் வழங்க... இப்படி... இப்படி... எத்தனையோ பேர்.

ராஜபக்ஷக்கள் கைகொட்டிச் சிரிக்கின்றனர். 'நாம் சாதிக்க நினைத்ததை இவர்களே நமக்காகச் சாதிக்கின்றனர்' என்று மகிழ்ச்சியோடு கை குலுக்கிக் கொள்கின்றனர். புதை குழிகளிலும் கடல் அலைகளிலும் துயில் கலைந்த மாவீரர்கள் விம்மி அழுகிறார்கள்... தமிழீழக் கனவோடு சாவினைத் தழுவிக்கொண்ட தளபதிகள் கலங்கி நிற்கின்றார்கள்.

நாம் இழந்தது கொஞ்சமா? எத்தனையாயிரம் வேங்கைகளைப் பலி கொடுத்தோம்... இலட்சத்திற்கும் அதிகமான உறவுகளைப் பலி கொடுத்தோம்... இத்தனை இழப்புக்களின் பின்னராவது நாம் மனிதர்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டாமா...?

முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்ட எம் மக்களை மீட்க வேண்டாமா...? போர்க்களத்தில் ஊனமாக்கப்பட்ட எம் உறவுகளுக்கு உறுதுணையாக நிற்க வேண்டாமா...? சிங்கள தேசத்தால் அநாதைகளாக்கப்பட்ட எம் குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டாமா...? வாழ்விழந்து தவிக்கும் எம் மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டாமா...? சோற்றுக்காகக் கையேந்த வைக்கப்பட்ட எம் தேசத்து மூத்த குடிகளைத் தாங்கி நிற்க வெண்டாமா...?

அத்தனை கடமைகளும் எமக்காகக் காத்திருக்கும்போது வெட்டிப் பேச்சும், வீண் கதைகளும் எதைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றது? எதிரியிடம் மண்டியிட மறுத்து, இறுதிவரை களமாடிப் பலியான விடுதலைப் புலிகள் கற்றுத் தந்ததை மறக்கலாமா? உங்கள் கதிரைக் கனவுகளுக்காகவா களமாடி இத்தனை வீரர்கள் பலியானார்கள்? உங்கள் சொந்த விருப்பங்களுக்காகவா ஈழத்தில் இத்தனை தமிழர்கள் செத்து மடிந்தார்கள்?

போதும்... இதுவரை போதும்... இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! இல்லையென்றால், மனிதர்களாக மாறி எம் மக்களை வாழ வையுங்கள்! வேண்டாம் இனி ஒரு கருணா... இனி ஒரு டக்ளஸ்... இனி ஒரு துரோகி... பாவம் எம் மக்கள் தாங்கும் சக்தியை இழந்துவிட்டார்கள். அவர்களைத் தாங்கிப் பிடித்து வாழ வையுங்கள்

நாட்டையும் மக்களையும் சீரழிக்கும் மஹிந்த அரசைத் தோற்கடிப்போம்! அனைத்து மக்களையும் அணிதிரள ரணில் பகிரங்க அழைப்பு.



ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபட்டு நாட்டையும், நாட்டு மக்களையும் சீரழித்துக்கொண்டிருக்கும் மஹிந்த அரசின் ஆட்சியைத் தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் அணிதிரளவேண்டிய தருணம் வந்துவிட்டது என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

63 வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் அனைத்து இன மக்களின் ஒத்துழைப்போடு ஐக்கிய தேசியக் கட்சியால் ஈட்டிக்கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை ஜனாதிபதியும் அவரது அரச தரப்பினரும் தவிடுபொடியாக்கி வருகின்றனர் என்றும் ரணில் குற்றஞ்சாட்டினார்.
கண்டி ஈ.எல்.சேனாநாயக்க சிறுவர் நூலக மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கட்சியின் 63 ஆவது வருடாந்த மாநாட்டிற்கு தலைமை வகித்துப் பேசும்பொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மண்டபம் நிறையக் கட்சியின் ஆதரவாளர்கள் அங்கு கூடியிருந்தனர். இதற்கு முன்பதாக அவர் கட்சியின் ஸ்தாபகரான டி.எஸ்.சேனாநாயக்காவின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்துக் கட்சியின் மறைந்த தலைவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்.

ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது நாம் அருமைபெருமையாகப் பெற்ற சுதந்திரத்தின் மகிமையால் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் ஆகிய அனைத்து மக்களும் அமைதியாகவும் இலங்கையர் என்ற அடிப்படையிலும் வாழ்வதற்கான சூழ்நிலையை எமது மூத்தத் தலைவர்கள் உருவாக்கினார்கள். இதே கொள்கைகளையே நானும் இங்கு உறுதிப்படுத்துகின்றேன். அரசியல் முன்னெடுப்புகளையும் இதே நோக்கத்தில் எமது கட்சி பின்பற்றி வந்தது. இதன்பொருட்டு அனைத்து இன மக்களின் அமைப்புகளும் எமக்கு உதவினர். இதனை நம்பியே மக்கள் எமது கட்சியோடு இணைந்துகொண்டனர்.

நாம் இலங்கையர் என்ற கண்ணோட்டத்திலேயே எமது கட்சியின் கொள்கை அமைந்துள்ளது. இதன் அடிப்படையில் இங்கு வாழும் பல்லின மக்களின் மொழி, கலாசாரம், பண்பாடுகள் ஆகிய விழுமியங்கள் பேணப்படவேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் அடிப்படையிலே நாட்டின் அபிவிருத்திகள் அனைத்தையும் படிப்படியாகக் கட்டி எழுப்பினோம். மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடக்கம் எல்லோராலும் கையாளப்படும் கையடக்கத் தொலைபேசி வரை அனைத்துத் தேவைகளையும் எமது கட்சி அரசே பெற்றுக்கொடுத்தது.

இவற்றை எல்லாம் சீரழித்துவிட்ட இன்றைய அரசு ஜனநாயக மரபுகளை மதியாமல் தாம் விரும்பியபடி குடும்ப ஆட்சியையும் தமக்குத் தேவைப்பட்டவர்களையும் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் கருமங்களை முன்னகர்த்தி வருகின்றது.

இந்த நாட்டில் மகா மன்னர் என்ற ஒருவர் இல்லை. நாம் எல்லோருமே மன்னர்கள்தான். எமது நோக்கம் நாட்டில் இறைமை பாதுகாக்கப்படவேண்டுமென்பதாகும். பல சமூக மக்கள் வாழும் இந்த நாட்டில் அரசும் பல சமூக அமைப்பாக இடம்பெறவேண்டும். இந்த நல்லெண்ணத்தை தவிடுபொடியாக்க இடமளியோம். புலிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் மூலமாகவே ஜனாதிபதி மஹிந்தரும் இன்று தொடர்ந்து பதவியில் இருக்கிறார்.

இன்று நாட்டைத் தவறான முறையில் இட்டுச்செல்லும் மஹிந்தரின் ஆட்சியைத் தோற்கடித்து ஐ.தே.கட்சியைப் பதவியில் அமர்த்த நீங்கள் எல்லோரும் முன்வரவேண்டும். இந்த அரசின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் முன்வரவேண்டும். 13 ஆவது அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை இன்றைய அரசு களியாட்ட விழா போன்று நடத்தி வருகின்றது.நாட்டு மக்கள் இந்த அசாதாரணங்களை பொறுமையுடன் அவதானித்தவண்ணம் இருந்து வருகின்றனர்.

எமது கட்சி விரைவில் எடுக்கப்போகும் தீர்மானங்களுக்கு ஏற்ப கட்சியைச் சீர்குலைக்க உள்ளும் புறமும் எதிராகச் செயற்படும் சக்திகளுக்கு ஒருபோதும் இடம்கொடுக்கமாட்டோம். மக்களின் அபிமானத்தைப் பெற்ற டி.எஸ்., டட்லி, சேர். ஜோன், ஜே.ஆர்., பிரேமா, டி.பி. ஆகிய தலைவர்களின் ஆதர்ஷ நடைமுறைகளை ஒதுக்கிவிட இயலாது. இவ்வடிப்படையில் கட்சியின் முன்னேற் றத்துக்கு பாதகமான செயல்படுபவர்கள் மீது நாம் மிகுந்த அவதானத்துடன் ஒழுக்க நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கமாட்டோம். எம்மை நம்பி வாழ்கின்ற மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கவும் இயலாது எனவும் ரணில் மேலும் தெரிவித்தார்.

இன்று நடக்கும் முக்கிய சந்திப்புகள்


இலங்கை வாழ் தமிழர்களைப் பொறுத்தவரை இன்று இடம்பெறும் இரண்டு சந்திப்புகள் முக்கியமான வையாகின்றன.

ஒன்று வடக்கு, கிழக்குத் தமிழர்கள் சம்பந்தமானது.
மற்றையது மலையகத் தமிழர்கள் தொடர்பானது.


முதலாவது சந்திப்பு வடக்கு, கிழக்குத் தமிழர்க ளைப் பெருமளவில் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கையின் அரசுத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடை யில் நீண்ட காலத்தின் பின்னர் இடம்பெறுவது. இன்று மாலை இச்சந்திப்பு நடக்கிறது.

அடுத்தது மலையகத் தமிழர்களின் பிரதான வாழ் வாதாரமாக இருக்கும் தோட்டத் தொழில் சம்பந்தமான வேதனம் குறித்த பேச்சுகள்.

மலையகத்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான விவகாரம் இழுபறிக்குள் சிக்கிய நிலையில் இன்று கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்களுக்கும், தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் மிக முக்கிய சந்திப்பு நடைபெறுகின்றது.

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திக ழும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், அவர்க ளின் உழைப்பை உறிஞ்சியபின் உரிய வேதனம் அளிக் கப்படாமல் தேயிலைச் சக்கை போல பிழியப்பட்ட பின் நாதியற்றவர்களாக வீசப்படும் நிலைமை நீடிக்கின்றது.

அவர்களின் முக்கிய தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் இடையில் மலையகத் தோட்டத் தொழிலாளரின் சம் பளம் தொடர்பாக ஏற்கனவே செய்யப்பட்டிருந்த ஒப் பந்தம் கடந்த மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்து விட்டது. ஐந்து மாதம் கடந்தும் அது புதுப்பிக்கப் படவில்லை. இரண்டரை வருடத்துக்கு முன்னர் நிர் ணயிக்கப்பட்ட வேதனப்படியே இன்றும் சம்பளம் பெற வேண்டிய அநீதி நிலைக்குள் அதீத கஷ்டத்துக்குள் மலையகத் தொழிலாளர்கள் சிக்குண்டிருக்கும் அவலம்.
தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை குறைந்த பட்சம் நாளொன்றுக்கு ஐந்நூறு ரூபாவாக உயர்த்த வேண்டும் என்ற கூட்டு ஒப்பந்தத் தொற்சங்கங்களின் கோரிக்கை ஏற்கப்படாத நிலைமையில், கடந்த முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்கள் ஒத்துழையாமைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. ஆனால் அத்தகைய ஒத்து ழையாமைப் பணி எத்தகையது என்பதில் கூடத் தொழிலாளர்களிடையே குழப்பம் நீடிக்கின்றது. "இது வேலை நிறுத்தமும் அல்ல, மெதுவாகப் பணி செய்யும் போராட் டமும் அல்ல' என்று சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் விளக்கம் கூறப்படுகின்றது. ஆனால் அவற் றுக்கு அப்பால் ஒத்துழையாமைப் போராட்டம் எத்தகை யது, அதை எப்படி முன்னெடுப்பது, அந்தப் போராட்டத்தின் பண்பியல்புகள் எவை என்பன பற்றியெல்லாம் தெளிவான வரையறை இல்லை. இதனால், இவ்வாறு தங்கள் சார்பில் சம்பள உயர்வு கோரி நடத்தப்படும் போராட்டங்களுக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குவதற்குத் தோட்டத் தொழிலாளர்கள் முன்வந் துள்ள போதிலும், அந்தப் போராட்டத்தை எந்த வழி முறை யில் முன்னெடுப்பது என்பதில் போதிய விளக்க மில் லாமல் அவர்கள் தடுமாறி நிற்கின்றமையும்கண்கூடு.

இந்நிலையில்தான், இவ்விடயம் குறித்து இறுதி முடிவு ஒன்றை எடுக்கும் இலக்கோடு கூட்டு ஒப் பந்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கின்றனர். தோட்டத் தொழிலாளரின் நாள் கூலியை ஐந்நூறு ரூபாவுக்கும் அதிகமாக உயர்த்தும் ஓர் இணக்கப்பாடு இந்தச் சந்திப்பில் எட்டப்படுமாயின், அது அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களின் வயிற் றில் பால் வார்த்ததாக இருக்கும்.

அடுத்ததாக இலங்கை ஜனாதிபதிக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று மாலை இடம் பெறும் சந்திப்பு நோக்கற்பாலதாகும்.

அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் தீவிரமடைந்த நிலையில், அரசுத் தலைவருடன் அரசியல் தீர்வுக்கான விடயங்கள் குறித்து சந்தித்துப் பேசுவதைத் தவிர்த்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது புலிகள் இயக்கம் முற்றாக அழித் தொழிக்கப்பட்டுவிட்டது என அரசுத் தரப்பால் அறிவிக்கப்பட்டு சுமார் மூன்றரை மாதங்களின் பின்னர் முதல் தடவையாக அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று நேரடிப் பேச்சுகளில் ஈடுபடவிருக்கின்றது.

வன்னியில் நலன்புரி மையங்கள் என்ற பெயரில் இயங்கும் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் தமிழர்க ளின் பேரவல நிலைமை
வன்னியில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி யிருக்கும் தமிழர் தாயகப் பிரதேசங்களின் எதிர்காலம்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எதிர்கால வாய்ப்புகள்

தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் தமது வழமை யான பணிகளை முன்னெடுப்பதில் உள்ள இடைஞ்சல்கள் வன்னிக்கு அப்பால் வடக்கு, கிழக்கின் ஏனைய இடங்க ளில் வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் அன்றாட நெருக்கடிகள் , இவை போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடை யில் இன்று இடம்பெறும் பேச்சுகளின்போது முக்கியமா கக் கவனிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மொத்தத்தில் இன்று நடைபெறும் இந்த இரண்டு சந்திப்புகளுமே இந்த இலங்கைத் தீவில் தமிழர்களின் எதிர்காலம் பற்றிய விடயங்களில் முக்கிய பங்கை இடத்தை வகிக்கப் போகின்றன.

தமிழ்க் கட்சிகளின் ஐக்கியம்:சிதறுண்டு போகும் சாத்தியம்!



ஈழத்தமிழர்களின் உரிமைக்கான விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை வெற்றிகரமாக முறியடித்து விட்டதாக் கொழும்பு அரசு அறிவித்துள்ள இன்றைய சூழலில், தமிழர்கள் தமது எதிர்காலம் குறித்த சூனிய நிலைக்குள் அரசியல் அந்தகாரத்துக்குள் சிக்கி, நிலை தெரியாமல், வழிபுரியாமல் தவிக்கின்றார்கள் என்று பல தரப்பிலும் பிரபலாபிக்கப்படுகின்றது.

இந்த இக்கட்டு நிலைமையில் இருந்து தமிழர்களை மீட்டு எதிர்கால சுபிட்சம் நோக்கி வழிநடத்துவதற்காக தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும், ஐக் கியப்பட்டும் செயற்பட வேண்டும் என்றெல்லாம் கோரிக் கைகள் முன் வைக்கப்படுகின்றன.
நல்ல விடயம் தான். இன்றைய நிலையில் தமிழர்களின் ஜனநாயக சக்திகள் ஐக்கியப்பட்டு ஏதேனும் சாதிக்கமுடி யுமா, மக்களை அழிவில் இருந்து பாதுகாத்து மீட்டுக் கொள்ள முடியுமா என்பது ஆலோசிக்கப்பட வேண்டிய விவகாரமே.

இது வரை, இனப்பிரச்சினை விவகாரத்தில் பேரம் பேசும் வலிமையாக சக்தியாக தமிழர் தரப்பிடம் இருந்த ஆயுதவலிமை முற்றாக சிதறடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு விட்டது என்பது யதார்த்தம்.

இனி தமிழர் தரப்பின் அரசியல் சக்திகள் ஒன்றபட்டு ஜனநாயக ரீதியாக தங்களின் வலிமை மூலம் இப்போது சிதறுண்டு சின்னாபின்னமாகி பேரவலங்கள் மற்றும் அனர்த்தங்களுக்குள் சிக்கிக்கிடக்கும் தமிழினத்தைக் காப்பாற்றி, தூக்கி நிறுத்தி, உரிய உரிமைகளையும் கௌரவ வாழ்வையும் மீட்டுப் பெறமுடியுமா என்பதே கேள்வியாகும்.

அதுவும் தமிழர்களின் இதுவரை காலமான ஆயுத வலிமை அழிக்கப்படுவதற்கு துணைபோன தரப்புக் களே இப்போது ஜனநாயக வழியில் ஐக்கியப்பட்டு சாதிப்போம் என்ற கோரிக்கையை முன்வைப்பது கவ னிக்கத்தக்க விடயமாகும்.

இத்தரப்புகளுடன் ஒன்றிணைவதன் மூலம் எதையும் சாதிக்க முடியுமா என்பதை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அரசோடு சேர்ந்து பாடி, கொடுப்பதைப் பெற லாம் என்ற தத்துவத்துக்குள் மூழ்கி, அதை நம்பி, செயற் படும் இத்தரப்புகளை ஊக்குவித்து ஆதரவளித்து வலுப்படுத்துவன் மூலமே ஏதேனும் விமோசனம் கிட் டும் என்று தமிழ் மக்கள் கருதுவார்களானால் இத்தரப் புக்களை அரவணைத்து ஐக்கியப்படுவது காலத்தின் கட் டாயம் ஆகும்.

தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டிய முக்கியவிடயம் இது. வலராற்று திருப்பத்திலே நிற்கும் தமிழினம் இனி மேலும் இவ்விடயத்தில் ஒரு முடிவுக்கு வராமல் அதை ஒத் திப்போட முடியாது. ஒரு முடிவை எடுத்தேயாக வேண்டும்.

இதேசமயம் இதுவரை தமிழர் தரப்பில் ஐக்கியத்தின் பேரால் ஒன்றிணைந்த தரப்புக்களும் கட்சிகளும் சில முடிவுகளை எடுக்க முயல்கின்றன என்ற தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கின்றன.

தமிழரசுக்கட்சி அகில இலங்கைத்தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கின. இப்போது தமி ழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரையும் உதயசூரி யன் சின்னத்தையும் அதன் தலைவர் ஆனந்தசங்கரி, இலங்கையின் நீதித்துறையைப் பயன்படுத்தி தம்வசம் வைத்திருக்கின்றார். எனினும் தமிழர் விடுதலைக் கூட் டணியின் பெரும்பான்மையான தலைவர்களும் தொண் டர்களும் மறுபக்கத்திலேயே தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பிலேயே உள்ளனர் என்பது வெளிப்படையானது.

இதே சமயம் ஈ. பி. ஆர். எல். எவ், ரெலோ போன்ற கட்சிகளும் இன்னும் சில உதிரித் தலைவர்களும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் உள்ளனர். தமிழர் தரப்பில் நாடா ளுமன்றப் பிரதிநிதித்துவம் மூலம் தமிழர்களை அதிகம் பிரதிநிதித்துவம் செய்யும் கட்டமைப்பாக கூட்டமைப் பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே உள்ளது என்பதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமே.

தமிழர்களின் ஜனநாயக ரீதியான சக்திகள் கட்சிகள் ஐக் கியப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படும் இச்சம யத்தில், ஏற்கனவே ஓரளவுக்கு ஐக்கியப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே சிதறுண்டு போகும் ஆபத்து ஏது நிலைகள் தென்படுகின்றன என்பது தான் கவலைக்குரிய விடயமாகும்.

தமிழர்களின் உரிமைக்கான போராட்ட சக்தி என்ற வலிமையான கயிற்றில் கட்டப்படிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இப்போது அந்த பிரதான சக்தி என்ற கயிறு நொந்து நூலாகி போனதால் நெல்லிக்காய் மூடையின் வாயைக்கட்டிய கயிறு அறுந்ததால் சித றுண்டு போகும் நெல்லிக்காய் போல சிதறுப்பட்டுப் போகத் தயாராகி வருவதாகத் தோன்றுகின்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் சின்ன மான "உதயசூரியன்' ஆனந்தசங்கரி அணியிடம் சிக்குண் டமையை அடுத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமி ழரசுக்கட்சியின் "வீடு' சின்னத்திலேயே தேர்தல்களைச் சந்தித்து வருகின்றது.
அதைக் காரணம் காட்டி எதிர்காலத்தில் தனித்துக் களமிறங்கும் முயற்சிகளை தமிழ் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சிலர் ஏற்கனவே ஆரம்பித்து விட்டனர் எனத் தெரிகின்றது.
இதே போல தமிழ்க் கூட்டமைப்பின் பொது நிலைப் பாட்டுக்கு கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக அறிக்கைகள் வெளியிட்டுத் தனித்தவில் வாசிக்கும் சில பிரமுகர்களும் தமிழ்க் கூட்டமைப்பில் இருந்து தத் தமது கட்சிகளை உடைத்து வெளியேற்றும் தந்திரத்தில் இறங் கித் தம் தலையிலும் தமது இனத்தின் தலையிலும் மண்வாரி இறைக்கத் தயாராகி வருகின்றனர் என்றும் தெரிகின்றது.

இந்தச் சீத்துவத்தை நோக்கும் போது, இருக்கும் ஐக்கி யமே சிதறுண்டு போகும் போலத் தோன்றுகின்றது. இந்நிலையில் தமிழ் ஐனநாயகக் கட்சியினருக்கிடையே மேலும் ஐக்கியம் வரும் என்று பேசுவதும் எதிர்பார்ப்பதும் வெறும் கனவு போலவே தோன்றுகிறது....!

"ஜி.எஸ்.பி." வரிச்சலுகையை ஒரேயடியாக விலக்குமா ஐரோப்பிய ஒன்றியம்?


கிடைக்குமா அல்லது தடைப்படுமா என்று எதிர் பார்க்கப்பட்ட சர்வதேச நாணய நிதியக்கடன் கடைசியில் அரும்பொட்டில் கொழும்பு அரசுக்குக் கிடைத்தபோது தென்னிலங்கை துள்ளிக்குதித்து ஆரவாரித்தது. தன்னு டைய சர்வதேச இராஜதந்திரத் தொடர்பாடல் சிறப்புத் தோற்றுப்போய் விடவில்லை எனக் குறிப்பிட்டு கொழும்பு தனக்குத்தானே புகழாரம் சூட்டிக்கொள்ளவும் தவறவில்லை.

இப்போதும் அதேபோன்ற ஓர் இக்கட்டு புதிதாக வந் திருக்கின்றது. ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதிக் கான வரி விலக்குச்சலுகை "ஜி.எஸ்.பி. பிளஸ்" சலுகை இலங்கையின் கையை விட்டுப் போய்விடும் ஆபத்து ஏது நிலை ஏற்பட்டிருக்கின்றது.

மனித உரிமையைப் பாதுகாப்பது தொடர்பில் சர்வ தேசத் தரத்தை சர்வதேசம் எதிர்பார்க்கும் தர நிலையை பேணத் தவறியமைக்காக இந்தச் சலுகையை இலங்கை இழக்கும் நிலைமை வந்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட இந்தச் சலுகை தொடர்பான கால அவகாசம் கடந்த வருடமே முடிவுற்ற போதிலும், அதனை ஐரோப்பிய ஒன்றியம் அப் போது நீடிக்கவில்லை. நீடிப்பது தொடர்பான முடிவு எடுப்பதை ஒத்திவைத்துவிட்டு, அந்த சலுகையை ஒரு வருடத்துக்கு இந்த ஒக்ரோபர் வரை தற்காலிகமாகத் தொடர்வதற்கு மட்டுமே அது தீர்மானித்தது.அதன்படி, இப்போது இறுதி முடிவு எடுக்கும் காலம் நெருங்கிவிட்டது. இது விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கக்கூடிய தீர்மானம் கொழும்புக்குச் சாதகமாக அமையாது என்று பூர்வாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் சலுகையை இலங்கை இழக்குமானால் அது இலங்கைக்குப் பொருளாதாரத்தில் பலத்த அடியை பின்னடைவை கொடுக்கும் என்பது திண்ணம்.தைத்த ஆடைகளை இறக்குமதி செய்வதற்கு வரி ஏதும் விதிக்காமல் ஊக்குவிக்கும் சலுகையை ஐரோப் பிய ஒன்றியம் இலங்கை உட்பட ஒருசில நாடுகளுக்கு மட்டும் வழங்கியமையால், சர்வதேச சந்தையில் ஏனைய நாடுகளுடன் போட்டிபோட்டுக்கொண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இலங்கைத் தொழிலதிபர்களால் தாராளமாகத் தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ய முடிந்தது; முடிகிறது. இந்த ஏற்றுமதி வாய்ப்பை நம்பி பெரும் பொருளாதாரக் கட்டமைப்பே வலையமைப்பே இலங்கையில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக் கின்றது. மேற்படி சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொள்ளுமானால் அந்த முழு வலையமைப்பே ஒரேயடியாகப் படுத்துவிடும்.

கடந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இவ் வாறு தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் சுமார் 350 கோடி அமெரிக்க டொலரை (சுமார் 35 ஆயி ரத்து 500 கோடி ரூபாவை) இலங்கை சம்பாதித்தது.

வெளிநாட்டிலிருந்து இலங்கையர்கள் வருடாந்தம் உழைத்து இலங்கைக்கு அனுப்பும் 300 கோடி அமெரிக்க டொலருக்கும், தேயிலை ஏற்றுமதி மூலம் வருடாந்தம் கிடைக்கும் 120 கோடி டொலருக்கும் அதிகமாக இலங் கைக்கு அந்நிய செலாவணியை கூடியளவில் ஈட்டித் தரும் துறையாக இந்தத் தைத்த ஆடை ஏற்றுமதியே அமைந்துள்ளது.
அதுமட்டுமல்ல. இலங்கையின் ஏற்றுமதித்துறை யில் அதிக சந்தை வாய்ப்புத் தரும் மையமாக ஐரோப் பிய ஒன்றியமே விளங்குகின்றது. மொத்த ஏற்றுமதியில் 36 வீதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் செல்கின் றது. அடுத்தது அமெரிக்காவுக்கு; 24 வீத ஏற்றுமதி அந்த நாட்டுக்கு.

இந்தப் பின்புலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மேற்படி வரிச்சலுகையை விலக்கிக் கொள்ளுமானால், அந்த ஏற் றுமதியை நம்பி நாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான ஆடைத் தொழிற்சாலைகளை இழுத்து மூடவேண்டியதுதான். பல லட்சம் தொழிலாளர்கள் குறிப்பாக இளம் யுவதிகள், இளைஞர்கள் ஒரேயடி யாக வேலை இழப்பர். அவர்களை நம்பியிருக்கும் குடும் பங்கள் வீதிக்கு வரவேண்டியதுதான்.

மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் மிக அசிரத்தையாகவும், மிதப்பு மற்றும் தடிப்புடனும் செயற் பட்டுக்கொண்டு, மேற்குலகையும் உதாசீனப்படுத்தி, தூக்கியெறிந்தபடி முன்னெடுக்கப்படும் இராஜதந்திரம், காலம் தாழ்த்தியாவது கெடுவினையைத் தேடித்தரும் என்று கொழும்பு உணரவேண்டிய வேளை நெருங்கி வருகின்றது என்றே தோன்றுகின்றது.
ஒருபுறம், மேற்குலகைக் கரித்துக்கொட்டியபடி மறுபுறம், லிபிய அதிபருடன் தோளில் கைபோட்ட படி, வெனிசூலா அதிபருடன் தொடர்பாடல்களை நெருக்கமாக்கிக் கொண்டு, ஈரானுடனும், பாகிஸ்தானுட னும், சீனாவுடனும், பர்மாவுடனும் உறவைப் பலப்படுத் தியபடி
நாட்டை வழிப்படுத்தும் இராஜதந்திரம் எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானது என்ற அமிலச் சோதனை யைக் கொழும்பு முன்னெடுப்பதாகவே தோன்றுகின்றது.

அந்தப் பரீட்சார்த்த களத்தின் முக்கிய கட்டமே "ஜி.எஸ்.பி.பிளஸ்" வரிச்சலுகை விவகாரமாகும். இந்த நெருக்கடியைக் கொழும்பு எப்படி வெற்றிகரமாகத் தாண்டப் போகின்றது? விரைவில் தெரியவரும்.