மேற்குலகை எதிர்க்கும் போக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்


தென்னிலங்கையில் குறிப்பிடத்தக்க அரசியல் விமர்சக ராகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும், பத்திரிகை யாளராகவும் கருதப்படுபவர்களுள் ஒருவர் விக்டர் ஐவன்.
1977 முதல் 17 ஆண்டுகள் நீடித்த ஐ.தே.கட்சியின் அதி கார யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அப்போதைய எதிரணியின் போராட்டத்திலும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவின் போக்குக்கு எதிராக நீதியை நிலை நாட்டும் திடசங்கற்ப போராட்டத்திலும் சளைக்காமல் ஈடு பட்டு மதிக்கப்பட்டவர் விக்டர் ஐவன்.

ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகவும் வேண்டப்பட்டவராகக் கருதப் படும் அவர்,இப்போது ராஜபக்ஷ அரசின் செயற்போக்குக் குறித்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சில கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.

மேற்குலகைப் பகைத்துக் கொள்ளும் இந்த அரசின் போக்கு விபரீதத்துக்கு வித்திடும் என்பதை அவர் கோடி காட்டுகின்றார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆயுத யுத்தத்தில் அரசு வெற்றிகொண்டிருப்பது உண்மைதான். இந்த அரசு வெற்றி கொள்ள வேண்டிய சவால்களில் அது பிரதான மானதுதான். ஆனால் அதற்குப் பின்னும் பல சவால்களை இந்த ஆட்சிப்பீடம் வெற்றிகொண்டாக வேண்டும். அவற்றை வெற்றிகொள்ள முடியாமல் போகுமானால், முன்னைய யுத்த வெற்றி அர்த்தமற்றதாக அபத்தமாக போய்விடும் என்று அவர் விளக்குகின்றார்.

மேற்குலகைப் பகைத்துக்கொள்ளும் அல்லது அதனை வெட்டி ஓடும் கொழும்பின் போக்கு நாட்டுக்கு நன்மை தராது. மேற்குலகைச் சார்ந்து நிற்காது விடினும் கூட, குறைந்தபட்சம் மேற்குலகுக்கு விரோதம் என்ற இறுக்கமான போக்கை அரசு கடைப்பிடிக்காமல் இருப்பதே உசிதமானது என்று சுட்டிக்காட்டுகின்றார் அவர்.

நாட்டின் பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம் என்ற கருத்துடன் தீர்க்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றது. மேற்குலகின் உதவியின்றி இலங்கையால் செம்மையாக இயங்கமுடியும் என்று பேச்சுக்குக் கூறப்பட்டாலும் கூட அது சாத்தியமற்றது என்பதே உண்மையாகும்.

சர்வதேச நாடுகளுடன் முரண்பாட்டை ஏற்படுத்தும் போக்கில் அசிரத்தையுடன் நடந்துகொண்டால் விளைவு மோசமாக அமையும் என்ற நல்ல முன்னுதாரணம் இலங் கைக்கு உண்டு என்பதையும் விக்டர் ஐவன் நினைவூட்டு கின்றார்.
"1977 ஆம் ஆண்டின் தேர்தல் மேடையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா வீற்றிருந்த வேளையில், இந்திரா காந் தியை விமர்சித்து அவரைப் பசுமாட்டுக்கு உதாரணப் படுத்தி உரையாற்றினார். அதன் காரணமாகப் பின்னாளில் இலங்கை பெரும் விலை செலுத்தவேண்டி நேர்ந்தமை மறக்கக் கூடியதல்ல.

"பிரதமர் இந்திரா காந்தியின் நிர்வாக காலத்தில் இந்தியாவுடன் இலங்கை கசப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்த வேளையில், கடும் அமெரிக்க சார்பு மற்றும் மேற்குலகைச் சார்ந்து நின்ற தனது கொள்கைப் போக்கின் மூலம் இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றே இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கையின் காரணமாகவே நிவாரணப் பொருள் களுடன் இலங்கை நோக்கி வந்த இந்தியப் படகுகளைத் திருப்பி அனுப்பும் பணிப்புரையை ஜே.ஆர்.விடுத்தார். அவரின் அந்த முடிவை நாட்டின் பொதுமக்களும் திருப்தியுடன் வரவேற்றனர். எனினும், இந்தியா, இலங்கையின் வான்பரப்பை ஆக்கிரமித்துக்கொண்டு விமானங்கள் மூலம் யாழ். குடாநாட்டுக்குள் நிவாரணப் பொருள்களை வீசியபோது, ஜனாதிபதி ஜெயவர்த்தானாவின் இந்திய எதிர்ப்புக் கொள்கைக்கு ஒத்தூதிய எந்த மேற்கு நாடும் இந்தியாவின் அச் செய்கைக்குக் கண்டனம் கூடத் தெரி விக்க முன்வரவில்லை. அந்த நாடுகளின் அப்போக்கு ஜெயவர்த்தனாவுக்கு ஆச்சரியத்தையும், ஆதங்கத்தையும், கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இறுதி யில் இலங்கை தனது பாதுகாப்புத் தொடர்பாக இந்திய அர சின் முன் மண்டியிட வேண்டிய நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியது அது.'' என்பதைச் சுட்டிக்காட்டுகின் றார் ஐவன்.

அதுமட்டுமல்ல வியட்நாமையும் அவர் உதாரணம் காட்டுகின்றார். சோவியத் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் அமெரிக்காவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியது வியட்நாம். போர் ரீதியில் அமெரிக்காவைப் பின்னடைவுக் குத் தள்ளவும் அதனால் முடிந்தது. ஆனாலும் அந்த வெற்றி யின் பின்னால் அதனால் பலம் பொருந்திய நாடாக மாற முடியவில்லை. ஏழ்மையிலேயே அது மூழ்கியது. அந்தத் துன்பியல் நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு அதுவரை தான் பகைமை பாராட்டிய அமெரிக்காவின் உதவி, ஒத்தா சைகளை யாசிக்கவேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டது.

பலம்மிக்க நாடுகள் தமக்கு எதிர்ப்புக் காட்டி நிற்கும் நாடொன்றை உடனடியாகப் பாதிப்புக்கு உள்ளாக்கி விடு வதில்லை. படிப்படியாகவே கொஞ்சம் கொஞ்சமாகவே தமது அக்கருமத்தை அவை நிறைவேற்றி முடிக்கின்றன.

இவ்விதமாகப் பெரும் பலவான்களால் ஏறி மிதித்துக் குட்டிச்சுவராக்கப்பட்ட நாடுகளை நாம் சிந்தையில் நிறுத் திக் கற்றுத் தேறவேண்டியுள்ளது என்கிறார் விக்டர் ஐவன்.
அனைத்து மேற்குலக நாடுகளும் ஓரணியில் நிற்கும் போது அந்த ஒருங்கிணைந்த பலம் இலங்கைத் தேசத் தைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும் ஆபத்து உள்ள மையை விக்டர் ஐவன் தொட்டுக்காட்டி எச்சரிக்கின்றார்.

ஆனால், புலிகளைத் தோற்கடித்த கணிப்பில் நிற்கும் கொழும்பு அதிகார வர்க்கம், அதே பாணியில் மேற்குலக மிடுக்கையும் முறியடித்து விடலாம் என்று கருதிச் செயற்படுவதாகவே தோன்றுகின்றது.

ஆட்சியில் உள்ளவர்கள் புரியும் இந்தத் தவறு, பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்ற நிலைக்கு இந்நாட்டு மக்களைத் தள்ளிவிடும் அபாயம் உண்டு.

இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் எட்டாம் ஆண்டு நிறைவில்.........!


சர்வதேசப் பொலிஸ்காரனான அமெரிக்காவையே கலங்கடித்துப் பீதிக்குள் ஆழ்த்திய நியூயோர்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரம் மற்றும் அமெ ரிக்கப் பாதுகாப்புக்கான மையத்தளமான "பென்டகன்" ஆகியவற்றின் கட்டடங்களை விமானங்கள் மூலம் மோதித் தாக்கும் சாகசம் நடத்தப்பட்டு நேற்றுடன் எட்டு ஆண் டுகள் பூர்த்தியாகிவிட்டன.



இந்தத் துணிகரத் தாக்குதல்களை ஒப்பேற்றி முடித்த வர்கள் என்று கூறப்படும் தீவிரவாதிகளின் இலக்கு எட்டப்பட்டதா, நோக்கம் நிறைவேறியதா என் பது தெரியவில்லை; தெளிவில்லை.

ஆனால் அந்தத் தாக்குதலினால் அதிர்ந்துபோன அமெரிக்க ஏகாதிபத்தியம் அதையடுத்து, அத்தாக்குத லுக்குப் பழிவாங்கப் போவதாகக் கூறிக்கொண்டு நேச நாடுகளையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு பெரும் எடுப்பில் ஆரம்பித்த "பயங்கரவாதத்துக்கு எதிரான உலகப் போர்" மட்டும் இன்னும் தனது நோக்கத்தை நோக்கி முன்னேறவேயில்லை. சுருக்கமாகச் சொல்வதானால் அந்த எத்தனம் "பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக முடிந்த கதையாக"திசைமாறிச் சிதம்பிப்போய்க் கிடக் கின்றது.

அமெரிக்கா மீதான "செப்டெம்பர் 11" தாக்குதலுக் கான சூத்திரதாரிகள் அதற்குத் திட்டமிட்ட மையம் ஆப் கான் என்ற கருதுகோளில் அந்த நாட்டையே அமெ ரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு முத லில் இலக்கு வைத்தது. அதனோடாவது அமெரிக்கா நிறுத்தியிருக்கலாம்; அடங்கியிருக்கலாம்.



அதை விடுத்து, அளவுக்கு மீறிய செருக்கோடு உல கெங்கும் "வாய்"வைத்தது அமெரிக்கா. "பயங்கரவாதத் துக்கு எதிரான போர்" என்ற கண்மூடித் தனமான குருட் டாம் போக்கிலான அப்போதைய புஷ் நிர்வாகத்தின் எதேச்சாதிகாரம் உலக அமைதிக்கே பங்கம் விளைவித்து வேட்டு வைத்தது. அமெரிக்காவுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி நிற்கின்றது.

எது பயங்கரவாதம், யார் பயங்கரவாதிகள் என்பதற்கான சரியான நுண்ணிய அளவு கோல்களைப் பயன் படுத்தி உண்மையான, நேர்மையான, தெளிவான, தீர்க் கமான முடிவுகளை எடுக்காமல், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தரப்புகளை எல்லாம் சட்ட ரீதியான நேர்மையான இறைமையுள்ள அரசுகளாகத் தன் பாட்டில் அங்கீகரித்தபடி நீதி, நியாயம், உரிமை வேண்டி தார்மீகப் பண்புகளோடு போராடும் ஏனைய தரப்புகள் எல்லாவற்றுக்கும் "பயங்கரவாதம்" என்ற முலாமைப் பூசிக்கொண்டு, அமெரிக்காவும் அவற்றின் நேச அணிகளும் செயற்பட்டன; செயற்பட்டுக் கொண் டிருக்கின்றன.

அமெரிக்காவின் இத்தகைய நேர்மைத்தன்மையில் லாத பார்வையின்கீழ் அணி திரண்ட சக்திகள், தர்மத் தின் வழி தழுவி, நியாயத்தின் பாதையில் முன்னெடுக் கப்படும் போராட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை எல் லாம் பயங்கரவாதமாகத் திரிபுபடுத்தி முத்திரை குத் தின.

நீதிக்காகப் போராடும் சக்திகளுக்கு பயங்கரவாதச் சேறு பூசிக்கொண்டு, அதேசமயம், அவற்றை நசுக்க முய லும் அடக்குமுறை அரசுகளின் இராணுவப் பயங்கர வாதத்தை மூடி மறைக்கவும் அமெரிக்கா தலைமையி லான இந்த சர்வதேச எதிர்ப்பியக்கம் நன்கு உதவியது. இதன் விளைவை உலகம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

சரியோ, பிழையோ, இராணுவ ரீதியிலான அடக்கு முறை ஆட்சியோ, இல்லையோ ஈராக்கில் அதிபர் சதாம் ஹுசைன் தலைமையில் அமைதியான ஓர் ஆட்சி முறைமை தொடர்ந்து நீடித்தது. அப்போதைய அமெ ரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் ஆக்கிரமிப்பு எதேச்சாதிகாரம் அந்த நாட்டை இன்று குண்டு வெடிப்புகளிலிருந்து மீளமுடியாத நிரந்தர இரத்த பூமியாக்கியிருக்கின்றது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் விளைவால் இன்று ஈராக்கில் தினசரி குண்டு வெடிப்புகள், தற்கொலைத் தாக்குதல் கள், அழிவுகள், பிணக் குவியல்கள், கோரங்கள், கொடூ ரங்கள். அமைதியாக விடியும் நாள் என ஒன்று இல்லை என்ற நிலைமையே அங்கு ஏற்பட்டிருக்கின்றது.

மனித குலத்திற்குப் பேரழிவைத் தரும் ஆயுதங் களை சதாம் நிர்வாகம் தயாரித்து வைத்திருக்கின்றது என்ற பொய்யைப் பிரகடனப்படுத்திக்கொண்டு அந்தத் தேசத்தை ஆக்கிரமிக்கும் "பயங்கரவாதத்தை" புரிந்தது அமெரிக்கா.

ஈராக்கை ஆக்கிரமிக்க புஷ் நிர்வாகம் முன்வைத்த காரணம் பச்சைப் பொய் என்பது அம்பலமான நிலையில் தான் ஆக்கிரமித்த ஈராக், ஆப்கான் போன்ற தேசங் களில் அதற்கு முன்பிருந்தமையை விட மிக மோச மான, மிகக் கோரமான, மிகக் கொடூரமான, மிகக் கேவ லமான நிலைமையை ஏற்படுத்திவிட்டு முன்வைத்த ஆக்கிரமிப்புக் காலை பின்வாங்கவும் முடியாமல், வைத்துப் பேணவும் முடியாமல் அல்லா டுகின்றது அமெரிக்கா.



"உலகப் பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" என்ற பெயரில் அமெரிக்கா ஆரம்பித்த மாயை யுத்தம், அமெரிக்காவையே பயங்கரவாதத் தரப்பாக மாற்றி நிற் பதே உண்மை.
"பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேசப் போர்" என்ற பெயரில் முன்னைய புஷ் நிர்வாகம் இழைத்த பாரிய தவறுகளின் தாற்பரியத்தைப் புரிந்துகொண்டு, அவற்றுக்குப் பிராயச்சித்தம் செய்து, நியாயம் புரியும் நல்ல நோக்கம் அமெரிக்காவின் புதிய ஒபாமா நிர் வாகத்துக்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்பது தான் நிஜம்.

தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை தீர்மானிக்க புதிய நடைமுறை தேவை


இந்த நாட்டின் அந்நிய செலாவணி சேமிப்புக்கு முதுகெலும்பாக விளங்கும் மலையகத் தோட்டத் தொழிலாள ரின் சம்பளப்பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் இழுபறிப்படுகின்றது.

இப்பத்தி எழுதப்படும் சமயத்திலும் நேற்று மாலை யும் இவ்விடயம் தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம் மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் மூன்றாவது சுற்றுப் பேச் சுகள் நடைபெற ஏற்பாடாகியிருந்தன.
முதல் இரண்டு சுற்றுப் பேச்சுகளும் இணக்கம் காணப் படாமல் முடிவுற்ற நிலையில் நேற்று மூன்றாவது சுற்றி லும் உடனடியாகவே தீர்க்கமான இணக்கமான முடிவு எட் டப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன என்று நேற்று முற்பகலில் பேச்சுக்கு முன்னர் கூறப்பட்டது.

எது எப்படியென்றாலும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் அடுத்த நான்கு நாள்களுக்குள் இவ்விடயத்தில் ஏதே னும் ஒருமுடிவு வந்துவிடும் என்று தாங்கள் நம்புகின்றார் கள் என மேற்படி பேச்சுகளில் பங்குபற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இலங்கையில் வறுமை நிலை உயர்வாக உள்ள பிரதேசம் மலையகமே. அந்தப் பிரதேசத் தோட்டத் தொழிலாளர்களே இலங்கையில் அதிகம் பின்தங்கிய மக்களாக உள்ளனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. நாடு முழுவதும் வறு மையின் வீதம் 14 ஆக இருக்க மலையகத்தில் மட்டும் அது 34 வீதமாக உயர்ந்து நிற்கின்றது.

உண்மையில், இலங்கையில் அபிவிருத்தியும், உதவியும், ஊக் குவிப்பும் விரைந்து வழங்கப்பட வேண்டிய பிரதேசமாக மலையகமே உள்ளது. ஆனால் அந்த மக்களின் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை வேதனம் குறித்துக் கூட எவரும் சிந்திக்கின்றவர்களாக அக்கறை காட்டுபவர்களாக இங்கு இல்லை என்பதே உண்மை.

இப்போது சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் தோட்டத் தொழி லாளர்களின் சம்பளம் பற்றிய விடயம் பெரும் சர்ச்சையாக உருவாகி இழுபடுகின்றது. 2007 இல் அவர்களின் நாள் சம் பளம் சுமார் இருநூறு ரூபாவாகத் தீர்மானிக்கப்பட்டு கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்துக்கான செயற் காலம் காலாவதியாகி சுமார் ஆறு மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் கூட வெறும் இரு நூறு ரூபா நாள் சம்பளத்துடன் அவர்கள் கையேந்தி அவலப்படும் நிலைமை நீடிக்கின்றது. இத்தகைய சொற்ப வேதனத்துடன் அவர்களைப் பணிக்கு அமர்த்தி இழுத்தடிப்பது அநியாயத்திலும் அநியாயமாகும்; அக்கிரமத்திலும் அக்கிரமமாகும்.

இந்த மலையக மக்களுக்கு உரிய காலத்தில் உரிய வேதன உயர்வை பெற்றுத்தர முடியாத, பெற்றுத்தர வக் கற்ற இந்தக் கூட்டு ஒப்பந்த முறையால் அந்த மக்களுக்கு என்ன பயன்? இப்படி மலையக மக்களின் அடிப்படைப் பிரச் சினைக்கு உரிய காலத்தில் உரிய முறையில் தீர்வு காண் பதற்கான வாய்ப்பை வழங்காத இந்தக் கூட்டு ஒப்பந்த முறைமை இனியும் தொடரத்தான் வேண்டுமா? என்ற கேள்வி மலையக மக்களிடம் எழுவது நியாயமானதே.
அத்தோடு இத்தகைய கூட்டு ஒப்பந்த ஏற்பாடு மூலம் மலையகத் தொழிலாளர்களின் வேதனத்தைத் தீர்மானிக் கும் முறைமை குறித்து பல்வேறு விமர்சனங்களும் காட்ட மாக முன்வைக்கப்படுகின்றமை இச்சமயத்தில் கவனிக் கத்தக்கதாகும்.

ஒருசில தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மட்டும் இப் படி வேதன அளவைத் தீர்மானிக்கும் கூட்டத்தில் பங்கு பற்றும் அதிகாரத்தைத் தம்வசம் வைத்துக்கொண்டு ஆட் டம் போடுவது நியாயமற்றது. பல காத்திரமான தொழிற் சங்கங்களின் கருத்துகளும், நிலைப்பாடுகளும் உள்வாங் கப்படாமல் ஒரு சில தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளி டம் முழுப் பொறுப்பும், அதிகாரமும் ஒப்படைக்கப்படுவது தவறு. அத்தகைய அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவர் கள் அதை வைத்துக்கொண்டு, மலையகத் தோட்டத் தொழி லாளர்களுக்காகத் தாங்கள் போராடுவார் கள் என வெளி வேஷத்துக்குக் காட்டிக்கொண்டு, முதலாளி மாருடன் மறை வில் இணக்கத்துக்கு வந்து, பெரும் தொகையை சுருட்டிக் கொண்டு, தொழிலாளர்களைக் காட் டிக் கொடுத்து விடு கின்றனர் என்றெல்லாம் கூட முறைப்பாடுகள் கூறப்படு கின்றன.அவற்றில் உண்மை இருக்கலாம். உண்மை இல் லாமல் போகலாம்.
தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்க விடயங்களுக் காகப் பேச்சு நடத்துவது என்பது வெகு நுட்பமான விடயம்.

"நூறு பெறவேண்டுமென்றால் நூற்றியைம்பது கேட்கவேண்டும். அப்போதுதான் நூறாவது கிடைக்கும்" என் பார்கள்.

இதுபோலவே மலையகத் தோட்டத் தொழிலாளரின் வேதனமும் நாளொன்றுக்கு 450 ரூபாவாகவாவது இருக்கவேண்டும் என்றால் ஐந்நூறு ரூபாவாக அதைக் கேட்டால்தான் இழுபறிப்பட்டு, சற்றுக் கீழிறங்கி இணக்கத்துக்கு வருவார்கள். அப்படி இணக்கத்துக்கு வந்ததும் "தினசரி ஐந்நூறு ரூபாவாக வேதனம் உயர வேண்டும்" என வற்புறுத்திய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இப்போது முதலாளிமார்களுடன் மறைமுக இணக்கத்துக்கு வந்து, பெரும் தொகையைக் களவாகச் சுருட்டிக்கொண்டு, விட்டுக்கொடுத்து, ஐந்நூறு ரூபாவுக்குக் குறைந்த தொகை நாள் வேதனத்துக்கு இணங்கிவிட்டார்கள் என்று எதிர ணியில் இருந்து சேற்றை அள்ளி வீசுகின்றார்கள். இப்படி இன்னொரு தரப்பில் விசனம் கூறப்படுகின்றது
கடந்த தடவையும் 2007 இலும் இப்படி மலையகத் தொழிலாளரின் வேதனம் தொடர்பான விடயத்தில் தோட்ட உரிமையாளர் சம்மேளனத்துக்கும் கூட்டுத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் கருத்து வேற்றுமை வந்தபோது அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷவே தலையிட்டு ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டியவரானார்.

இந்த விடயங்களைச் சீர்தூக்கிப் பார்க்கையில் மலை யகத் தோட்டத் தொழிலாளரின் வேதனத்தைத் தீர்மானிக் கும் விடயத்துக்குத் தற்போதைய கூட்டு ஒப்பந்த நடை முறைக்குப் பதிலாகப் புதிய பொறிமுறை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம் என்பது தெளிவாகின்றது.

இருப்போரின் விவரம் வெளியானால்தான் இல்லாதோரின் எண்ணிக்கை அம்பலமாகும் .!!!!


நீண்ட காலமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட் டுள்ள கைதிகள் மற்றும் காணாமல் போனோர் தொடர் பாக அடுத்த வாரம் கொழும்பில் முக்கிய மாநாடு ஒன்று நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. இதுபற் றிய தகவலை மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட் டாளரான மனோ கணேசன் எம்.பி. வெளியிட்டிருக்கின்றார்.
வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் விடுவிப்பு, மீள்குடியேற்றம் போன்ற விட யங்கள் மாதிரியே,

கைது செய்யப்பட்ட அல்லது கடத் தப்பட்ட நிலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட் டிருக்கும் கைதிகளினதும் காணாமற் போனோரினதும் பிரச்சினைகளையும் சமூகம் மறந்துவிட முடியாது என மனோ கணேசன் எம்.பி. குறிப்பிடுகின்ற கருத்து முற்றிலும் நியாயமானது; விரைந்து கவனிக்கப்பட வேண்டிய விடயமும் கூட.

அவர் சுட்டிக்காட்டுகின்றமை போல வெளியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதார மற்றும் அன்றாட, அவசர பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் அதே முக்கியத் துவம் விசேடமாகக் கூறுவதானால் அதைவிட அதிக முக்கியத்துவமும் விரைவும் கைதிகள் மற்றும் காணா மற்போனோரின் விவகாரங்களில் காட்டப்பட வேண் டும்.

நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தும் முயற்சியில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக இவ்விவகாரம் பிணைக்கப்பட்டிருப்பதை யாரும் மறந்துவிடவோ, மறைத்துவிடவோ முடியாது. தடுப்புக் காவலில் சிக்கி யோர் விடுவிக்கப்படுதலும், காணாமற் போனோர் தொடர்பில் அவர்களின் குடும்பத்தவர்களுக்குப் பொறுப்பான பதில் வழங்கப்படுவதும் புறம் ஒதுக்க முடியாத நடவடிக்கைகளாகும்.

இத்தகைய காணாமற்போனோர் பிரச்சினை என்பது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்கு மட்டும் உரியதன்று. இலங்கை முழுவதும் வியாபித்திருக்கும் ஒரு சிக்கலாகும் இது.
இந்தச் சிக்கலின் ஆழ அகலம் அல்லது பரிமாணம் கடந்த ஆறுமாத காலத்துக்குள் புதிய விஸ்வரூப வடி வத்தை எடுத்திருப்பதை எவரும் அறியாதிருக்க முடியாது.

இப்பிரச்சினையைக் கையாண்டு குறைந்த பட்சம் நியாயமான தீர்வு ஒன்றைக் காணும் முயற்சியில் ஈடு படுவதற்கு முதலில் காணாமற் போனோர் பற்றிய முறை யான பதிவுப் பட்டியல் ஒன்று தேவைப்படுகின்றது. இத் தகைய பட்டியலைத் தயாரிப்பதில் மக்கள் கண்காணிப் புக் குழு போன்றவை தமது சக்திக்கும் அப்பாற்பட்ட வகையில் மும்முரமாகச் செயற்பட்டு, பல்வேறு முயற் சிகளையும் எடுத்தனவாயினும் அவற்றின் எல்லை களுக்கு அப்பாற்பட்ட காரணங்களின் பொருட்டு அம் முயற்சி முழு அளவிலான வெற்றியை எட்டவில்லை என்பதே உண்மையாகும்.

காணாமற்போனோரின் பட்டியலை முழுமையாகத் தயாரிப்பதற்கு முதலில் இலங்கைத் தீவில் உயிருடன் இருப்போரின் பட்டியல் அல்லது விவரம் அவசிய மாகும். வன்னிக்கு அப்பாற்பட்ட இடங்களில் வாழ்வோர் பற்றிய தகவல்களைத் திரட்டுவதும் அவர்களின் இருப்புப் பற்றிய விவரங்களை உறவினர்கள் உறுதிப் படுத்திக் கொள்வதும் இயன்ற காரியம்தான். ஆனால் வன்னியில் சிக்குண்டுள்ள லட்சக் கணக்கான தமிழ் மக்கள் விடயத்தில் நிலைமை அப்படியல்ல. முதலில் அங்கு தடுப்பு முகாம்களில் யார், யார் இருக்கின்றார்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டால்தான் இல்லாமல் போனோர் அல்லது காணாமல் போனோர், "மாயமாக" மறைந் தோர், கொல்லப்பட்டோர் போன்றோரின் விவரம் அம் பலத்துக்கு வரும்.

தடுப்பு முகாம்களில் "சிறை" வைக்கப்பட்டுள்ள சுமார் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பேரின் பெயர், விவரங்கள் மற்றும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட் டால்தான், காணாமற் போனோரின் பட்டியலின் உண் மையான "பருமன்" தெளிவாகும்.

கடந்த 7 ஆம் திகதி மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழு சந்தித்தபோதும் இத்தகைய பட்டியலை வெளி யிடும்படியே வற்புறுத்தியது. அதற்கு அரசுத் தரப்பு கொள்கை அளவில் இணங்கியது என்று கூறப்பட்டாலும், அந்த உறுதிமொழி நடைமுறையில் செயற்படுத்தப் படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேற்படி தடுப்பு முகாம்களுக்கு எதிரணி அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதி கள் போன்ற தரப்பினர் செல்வதற்குக் கடும் கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கின்றது.
அதேசமயம், வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டிருப்போர் மற்றும் காவலிலும், சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவோர் பற்றிய எண் ணிக்கைகள் தொடர்பான விடயங்களில் தொடர்ந்தும் குளறுபடியான செய்திகளே வெளிவருகின்றன.

வன்னிப் பெருநிலப்பரப்பை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து முற்றாக மீட்டாயிற்று என அரசு அறி வித்து நான்கு மாதங்கள் கடக்கப்போகின்றன. எனினும், இதுவரை வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டி ருப்போரின் முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் பகி ரங்கப்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது. அது வெளிவரும்போதுதான் காணாமற்போனோர் பற்றிய உண்மை ரூபம் அம்பலமாகும்.

அந்தப் பட்டியல் வெளியாகும்போதுதான் மக்கள் கண்காணிப்புக் குழு போன்ற கட்டமைப்புகளின் உண் மையான பணி பன்மடங்கு சுமையோடு ஆரம்பமாகும் என்பதும் திண்ணம்.

வேண்டாம்... இனி ஒரு கருணா... இனி ஒரு டக்ளஸ்...!: ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை

மனிதர்களாக மாறி எம் மக்களை வாழ வையுங்கள்! வேண்டாம் இனி ஒரு கருணா... இனி ஒரு டக்ளஸ்... இனி ஒரு துரோகி... பாவம் எம் மக்கள் தாங்கும் சக்தியை இழந்துவிட்டார்கள்.இவ்வாறு இன்றைய ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகையில் வெளியாகிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் தற்காலிகமாக ஓய்வுக்கு வந்துள்ள நிலையில், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களை இலக்கு வைத்து சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் உளவியல் போருக்கு தெரிந்தோ, தெரியாமலோ நம்மவர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட இன உணர்வுடன் கூடிய ஒற்றுமை உணர்வு திட்டமிட்ட வழிகளில் சிதைக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப் போர்க் களத்தில் தம்மைப் பலியாக்கிக்கொண்டு, தமிழீழக் கனவோடு துயிலுறங்கும் பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள், தெரிந்துகொண்டே எதிரிகளை அழிப்பதற்காகத் தம்மையே தகர்த்துக் கொண்ட கரும்புலிகள், துரோகிகளால் பலியாகி கொள்ளப்பட்ட போராளிகள், அறுதிவரை மக்களுக்காகப் போராடிக் களப்பலியான தளபதிகள், அத்தனை பேரையும் காத்து நின்று கடைசிச் சொட்டு நீருக்கும் தலை வணங்காமல் உயிர் துறந்த பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் எனத் தமிழீழ விடுதலைக்காகத் தவம் இயற்றியவர்களின் புனிதங்கள் புலம்பெயர் தேசங்களில் விலை பேசப்படுகின்றன.

வன்னி அவலங்களின்போது கூட மடியை இறுக்கிப் பிடித்துக் கொண்ட பல கொடை வள்ளல்கள் கணக்குக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். 'கடைசியாகச் சேர்த்த காசு கணக்கில் வரவில்லையாம்'. இப்படியெல்லாம் புரட்சிக் கொடி பிடிக்கும் இவர்கள் யார்? என்று விசாரித்துப் பார்த்ததில் விடுதலைப் போராட்ட காலங்களில் அவர்கள் தாயகத்து மக்களுக்காகக் கிள்ளியும் கொடுக்காதவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல்களும் வெளிவருகின்றன.

விடுதலைப் புலிகளின் ஆட்சிப் பகுதி சுருங்கி, முல்லைத்தீவு நோக்கி மக்களும் புலிகளும் நகர்ந்தபோது புலம்பெயர் தேசம் பொங்கி எழுந்தது. போராட்டங்கள் வெடித்தது. சிங்களக் கொலைக்கரங்களில் சிக்கித் தவித்த தமிழீழ மக்களைக் காப்பாற்றக் கோரி வீதி மறியல் போராட்டங்கள் நடாத்தப்பட்டன.

தமிழீழ நிலத்தில் கால் பதித்தறியாக புலம் பெயர் தேசத்துக் குழந்தைகளும் புலிக் கொடியோடு போர்க் களம் புகுந்தனர். விதிகளை மீறிய போராட்டங்களால் பலர் சிறைக் களம் புகுந்தனர். சிலர் தண்டிக்கப்பட்டனர். ஆனாலும், புலம்பெயர் தேசத்தில் புலிகளின் ஆட்சிப் பொறுப்பி லிருந்த பலர் காணாமல் போனார்கள். அல்லது, அடி வேலிகளில் மறைந்து நின்று ஆர்ப்பாட்டங்களின் ஆழம் பார்த்தனர். எல்லாம் முடிந்த பின்னர் இப்போது அவர்களும் தம் பங்கிற்குக் கடை வைக்க முயல்கிறார்கள்.

முள்ளி வாய்க்கால் முடிவுக்குப் பின்னர் இருண்டு போனது ஈழத் தமிழர்களின் எதிர்காலம் என்று ஒப்பாரி முழங்கிய போதும், 'தானைத் தலைவன் எம்மோடு இருக்கிறான்' என்ற வீர முழக்கத்துடன் புலம்பெயர் தேசம் ஆர்ப்பரித்தது. சிங்கள தேசம் ஆடித்தான் போனது. 'இதோ, புலிகளின் கதை முடிந்துவிட்டது' என்று வெற்றி முழக்கமிட்ட ராஜபக்ஷக்கள் முகம் வெளிறி நின்றார்கள். ஆம், புலம் பெயர் தமிழர்களின் பலம் அவர்களை மீண்டும் ஒரு போர்க் களம் நோக்கிப் பயணிக்க வைத்தது.

புலம்பெயர் தேசங்களில் வாழும் புல்லுருவிகள் விசேட விமானத்தில் கொழும்பிற்கு அழைக்கப்பட்டார்கள். விருந்துபசாரங்களும் களியாட்டங்களும் தாராளமாகவே வழங்கப்பட்டது. உல்லாசப் பயணமாக யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது குக்கிராமங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். உயர் அதிகாரிகளுடன் சமபோசனம் அளிக்கப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டு, மீண்டும் அவரவர் தேசம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதோ, வந்துவிட்டார்கள். கேட்டுப் பாருங்கள் யாழ்ப்பாணத்து நிலமையை... கேட்டுப் பாருங்கள் யாழ். மக்களின் வாழ்க்கைத் தரத்தை... புலிகளின் பின்னரான வன்னி மக்களின் நிலைகூட 'இந்து ராம்' வெட்கப்படும் அளவிற்கு பெருமையுடன் விளித்துக் கூறுகிறார்கள்... என்ன அவர்களுக்குப் புலம்பெயர்ந்த நீங்களும் கொஞ்சம் கொடுத்துதவினால் தேவலோக வாழ்க்கைதான் ... என்று ஒரு பட்டியலை நீட்டுவார்கள்... நீங்கள் ஏமாளிகளாக இருந்தால்... அவர்கள் காட்டில் பண மழைதான் போங்கள்.

இவர்கள் மட்டும்தான் என்று முடிவு கட்டிவிடாதீர்கள்... இன்னமும் பலர் புறப்பட்டிருக்கிறார்கள்... வதந்திகள் பரப்ப... துண்டுப் பிரசுரங்கள் அடித்து இருட்டோடு இருட்டாக ஒட்ட... சொந்தப் பிரச்சனைக்கும் 'துரோகிகள்' பட்டம் வழங்க... இப்படி... இப்படி... எத்தனையோ பேர்.

ராஜபக்ஷக்கள் கைகொட்டிச் சிரிக்கின்றனர். 'நாம் சாதிக்க நினைத்ததை இவர்களே நமக்காகச் சாதிக்கின்றனர்' என்று மகிழ்ச்சியோடு கை குலுக்கிக் கொள்கின்றனர். புதை குழிகளிலும் கடல் அலைகளிலும் துயில் கலைந்த மாவீரர்கள் விம்மி அழுகிறார்கள்... தமிழீழக் கனவோடு சாவினைத் தழுவிக்கொண்ட தளபதிகள் கலங்கி நிற்கின்றார்கள்.

நாம் இழந்தது கொஞ்சமா? எத்தனையாயிரம் வேங்கைகளைப் பலி கொடுத்தோம்... இலட்சத்திற்கும் அதிகமான உறவுகளைப் பலி கொடுத்தோம்... இத்தனை இழப்புக்களின் பின்னராவது நாம் மனிதர்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டாமா...?

முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்ட எம் மக்களை மீட்க வேண்டாமா...? போர்க்களத்தில் ஊனமாக்கப்பட்ட எம் உறவுகளுக்கு உறுதுணையாக நிற்க வேண்டாமா...? சிங்கள தேசத்தால் அநாதைகளாக்கப்பட்ட எம் குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டாமா...? வாழ்விழந்து தவிக்கும் எம் மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டாமா...? சோற்றுக்காகக் கையேந்த வைக்கப்பட்ட எம் தேசத்து மூத்த குடிகளைத் தாங்கி நிற்க வெண்டாமா...?

அத்தனை கடமைகளும் எமக்காகக் காத்திருக்கும்போது வெட்டிப் பேச்சும், வீண் கதைகளும் எதைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றது? எதிரியிடம் மண்டியிட மறுத்து, இறுதிவரை களமாடிப் பலியான விடுதலைப் புலிகள் கற்றுத் தந்ததை மறக்கலாமா? உங்கள் கதிரைக் கனவுகளுக்காகவா களமாடி இத்தனை வீரர்கள் பலியானார்கள்? உங்கள் சொந்த விருப்பங்களுக்காகவா ஈழத்தில் இத்தனை தமிழர்கள் செத்து மடிந்தார்கள்?

போதும்... இதுவரை போதும்... இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! இல்லையென்றால், மனிதர்களாக மாறி எம் மக்களை வாழ வையுங்கள்! வேண்டாம் இனி ஒரு கருணா... இனி ஒரு டக்ளஸ்... இனி ஒரு துரோகி... பாவம் எம் மக்கள் தாங்கும் சக்தியை இழந்துவிட்டார்கள். அவர்களைத் தாங்கிப் பிடித்து வாழ வையுங்கள்

நாட்டையும் மக்களையும் சீரழிக்கும் மஹிந்த அரசைத் தோற்கடிப்போம்! அனைத்து மக்களையும் அணிதிரள ரணில் பகிரங்க அழைப்பு.



ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபட்டு நாட்டையும், நாட்டு மக்களையும் சீரழித்துக்கொண்டிருக்கும் மஹிந்த அரசின் ஆட்சியைத் தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் அணிதிரளவேண்டிய தருணம் வந்துவிட்டது என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

63 வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் அனைத்து இன மக்களின் ஒத்துழைப்போடு ஐக்கிய தேசியக் கட்சியால் ஈட்டிக்கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை ஜனாதிபதியும் அவரது அரச தரப்பினரும் தவிடுபொடியாக்கி வருகின்றனர் என்றும் ரணில் குற்றஞ்சாட்டினார்.
கண்டி ஈ.எல்.சேனாநாயக்க சிறுவர் நூலக மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கட்சியின் 63 ஆவது வருடாந்த மாநாட்டிற்கு தலைமை வகித்துப் பேசும்பொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மண்டபம் நிறையக் கட்சியின் ஆதரவாளர்கள் அங்கு கூடியிருந்தனர். இதற்கு முன்பதாக அவர் கட்சியின் ஸ்தாபகரான டி.எஸ்.சேனாநாயக்காவின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்துக் கட்சியின் மறைந்த தலைவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்.

ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது நாம் அருமைபெருமையாகப் பெற்ற சுதந்திரத்தின் மகிமையால் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் ஆகிய அனைத்து மக்களும் அமைதியாகவும் இலங்கையர் என்ற அடிப்படையிலும் வாழ்வதற்கான சூழ்நிலையை எமது மூத்தத் தலைவர்கள் உருவாக்கினார்கள். இதே கொள்கைகளையே நானும் இங்கு உறுதிப்படுத்துகின்றேன். அரசியல் முன்னெடுப்புகளையும் இதே நோக்கத்தில் எமது கட்சி பின்பற்றி வந்தது. இதன்பொருட்டு அனைத்து இன மக்களின் அமைப்புகளும் எமக்கு உதவினர். இதனை நம்பியே மக்கள் எமது கட்சியோடு இணைந்துகொண்டனர்.

நாம் இலங்கையர் என்ற கண்ணோட்டத்திலேயே எமது கட்சியின் கொள்கை அமைந்துள்ளது. இதன் அடிப்படையில் இங்கு வாழும் பல்லின மக்களின் மொழி, கலாசாரம், பண்பாடுகள் ஆகிய விழுமியங்கள் பேணப்படவேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் அடிப்படையிலே நாட்டின் அபிவிருத்திகள் அனைத்தையும் படிப்படியாகக் கட்டி எழுப்பினோம். மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடக்கம் எல்லோராலும் கையாளப்படும் கையடக்கத் தொலைபேசி வரை அனைத்துத் தேவைகளையும் எமது கட்சி அரசே பெற்றுக்கொடுத்தது.

இவற்றை எல்லாம் சீரழித்துவிட்ட இன்றைய அரசு ஜனநாயக மரபுகளை மதியாமல் தாம் விரும்பியபடி குடும்ப ஆட்சியையும் தமக்குத் தேவைப்பட்டவர்களையும் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் கருமங்களை முன்னகர்த்தி வருகின்றது.

இந்த நாட்டில் மகா மன்னர் என்ற ஒருவர் இல்லை. நாம் எல்லோருமே மன்னர்கள்தான். எமது நோக்கம் நாட்டில் இறைமை பாதுகாக்கப்படவேண்டுமென்பதாகும். பல சமூக மக்கள் வாழும் இந்த நாட்டில் அரசும் பல சமூக அமைப்பாக இடம்பெறவேண்டும். இந்த நல்லெண்ணத்தை தவிடுபொடியாக்க இடமளியோம். புலிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் மூலமாகவே ஜனாதிபதி மஹிந்தரும் இன்று தொடர்ந்து பதவியில் இருக்கிறார்.

இன்று நாட்டைத் தவறான முறையில் இட்டுச்செல்லும் மஹிந்தரின் ஆட்சியைத் தோற்கடித்து ஐ.தே.கட்சியைப் பதவியில் அமர்த்த நீங்கள் எல்லோரும் முன்வரவேண்டும். இந்த அரசின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் முன்வரவேண்டும். 13 ஆவது அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை இன்றைய அரசு களியாட்ட விழா போன்று நடத்தி வருகின்றது.நாட்டு மக்கள் இந்த அசாதாரணங்களை பொறுமையுடன் அவதானித்தவண்ணம் இருந்து வருகின்றனர்.

எமது கட்சி விரைவில் எடுக்கப்போகும் தீர்மானங்களுக்கு ஏற்ப கட்சியைச் சீர்குலைக்க உள்ளும் புறமும் எதிராகச் செயற்படும் சக்திகளுக்கு ஒருபோதும் இடம்கொடுக்கமாட்டோம். மக்களின் அபிமானத்தைப் பெற்ற டி.எஸ்., டட்லி, சேர். ஜோன், ஜே.ஆர்., பிரேமா, டி.பி. ஆகிய தலைவர்களின் ஆதர்ஷ நடைமுறைகளை ஒதுக்கிவிட இயலாது. இவ்வடிப்படையில் கட்சியின் முன்னேற் றத்துக்கு பாதகமான செயல்படுபவர்கள் மீது நாம் மிகுந்த அவதானத்துடன் ஒழுக்க நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கமாட்டோம். எம்மை நம்பி வாழ்கின்ற மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கவும் இயலாது எனவும் ரணில் மேலும் தெரிவித்தார்.

இன்று நடக்கும் முக்கிய சந்திப்புகள்


இலங்கை வாழ் தமிழர்களைப் பொறுத்தவரை இன்று இடம்பெறும் இரண்டு சந்திப்புகள் முக்கியமான வையாகின்றன.

ஒன்று வடக்கு, கிழக்குத் தமிழர்கள் சம்பந்தமானது.
மற்றையது மலையகத் தமிழர்கள் தொடர்பானது.


முதலாவது சந்திப்பு வடக்கு, கிழக்குத் தமிழர்க ளைப் பெருமளவில் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கையின் அரசுத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடை யில் நீண்ட காலத்தின் பின்னர் இடம்பெறுவது. இன்று மாலை இச்சந்திப்பு நடக்கிறது.

அடுத்தது மலையகத் தமிழர்களின் பிரதான வாழ் வாதாரமாக இருக்கும் தோட்டத் தொழில் சம்பந்தமான வேதனம் குறித்த பேச்சுகள்.

மலையகத்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான விவகாரம் இழுபறிக்குள் சிக்கிய நிலையில் இன்று கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்களுக்கும், தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் மிக முக்கிய சந்திப்பு நடைபெறுகின்றது.

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திக ழும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், அவர்க ளின் உழைப்பை உறிஞ்சியபின் உரிய வேதனம் அளிக் கப்படாமல் தேயிலைச் சக்கை போல பிழியப்பட்ட பின் நாதியற்றவர்களாக வீசப்படும் நிலைமை நீடிக்கின்றது.

அவர்களின் முக்கிய தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் இடையில் மலையகத் தோட்டத் தொழிலாளரின் சம் பளம் தொடர்பாக ஏற்கனவே செய்யப்பட்டிருந்த ஒப் பந்தம் கடந்த மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்து விட்டது. ஐந்து மாதம் கடந்தும் அது புதுப்பிக்கப் படவில்லை. இரண்டரை வருடத்துக்கு முன்னர் நிர் ணயிக்கப்பட்ட வேதனப்படியே இன்றும் சம்பளம் பெற வேண்டிய அநீதி நிலைக்குள் அதீத கஷ்டத்துக்குள் மலையகத் தொழிலாளர்கள் சிக்குண்டிருக்கும் அவலம்.
தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை குறைந்த பட்சம் நாளொன்றுக்கு ஐந்நூறு ரூபாவாக உயர்த்த வேண்டும் என்ற கூட்டு ஒப்பந்தத் தொற்சங்கங்களின் கோரிக்கை ஏற்கப்படாத நிலைமையில், கடந்த முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்கள் ஒத்துழையாமைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. ஆனால் அத்தகைய ஒத்து ழையாமைப் பணி எத்தகையது என்பதில் கூடத் தொழிலாளர்களிடையே குழப்பம் நீடிக்கின்றது. "இது வேலை நிறுத்தமும் அல்ல, மெதுவாகப் பணி செய்யும் போராட் டமும் அல்ல' என்று சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் விளக்கம் கூறப்படுகின்றது. ஆனால் அவற் றுக்கு அப்பால் ஒத்துழையாமைப் போராட்டம் எத்தகை யது, அதை எப்படி முன்னெடுப்பது, அந்தப் போராட்டத்தின் பண்பியல்புகள் எவை என்பன பற்றியெல்லாம் தெளிவான வரையறை இல்லை. இதனால், இவ்வாறு தங்கள் சார்பில் சம்பள உயர்வு கோரி நடத்தப்படும் போராட்டங்களுக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குவதற்குத் தோட்டத் தொழிலாளர்கள் முன்வந் துள்ள போதிலும், அந்தப் போராட்டத்தை எந்த வழி முறை யில் முன்னெடுப்பது என்பதில் போதிய விளக்க மில் லாமல் அவர்கள் தடுமாறி நிற்கின்றமையும்கண்கூடு.

இந்நிலையில்தான், இவ்விடயம் குறித்து இறுதி முடிவு ஒன்றை எடுக்கும் இலக்கோடு கூட்டு ஒப் பந்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கின்றனர். தோட்டத் தொழிலாளரின் நாள் கூலியை ஐந்நூறு ரூபாவுக்கும் அதிகமாக உயர்த்தும் ஓர் இணக்கப்பாடு இந்தச் சந்திப்பில் எட்டப்படுமாயின், அது அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களின் வயிற் றில் பால் வார்த்ததாக இருக்கும்.

அடுத்ததாக இலங்கை ஜனாதிபதிக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று மாலை இடம் பெறும் சந்திப்பு நோக்கற்பாலதாகும்.

அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் தீவிரமடைந்த நிலையில், அரசுத் தலைவருடன் அரசியல் தீர்வுக்கான விடயங்கள் குறித்து சந்தித்துப் பேசுவதைத் தவிர்த்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது புலிகள் இயக்கம் முற்றாக அழித் தொழிக்கப்பட்டுவிட்டது என அரசுத் தரப்பால் அறிவிக்கப்பட்டு சுமார் மூன்றரை மாதங்களின் பின்னர் முதல் தடவையாக அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று நேரடிப் பேச்சுகளில் ஈடுபடவிருக்கின்றது.

வன்னியில் நலன்புரி மையங்கள் என்ற பெயரில் இயங்கும் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் தமிழர்க ளின் பேரவல நிலைமை
வன்னியில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி யிருக்கும் தமிழர் தாயகப் பிரதேசங்களின் எதிர்காலம்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எதிர்கால வாய்ப்புகள்

தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் தமது வழமை யான பணிகளை முன்னெடுப்பதில் உள்ள இடைஞ்சல்கள் வன்னிக்கு அப்பால் வடக்கு, கிழக்கின் ஏனைய இடங்க ளில் வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் அன்றாட நெருக்கடிகள் , இவை போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடை யில் இன்று இடம்பெறும் பேச்சுகளின்போது முக்கியமா கக் கவனிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மொத்தத்தில் இன்று நடைபெறும் இந்த இரண்டு சந்திப்புகளுமே இந்த இலங்கைத் தீவில் தமிழர்களின் எதிர்காலம் பற்றிய விடயங்களில் முக்கிய பங்கை இடத்தை வகிக்கப் போகின்றன.

தமிழ்க் கட்சிகளின் ஐக்கியம்:சிதறுண்டு போகும் சாத்தியம்!



ஈழத்தமிழர்களின் உரிமைக்கான விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை வெற்றிகரமாக முறியடித்து விட்டதாக் கொழும்பு அரசு அறிவித்துள்ள இன்றைய சூழலில், தமிழர்கள் தமது எதிர்காலம் குறித்த சூனிய நிலைக்குள் அரசியல் அந்தகாரத்துக்குள் சிக்கி, நிலை தெரியாமல், வழிபுரியாமல் தவிக்கின்றார்கள் என்று பல தரப்பிலும் பிரபலாபிக்கப்படுகின்றது.

இந்த இக்கட்டு நிலைமையில் இருந்து தமிழர்களை மீட்டு எதிர்கால சுபிட்சம் நோக்கி வழிநடத்துவதற்காக தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும், ஐக் கியப்பட்டும் செயற்பட வேண்டும் என்றெல்லாம் கோரிக் கைகள் முன் வைக்கப்படுகின்றன.
நல்ல விடயம் தான். இன்றைய நிலையில் தமிழர்களின் ஜனநாயக சக்திகள் ஐக்கியப்பட்டு ஏதேனும் சாதிக்கமுடி யுமா, மக்களை அழிவில் இருந்து பாதுகாத்து மீட்டுக் கொள்ள முடியுமா என்பது ஆலோசிக்கப்பட வேண்டிய விவகாரமே.

இது வரை, இனப்பிரச்சினை விவகாரத்தில் பேரம் பேசும் வலிமையாக சக்தியாக தமிழர் தரப்பிடம் இருந்த ஆயுதவலிமை முற்றாக சிதறடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு விட்டது என்பது யதார்த்தம்.

இனி தமிழர் தரப்பின் அரசியல் சக்திகள் ஒன்றபட்டு ஜனநாயக ரீதியாக தங்களின் வலிமை மூலம் இப்போது சிதறுண்டு சின்னாபின்னமாகி பேரவலங்கள் மற்றும் அனர்த்தங்களுக்குள் சிக்கிக்கிடக்கும் தமிழினத்தைக் காப்பாற்றி, தூக்கி நிறுத்தி, உரிய உரிமைகளையும் கௌரவ வாழ்வையும் மீட்டுப் பெறமுடியுமா என்பதே கேள்வியாகும்.

அதுவும் தமிழர்களின் இதுவரை காலமான ஆயுத வலிமை அழிக்கப்படுவதற்கு துணைபோன தரப்புக் களே இப்போது ஜனநாயக வழியில் ஐக்கியப்பட்டு சாதிப்போம் என்ற கோரிக்கையை முன்வைப்பது கவ னிக்கத்தக்க விடயமாகும்.

இத்தரப்புகளுடன் ஒன்றிணைவதன் மூலம் எதையும் சாதிக்க முடியுமா என்பதை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அரசோடு சேர்ந்து பாடி, கொடுப்பதைப் பெற லாம் என்ற தத்துவத்துக்குள் மூழ்கி, அதை நம்பி, செயற் படும் இத்தரப்புகளை ஊக்குவித்து ஆதரவளித்து வலுப்படுத்துவன் மூலமே ஏதேனும் விமோசனம் கிட் டும் என்று தமிழ் மக்கள் கருதுவார்களானால் இத்தரப் புக்களை அரவணைத்து ஐக்கியப்படுவது காலத்தின் கட் டாயம் ஆகும்.

தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டிய முக்கியவிடயம் இது. வலராற்று திருப்பத்திலே நிற்கும் தமிழினம் இனி மேலும் இவ்விடயத்தில் ஒரு முடிவுக்கு வராமல் அதை ஒத் திப்போட முடியாது. ஒரு முடிவை எடுத்தேயாக வேண்டும்.

இதேசமயம் இதுவரை தமிழர் தரப்பில் ஐக்கியத்தின் பேரால் ஒன்றிணைந்த தரப்புக்களும் கட்சிகளும் சில முடிவுகளை எடுக்க முயல்கின்றன என்ற தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கின்றன.

தமிழரசுக்கட்சி அகில இலங்கைத்தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கின. இப்போது தமி ழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரையும் உதயசூரி யன் சின்னத்தையும் அதன் தலைவர் ஆனந்தசங்கரி, இலங்கையின் நீதித்துறையைப் பயன்படுத்தி தம்வசம் வைத்திருக்கின்றார். எனினும் தமிழர் விடுதலைக் கூட் டணியின் பெரும்பான்மையான தலைவர்களும் தொண் டர்களும் மறுபக்கத்திலேயே தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பிலேயே உள்ளனர் என்பது வெளிப்படையானது.

இதே சமயம் ஈ. பி. ஆர். எல். எவ், ரெலோ போன்ற கட்சிகளும் இன்னும் சில உதிரித் தலைவர்களும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் உள்ளனர். தமிழர் தரப்பில் நாடா ளுமன்றப் பிரதிநிதித்துவம் மூலம் தமிழர்களை அதிகம் பிரதிநிதித்துவம் செய்யும் கட்டமைப்பாக கூட்டமைப் பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே உள்ளது என்பதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமே.

தமிழர்களின் ஜனநாயக ரீதியான சக்திகள் கட்சிகள் ஐக் கியப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படும் இச்சம யத்தில், ஏற்கனவே ஓரளவுக்கு ஐக்கியப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே சிதறுண்டு போகும் ஆபத்து ஏது நிலைகள் தென்படுகின்றன என்பது தான் கவலைக்குரிய விடயமாகும்.

தமிழர்களின் உரிமைக்கான போராட்ட சக்தி என்ற வலிமையான கயிற்றில் கட்டப்படிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இப்போது அந்த பிரதான சக்தி என்ற கயிறு நொந்து நூலாகி போனதால் நெல்லிக்காய் மூடையின் வாயைக்கட்டிய கயிறு அறுந்ததால் சித றுண்டு போகும் நெல்லிக்காய் போல சிதறுப்பட்டுப் போகத் தயாராகி வருவதாகத் தோன்றுகின்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் சின்ன மான "உதயசூரியன்' ஆனந்தசங்கரி அணியிடம் சிக்குண் டமையை அடுத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமி ழரசுக்கட்சியின் "வீடு' சின்னத்திலேயே தேர்தல்களைச் சந்தித்து வருகின்றது.
அதைக் காரணம் காட்டி எதிர்காலத்தில் தனித்துக் களமிறங்கும் முயற்சிகளை தமிழ் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சிலர் ஏற்கனவே ஆரம்பித்து விட்டனர் எனத் தெரிகின்றது.
இதே போல தமிழ்க் கூட்டமைப்பின் பொது நிலைப் பாட்டுக்கு கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக அறிக்கைகள் வெளியிட்டுத் தனித்தவில் வாசிக்கும் சில பிரமுகர்களும் தமிழ்க் கூட்டமைப்பில் இருந்து தத் தமது கட்சிகளை உடைத்து வெளியேற்றும் தந்திரத்தில் இறங் கித் தம் தலையிலும் தமது இனத்தின் தலையிலும் மண்வாரி இறைக்கத் தயாராகி வருகின்றனர் என்றும் தெரிகின்றது.

இந்தச் சீத்துவத்தை நோக்கும் போது, இருக்கும் ஐக்கி யமே சிதறுண்டு போகும் போலத் தோன்றுகின்றது. இந்நிலையில் தமிழ் ஐனநாயகக் கட்சியினருக்கிடையே மேலும் ஐக்கியம் வரும் என்று பேசுவதும் எதிர்பார்ப்பதும் வெறும் கனவு போலவே தோன்றுகிறது....!

"ஜி.எஸ்.பி." வரிச்சலுகையை ஒரேயடியாக விலக்குமா ஐரோப்பிய ஒன்றியம்?


கிடைக்குமா அல்லது தடைப்படுமா என்று எதிர் பார்க்கப்பட்ட சர்வதேச நாணய நிதியக்கடன் கடைசியில் அரும்பொட்டில் கொழும்பு அரசுக்குக் கிடைத்தபோது தென்னிலங்கை துள்ளிக்குதித்து ஆரவாரித்தது. தன்னு டைய சர்வதேச இராஜதந்திரத் தொடர்பாடல் சிறப்புத் தோற்றுப்போய் விடவில்லை எனக் குறிப்பிட்டு கொழும்பு தனக்குத்தானே புகழாரம் சூட்டிக்கொள்ளவும் தவறவில்லை.

இப்போதும் அதேபோன்ற ஓர் இக்கட்டு புதிதாக வந் திருக்கின்றது. ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதிக் கான வரி விலக்குச்சலுகை "ஜி.எஸ்.பி. பிளஸ்" சலுகை இலங்கையின் கையை விட்டுப் போய்விடும் ஆபத்து ஏது நிலை ஏற்பட்டிருக்கின்றது.

மனித உரிமையைப் பாதுகாப்பது தொடர்பில் சர்வ தேசத் தரத்தை சர்வதேசம் எதிர்பார்க்கும் தர நிலையை பேணத் தவறியமைக்காக இந்தச் சலுகையை இலங்கை இழக்கும் நிலைமை வந்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட இந்தச் சலுகை தொடர்பான கால அவகாசம் கடந்த வருடமே முடிவுற்ற போதிலும், அதனை ஐரோப்பிய ஒன்றியம் அப் போது நீடிக்கவில்லை. நீடிப்பது தொடர்பான முடிவு எடுப்பதை ஒத்திவைத்துவிட்டு, அந்த சலுகையை ஒரு வருடத்துக்கு இந்த ஒக்ரோபர் வரை தற்காலிகமாகத் தொடர்வதற்கு மட்டுமே அது தீர்மானித்தது.அதன்படி, இப்போது இறுதி முடிவு எடுக்கும் காலம் நெருங்கிவிட்டது. இது விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கக்கூடிய தீர்மானம் கொழும்புக்குச் சாதகமாக அமையாது என்று பூர்வாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் சலுகையை இலங்கை இழக்குமானால் அது இலங்கைக்குப் பொருளாதாரத்தில் பலத்த அடியை பின்னடைவை கொடுக்கும் என்பது திண்ணம்.தைத்த ஆடைகளை இறக்குமதி செய்வதற்கு வரி ஏதும் விதிக்காமல் ஊக்குவிக்கும் சலுகையை ஐரோப் பிய ஒன்றியம் இலங்கை உட்பட ஒருசில நாடுகளுக்கு மட்டும் வழங்கியமையால், சர்வதேச சந்தையில் ஏனைய நாடுகளுடன் போட்டிபோட்டுக்கொண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இலங்கைத் தொழிலதிபர்களால் தாராளமாகத் தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ய முடிந்தது; முடிகிறது. இந்த ஏற்றுமதி வாய்ப்பை நம்பி பெரும் பொருளாதாரக் கட்டமைப்பே வலையமைப்பே இலங்கையில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக் கின்றது. மேற்படி சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொள்ளுமானால் அந்த முழு வலையமைப்பே ஒரேயடியாகப் படுத்துவிடும்.

கடந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இவ் வாறு தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் சுமார் 350 கோடி அமெரிக்க டொலரை (சுமார் 35 ஆயி ரத்து 500 கோடி ரூபாவை) இலங்கை சம்பாதித்தது.

வெளிநாட்டிலிருந்து இலங்கையர்கள் வருடாந்தம் உழைத்து இலங்கைக்கு அனுப்பும் 300 கோடி அமெரிக்க டொலருக்கும், தேயிலை ஏற்றுமதி மூலம் வருடாந்தம் கிடைக்கும் 120 கோடி டொலருக்கும் அதிகமாக இலங் கைக்கு அந்நிய செலாவணியை கூடியளவில் ஈட்டித் தரும் துறையாக இந்தத் தைத்த ஆடை ஏற்றுமதியே அமைந்துள்ளது.
அதுமட்டுமல்ல. இலங்கையின் ஏற்றுமதித்துறை யில் அதிக சந்தை வாய்ப்புத் தரும் மையமாக ஐரோப் பிய ஒன்றியமே விளங்குகின்றது. மொத்த ஏற்றுமதியில் 36 வீதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் செல்கின் றது. அடுத்தது அமெரிக்காவுக்கு; 24 வீத ஏற்றுமதி அந்த நாட்டுக்கு.

இந்தப் பின்புலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மேற்படி வரிச்சலுகையை விலக்கிக் கொள்ளுமானால், அந்த ஏற் றுமதியை நம்பி நாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான ஆடைத் தொழிற்சாலைகளை இழுத்து மூடவேண்டியதுதான். பல லட்சம் தொழிலாளர்கள் குறிப்பாக இளம் யுவதிகள், இளைஞர்கள் ஒரேயடி யாக வேலை இழப்பர். அவர்களை நம்பியிருக்கும் குடும் பங்கள் வீதிக்கு வரவேண்டியதுதான்.

மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் மிக அசிரத்தையாகவும், மிதப்பு மற்றும் தடிப்புடனும் செயற் பட்டுக்கொண்டு, மேற்குலகையும் உதாசீனப்படுத்தி, தூக்கியெறிந்தபடி முன்னெடுக்கப்படும் இராஜதந்திரம், காலம் தாழ்த்தியாவது கெடுவினையைத் தேடித்தரும் என்று கொழும்பு உணரவேண்டிய வேளை நெருங்கி வருகின்றது என்றே தோன்றுகின்றது.
ஒருபுறம், மேற்குலகைக் கரித்துக்கொட்டியபடி மறுபுறம், லிபிய அதிபருடன் தோளில் கைபோட்ட படி, வெனிசூலா அதிபருடன் தொடர்பாடல்களை நெருக்கமாக்கிக் கொண்டு, ஈரானுடனும், பாகிஸ்தானுட னும், சீனாவுடனும், பர்மாவுடனும் உறவைப் பலப்படுத் தியபடி
நாட்டை வழிப்படுத்தும் இராஜதந்திரம் எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானது என்ற அமிலச் சோதனை யைக் கொழும்பு முன்னெடுப்பதாகவே தோன்றுகின்றது.

அந்தப் பரீட்சார்த்த களத்தின் முக்கிய கட்டமே "ஜி.எஸ்.பி.பிளஸ்" வரிச்சலுகை விவகாரமாகும். இந்த நெருக்கடியைக் கொழும்பு எப்படி வெற்றிகரமாகத் தாண்டப் போகின்றது? விரைவில் தெரியவரும்.