பரிமாணம் மாறும் தமிழர் போராட்டங்கள்

களத்தில் போர்முனை சுருக்கமடைந்து வருகின்றபோதும், புலத்தில் அது விரிவடைந்து மக்கள் புரட்சிமிக்க களமாக வியாபித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. தமிழீழ போராட்டத்தின் பரிமாணங்கள் முற்றுமுழுதாக மாற்றம்பெற்று வருவதுடன் தற்பொழுது தனிநாட்டுக்கான அங்கீகாரத்திற்காக சர்வதேசத்தினை நோக்கித் தமது போராட்டங்களை முன்னெடுக்கவும் தொடங்கிவிட்டனர் ஈழத்தமிழர்கள்.
சர்வதேசமெங்கும் தமிழர்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகின் கவனத்தினை ஈர்த்துவரும் நிலையில் பல மட்டங்களில் அதன் வெளிப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
வன்னிக்களம் இன்று மிகச்சிறியதொரு நிலப்பரப்புக்குள் அடக்கப்பட்டு விட்டதாகவே அனைவரினாலும் கூறப்படுகின்றது. ஆனால் அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது என ஆழமாக ஆராய்ந்து பார்ப்போமானால்... பல உண்மைகளை புரிந்து கொள்ள முடியும். அதாவது புலிகள் தாம் இவ்வாறான இக்கட்டான நிலைமையை அடைவதற்கு ஒருபோதும் தாங்களாகவே இடமளிப்பவர்கள் அல்லர். புலிகள் நினைத்திருந்தால் சிங்கள இராணுவத்தின் முன்னேற்றத்தினை பூநகரிக்கு முன்பாகவே தடுத்திருக்க முடியும். தமது பெருநிலப்பரப்புகளை தக்கவைத்து இருந்திருக்கவும் முடிந்திருக்கும். ஆனால் அதற்கான மிகப்பலமான எதிர்ப்புக்களை அவர்கள் காட்டியிருக்கவில்லை. அப்படியிருக்க, புலிகள் படையினரை இவ்வளவு தூரத்திற்கு முன்னேற அனுமதித்தது ஏன்?
இக்கேள்விக்கு இராணுவ ரீதியிலான பல பதில்கள் இருந்தாலும், அரசியல் ரீதியிலான காரணங்களே அடிப்படையாக இருக்கின்றதாக புலப்படுகின்றது. ஏனெனில், நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்ததிலிருந்தே புலிகள் அரசியல் நகர்வுகளிலேயே சிரத்தையெடுத்து வந்திருந்தனர். முன்னர், சந்திரிக்கா அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து தாமாக விலகி மூன்றாம் கட்ட ஈழப்போருக்குள் புலிகள் நுழைந்ததனால் சர்வதேசத்தின் அதிருப்திகளை சம்பாதித்திருந்தனர். அதே தவறை புலிகள் இம்முறையும் இழைத்திருக்கவில்லை. மகிந்த அரசுதான் சமாதான உடன்படிக்கையிலிருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரைக்கும் தாங்கள் அதை மதித்து நடந்து வருவதாகவே புலிகள் கூறிவருகின்றனர்.
மூன்றாம் கட்ட ஈழப்போரில் புலிகள் மாபெரும் வெற்றிகளை ஈட்டியிருந்தனர். தமிழீழ நிலப்பரப்பில் எழுபது சதவீதமான பகுதி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. யாழ்ப்பாணத்தினைக் கூட மீளக் கைப்பற்றும் வல்லமையை பெற்றிருந்தனர் புலிகள்.[அப்போதும் அதை தடுத்திருந்தது இந்திய அரசுதான்] இவ்வாறு மிகப்பலம் பொருந்திய நிலையில் இருந்த புலிகள் மூன்றாம் கட்ட ஈழப்போரை முடித்துக்கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தை மேசைக்கு போகும்போது சிங்கள அரசை நம்பிப் போயிருக்கவில்லை. சர்வதேசம் தங்களுக்கு நியாயமான தீர்வொன்றை தருவதற்கு முன்வரும் என்று முழுமையாக நம்பியிருந்தார்கள்.
ஆனால் நடந்தது தலைகீழாகவே இருந்தது. சிறியளவிலான அதிகாரப்பகிர்வுக்குக் கூட சிங்கள அரசு தயாராய் இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்க, மறுபக்கத்தில் புலிகளை பலவீனப்படுத்தும் சதித்திட்டங்கள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டன.அதற்கு சர்வதேச நாடுகள் பலவும் உடந்தையாக இருந்தன. அதில் முக்கியமாக, கருணாவை புலிகளிலிருந்து பிரித்ததில் இந்தியாவின் "றோ" அமைப்பு பிரதான பங்கு வகித்ததை குறிப்பிட முடியும். ஐரோப்பிய நாடுகளும் தம் பங்கிற்கு புலிகளை தடை செய்திருந்தது. தமிழர் தரப்பு சர்வதேசத்திடமிருந்தும் முற்றுமுழுதான ஏமாற்றத்தையே கண்டிருந்தது. மான்புமிகு தியாகங்களினால் ஈட்டப்பட்ட மாபெரும் இராணுவரீதியான வெற்றிகள் கூட தமிழருக்கான நியாயமான தீர்வை பெற்றுத்தர முடியாமல் வீணாகிப் போயின.
எனவேதான் , நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்ததிலிருந்தே புலிகளின் குறி இராணுவரீதியான வெற்றிகளிலிருந்து விலகி "சர்வதேச ஆதரவு" என்ற ஒன்றின் மீதே குறியாய் இருந்து வருகின்றது. அதன் தொடர்ச்சியான விளைவுகளாய்தான் தற்போதைய நிலைமைகள் தொடர்கின்றன. புலிகளின் தற்போதைய பின்னடைவாக கருதப்படுகின்ற விடயங்கள் அனைத்துமே உண்மையிலேயே புலிகளின் இராஐதந்திர காய்நகர்த்தல்களுக்கு மாபெரும் வெற்றிகளை ஈட்டிக் கொடுத்துவரும் முக்கியமான அம்சங்கள்.புலிகள் தமது இராணுவ வெற்றிகளைவிட சர்வதேச ரீதியிலான இராஐதந்திர வெற்றிகளே தமது இலட்சியமான தமிழீழம் எனும் தனிநாடு மிகவிரைவில் உருவாக வழிவகுக்கும் என்பதை நன்கு உணர்ந்திருக்கின்றார்கள். இம்முறை தமிழர்தரப்பு தமது களத்தினை பிரதானமாக சர்வதேசத்திலேயே தொடங்கியிருக்கின்றது. "மக்களின் உணர்ச்சிமிக்க எழுச்சிகள் எப்போதும் இழப்புக்களினால் ஏற்படும் தாக்கங்களிலிருந்தே உருவாகும். இழப்புக்கள் அதிகமாகும் போது அது புரட்சியாகவும் மாறும்". அதற்கு ஏதுவாக சிங்கள அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகள் அமைந்து வருகின்றன. புலிகளின் தந்திரோபாயங்களை புரிந்து கொள்ளாமல் அவர்களின் பின்வாங்கல்களை தமது மாபெரும் வெற்றிகளெனக் கருதி வெற்றி மமதையில் கண் மண் தெரியாமல் அப்பாவி மக்களை கொன்று குவித்து மிகப்பெரும் இனவழிப்புப் போரையே சிங்கள அரசு நடாத்தி வருகின்றது.
அகதிகளாகி அல்லற்படும் மக்களை அநியாயமாக கொன்றொழித்து வருகின்றது. அம்மக்களின் துயரங்களை வாயினால் சொல்ல முடியாது. எழுத்துக்களினால் வரித்திட முடியாது. காட்சிகளால் காண்பித்துவிட முடியாது.அந்தவலிகளை அந்த இடத்திலிருந்து அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும், உலகத்தமிழருக்கு அவ்வலியின் கொஞ்சமேனும் புரிய ஆரம்பித்தது. வீறுகொண்டு பொங்கியெழுந்தார்கள். தற்போது பாதுகாப்பு வலயம் என்ற சிங்கள அரசின் மரணப்பொறிக்குள் அகப்பட்டிருக்கும் இரண்டரை இலட்சத்துக்கு மேலான தம் உறவுகளை காப்பாற்றுவதற்காக புலம்பெயர் தமிழ் உறவுகள் ஆக்ரோஷமாய் கிளர்ந்தெழுந்திருக்கின்றார்கள். தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் சர்வதேசத்தின் கவனம் முழுவதையும் தம் பக்கம் இழுத்திருக்கின்றார்கள்.
பாதுகாப்பு வலயம் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை ஆரம்பித்திருக்கின்றது சிங்கள கொலைவெறி இராணுவம். ஆரம்பத்தில் பத்து இருபது என தினந்தோறும் படுகொலை செய்யப்பட்ட மக்கள் எண்ணிக்கை அதன்பின்பு நூற்றுக்கணக்காகி இப்போது தினமும் ஆயிரக்கணக்காகி இருக்கின்றது. அனைத்துலகத்தாலும் ஓரங்கட்டப்பட்ட பாவப்பட்ட ஒரு இனமாக அவலப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது ஈழத்தமிழினம். போர்விதிகளுக்கு மாறாக அப்பாவி மக்களை கேடயங்களாகப் பாவித்தும், சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியும் தாக்குதல்களை மேற்கொண்டு பாதுகாப்பு வலயத்துக்குள் முன்னேறி தன் அழிவு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது சிங்கள இராணுவம்.
ஆனாலும் சர்வதேசம் அதை அசட்டை செய்யாமலேயே இருப்பதாகத் தெரிகின்றது. ஆயிரமாயிரம் மக்கள் கொல்லப்படுவதை மெளனமாக பார்த்துக்கொண்டிருக்கின்றது. இலங்கை அரசின் கொடிய தாக்குதல்களிலிருந்து மக்களை காப்பாற்ற எந்தவொரு நாடும் அறுதியான நடவடிக்கையினை இன்றுவரை மேற்கொள்ளவில்லை. பலஸ்தீனத்தீனியர்கள் மேல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை இருபது நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வந்த சர்வதேச ஜாம்பவான்களால் அப்பாவித் தமிழ்மக்கள் மீது இத்தனை நாளாய் நடத்தப்படும் கொலைவெறித்தாக்குதல்களை ஏன் தடுத்து நிறுத்த இயலவில்லை??? ஈழத்தமிழினம் அழிந்து போகட்டும் என்று நினைக்கின்றதா இந்த சர்வதேசம்???
தமது சொந்த நிலங்களில் வாழும் உரிமையோ, ஆகக்குறைந்தது உயிரோடுதன்னும் வாழும் உரிமையோ ஈழத்தமிழ் மக்களுக்கு இல்லையா??? இவ்வாறான கேள்விகளோடு சர்வதேசங்களின் முன்றல்களில் குதித்திருக்கின்றார்கள் பேரெழுச்சிகொண்ட புலம்பெயர் ஈழத்தமிழர்கள். இம்முறை சாக்குப்போக்குச் சொல்லி சர்வதேசத்தால் தட்டிக்கழிக்க முடியாத அளவுக்கு தமது போராட்டத்தினை வலுப்படுத்தி வருகின்றார்கள். அவர்களின் போராட்டங்களின் முதன்மையான கோரிக்கை "போரை உடனடியாக நிறுத்தி வன்னிமக்களை அழிவிலிருந்து காப்பாற்றவேண்டும் " என்ற மனிதாபிமான கோரிக்கைதான். அதைக்கூட நிறைவேற்ற சர்வதேசம் பின்னடிப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்.
ஆனாலும் மக்கள் ஓயப்போவதாக தெரியவில்லை. தங்களின் கோரிக்கைகளுக்கு சர்வதேசம் இணங்கும் வரை தமது போராட்டங்களை முன்னெடுக்க திடசங்கற்பம் பூண்டிருக்கிறார்கள். அமைதியாக கேட்டுப்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொறுமையிழந்த மக்கள் தமது போராட்டங்களை வேறு வடிவங்களுக்கு மாற்றத் தொடங்கியிருக்கின்றார்கள். வீதிமறியல்கள், சாகும்வரை உண்ணாவிரதம் என புதிய பரிமாணம் பெற்றுள்ளன போராட்டங்கள். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் சொல்லிவிட்டுப் போன தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இன்று நியமாவதனை மக்கள் போராட்டங்களின்போது அவர்கள் காட்டும் உணர்வெழுச்சிகளிலிருந்து உணர முடிகின்றது.
சிங்கள அரசு தானாக முன்வந்து தமிழருக்கான தீர்வைத் தரப்போவதில்லை என்பதை தமிழர் தரப்பு நன்கே உணர்ந்திருக்கின்றது. தமது இலக்கை அடைவதற்கு சர்வதேசத்தின் அங்கீகாரம் அத்தியாவசியம் என்பதனையும் ஏற்கனவே புரிந்துகொண்டுவிட்டனர். எனவே தமிழர் தரப்பின் போராட்டங்கள் சர்வதேசத்தினை நோக்கி தமது நியாயப்பாட்டினை வெளிப்படுத்துவதாக அமையத்தொடங்கியிருக்கின்றன.
புலிகளும் என்றுமில்லாதவாறு தமது போராட்ட வடிவத்தினை, பரிமாணத்தினை தந்திரோபாய ரீதியில் மாற்றிவருகின்றார்கள் என்றே தெரிகின்றது.அவர்களின் களங்கள் தற்போது மாற்றமடைகின்றன. தமிழ்மக்களின் எழுச்சிப் போராட்டங்களோடு அவர்களின் களங்கள் சமாந்தரமாக பயணிக்கின்றதனை அவதானிக்க முடிகின்றது. புலிகளும், புலிகளையே ஏகதலைமையாக அறிவித்து புலம்பெயர் தேசமெங்கும் போராடும் மக்களும் ஒரே கோரிக்கையுடன் ஒரு இலட்சியத்துடன் சர்வதேசத்தினை நெருக்கத் தொடங்கி விட்டனர். மக்களின் எழுச்சி மயமான போராட்டங்களுக்கு சர்வதேசம் மதிப்பளிக்க தவறும் பட்சத்தில் அது புரட்சிமயமாக மாற்றமடையும் அதேவேளை, புலிகளின் அமைதிக்கும் பணிவுக்கும் தயவு காட்டாத சர்வதேசம் அதன் விளைவுகளை சிங்கள தேசத்தோடு சேர்ந்து அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்படும்.
ஈழத்தமிழரின் இன்றைய பிரச்சனைகளுக்கு சர்வதேசம் முக்கியமாக பிரித்தானியா]அன்றிழைத்த தவறுகள்தான் காரணம். சுதந்திரம் கொடுக்கின்றோம் என்று சொல்லிகொண்டு தமிழரின் சுதந்திரத்தினை சிங்களவரிடம் அடகு வைத்து விட்டுப் போய்விட்டார்கள்.அவர்களால் இழக்கப்பட்ட சுதந்திரத்தினை மீட்டுத்தரும் கடமையும் கடப்பாடும் சர்வதேசத்திற்கு உண்டு.அதை சர்வதேசத்திடம் அழுத்திக் கேட்கும் வரலாற்று உரிமை தமிழர்களுக்கு உண்டு. செய்தே ஆகவேண்டும் சர்வதேசம்.
தமிழன் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் சர்வதேசம் பதில் சொல்ல வேண்டிவரும். பரிமாணம் மாறும் தமிழர் போராட்டங்கள் நிச்சயமாக அந்நிலையை சர்வதேசத்திற்கு ஏற்படுத்தும். தமிழ் மக்களின் புரட்சி உச்சக்கட்டத்தினை அடையும்போது புலிகளின் மெளனமும் கலையும். அப்போது எதிரியின் நிலைகளும் குலையும்.தமிழர்தம் இன்னல்கள் அனைத்தும் அகன்று, தமிழீழ தேசம் மலர்ந்து
சிங்கள வல்லாதிக்கத்தினதும், காந்தியக் காங்கிரஸினதும், சர்வதேச நாசகார சக்திகளினதும் கொட்டம் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
"உலகே! உனக்கு கண்ணில்லையா? எங்கள் தமிழீழ மண் என்ன மண் இல்லையா??
உலக மக்கள்தான் மக்களா??? தமிழீழ மக்களென்ன கற்களா???? "
-பருத்தியன்-

பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை எதிர்த்து புலம்பெயர் தமிழர் கிளர்ந்தெழ வேண்டும் : பழ.நெடுமாறன்


பாதுகாப்பு வலயம் மீது படையினர் நடத்தும் தாக்குதலுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவருமே கிளர்ந்தெழ வேண்டும் என பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார். மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வலயத்தில் லட்சக்கணக்கான மக்கள் தங்கியிருப்பதால், படையினர் தாக்குதலைத் தொடுத்தால் அவர்களே உயிரிழக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலுக்கு முன்னோடியாகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிகளுக்குள் மக்களோடு மக்களாக ஊடுருவியிருப்பதாகவும், மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இருப்பதாகவும் படையினர் அனைத்துலகின் நாடிபிடிக்கும் முன்னோடி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 16ஆம் நாள் இந்திய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலும், தமிழ்-சிங்கள புத்தாண்டு நெருங்கி வருவதாலும், அதற்கு முன்னர் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என நினைக்கும் இந்திய, இலங்கை அரசுகள் அடுத்த சில நாட்களில் பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்தியத் தேர்தலுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

வன்னியில் இலங்கைப் படையினர் மேற்கொள்ளும் தாக்குதலின் பின்னணியிலும், நேரடியாகவும் இந்திய அரசாங்கமும், படையினரும் முழு அளவில் இருப்பதாக, தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் பழ.நெடுமாறனும், தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திவரும் ஒரேயொரு சிங்கள கட்சியான இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவும் ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் இலங்கை படையினரது தாக்குதல் முனைப்பு பற்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் கருத்து வெளியிட்டுள்ள பழ.நெடுமாறன், தாக்குதல் முனைப்பு உண்மையாக இருந்தால், பல்லாயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட நேரிடும் என்பதால், இதனைத் தடுத்து நிறுத்த உடனடியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு, மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இது தொடர்பான தார்மீகக் கடமை இருப்பதாகவும் குறிப்பிட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் அரசுகளுக்கு இந்தத் தகவலை உடனடியாகக் கொண்டு சென்று, இலங்கை அரசை வலியுறுத்த அனைத்துலக சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.

உலக நாடுகள் சம்மதத்துடன் இனப் படுகொலை!

இலங்கையில் வன்னிப் பகுதியில் பாதுகாப்பு வலயத்தில் விடுதலைப் புலிகளின் பிடியில் ‘சிக்கியுள்ள’ அப்பாவி மக்களை மீட்க இறுதி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, தமிழர் இனப் படுகொலையின் ‘இறுதி கட்ட’ அத்தியாயத்தை துவக்கியுள்ளது சிறிலங்க இராணுவம்.

கடந்த 3 மாதங்களாக சிறிலங்க அரசால் பொது மக்கள் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்டப் பகுதியில் அடைக்கலம் புகுந்த அப்பாவி தமிழர்கள் மீது ஒவவொரு நாளும் எறிகணைத் தாக்குதல், விமானக் குண்டு வீச்சு என்று 4000 தமிழர்களைக் கொன்று குவித்த சிறிலங்க அரச படைகள், தற்பொழுது அப்பகுதியில் ‘பதுங்கியுள்ள விடுதலைப் புலிகளின் பிடியில் அம்மக்கள் சிக்கியுள்ளதாகக்’ கூறி, அவர்களை ‘விடுவிக்க’ தனது இறுதி கட்ட மானிட அழிப்பை துவக்கியுள்ளது.




விடுதலைப் புலிகளுக்கு எதிரான தங்களின் போர் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டது என்று கூறியுள்ள சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, “உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுங்கள்” என்று கூறியது மட்டுமின்றி, “அங்குள்ள (பாதுகாப்பு வலயத்திலுள்ள) மக்களைக் காக்க வேண்டுமென்றால் இதனைச் செய்யுங்கள்” என்றும் கூறியுள்ளார்.

எவ்வளவு தெளிவான அறிவிப்பு! ஒன்று சரணடையுங்கள், இல்லையேல் உங்கள் மக்களோடு சேர்ந்து அழியுங்கள் என்று எவ்வித தயக்கமுமின்றி ராஜபக்ச கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட அப்பட்டமான படுகொலை அறிவிப்பை வெளியிட்டதற்குப் பின்னரும் உலக நாடுகள் ஒன்று கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. அதுதான் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் அனைத்தையும் மீட்டு விட்டீர்களே, எதற்கு இனியும் போர் தொடர வேண்டும் என்று எந்த நாடும் கேட்கவில்லை.



3 மாதங்களில் மட்டும் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அடைக்கலமான சொந்த நாட்டு மக்கள் 4 ஆயிரம் பேரை கொன்று குவித்தபோதெல்லாம் கண்டிக்காத உலக நாடுகளும், ஐ.நா.வும், உனது நாட்டு மக்கள் மீதே எப்படி எறிகணைத் தாக்குதல் நடத்துகிறாய் என்று கேட்காத உலக நாடுகளும், ஐ.நா.வும், பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் உள்ள மக்களுக்கு உணவு, காயம்பட்ட மக்களுக்கு மருந்துகள் என்று எதையும் அனுப்பாமல் தடுக்கிறது சிறிலங்க அரசு என்று அறிக்கையில் கூறியதோடு மட்டும் நிறுத்திக்கொண்ட ஐ.நா.வும், அதனைத் தட்டிக் கேட்காத உலக நாடுகளும், இப்பொது மெளனம் காத்து சிறிலங்க அரசு மேற்கொண்டு வரும் இனப் படுகொலை முழுமையாக நடத்தி முடிக்க சம்மதம் தெரிவித்துள்ளன.

இன்றைக்கு வன்னிப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் சற்றேறக் குறைய 3 இலட்சம் தமிழர்களின் வாழ்வை ஒட்டு மொத்தமாக முடித்துவிட ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற ஒரே சொற்றொடரை ‘அர்த்தமுள்ளதாக்கி’ அதன் மூலம் அதிபர் ராஜபக்சவின் அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு ஆதரவளித்து, அதன்மூலம் ஈழத் தமிழர்களின் நியாயமான, மனிதாபிமான உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கு உலக நாடுகள் மெளனமாக தங்களின் நல்லாசிகளைத் தெரிவித்து வருகின்றன.



அரை நூற்றாண்டுக் காலமாக ஈழத் தமிழர்கள் நடத்திவரும் போராட்டத்தினை தனது இராணுவத்தைக் கொண்டு மிருக பலத்துடன் ஒடுக்க முற்பட்ட அரசை எதிர்த்து ஆயுதம் தாங்கிப் போராடி வரும் ஒரு மக்களமைப்பை, அமெரிக்காவில் நடந்த ஒரு தாக்குதலை அடிப்படையாக வைத்து மிகச் சாமர்த்தியமாக ‘பயங்கரவாத அமைப்பாக்கி’, உரிமை கோரும் மக்களை மிருக பலத்துடன் நசுக்கிவரும் ஒரு அரசிற்கு ஆயுதம், நிதி என்று வாரி வழங்கி அது நடத்திவந்த இனப் படுகொலையை தொடர உதவிய உலக நாடுகள், தங்களின் ஜனநாயக முகமூடியை புதுப்பித்துக் கொள்ள அவ்வப்போது ‘தமிழர்களின் அரசியல் ஜனநாயக உரிமைகளை சிறிலங்க அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று மட்டும் கூறிவிட்டு எல்லாவிதத்திலும் அந்தத் தமிழர்களை முற்றிலுமாக ஒழிக்க ‘பாடுபட்டு’ வரும் சிறிலங்க அரசிற்கு உதவியைத் தொடர்கின்றன. இப்போது அது எடுக்கும் இறுதி நடவடிக்கைக்கு மட்டும் எதிர்ப்பா காட்ட முடியும்? அப்படிச் செய்தால் அவர்களின் முரண்பட்ட சாயம் வெளுத்துவிடாதா? அந்நாட்டில் இருந்து பெறக்கூடிய வணிக நலன்கள் பாதிக்கப்படாதா?



17 சதுர கி.மீ. பரப்பளவு மட்டுமே கொண்ட அந்த பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்கியிருக்கும் அப்பாவி மக்களை ‘மீட்க’ தனது ஐந்து படையணிகளை பயன்படுத்தித் தாக்கப் போகும் சிறிலங்க அரசு, அதற்கு மற்றொரு பெயரையும் சூட்டியுள்ளது: “இராணுவம் மேற்கொள்ளப்போகும் மிகப் பெரிய மனிதாபிமான தலையீடு” என்று. என்ன கரிசனம்!

விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கே இந்தப் போர் என்று கூறி, அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப் பகுதிகளை மீட்டெடுப்போம் என்று கூறிக்கொண்டு தாக்குதலைத் துவக்கிய சிறிலங்க அரசு, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கும் அப்பாவி மக்களை அங்கிருந்து வெளியேறி (வெளியேற்றத் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து) பாதுகாப்பு வலயத்திற்குள் வருமாறு சொன்னது.

அவ்வாறு வந்த மக்களுக்கு சோறு தண்ணீர் இல்லாமல் சாகடித்தது. சோதனை என்ற பெயரில் அத்துமீறியது. குடும்பங்களைப் பிரித்தது. தற்காலிக முகாம்கள் என்று கூறி, கம்பி வேலிகளுக்குள் அவர்களை அடைத்தது. பிறகு பாதுகாப்பு வலயத்தின் மீதே எறிகணைத் தாக்குதல் நடத்தியது. அங்குள்ள மருத்துவமனைகளின் மீது குண்டு மழை பொழிந்தது. ஏன் என்று கேட்டதற்கு “அந்த மருத்துவமனை கூட இராணுவ இலக்குதான்” என்று சர்வதேச ஊடகங்கங்களுக்கு பேட்டியே கொடுத்தா‌ர் சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச. அதனை எப்படி என்று கேட்கவில்லை உலக நாடுகளும், ஐ.நா.வும்.



பாதுகாப்பு வலயத்தின் மீது தொடர்ந்து குண்டு மழை பொழிந்தபோது கூட அதனை இனப் படுகொலை என்று சொல்ல நா எழவில்லை உலக நாடுகளுக்கு. உலக நாடுகள் கண்டித்தால் அல்லவா ஐ.நா. பேசும்! அதற்கென்று உள்ள நெறிகள் எல்லாம் ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகியவற்றின் தனித்த அல்லது கூட்டு வசதிக்குக் கட்டுப்பட்டதுதானே?

அதனால்தான் 47 நாளில் 2,683 அப்பாவி மக்கள் சிறிலங்க படையினரால் கொல்லப்பட்டதை விவாதிக்க எதிர்ப்பு தெரிவித்தது சீனா. அது அந்நாட்டின் ‘உள்நாட்டுப் பிரச்சனை’ என்றது. அப்பட்டமாக நடந்த இனப் படுகொலையை விவாதிக்காமல் ஐ.நா. மனிதாபிமான ஆணையரின் விளக்கத்துடன் அமுக்கிவிட்டன வல்லரசுகள். அதுதானே இப்படிப்பட்ட படையெடுப்பை துவக்குவதற்கு சிறிலங்காவிற்கும் அதற்கு ‘எல்லாவிதத்திலும்’ உதவிக் கொண்டிருக்கின்ற இந்தியாவிற்கும் துணிவைத் தந்தது.



ஈழத் தமிழர்கள் இலங்கையில் சம உரிமை பெற்ற மக்களில்லை என்பதை உணர்ந்துள்ள இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் என்ன கூறியிருக்க வேண்டும்? முதலில் அவர்களின் பிரச்சனைக்குத் தீர்வை உருவாக்கு, அதன் பிறகு உனது ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரை’ நடத்திக்கொள் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்? தமிழர்களின் பிரச்சனைக்குத் தீ்ர்வு காண சிறிலங்க அரசமைப்பைத் தாண்டி சிறிலங்க அரசு சிந்திக்க வேண்டும் என்று தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் சார்புச் செயலர் ரிச்சர்ட் பெளச்சர் கூறினாரே? அப்படி சிந்தித்தா சிறிலங்கா? ஏன் சிந்திக்கவில்லை, எங்கே தீர்வுத் திட்டம் என்று கேட்டதா அமெரிக்கா? இல்லையே. ஏனென்றால் பின்னிப் பிணை‌ந்துள்ள பொருளாதார, இராணுவ நலன்கள்.

அதனால்தான் இந்தியா இராணுவ ரீதியாக உதவுகிறது. அதை சிறிலங்க அமைச்சர் நிமல சிறிபால டிசில்வா அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே நன்றியுடன் பாராட்டினார். மற்ற உறுப்பினர்களையும் நன்றிடன் பாராட்டச் சொன்னார். உள்நாட்டுப் போர் என்று கூறி சீனா, அந்நாட்டிற்கு நிதி உதவி அளிக்கிறது. அப்பாவித் தமிழர்கள் மீது வீசப்பட்ட கொத்தணிக் குண்டுகளை சிறிலங்காவிற்கு அளித்தது ரஷ்யா, இந்தியாவின் நலனோடு தனது நலனைப் பார்த்த பிரான்ஸ், பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு சிறிலங்க அரசிற்கு உரிமை உண்டு என்று முழங்கியது. உலகம் இப்படி இருக்கையில் ஐ.நா. மட்டும் எப்படிப் பேசும் நியாயத்தை?



இப்படி ஒரு அப்பட்டமான இனப் படுகொலை நடத்த இந்த நாகரீக உலகில் ஒரு சின்ன அரசிற்கே உலக நாடுகளும் ஐ.நா.வும் நெஞ்சு கூசாமல் உதவிடும் போது தமிழினம் எங்கே போவது? யாரிடம் முறையிடுவது?

இங்கிலாந்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் நேற்று மாலை கூடி இரவு முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டு இனப் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு இங்கிலாந்து அரசை வலியுறுத்துகின்றனர். இன்று நார்வேயில் கூடி கோரிக்கை விடுத்துள்ளனர். அசையுமா ஐரோப்பிய நாடுகள்?

ஆனால் இந்தப் போராட்டங்கள் தொடர வேண்டும். உலக நாடுகளில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும். அப்பட்டமாக நடைபெற்றுவரும் தமிழனப் படுகொலையை உலக நாடுகள் வார்த்தை சாதுரியங்களால் மறைக்கப் பார்க்கலாம், திசை திருப்பலாம். ஆனால் உலக மக்கள் இதனை உணரத் துவங்கியுள்ளனர். தமிழினப் படுகொலையை அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற நாடான இலங்கையில் உரிமை கேட்ட ஒரு இனம் அந்நாட்டு அரசால் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்பதை உணர்த்துவோம்.



தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த உலக நாடுகள் தவறுமெனில், அதன் எதிர்வினையையும் உலகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கசப்பான கட்டாயம் அதற்கு ஏற்பட்டுவிடும் என்பதையும் புரியவைப்போம்.

முதலாவது உலகப் போரில் தோல்வியைத் தழுவிய ஜெர்மனியின் மீது மற்ற ஐரோப்பிய நாடுகள் சுமத்திய அவமானங்களும், போருக்கான செலவை ஈடுகட்ட வேண்டும் என்று கோரி எழுதி வாங்கிய பத்திரமும்தான், பின்னாளில் ஜெர்மானிய மக்களின் கெளரவத்தை தட்டி எழுப்ப ஹிட்லர் பயன்படுத்தினார், அது இரண்டாவது உலகப் போருக்கு இட்டுச் சென்றது என்கிறது வரலாறு. இன்று நடக்கும் அநியாயம் நாளை தமிழர்களை சிந்திக்க வைக்கும்.

இன்றைக்கு தமிழினத்தின் மீது அவமானமும், அநீதியும் சுமத்தப்படுகிறது. இது தடுக்கப்படாவிட்டால், இன அழிப்பிலிருந்து அதனை மீட்க உலகம் முற்படாவிட்டால், யூத இனத்தைப் போல தன்னை காப்பாற்றிக் கொள்ள தமிழினமும் தனித்த வழி முறைகளை சிந்திக்க தூண்டப்படும்.



எத்தனையோ பேரழிவுகளை தமிழினம் சந்தித்துள்ளது. வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் ஏற்பட்ட இரண்டு பெரும் கடல்கோள்களால் தென் மதுரையும், கபாடபுரமும் கடலிற்குள் மூழ்கின. ஆயினும் தமிழனம் அழியவில்லை. தமிழும் அழியவில்லை. தமிழர் பண்பாடும் அழியவில்லை. இயற்கையை மீறிய மானிட சக்தி ஏது உள்ளது?

உலகமும் ஐ.நா.வும் இதனை புரிந்துகொள்ளட்டும்.

போர் முடிகிறது, அதற்குப் பின்....?


வடக்கில் வன்னியில் நடத்தப்பட்ட போர் முடிவுற்றுவிட்டதாக, விடுதலைப் புலிகள் தோற் கடிகக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறுகின்றனர். அதனையொட்டி சிங்களப் பிரதேசங்கள் குதூகலிக் கின்றன. அது இயற்கையானது; எதிர்பார்க்கவேண்டியது.

ஆனால் அடுத்தது என்ன? என்ற கேள்வி நாட்டு நல னில் அக்கறையுள்ள, நிதானமாகச் சிந்திக்கும் பிர சைகளின் மனதில் எழுவது இயல்பு.
அரசியல்வாதி என்பதால், நாட்டு நலனிலும் தமிழ்மக்களின் நலன்களிலும் அக்கறை உள்ளவர் என்ற வகையில், மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் மேற்குறிப்பிட்ட கேள்விக்குப் பதில் காண விழைந்திருக்கின்றார்.
தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பொருத்தமான அரசியல் தீர்வு ஒன்று உடனடியாக முன்வைக்கப்படவேண்டும். அவ்வாறு உகந்த தீர்வு ஒன்று முன்வைக்கப்படாவிட்டால், எதிர் காலத்தில் போர் வேறு வடிவத்தில் வெடிக்கும் என்று எடுத்துக்காட்டியுள்ளார் மனோகணேசன்.

அவர் மட்டும் இதனைக் கூறவில்லை. அரசி யல் விமர்சகர்கள், அரசியல் விவகாரங்களில் ஈடு பாடுடையவர்கள், சர்வதேச அரசியல் நோக்கர்கள் என்று பல தரப்பினரும் இந்தக் கேள்வியைத் தொடுத்துப் பதிலையும் கூறுகின்றனர்.
அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு, அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கு வதாக அமையவேண்டும் என்றும் வலியுறுத் தியிருக்கிறார் மனோகணேசன்.

போர் இப்போது முடிவுக்கு வரலாம். ஆனால் தமிழர் பிரச்சினைக்குப் பொருத்தமான அரசியல் தீர்வு முன்வைக்கப்படாவிட்டால், போர் வேறு வடி வத்தில் மீண்டும் வரும். இன்னுமொரு பிரபா கரன் தோன்றுவார் என்ற யதார்த்தத்தை விளம்பி யுள்ளார் மனோகணேசன். இது அவருக்கு மட்டு மல்ல, நியாயமாகச் சிந்தித்தால் அரசாங்கத் தரப்பில் உள்ளவர்களும் நிச்சயம் இந்தக் கருத்தை யதார்த் தத்தை உணர்வர்.
அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலை மையில் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாகக் கூடிக் கலைந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, மிக மிகக் கஷ்டப்பட்டு, இந்தியாவைச் சமா ளிக்கும் உள்நோக்குடன் மட்டும் தயாரித்த தீர்வு யோசனையும் "அம்போ" ஆகிவிட்ட சங்கதியும் வெளிப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆவது திருத்தம் சட்டத்திற்கு அப்பாலான தீர்வு யோசனையை அனைத்துக் கட்சிக் குழு தயாரித்ததாகவும் அதனை ஜனாதிபதி சரிபார்த்துவிட்டார் என்ற தகவலையும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
யோசனையைச் சரிபார்த்த பின்னர், புதிய யோச னையைக் கிழித்து எறிந்துவிட்டார் என்ற தகவல் புதியது. இதுவரை வெளிவராத விடயம். இப்போது அது அம்பலமாகியிருக்கிறது.
75 சதவீதமான சிங்களப் பிரதிநிதிகளையும் 25 சதவீதமான தமிழ்ப் பிரதிநிதிகளையும் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு தயாரித்த தீர்வு யோச னையையே ஜனாதிபதி கிழித்து எறிந்தார் என்றால், இனிப் புதிதாக எந்தவித யோசனையை உட்புகுத்தி தீர்வு நகல் தயாரிக்கப்படும் என்று அர்த்தமுள்ள கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
இவ்வேளை இன்னொரு கேள்வியும் இயல்பாகவே எழுகின்றது.

இந்தியத் தலைவர்கள், வெறுமனே 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று நம்பகமான அதி காரப் பகிர்வு வழங்கப்படவேண்டும் என்று அடிக்கடி வாய் கிழியக் கத்துகிறார்கள். அவர்களால் போருக்கு உதவ முடியுமே அன்றி அரசியல் தீர்வு ஒன்றுக்கு உதவமுடியாது; உதவ விரும்பவில்லை என்ற நிலைமை இப்போது கலங்கித் தெளிகின்றது. அவ்வாறெனின் போர் முடிந்த பின்னரான காலப்பகுதியில் அரசு முன்வைக்கவுள்ள தீர்வு தமி ழர்களின் உரிமைகளை வழங்குவதாக, அவர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக அமையும் என்று எவ்வாறு எதிர்பார்ப்பது?

போர் முடிந்த பின்னர் அரசியல் தீர்வு பற்றி முயற்சிக்கலாம் என்று ஐ.நா.அதிகாரிகளும் மேற் குலக அரசியல்வாதிகள் சிலரும் அண்மைக் கால மாகக் கூறிவந்தனர். ஆனால்
தமிழ் மக்கள் வன்னியில் மனிதப் பேரவலத் தில் சிக்கியிருந்தபோது அவர்களுக்கு உதவ முடி யாத சர்வதேசம் வக்கற்று நின்கும் சர்வதேசம் தமிழர்களின் உரிமைகள் கிடைக்க உழைக்கும் என்று நம்புவது, காத்திருப்பது, எதிர்பார்ப்பது அர்த் தமற்றதே!

வாக்குகளுக்காக நோட்டுகள்

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உலகின் மிகப் பெரியதும் மிகச் சிக்கலானதுமான ஜனநாயகச் செயற்பாடு என்று வர்ணிக்கப்படும் இத்தேர்தலில் களமிறங்குவதற்கு இந்திய அரசியல் கட்சிகள் அந்நாட்டின் வரலாற்றில் முன்னென்றுமில்லாத அளவுக்கு கூட்டணி அமைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வேட்பாளர் தெரிவுகளையும் தொகுதிப் பங்கீடுகளையும் செய்து கொண்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் இன்று ஊடகங்களை ஆக்கிரமிப்புச் செய்து கொண்டிருக்கின்றன. சாத்தியமான சகல தில்லுமுல்லுகளையும் செய்து தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அரசியல் கட்சிகள் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை, இந்தியத் தேர்தல் ஆணைக்குழு அதனாலியன்றவரை தேர்தலை நீதியானதாகவும் சுதந்திரமானதாகவும் நடத்தி முடிப்பதில் அக்கறை காட்டுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
எமது பிராந்திய நாடுகளிலே தேர்தல்கள் பணபலமும் குண்டர் வன்முறைப் பலமும் அவற்றின் கைவரிசையைக் காண்பிக்கும் ஒரு களமாகவே விளங்கி வருகின்றன. இந்தியாவில் இத்தடவை தேர்தலில் பணபலத்தின் ஆதிக்கம் குறித்து முன்னென்றுமில்லாத அளவுக்கு கூடுதலாகப் பேசப்படுவதைக் காண முடிகிறது. சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ்த் தினசரியொன்றில் அரசியல் அவதானியொருவர் எழுதிய கட்டுரையில் வேட்பாளர்களை நியமிக்கும் விடயத்தில் கட்சிகளின் தலைமைத்துவம் பணபலத்துக்கு கொடுக்கும் அதிமுக்கியத்துவத்தை நோக்கும் போது இன்று மகாத்மா காந்தி உயிருடன் இருந்திருப்பாரேயானால் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவருக்குக் கூட எந்தக் கட்சியிலும் இடம் கிடைக்காது போலிருக்கிறதே என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார். தேர்தல் சூடுபிடித்துவிட்ட நிலையில் கறுப்புப் பணத்துக்கு கால் முளைத்து ஓடத்தொடங்கி விட்டது என்றும் அவர் எழுதியிருக்கிறார். பணபலம் எந்தளவு தூரம் தேர்தல் களத்தில் புகுந்து விளையாடுகிறது என்பதை இவரின் கருத்துக்கள் தெளிவாக உணர்த்துகின்றன.

ஊடக கற்கைகளுக்கான மத்திய நிலையம் (The centre for media studies ) என்ற இந்திய அமைப்பொன்று "வாக்குகளுக்காக நோட்டுகள்' (Notes for votes) என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையொன்று எமது கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கிறது. வாக்குகளைப் பெறுவதற்காக பணம் வழங்குவதென்பது இப்போது ஒரு தேர்தல் நடைமுறையாகி விட்டதோ என்ற கேள்வியுடனேயே அந்த அறிக்கை ஆரம்பமாகிறது. கடந்த வருட நடுப்பகுதியில் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிப்பதற்காக தங்களுக்கு கோடிக்கணக்கில் இலஞ்சம் தரப்பட்டதாகக் கூறி பைகளில் இருந்து கட்டுக்கட்டுகளாக பண நோட்டுக்களை எதிரணி எம்.பி.க்கள் சபைக்குள் காண்பித்ததை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று நம்புகின்றோம். வசதியான வாழ்க்கை வாழும் எம்.பி.க்களுக்கே சபைக்குள் வாக்களிப்பதற்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதென்றால் பஞ்சப் பராரிகளான சாதாரண இந்திய வாக்காளர்கள் எந்தளவுக்கு தேர்தல்களின் போது பணத்தினால் தூண்டப்படக்கூடியவர்களாக இருப்பர் என்பதைப் புரிந்து கொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது.

தேர்தல் நோக்கங்களுக்காக அரசியல் வாதிகளினால் எடுத்துச் செல்லப்பட்டு பெருந்தொகைப் பணம் விநியோகிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களை கடந்த சில நாட்களாக இந்திய தொலைக்காட்சி சேவைகள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. முன்னரெல்லாம் தேர்தல் பிரசாரங்கள் உத்தியோகபூர்வமாக முடிவடைந்த பின்னர்தான் வாக்குகளுக்காக நோட்டுகள் விநியோகிக்கப்படுவது வழமையாம். இப்போது தேர்தலுக்கு சில வாரங்கள் இருக்கும் நிலையிலேயே அரசியல்வாதிகளும் அவர்களது அடியாட்களும் தவறான முறையில் சேர்த்த பணத்துக்கு கால் முளைத்துவிட்டது. ஊடக கற்கைகளுக்கான மத்திய நிலையத்தின் அறிக்கையின் படி தேர்தல் நோக்கங்களுக்காக மூன்று கட்டங்களில் பணம் வழங்கப்படுகிறது. முதலாவதாக வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்காக அரசியல்வாதிகள் கட்சிகளின் தலைவர்களுக்கு பணத்தைக் கொடுக்கிறார்கள். இரண்டாவதாக எதிர்த்துப் போட்டியிடாமல் இருப்பதற்காக மாற்று அணி அரசியல் வாதிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் பணம் கொடுக்கப்படுகிறது. மூன்றாவதாக தேர்தல் தினத்துக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழுகின்ற குடும்பங்கள் மத்தியில் தேர்தல் நோக்கங்களுக்காக ஊழல் பணம் பயன்படுத்தப்படுகின்ற விதம் குறித்து மேற்படி நிலையம் 2007 ஆம் ஆண்டில் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறது. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களில் எத்தனை சதவீதமானவர்கள் வாங்குகளுக்காக பணத்தை வாக்குகிறார்கள் என்பதைக் கண்டறிவதே அடிப்படை நோக்கமாகும். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் இறுதியிலே வறிய குடும்பங்கள் மாத்திரமல்ல, வயது வித்தியாசம், வருமான மட்டம், கல்வியறிவுமட்டம் என்ற எந்த விதமான வேறுபாடுமில்லாமல் கிராமப் புறங்களிலும் சரி, நகரப்புறங்களிலும் சரி சமுதாயத்தின் சகல பிரிவினரும் வாக்குகளுக்காக நோட்டுகளை வாங்குவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. உறுப்பினர் தொகையின் அடிப்படையில் வலுவான கட்சிக் கட்டமைப்பைக் கொண்ட இடதுசாரிகள் ஆட்சியமைத்திருக்கும் மாநிலங்களில் ஒப்பீட்டளவில் வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுக்கும் மோசடி குறைந்தளவில் காணப்படுகிறது. மற்றும்படி ஏனைய மாநிலங்களில் இது பரவலானதாக இருக்கிறது. வட இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு,கர்நாடகா, ஆந்திரப்பிரதேசத்தில் வாக்குகளுக்காக நோட்டுகள் கொடுக்கும் மோசடி அதிகரித்தவகையில் காணப்படுகிறது என்று ஊடக கற்கைகளுக்கான மத்திய நிலையம் கண்டறிந்திருக்கிறது.

உண்மையிலேயே வாக்குகளுக்காக நோட்டுகள் வழங்கும் நடவடிக்கை "சகல ஊழல்களினதும் தாய்' என்று அறிக்கையில் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. ஒரு விசித்திரமான அம்சம் என்னவென்றால், வாக்குகளுக்காக வழங்கப்படும் நோட்டுகள் வாக்களிக்கச் செல்லும் மக்கள் தொகையில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பதற்கான சான்று எதையும் காணக்கூடியதாக இருக்கவில்லை என்று மேற்படி நிறுவனம் அறிக்கையில் கூறியிருக்கின்றமைதான். தேர்தல் கால ஊழல் மோசடிகள், பணபலம், வன்முறைப்பலம் சகலதிலுமே இலங்கையும் தாராளமான "முன்னேற்றத்தைக்' கண்டிருக்கிறது என்பதால் அந்த ஊழல்தனத்தின் வியாபகத்தை மேலும் விளங்கிக் கொள்ள இந்த அறிக்கையின் தகவல்கள் எமது வாசகர்களுக்குப் பிரயோசனமாக இருக்கும்.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் 'ஆழ்ந்த கவலை': உடனடி போர் நிறுத்தத்துக்கும் வலியுறுத்தல்

வடபகுதியில் தொடரும் போரின் பிடிக்குள் பொதுமக்கள் அகப்பட்டுள்ளமை தொடர்பாக தன்னுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்பான்ட், உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கையை மீள வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா படையினர் இறுதிக்கட்டத் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலைமையிலேயே இந்த அவசரக் கோரிக்கையை விடுத்துள்ள பிரித்தானிய அமைச்சர், அரசாங்கப் படைகளும் விடுதலைப் புலிகளும் கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்.

'பாதுகாப்பு வலயம்' எனக் குறிப்பிடப்படும் பகுதியைத் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பகுதிகளையும் சிறிலங்கா படையினர் தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன எனத் தெரிவித்துள்ள அவர், போர் இப்போது பெருமளவு பொதுமக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயத்தை நோக்கித் திரும்பியிருப்பது ஆழ்ந்த கவலையளிப்பதாகவுள்ளது எனவும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை மேற்கொள்வது இப்போது அவசரமானதாகவுள்ளது என வலியுறுத்தும் அவர், பொதுமக்கள் ஆபத்தான இடத்தில் இருந்து பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகர்வது அவசியமானதாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவில் 2 ஆவது நாளாக தொடரும் தமிழர்களின் போராட்டம்: காவல்துறையின் அடக்குமுறையையும் மீறி மக்கள் பேரெழுச்சி



சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தை பிரித்தானிய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானியாவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் மாபெரும் மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்திருக்கின்றது.

பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தை குறுக்கே வழி மறித்து நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் தொடங்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

இரவு இரவாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொடர்ந்தும் பிரித்தானியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தின் ஊடான போக்குவரத்தை தமிழர்கள் வழிமறித்தனால் பிரித்தானியா நாடாளுமன்ற செயற்பாடுகள் முற்றாக செயலிழந்ததுடன், போக்குவரத்தும் பெரும் நெரிசல் ஏற்பட்டிருக்கின்றது.

"சிறிலங்கா அரசே இனப்படுகொலையை நிறுத்து"

"தாய்மார்களையும் சிறுவர்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்வதனை நிறுத்து"

"எமக்கு தேவை தமிழீழமே"

"எமது தலைவர் பிரபாகரனே"

என உரத்த குரலில் உணர்வுபூர்வமாக முழக்கமிட்டு வரும் தமிழர்கள் தமது கைகளில் தமிழீழத் தேசியக் கொடியையும் தமிழீழ தேசியத் தலைவரின் படத்தையும் கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.

பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண், இலங்கை பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டி வலியுறுத்தியும் அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் தமிழர்கள் வலியுறுத்தி வருவதாக பிரித்தானிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.



இலங்கை பிரச்சினையில் நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்களிடம் உறுதிமொழி வழங்கிய போதும் அதனை நிராகரித்த தமிழர்கள், தமக்கு உடனடி நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த தொடர் போராட்டத்தினால் பிரித்தானியாவின் முக்கிய தொடருந்து நிலையமான வெஸ்ட்மினிஸ்டர் நிலையத்தின் சேவைகள் நேற்று இரவுடன் முற்றாக நிறுத்தப்பட்டு ஒலிபெருக்கிகளில் மாற்று வழிப்பாதைகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவித்தல் விடுத்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழர்களை அடக்குவதற்காக கலகம் அடக்கும் காவல்துறையினர் கொண்டு வரப்பட்ட போதும் ஆர்ப்பாட்டத்தில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டதால் கலகம் அடக்கும் காவல்துறையினரால் அவர்களை அடக்க முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மேற்படி பகுதிக்குரிய காவல்துறை பேச்சாளர் தெரிவிக்கையில்,

தமிழர்களின் இந்த திடீர் போராட்டம் எமக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எனினும் அமைதியான வழியில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தினை தடுத்து நிறுத்து நோக்கம் எமக்கு இல்லை.

அத்துடன், இந்த போராட்டத்துக்கு மேலதிகமாக மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நாம் எந்தவித இடையூறும் விளைவிக்கவில்லை என்றார்.

எனினும், தமிழீழத் தேசியக் கொடியை கையில் ஏந்தியிருந்த நான்கு தமிழ் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் பலரை கைது செய்ய முற்பட்ட போது அங்கிருந்த மக்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் எற்பட்டு இறுதியில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் கைவிட்டுள்ளனர்.

இதனால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தமிழீழத் தேசியக் கொடியை குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கைகளில் ஏந்தியிருக்குமாறு கொடுத்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவியான ஜெயந்தி பரஞ்சோதி கருத்து தெரிவிக்கையில்,

பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அல்லது பிரதமர் கோடன் பிறவுண் இங்கு வந்து தாயகத்தில் இடம்பெற்று வரும் தமிழினப் படுகொலைக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரைக்கும் இங்கிருந்து நாம் வெளியேறப் போவதும் இல்லை. எமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுதிமொழிகள் தேவையில்லை என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சைமன்ட் கூச் தெரிவிக்கையில்,

தமிழர்களின் 25 வருட கால போராட்டத்துக்கு நான் முழுமையான ஆதரவு வழங்குகின்றேன். தற்போது தான் சரியான தருணம். பிரித்தானிய அரசாங்கம் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழர்கள் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அதற்கு நானும் முழுமையான ஆதரவு வழங்குகின்றேன் என்றார்.

தேம்ஸ் நதிக்குள் குதித்து இருவர் தற்கொலை முயற்சி

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்கள் இருவர், நேற்று இரவு தேம்ஸ் நதிக்குள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்ததால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், காவல்துறையினர் படகுகளில் சென்று அவர்களை உடனடியாக மீட்டதுடன், மேலும் பலர் தேம்ஸ் நதிக்குள் குதிக்கலாம் என அச்சத்தில் படகுகளுடன் முழு விழிப்பு நிலையில் உள்ளனர்.

அத்துடன், கலகம் அடக்கும் காவல்துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் நோக்கில் பிரித்தானிய காவல்துறையினர் செயற்பட்டு வருகின்ற போதிலும் இன்று மாலை அப்பகுதியில் மேலதிகமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

சந்திப்புக்கு இன்று மாலை ஏற்பாடு

இதேவேளையில் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான அனுமதியை பிரித்தானிய தமிழர் பேரவை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண் அல்லது பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மில்பான்ட் கலந்து கொள்வார் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் 10 பேர் அடங்கிய குழு கலந்து கொள்ளும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்திப்பு நடைபெற்றாலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பிரித்தானிய இளையோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருவதால் இரவு தங்குவதற்கு வேண்டிய குளிர்தாங்க வல்ல ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்களுடன் மக்கள் ஆர்ப்பாட்ட இடத்துக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

அதேவேளையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

பிரித்தானிய வரலாற்றில் இத்தகைய போராட்டம் தமிழர்களால் நடத்தப்படுவது இதுவே முதற்தடவை ஆகும்.

அரசியல் தீர்வில் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை: மனோ கணேசன்


தமிழ் மக்கள் இன்று அரசியல் தீர்வில் நம்பிக்கை இழந்து விட்டார்கள் எனத் தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இந்த அரசாங்கத்திடம் இருந்து இன நெருக்கடியைத் தீர்த்து வைக்கக்கூடிய அரசியல் தீர்வினை எதிர்பார்க்கவும் முடியாது எனத் தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ரேணுகா ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே இந்தக் கருத்துக்களை மனோ கணேசன் தெரிவித்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவூப் ஹக்கீமுடன் இணைந்து தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

இங்கு அவர் மேலும் முக்கியமாக தெரிவித்ததாவது:

அரசியல் தீர்வினைக் கொண்டு வருவதில்லை; இராணுவத் தீர்வு முனைப்புக்களை நீடிப்பதிலேயே அரசாங்கம் முனைப்புடன் இருக்கின்றது.

அரசியல் தீர்வைக் காண்பதற்கென அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் கூட்டங்களை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி புறக்கணித்த நிலையில் அதில் நாம் கலந்து கொண்டோம்.

ஆனால், அனைத்து கட்சிக்குழுவின் பரிந்துரைகளில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. அனைத்துலக கட்சிக்குழுவின் நிபுணர்கள் குழு தயாரித்தளித்த பெரும்பான்மை அறிக்கையைத் திறந்து பார்க்காமலேயே அவர் தூக்கி எறிந்தார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த பரிந்துரைகளைப் பகிரங்கப்படுத்துவதற்குக் கூட அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. பதிலாக இராணுவ நிகழ்ச்சி நிரலை நீடிப்பதிலேயே அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகின்றது.

இதன் காரணமாக தமிழ், முஸ்லிம் மக்கள் அரசியல் தீர்விலும் அரசாங்கத்திலும் நம்பிக்கை இழந்து விட்டனர். இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அரசுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.

அரசியல் தீர்வில் அரசாங்கத்துக்கு நம்பிக்கை இருக்குமானால் முதலில் நிபுணர்கள் குழுவின் அறிக்கையைப் பகிரங்கப்படுத்த வேண்டும். இதனை நான் அரசுக்கு ஒரு சவாலாகவே விடுக்கின்றேன்.

அரசியல் அமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை தமிழர்கள் 20 வருடங்களுக்கு முன்னரே நிராகரித்து விட்டனர். ஆனால், மாகாண சபைத் திட்டத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு தயாராகவில்லை எனவும் மனோ கணேசன் இங்கு தெரிவித்தார்.

வன்னி மக்கள் பேரவலம்; களமுனை; இந்தியா; அனைத்துலக சமூகம்; தமிழக மக்கள்; புலம் வாழ் தமிழர்: பா.நடேசன் விரிவான விளக்கம்


தற்போதைய அரசியல், இராணுவ நிலவரம், வன்னி வாழ் தமிழர் படும் அவலங்கள், உலகம் எங்கும் நிகழும் தமிழர் போராட்டங்கள், அனைத்துலக சமூகம் இயங்கும் போக்கு, இவை எல்லாவற்றிற்குப் பின்னாலும் இயங்கும் இந்தியா என பல்தரப்பட்ட விடயங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அளித்துள்ளார்.

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த வாரம் ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு பா.நடேசன் வழங்கிய சிறப்பு நேர்காணல்:

தாங்கொணா துன்பங்களுக்கு ஊடாக தாயக மக்கள் அவலங்களை நாளாந்தம் சந்தித்து வருகின்றனர். தற்போது மிகவும் ஒரு குறுகிய பிரதேசத்திற்குள் ஒரு பெருந்தொகையான மக்கள் அவலப்படுகின்றனர். அவர்கள் நாளாந்தம் சந்திக்கும் அவலம் என்ன என்பதை உங்களிடமிருந்து நான் முதலில் அறிந்து கொள்ள விரும்புகின்றேன்?

தற்போதைய சூழலில் எங்களுடைய மக்கள் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு சிறிய பிரதேசத்திற்குள் வாழ்ந்து வருகிறார்கள். எல்லா மக்களும் இடம்பெயர்ந்து, நிலங்களில் பதுங்கு குழிகள் அமைத்து முக்கியமாக சிறிலங்கா அரச படைகளுடைய கொடூரமான இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு புறம் முகம் கொடுத்த படியும் இன்னொரு புறம் பொருளாதார தடை, உணவுத் தடை, மருந்துத் தடை என பல்வேறு தடைகளுக்கும் முகம் கொடுத்தபடி ஒரு மனித அவலத்தின் உச்சத்தில் எங்களுடைய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக இரவும் பகலும் சிறிலங்கா இராணுவத்தினுடைய ஆட்லெறி எறிகணை வீச்சுக்கள் கண்மூடித்தனமான முறையில் மக்கள் செறிவாக வாழ்கின்ற குடியிருப்புகள் மீதுதான் இலக்கு வைக்கப்படுகிறது. சராசரி ஒரு நாளைக்கு சிறிலங்கா இராணுவத்தினருடைய ஆட்லெறி அதாவது பீரங்கித் தாக்குதல்கள் மூலம் 50 இல் இருந்து 100 வரையிலான மக்கள் கொல்லப்பட்டும் 200 வரையான மக்கள் காயப்பட்டும் வருகின்றனர்.

இந்த புள்ளி விபரத்தை இங்குள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்ற நடுநிலையான அமைப்புகள் உலகத்திற்குத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்ல சில சமயம் ஆட்லெறி எறிகணை வீச்சுகள் ஒரு புறம், இன்னொரு புறம் வான்குண்டு வீச்சுகள் கூட மக்கள் குடியிருப்புகள் மீது இலக்கு வைத்து நடத்தப்படுகின்றது.

அதுமட்டுமல்ல இன்றைக்கும் காயப்படுகின்ற மக்களுக்கு உடனடியாக அடிப்படை சிகிச்சைகள் கொடுப்பதற்கு கூட மருந்துகள் இல்லை. இந்த இராணுவ நடவடிக்கை தொடங்கிய காலம் தொட்டு இன்றுவரை மருந்து தடையை உருவாக்கி மக்களை பெரியதொரு இன அழிப்பு நிலைக்கு தள்ளி இருக்கின்றது.

அதுமட்டுமல்ல உணவு ரீதியாகவும், இன்றைக்கு எங்களுடைய மக்கள் மரக்கறி உணவுகளைச் சாப்பிட்டு மாதக் கணக்காகிறது. உதாரணத்திற்கு நாங்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதாவது வல்லிபுனம், தேவிபுரம் போன்ற பிரதேசத்தில் இருந்துவிட்டு இங்கே வந்த பின்னர் மக்கள் தற்போது சாப்பிடுகின்ற உணவு வெறும் சோறும் பருப்பும் அல்லது சோயா மீற் என்று சொல்லப்படுகின்ற உணவு மட்டுமே.

இலை - குழை அல்லது கீரை வகைகள் என எந்தவொரு சத்து உணவைக் கூட மக்கள் உண்ண முடியாத ஒரு நிலையில் இந்த 21 ஆம் நூற்றாண்டின் அதியுச்ச மனித அவலம் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.

எங்களுடைய மக்கள் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒரு பாரிய இன அழிப்பு யுத்தத்திற்கு, பெரும் சவால்களுக்கு, நெருக்கடிகளுக்கு மத்தியில் முகம் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்த குறுகிய பிரதேசத்திற்குள் இத்தனை லட்சக்கணக்கான மக்கள், ஏற்கனவே இடம்பெயர்ந்து இப்போது இந்த பிரதேசத்திற்குள் இருக்கின்றார்கள். அவர்கள் எவ்வாறு தமது வாழ்க்கையை, இத்தனை அவலங்களுக்கு மத்தியிலும் நடத்தக்கூடியதாக இருக்கின்றது?
உண்மையில் எங்களுடைய மக்களுக்கு இப்போது தொழில் வாய்ப்புக்கள் இல்லை. வருமானங்கள் இல்லை. அதாவது சேமித்து வைத்த சேமிப்புகள் எல்லாம் செலவழிக்கப்பட்டு விட்டன. இருந்தாலும் எங்களுடைய அமைப்புக்கள் குறிப்பாக தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற அமைப்புக்களும் அதே போன்று நிர்வாக சேவை போன்ற அமைப்புக்களும் எங்களுடைய மக்களுக்குப் போதுமான வரை உதவி செய்கின்றார்கள்.

அதே போன்று எங்களுடைய மக்களுடைய பண்பாட்டு வாழ்க்கை முறை, இருக்கின்றவர்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்கின்ற ஒரு பண்பாடு இருந்து வருகின்றது. இந்த வகையில் இருப்பவர்கள் தங்களுடைய சேமிப்புகளில் இருந்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்கான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற அமைப்புக்கள், தமிழீழ நிர்வாக சேவை போன்ற அமைப்புக்களும் எங்களுடைய மக்களுக்கு உணவுக் கஞ்சி அதாவது, அரிசியில் கஞ்சி காய்ச்சி ஒரு நாளைக்கு இரண்டு தடவை வழங்கி வருகின்றனர்.

எங்களுடைய மக்கள் சொல்லொணா துன்பத்திற்கு, அதாவது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பெரும் பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அண்மைய காலங்களில் உலக உணவுத் திட்டத்தால் அனுப்பப்டுகின்ற உணவுகள் மாத்திரம் கப்பல் மூலம் எடுத்து வரப்படுகின்றன. அதிலும் எங்களுடைய மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்யக்கூடிய முறையில் உணவுகள் இங்கே வருவதில்லை.

கடந்த காலத்தில் இரண்டு முறை உணவு வந்திருக்கிறது. ஆனால் அரிசி வரவில்லை. அண்மையில் இறுதியாக வந்தக் கப்பலில்தான் அரிசி வந்திருக்கின்றது. அது கூட எங்களுடைய மக்களின் தேவையை நிறைவு செய்யக்கூடிய அளவிற்கு வரவில்லை. பெரியதொரு மனித அவலம் இங்கே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இங்கே உள்ள அரசு சார்பற்ற நிறுவனங்களைக் கேட்டால் தெரியும். அதுபோல இங்கே இடம்பெறுகின்ற மனித அவலம் இன்றைக்கு முழு உலகத்திற்கும் நன்றாக தெரிய வந்திருக்கின்றது.

தற்போது நீங்கள் இருக்கின்ற குறுகிய பிரதேசத்திற்குள் மக்கள் தங்குவதற்கான போதுமான கூடாரங்கள் இருக்கின்றனவா?
எங்களுடைய மக்களுக்கு இங்கே போதுமான கூடாரங்கள் இல்லை. இருந்தாலும் கடந்த காலங்களில் யுஎன்எச்சிஆர், ஐசிஆர்சி போன்ற அமைப்புக்கள் வழங்கிய கூடாரங்களை வைத்துக்கொண்டு மக்கள் தமது வாழ்க்கையை நடத்துகின்றார்கள்.

அதேபோன்று தற்போது வாழ்கின்ற பிரதேசத்தில் பனைகள் நிறைய இருக்கின்றன. பனை ஓலைகளையும் பயன்படுத்த மக்கள் தொடங்கியுள்ளனர். ஏனென்றால் தற்போது மிகவும் வறட்சியான காலம்; மிகவும் வெப்பமான காலம். அவ்வாறான சூழலில் கூடாரங்களுக்குள் வாழ்கின்ற மக்கள் பெரும் சவால்களுக்கு முகம் கொடுக்க கூடிய ஒரு நிலை தோன்றியுள்ளது.

குறிப்பாக, வெப்பத்தினால் ஏற்படுகின்ற கொப்பளிப்பான் போன்ற வருத்தங்கள் தற்போது எல்லா இடமும் பரவத் தொடங்கியுள்ளன. அதேபோன்று வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை கூட தோன்றுவதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன. இப்படியாக எங்களுடைய மக்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளைக் கூட நிறைவு செய்ய முடியாத அளவிற்கு இருக்கின்றனர்.

தமிழீழ சுகாதார சேவையை எடுத்துக்கொண்டால் சேவையாளர்களுக்கு "வருமுன் காப்போம் என்ற கோட்பாடு" இருக்கிறது. உண்மையில் எங்களுடைய மக்களுக்கு இருக்கின்ற நோய்கள், வருத்தங்கள், காயங்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துகள் போதிய அளவு எங்களிடம் இல்லை.

ஆகையினால், இந்த வருத்தங்கள், தொற்று நோய்கள் வராமல் தடுப்பதற்கு கருத்துரைகள், கருத்துக்களை மக்கள் மத்தியில் போய் அவர்கள் நாளாந்தம் வீடு வீடாகச் சென்று, மக்களுடைய ஒவ்வொரு குடியிருப்பாக அவர்களுக்கு சுகாதாரம் தொடர்பான கல்வி ஊட்டல்களை தீவிரமாக தமிழீழ சுகாதார சேவையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக ஏராளமான போராளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல காயப்பட்ட போராளிகள், தமது உறுப்புகளை இழந்த போராளிகளுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டு அந்த போராளிகளோடு சுகாதார தொண்டர்களும் என எல்லாரும் ஒன்றிணைந்து ஒரே சக்தியாக மக்கள் வாழிவிடங்களுக்குச் சென்று நோய்களை எவ்வாறு தடுப்பது, எவ்வாறு சுகாதாரத்தைப் பேணுவது, எவ்வாறு தொற்று நோய்கள் வராமல் தடுப்பது என்பது தொடர்பான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். இது பெரிய அளவில் எங்களுக்குப் பயன் அளிக்கின்றது. தொற்று நோய்களில் இருந்து மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவையும் ஆற்றலையும் பெற்றுச் கொள்கிறார்கள்.

அங்கு மக்கள் பாதுகாப்பு வலயம் உருவாக்கி இருக்கின்றோமென சிறிலங்கா அரசாங்கம் கூறுகின்றது. அதில் மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்றும் கூறுகின்றார்கள். ஆனால் உண்மையில் நிலவரம் என்ன?
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம், யுனிசெஃப், யுஎன்எச்சீஆர் போன்ற அமைப்புக்கள் சுதந்திரபுரத்தில் இருந்தபோது அந்த இடத்தை பாதுகாப்பு வலயம் என்று பிரகடனப்படுத்தி மறுநாளே அந்த இடத்திற்குச் சென்று ஐசிஆர்சி, யுஎன்எச்சீஆர் போன்ற அமைப்புக்கள் வேலை செய்த இடங்களுக்கு ஆட்லறி எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டு அங்குள்ள பணியாளர்களைக் காயப்படுத்தியதுதான் கடந்த கால வரலாறு.

அவ்வாறுதான் தற்போதும் பாதுகாப்பு வலயம் என்று பிரகடனப்படுத்திய, அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக எறிகணை வீச்சுகள் இரவும் - பகலும் இடம்பெற்று வருகின்றன.

மக்கள் கூடாரங்களில் படுத்து, நடு இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்ற போது திடீரென்று நான்கு புறத்தில் இருந்தும் பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றதன. அப்போது குடியிருப்புக்களில் இருந்து எழும் மரண ஓலங்களைக் கேட்டால் மக்கள் முகம் கொடுத்து வருகின்ற மனித அவலத்தின் உச்சத்தை அங்கே கேட்கின்ற குரல்களின் ஊடாக கேட்கக்கூடியதாய் இருக்கும்.

இந்த மக்களுடைய ஓலங்கள், நாளாந்தம் நிமிடத்திற்கு நிமிடம் அவர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் எந்த அளவில் அந்த மக்களிடையே உளரீதியான பாதிப்பினை குறிப்பாக குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது?
உண்மையில் மக்கள் நாளாந்தம் இவ்வாறான சம்பவங்களுக்கு முகம் கொடுத்து உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும், நீண்டகால போராட்ட வாழ்வில் எம் மக்கள் இதுவரை அடைந்த இழப்புக்களை முன்வைத்து இசைவாக்கம் அடைந்திருக்கும் காரணத்தால் முதியோர் இளையோர் வேறுபாடின்றி இனி எந்த துயர் வந்தாலும் தனிநாடு அமைத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் எம்மோடு நிற்கின்றனர். நீங்கள் இங்கு வந்து கேட்டால் தெரியும். வயது போன அம்மாவைப் பார்த்துக்கேட்டால் கூட சொல்லுவார்கள்; இவ்வளவு தூரம் நாம் இழந்து விட்டோம் இனி எதனை இழந்தாவது ஒரே அடியாக அடித்து எதிரியை வெளியேற்றி நாட்டை மீட்க வேண்டும் என்று கூறும் அளவிற்கு மக்களுடைய மனநிலை தற்போது இருக்கின்றது.

அப்படியானால் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்த முயற்சிகள் ஒரு எதிர்வினையினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்கிறீர்களா?

மக்களுடைய மனங்களில் எவராலும் மாற்ற முடியாத வைராக்கிய உணர்வொன்று தோன்றியிருப்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. தற்போது இடம்பெறுகின்ற சண்டைகள் கூட அதை பிரதிபலிக்கின்றன. புதிதாக இணைந்துள்ள போராளிகள் கூட மிக ஓர்மத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த காலத்தில் சில அமைச்சர்கள் "The Matter Few Days" என்று கூறியிருந்தனர். ஆனால் நேற்றைய நாள் கோத்தபாய ராஜபக்ச இந்த போரை முடிக்கும் கால எல்லையை கூற முடியாது என்று கூறியிருந்தார்.

ஏன் என்றால் எங்களின் எதிர்த்தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருக்கின்றது, இராணுவம் பாரிய இழப்புகளையும் அழிவுகளையும் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றது. இராணுவத்திற்கு சில நெருக்கடிகள் வந்து விட்டது என இராணுவத்திடம் இருந்தே சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மும்முனைகளில் அனைத்து முனைகளிலும் இறுக்கமான ஒரு நிலையை சிறிலங்கா படையினர் மேற்கொண்டிருக்கின்றனர். இன்னும் குறுகிய காலத்தில் முற்றாக அனைத்தையும் கைப்பற்றி விடுவோம் என்கின்றனர். உண்மையில் அங்குள்ள களநிலவரம் என்ன?

களநிலவரம் தொடர்பான தகவல்களைத் தெரியப்படுத்தும் பாரிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. மும்முனைகளிலும் வரும் இராணுவம், எங்களின் சின்னப் பிரதேசத்தில் சூழ்ந்திருக்கின்ற இந்த இராணுவம் மட்டும்தான் சிறிலங்கா இராணுவத்தில் உள்ள சண்டையிடும் ஆற்றல் படைத்த படையணி ஆகும்.

இந்தப் படையணிகள் அண்மைய காலமாக பெரும் பெரும் இழப்புகளைச் சந்தித்த வண்ணம் இருக்கின்றனர். எமக்கு கிடைக்கும் தகவல்படி, முன்னணியில் முன்னேறிக் கொண்டிருந்த படையணிகள் தம்மால் இனி முன்னேற முடியாது என உயர் கட்டளை அதிகாரிகளுடன் முரண்படும் அளவிற்கு எங்களுடைய தாக்குதல்களும் இராணுவத்தின் இழப்புகளும் அதிகமாகி உள்ளன.

அண்மைய இராணுவத்தின் அதிகாரபூர்வ தகவல்களின்படி புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற 3 நாட்கள் சமரில் 450-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் 600-க்கும் அதிகமான இராணுவத்தினர் காயப்பட்டும் களமுனையில் இருந்து ஒட்டுமொத்தமாக 1,000 இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அது மட்டுமல்ல இதனுடைய பிரதிபலிப்பு மாங்குளம், கனகராயன்குளம் போன்ற இடங்களில் சாதாரண ஊர்க்காவற் படையினரே நிறுத்தியுள்ளனர்.

இராணுவத்தில் இருக்கின்ற சண்டையிடக்கூடிய படையினர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சண்டையின் மூலம் முற்றாக அழியக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்து வருவதுதான் உண்மையான கள யதார்த்தம். இந்த இடத்தில் நாங்கள் தீவிரமாக, ஓர்மமாக நின்று இச்சண்டையை வெல்வோமானால் எங்கள் போராட்டத்தின் அதியுச்ச விடுதலை விரைவாக கிடைக்கும். இதில் வருகின்ற இராணுவத்தை நாங்கள் வென்றோமானால் மீதியுள்ள பிரதேசத்தில் எங்களுடைய மக்கள் கால்நடையாக நடந்து சென்றே ஆயுதம் இல்லாமலேயே அங்குள்ள இராணுவத்தினரை பிடித்து அடித்து கலைக்கின்ற அளவிற்குத்தான் மற்ற இராணுவத்தினர் இருக்கின்றனர்.

தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக வைத்துள்ளனரா?

உண்மையில் நாங்கள்தான் மக்களுக்கு கவசங்களாக இருக்கின்றோம். இது சிறிலங்காவாலும் சிறிலங்காவிற்கு ஆதரவாக செயற்படுகின்ற நாடுகள் மற்றும் ஊடகங்களாலும் மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரச்சாரமாகும். உண்மையில் மக்களுக்கான கவசங்களாக நின்று, விடுதலையை விரைவாக வென்றெடுக்க வேண்டும் என்ற ஓர்மத்தினால் தொடர்ந்து போராடுகின்றோம்.

ஓர் இனம், அதன் மக்கள் தாம் ஆடியோடி மகிழ்வாக வாழ்ந்த மண்ணை விட்டு அவர்கள் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட வேண்டும் என்று வெளியில் இருப்பவர்கள் அது அனைத்துலக நாடாகவும் இருக்கலாம் சிறிலங்காவாகவும் இருக்கலாம் கூறி வருகின்றனர். அது சரியா?
உண்மையில் இது ஒரு அநீதியான செயலாகும். இது எங்களின் மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளாத, மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை விளங்கிக் கொள்ளாதவர்கள்தான், இவ்வாறான செயற்பாடுகளையும், இவ்வாறான கூற்றுக்களையும் கூறி வருகின்றனர். இது ஒரு பிழையான கணிப்பீடாகும். பிழையான செயலாகும்.

சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் இந்த தாக்குதல்களை பார்க்கும் பொழுது எந்த விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்கள் போரியல் குற்றத்தை இழைக்கின்றனர் என்று பார்க்கிறார்கள்?

சிறிலங்கா போரியல் குற்றங்கள் புரிகின்றது என்பதற்கு ஏராளமான சாட்சிகளும் ஆதாரங்கள் மற்றும் சான்றுகளும் நிறைய இருக்கின்றன. உதாரணத்திற்குப் பாதுகாப்பு வலயம் என்று மக்களை வரவழைத்து, லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்ற இடத்தின் மீது செறிவான பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள், வான்குண்டு வீச்சு தாக்குதல்கள் என நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, ஆயிரக்கணக்கான மக்களைக் காயப்படுத்திக் கொண்டிருக்கும் போது, அதற்கு சான்றாக சாட்சியாக இங்கே ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் இருந்திருக்கின்றனர்.

அதேபோன்று உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை இராணுவம் போடும் போதும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் அதனை பார்த்திருக்கின்றனர். பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகவே போர்க்குற்றம் புரிந்துள்ள சிறிலங்கா அரசிற்கு எதிராக உலக நாடுகள் நீதியான ஒரு விசாரணையை மேற்கொள்ள வரும்போது அதற்கு நடுநிலையான சாட்சிகளும் சான்றுகளும் எங்களிடம் நிறையவே இருக்கின்றன.

அனைத்துலகத்தில் தற்போது ஒரு நல்ல மாற்றம் தென்படுகின்றது. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?

முக்கிய காரணம், எங்களுடைய போராட்டம் தர்மத்தையும் நீதியையும் அடிப்படையாகக் கொண்டது. எங்கள் போராட்டம் மக்கள் போராட்டம். மக்கள் விடுதலைப் போராட்டம். மக்களுடைய அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக நீண்ட காலம் நடக்கும் போராட்டம் என்பதனால், உலகம் எங்களின் பக்கம் எங்களின் விடுதலையின் பக்கம் திருப்புவதங்கான அரசியல் சூழல் உருவாகி வருகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் சில முன்னெடுப்புக்கள் நிகழ்த்தும் போது, சில நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு பக்க பலமாக இருந்து அப்படியான செயற்பாடுகளை முடக்கும் வண்ணம் நடந்து கொள்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இப்படியான அனைத்துலக நாடுகளுக்கு என்ன கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றனர்?

ஐக்கிய நாடுகள் சபையில் எங்களுடைய பிரச்சினையை அங்கு கலந்துரையாடலுக்கு எடுப்பதற்காக அனைத்துலக நாடுகள் முன்வருவது இதுதான் முதல் தடவை. எங்களுக்கு எதிரான நாடுகள் வந்தாலும் கூட அமெரிக்கா போன்ற நாடுகளின் கொள்கைகளில் மாற்றம் உள்ளதாக அவதானிக்க முடிகின்றது.

ஏனென்றால், ஐ.நா.விற்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதியே பாதுகாப்பு சபையில் விவாதிக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இன்றைக்கு இரண்டு பிரிவாக பிளவுபட்டு நிற்கின்றது. எங்களுடைய போராட்டத்தில் இது முதற்தடவை. ஐக்கிய நாடுகள் சபையில் எங்களின் பிரச்சினைகள் குறித்த ஒரு விவாதம் அங்கு உருவாகியிருப்பதே எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று சொல்வேன்.

அனைத்துலக நாடுகளைப் பொறுத்த மட்டில் அவர்கள் தமக்கான அரசியல் இராணுவ அல்லது பொருளாதார நன்மையை வைத்துதான் முடிவு எடுப்பார்கள். ஆனால் இப்பொழுது வன்னிப்பெரு நிலப்பரப்பு அல்லது எமது தாயக மண்ணைப் பொறுத்த மட்டில் அவர்கள் எப்படியான, எமக்குச் சாதகமான முடிவுகளை எடுப்பார்கள் என்று கூற முடியுமா?

எங்களுடைய மக்கள் முற்று முழுதாக தங்களுடைய அரசியல் போராட்டத்தை, அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு எந்தவித தியாகத்தையும் செய்வதற்கு ஒட்டு மொத்தமாக எல்லா மக்களும் ஒருமித்த ஒரே குரலாக ஒரே உணர்வாக, ஒரே இயக்கமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கின்றார்கள்.

அது மட்டுமல்ல இந்த மக்களினுடைய அரசியல் அதாவது அரசியல் அபிலாசையை நிறைவு செய்யக்கூடிய ஒரு தீர்வின் மூலமே இந்த பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வர முடியும் என்ற நிலைப்பாட்டை எடுக்கும் அளவிற்கு உங்களுடைய மக்களுடைய எழுச்சி இன்று எழுந்துள்ளது. அதுமட்டுமல்ல உலகம் முழுவதும் முதல் தடவையாக புலம்பெயர்ந்திருக்கின்ற மக்கள், தமிழ் நாட்டில் இருக்கின்ற ஏழு கோடி தமிழ் மக்கள் எல்லாருமே என முழு உலகத் தமிழினமே இன்று ஒருமித்த குரலாக, ஒரே சக்தியாக, ஒரே உணர்வாக எழுச்சிக் கொண்டிருப்பது இதுதான் வரலாற்றில் முதல் தடவை. இதை எல்லா நாடுகளும் உணரத் தொடங்கியிருக்கின்றன. இந்த சக்திக்கு முன்னால் எங்களுடைய அரசியல் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்.

தமிழகத்தில் தற்போது அங்குள்ள மக்கள் உணர்ச்சி உச்சத்தில் சென்று கொண்டிருக்கின்றன. அங்கு பல தீக்குளிப்புகளும் இடம்பெறுகின்றன. இதனை நீங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
அவர்கள் எங்களுடைய இரத்தத்தின் இரத்தமாக, எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளாக இருந்து வருபவர்கள். இங்கே எங்களுக்கு ஏதாவது இன்னல்கள் ஏற்பட்டால் அவர்களால் அதை பொறுக்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி தமிழ் மக்களும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று ஒரே குரலாக, ஒருமித்த குரலாக இருக்கின்றனர்.

இங்கே நடக்கின்ற கொடுமைகள், இங்கே நடக்கின்ற அரச பயங்கரவாத செயல்களை அந்த மக்களால் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில்தான் அவர்களுடைய உணர்வுகள் அதியுச்ச நிலையை அடையும்போது அவ்வாறான தீக்குளிப்பு போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றன.


இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக இந்தியா எந்தவிதமான கொள்கைகளை எடுக்க வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்பார்க்கின்றனர்?
இந்தியாவினுடைய வரலாற்று ரீதியான உண்மையான நண்பர்கள் யார் என்பதை இந்தியா உணர்ந்து கொள்ள இந்த நேரத்திலாவது முன்வர வேண்டும். வரலாற்று ரீதியாக தமிழ் மக்கள்தான் இந்தியாவினுடைய நல்ல நண்பர்களாக இருந்து வந்திருக்கின்றனர். கடந்த காலத்தில் பல எடுத்துக்காட்டுகளை இதற்கு நாங்கள் எடுத்துக் காட்டலாம்.

இந்தியாவிற்குச் சோதனைகள் ஏற்பட்டிருக்கின்ற போது எல்லாம் இந்தியாவின் பக்கம் நின்று தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளம் குரல் கொடுத்திருக்கின்றார்கள். இந்தியா இதை உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றுதான் நான் நினைக்கின்றேன்.

அப்படியானால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் வழங்கி வரும் இராணுவ ரீதியான உதவிகள் - அண்மையில் புல்மோட்டையில் இந்திய மருத்துவக் குழுவினர் வந்து இறங்கியிருக்கின்றனர். இது போன்ற நடவடிக்கைகள் தமிழ் மக்களின் மத்தியில் இந்தியாவை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற ஒரு நிலையில்தான் நடவடிக்கைகள் நடக்கின்றன. இதனை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும்?
நாம் தொடர்ச்சியாக இவ்வாறான உதவிகளைச் செய்ய வேண்டாம் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றோம். இது மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழ் மக்களும் இதைத்தான் வலியுறுத்துகின்றார்கள். அது மட்டுமல்ல இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகள், அகில இந்திய அரசியல் கட்சிகள் கூட தற்போது வலியுறுத்த தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்ல தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்குள்ளே எங்களுக்கு ஆதரவான சக்திகள் தோன்றியுள்ளன.

அண்மையில் கூட உங்களுக்குத் தெரியும். தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியில் தமிழருவி மணியன் தமது பதவியில் இருந்து விலகி தமது உணர்வைப் பிரதிபலித்தார். அதேபோல இந்திய மத்திய அரசுக்குள்ளும் இவ்வாறு எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கூடிய சில செயற்பாடுகளை அங்கேயுள்ள அரசியல் கட்சிகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

வன்னியில் இருந்து பெருமளவிலான மக்கள் தமது கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்து விட்டார்கள் என்று தீவிரமான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது?
அது உண்மையில் ஒரு தீவிரமான பொய்ப்பிரச்சாரமாகும். ஒரு சில மக்கள் இராணுவ நடவடிக்கையின் போது அகப்பட்டுக்கொண்ட காரணத்தினால் அங்கே சென்றிருக்கிறார்கள். அதனை வைத்துக்கொண்டும் மற்றும் காயப்பட்ட மக்கள் கப்பல் மூலம் அங்கே சென்று அவர்களுடைய சிகிச்கை முடிந்தப்பின் அங்கேயுள்ள திறந்த வெளி சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டு வருவதும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவ்வாறான மக்களை வைத்துக்கொண்டு சிறிலங்கா அரசு ஒரு பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகின்றது. இங்கேயுள்ள அநேகமாக எல்லோருக்கும் இது தெரியும்.

தென்பகுதியில் தற்போது ஊடகங்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் ஒரு பாரிய அழுத்தத்தை பிரயோகித்து வருகின்றது. தாம் எதை எதிர்பார்க்கின்றதோ, தாம் மக்களுக்கு எதைச் சொல்ல விரும்புகிறதோ அந்த செய்திகள் மட்டுமே மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றது. இதற்கு எதிர்மறையாக தாயக மண்ணில் ஊடகங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களுக்கான சுதந்திரத்தைப் பேணி அவர்களை இன்று ஊக்கப்படுத்துகிறார்கள். ஏன் குறிப்பாக இந்த கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன் என்றால் இன்று உலகத்திலேயே இத்தனை இடர்களுக்கு மத்தியிலும் ஓயாமல் ஒலிக்கும் ஒரே ஒரு வானொலி புலிகளின் குரல் வானொலி என்பதால் இந்த கேள்வியைக் குறிப்பாக முன்வைக்கின்றேன்.

இங்கே எமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் சுதந்திரம் முற்றும் முழுதாக இருக்கின்றது. புலிகளின் குரல் வானொலி, ஈழநாதம் போன்ற பத்திரிகை வெளிவருகின்றன.

புலிகளின் குரல் வானொலி ஊடாக மக்கள் சகல செய்திகளையும் அறிந்து வருகின்றார்கள். சகல செய்திகளும் எவ்வித மாற்றமும் இல்லாமல் உண்மையான செய்திகளே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இங்கேயுள்ள மக்கள் எல்லாரும் தொடர்ச்சியாக புலிகளின் குரலைக் கேட்டு வருகின்றனர். புலம்பெயர் மக்கள் கேட்டு வருகின்றனர். அதேபோன்று இங்கே வெளியாகின்ற ஈழநாதம் பத்திரிகையும் தொடர்ச்சியாக படித்து வாசித்து அறிந்து வருகின்றனர். நாங்கள் ஊடகங்களில் தலையிடுவதில்லை. ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குகின்றன.

ஊடகச் சுதந்திரம் முற்றும் முழுதாகப் பேணப்படுகிறது. உண்மையான செய்திகள் தான் எங்களது ஊடகங்கள் மூலம் மக்களுக்குப் போய் சேர்கின்றன. அதுமட்டுமல்ல அனைத்துலக ஊடகவியலாளர்களுக்குக் கூட நாம் அழைப்புக்கள் விடுத்திருக்கின்றோம். எங்களுடைய பிரதேசங்களில் வந்து உண்மை நிலையை அறிந்து கொள்ளுமாறு இங்கேயுள்ள யுத்த சூழல், மக்களுடைய மனநிலை எல்லாம் அறிந்து கொள்ளுமாறு நாங்கள் அனைத்துலக பத்திரிகையாளர்களுக்குகூட அழைப்பு விடுத்திருக்கின்றோம்.

அதேபோன்று சிங்கள பிரதேசத்தில் உள்ள சில பத்திரிகையாளர்கள் கூட எங்களுடைய உண்மையான செய்திகளை வெளியிட்டு, அங்கே பத்திரிகை சுதந்திரம் மறுக்கப்பட்டு அவர்கள் பழிவாங்கப்படுகின்ற சம்பவங்கள் நிறைய இடம்பெற்றதையும் இந்த வேலையில் குறிப்பிட விரும்புகின்றேன்.

பிரித்தானியாவில் இருந்து புலம்பெயர் மக்களால் 'வணங்கா மண்' என்ற கப்பல் தாயக மக்களுக்கான உதவிப் பொருட்களோடு புறப்படுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை தாயக மக்கள் எவ்வாறு எதிர்பார்த்து இருக்கின்றனர்?
தாயக மக்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றார்கள். ஏனென்றால் எங்களுடைய மக்கள் புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களுடைய இந்த உறவுகள் தங்களுடைய முயற்சியினால், தங்களுடைய மக்களுடைய பசியை, பட்டினியைப் போக்குவதற்கான எல்லா வீடுகளுக்கும் சென்று உணவுப் பொருட்களைச் சேகரித்து ஒரு கப்பல் மூலம் இங்கே அனுப்பும் போது எங்களுடைய மக்கள் மிக ஆவலோடு எதிர்ப்பார்த்திருக்கின்றனர்.

ஆனால் சிங்கள அரசு அண்மையயில் சில அறிக்கைகள் விட்டிருக்கின்றது. அந்தக் கப்பல் வந்தால் தாங்கள் இங்கே நடவடிக்கை எடுப்போம். அந்தக் கப்பலைத் தாக்கிடுவோம் என்று கூட கூறியிருக்கிறார்கள். இவ்வாறு ஒரு மனிதாபிமான செயலுக்குக் கூட இங்கே இடமில்லாத அளவிற்கு சிங்கள அரசினுடைய அராஜகம் தலைத்தூக்கி இருக்கின்றது. இந்த சூழ்நிலையிலாவது உலக நாடுகள் சிறிலங்கா அரசினுடைய இவ்வாறான பயங்கரவாத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்வர வேண்டுமென நாம் பெரிய ஆவலோடு எதிர்ப்பார்க்கின்றோம்.

இன்று புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து எழுச்சி நடவடிக்கைகளிலும் தமிழீழ தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கின்றது. இது எவ்வளவு தூரம் சிறிலங்கா அரசாங்கத்தை விசனத்திற்குள்ளாக்குகின்றது?
முழு உலகத் தமிழினமும் ஒரு குடைக்குள் ஒன்று சேர்ந்து நிற்கின்றது என்பது சிறிலங்கா அரசிற்கு ஒன்று நன்றாகத் தெரிகின்றது. உலகத் தமிழினத்தின் சின்னமாக இந்தப் புலிக்கொடி உலக நாடுகளில் குறிப்பாக உலகத்தில் உள்ள முக்கியமான எல்லா தலைநகரங்களிலும் இந்தக் கொடி பறக்கின்றதைப் பார்க்கும் போது ஒரு அடக்கமுறையாளனுக்கு எங்கள் மீது இனவாதத்திற்குரிய அதியுச்ச உணர்வு கொழுந்துவிட்டு எரிவதை அவர்களுடைய பிரதிபலிப்புகள் மூலம் அறியக்கூடியதாய் இருக்கின்றது.

அனைத்துலக நாடுகளில் எழுச்சி நிகழ்வுகளை அங்குள்ள மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது ஒவ்வொரு வடிவத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இந்த அனைத்து வடிவங்களின் ஊடாக அனைத்துலக நாடுகளுக்கும் ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் மக்கள் சொல்ல வேண்டிய முக்கிய விடயம் என்ன?
எல்லா இடங்களிலும் எல்லா நாடுகளிலும் புலம்பெயர்ந்திருக்கின்ற எங்கள் மக்கள் முழு உலகமே உணரச் செய்யும் அளவிற்கு எழுச்சி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அது இன்றைக்கு எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை, ஏனைய நாடுகள் அங்கீகரிக்கும் அளவிற்கு, ஏனைய நாடுகள் எங்கள் போராட்டம் தொடர்பாக போராட்டத்தின் நிலைத்தன்மை தொடர்பாக உணரச் செய்யும் அளவிற்கு அந்த மக்களுடைய எழுச்சி எல்லா இடமும் காணப்படுகிறது.

இதில் குறிப்பாக தற்போது ஐரோப்பிய நாடுகளாக இருக்கட்டும், கனடாவாக இருக்கட்டும் கடந்த வாரம் சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் மெல்பேன், வருகின்ற சனிக்கிழமை சிட்னி. இதில் குறிப்பாக இளையோர் அந்த மக்களுக்கு நமது விடயங்களை எடுத்துச் செல்லும் விதமாக வேறு வேறு பல வடிவங்களில் இந்த போராட்டங்களை எடுத்துச் செல்ல தம்மாலான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதனை தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு பார்க்கின்றார்கள்?
நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இதனைப் பார்க்கின்றோம். எங்களுடைய மகிழ்ச்சி மட்டுமல்ல; எங்களுடைய மக்கள்; எங்களுடைய இயக்கம்; எங்களுடைய தலைவர்; எங்களுடைய தளபதிகள் எல்லாருக்கும் எழுச்சியாக இருக்கின்றது.

எங்களுடைய மக்கள் புலம்பெயர் நாடுகளில் உள்ள இளைய தலைமுறைகள் மிகவும் எழுச்சியாக கடந்த காலங்களை விட தற்போது இன்னும் மிக மிக எழுச்சியாக எல்லா நாடுகளிலும் வித்தியாசமான எழுச்சி போராட்டங்களை நடத்துவதன் ஊடாக முழு உலகத்தையும் எங்களுடைய போராட்டத்தை அங்கீகரிக்கின்ற அளவிற்கு மக்களுடைய எழுச்சி என்றுதான் நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம்.

ஊடகங்களின் ஊடாக மக்களின் எழுச்சியினை நாங்கள் அறியக்கூடியதாய் இருக்கின்றது. எங்களுடைய தேசியத் தலைவர் எப்போதும் புலம்பெயர் இளைய தலைமுறை தொடர்பாக பெரிய நம்பிக்கையோடும் பெரிய எதிர்ப்பார்ப்போடும் இருக்கின்றார்.

இது எந்த வகையில் தாயகத்தில் உள்ள மக்களையும் போராளிகளையும் எழுச்சி கொள்ள வைக்கின்றது?
மக்களுடைய ஒவ்வொரு போராட்டமும் அங்கே உள்ள நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களை, கோட்பாட்டாளர்களை ஈர்க்கக்கூடிய முறையில் அவர்களின் போராட்டம் எழுச்சித் தன்மை உடையதை நாங்கள் உணரக்கூடியதாய் இருக்கின்றது. அந்த வகையில் எமது ஒட்டுமொத்த மக்களும் புலம்பெயர் இளைய தலைமுறையினர் தொடர்பாக பெரிய நம்பிக்கையோடு நாங்கள் இருக்கின்றோம்.

நாங்கள் இப்படியான போராட்டங்களைச் செய்யும்போது, எமக்கான தீர்வு, தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன என்பதை அனைத்துலகத்திற்கு நாங்கள் எவ்வாறு முன்வைக்க வேண்டும்?
எங்களுடைய போராட்டம் எங்களுடைய தீர்வு என்பது முற்றும் முழுதான சுயநிர்ணய உரிமையினை அடிப்படையாகக் கொண்டது. நாம் ஏற்கனவே போராட்டத்தில் கோட்பாடு, போராட்டத்தில் இலக்கு என்பதை எங்களுடைய மக்கள் 77 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஊடாக முழு உலகத்திற்கும் சொல்லியிருக்கின்றார்கள். அதாவது தமிழீழ தனியரசு அமைப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இதுதான் எங்களின் தீர்வு. இந்தத் தீர்வின் ஊடாகத்தான் எங்களுடைய மக்கள் நிம்மதியான, அமைதியான, சுதந்திரமான வாழ்வை வாழ முடியும்.

இதிலே புலம்பெயர் ஊடகங்கள் ஆற்ற வேண்டிய பணி ஒரு பாரிய பணி. எமக்குள் சில கருத்து முரண்பாடுகள் ஊடகங்களுக்குள் இருந்தாலும் நாங்கள் அந்த சந்தர்ப்பத்தில் தாயக மக்களின் அவலங்கள் தொடர்பாக எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் அதனுடைய நியாயத்தன்மை தொடர்பாகவும் நாங்கள் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் எந்த மாதிரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எல்லா ஊடகங்களும் இன்று சிங்கள அரச பயங்கரவாதத்தினுடைய செயற்பாடுகளை அந்தந்த நாடுகளில் உள்ள அரசுகள் உணரும் வண்ணம் செய்து வருகின்றனர். தொடர்ச்சியாக செய்ய வேண்டும்; அது மட்டுமல்ல எங்களுடைய போராட்டம் கடந்த காலத்தில் எவ்வாறு தோற்றம் கண்டது; கடந்த காலத்தில் எவ்வாறான போராட்டங்களில் இருந்த ஆயுதப் போராட்டமாக இன்று நாம் வளர்ச்சி பெற்றது எப்படி என்பதை எல்லாம் அடுத்து சொல்லி வருகின்றீர்கள். தொடர்ந்து இவ்வாறான பணிகளைச் செய்ய வேண்டும்.

ஊடகங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்பது சின்ன விடயம். அதை நாம் பெரிதாக பார்க்கக் கூடாது. எங்கள் மக்களின் அரசியல் இலட்சியம், போராட்டம், எங்களுடைய மக்கள் இதற்காக இவ்வளவு பெரிய தியாகங்களை மேற்கொள்கின்றார்கள் என்பதை நீங்கள் உலகத்திற்குத் தொடர்ச்சியான வலியுறுத்தி வர வேண்டும் என்பதைத் தான் நாங்கள் பெரிய ஆவலோடு எதிர்ப்பார்க்கின்றோம்.

இன்று தாயகத்தில் மக்கள் கொடுக்கும் அந்த அதி உச்ச விலை உங்களைத் தனிப்பட்ட ரீதியில் எந்த அளவில் பாதித்திருக்கின்றது?
அதாவது எங்கள் மக்களின் விடுதலைப் போராட்டம் என்பது மிக விரைவாக வெற்றி கொள்ள வேண்டும் என்பதான உணர்வைத்தான் எங்களுக்குத் தருகின்றது.

தந்தை செல்வநாயகம் தந்த கொள்கை


மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இலங்கைத் தமிழரின் அரசியல் வாழ்வில் முப்பது ஆண்டுகள் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவராகக் கோலோச்சிய திரு. சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மறைந்து முப்பத்திரண்டு ஆண்டுகளாகின்றன. 1977 ஏப்ரல் 26 இல் மறைந்த அவர், 1947 இல் இலங்கைத் தமிழரின் அரசியல் வாழ்வில் கால்வைத்தார்.

கொழும்பில் புகழ்பெற்ற வழக்கறிஞர்களுள் ஒருவர், பிரிட்டிஷ் இராணியின் வழக்கறிஞர் எனப் பட்டம் பெற்றவர், பொருளாதார வசதிமிக்கவர், இவரைப் போன்றவர்கள் தமிழர் அரசியலில் ஈடுபட வேண்டும் என அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலம் விரும்பி அழைத்தார். காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில் 1947 இல் பாராளுமன்ற உறுப்பினராகத் திரு. செல்வநாயகம் தேர்வாகி அரசியலில் நுழைந்தார்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்குப் பின், ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது. அரசில் பங்குபற்றியது. பொன்னம்பலம் தொழில் மீன்வள அமைச்சரானார்.

1948 மார்கழியில் இலங்கையின் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தை அரசு, பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பொழுது திரு. செல்வநாயகம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து பிரிந்தார். குடியுரிமையைப் பறிக்கும் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தார். அவரும் திரு. வன்னியசிங்கமும் திரு. நாகநாதனும் பிறருமாக, 1948 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவினர்.

1949 மார்கழி 19 ஆம் நாள், கொழும்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில் திரு. செல்வநாயகம் ஆற்றிய தலைமை உரையில் பின்வருமாறு கூறினார்.

9 ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் வடக்கில் உள்ள தமிழரின் நிலப்பகுதிகளில் தமிழரின் ஆட்சி மீண்டும் தொடங்கியது. தீவின் தெற்கேயுள்ள சிங்கள நிலப்பகுதிகளைச் சிங்களவர் ஆட்சி செய்தனர். சில சமயங்களில் ஒன்றிற்கு மேலான சிங்கள அரசுகள் தென்னிலங்கையில் இருந்தன.

காலம் மாறினாலும் சிங்கள அரசும் தமிழ் அரசும் தனித்தனியாக நெடுங்காலம் தொடர்ந்தன. ஐரோப்பியர்கள் வந்ததும் முதலில் தமிழரின் அரசைக் குலைத்தார்கள். பின்னர் சிங்கள அரசுகளைக் குலைத்தார்கள். பல நூற்றாண்டுகளாக இருந்த சிங்கள தமிழ் நாடுகளைப் பிரித்தானியர் இணைத்தனர். ஆட்சித் தேவைக்காக மட்டும் இணைத்தனர். இந்த இரு நாடுகளும் இயற்கையாக ஒன்றிணையவில்லை.

பெரிதும் சிறிதுமாக உள்ள மொழிவழி இனங்களிடையே ஏற்படும் முரண்பாடுகள் போருக்குக் காரணமாக இருந்துள்ளன. இப்போர்களில் வல்லரசு நாடுகளும் சேர்ந்ததும் உண்டு.

மொழிவழி இனங்களிடையே உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு இரு வழிகள் உள.

ஒவ்வொரு மொழிவழி இனத்துக்குமாக இறைமையுடைய ஒவ்வொரு நாட்டை அமைக்கப் பரந்த நிலத்தைத் துண்டாடுதல் ஒரு வழி ஒவ்வொரு இனத்துக்குமாகத் தன்னாட்சியுடைய மாநிலங்களை அமைத்து, மாநிலங்கள் இணைந்து நடுவண் அரசை அமைக்கிற கூட்டாட்சி அரசை உடைய ஒரே நாட்டை அமைத்தல் மற்றொரு எளிதான வழி இத்தகைய வழிகளுக்கமையச் செயற்படுவதாயின், மொழிவழி இனங்கள் தத்தமக்கு எனத் தனியான நிலப்பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். தமிழராகிய நாங்கள் கேட்கிற தீர்வு இதுதான். தன்னாட்சி உடைய தமிழ் மாநிலம் தன்னாட்சி உடைய சிங்கள மாநிலம் இரண்டு மாநிலங்கட்கும் பொதுவான கூட்டாட்சி அரசியலமைப்பு.

"சிறியதான தமிழ் நாட்டினம் அழிந்து போகாமலும், பெரிதான சிங்கள நாட்டினத்தால் விழுங்கப்படாமலும் இருப்பதற்குரிய ஆகக் குறைந்த ஏற்பாடு கூட்டாட்சி அரசியலமைப்புத் தீர்வு இதுதான்'

1948 இலிருந்து 1976 வரையாக அவர் சார்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியினரும் இலங்கைத் தீவில் இரு இனங்களும் அமைதியாக வாழக் கூட்டாட்சி முறையில் அரசு ஏற்படுத்தப் பல வழிகளில் முயன்றார்கள். 1949 இலிருந்து 1976 வரை திரு. செல்வநாயகமும், அவர் சார்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியினரும் இலங்கைத் தீவில் இரு இனங்களும் அமைதியாக வாழக் கூட்டாட்சி முறையில் அரசு ஏற்படுத்தப் பல வழிகளில் முயன்றார்கள்.

1958 இன் பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம், 1965 இன் டட்லி செல்வநாயகம் ஒப்பந்தம் என்பன, சிங்களவரும் தமிழரும் ஒரே ஆட்சியின் கீழ், கூட்டாட்சி அரசு அமைப்பதை நோக்கிச் செல்லும் படிக்கட்டுக்களே. எனினும், இந்த ஒப்பந்தங்களைச் சிங்கள அரசுகள் ஒரு தலைப்பட்சமாகக் கைவிட்டன.

1947 இல் இலங்கைக்கு ஆங்கிலேயர் வழங்கிய அரசியலமைப்பை, 1972 இல் சிங்களவர் தூக்கியெறிந்தனர். 1971 இல் புதிய அரசியலமைப்பை எழுதிய பொழுது, திரு. செல்வநாயகம் தலைமையில் அரசியல் நிர்ணய சபைக்குச் சென்ற தமிழர் பிரதிநிதிகள், அனைத்துக் கட்சித் தமிழர் சார்பில் ஆகக் குறைந்த கோரிக்கைத் தீர்மானங்களை முன்வைத்தனர். இத்தீர்மானங்களைச் சிங்களவர் ஏற்றுக் கொள்ளவில்லை. வாக்கெடுப்பில் தோற்கடித்தனர். இதைத் தொடர்ந்து திரு. செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சியினர் அரசியல் நிர்ணய சபையில் இருந்து வெளியேறினர். அரசியல் நிர்ணய சபையைப் புறக்கணித்தனர்.

1972 மே 22 ஆம் நாள் சிங்களவர் சேர்ந்து இயற்றிய புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. அந்த அரசியலமைப்பின் பிரதி ஒன்றை, 1972 மே 25 ஆம் நாள், யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையாரின் நாவலர் மண்டபத்தில் பலர் முன்னிலையில் திரு. செல்வநாயகம் தீயிட்டுக் கொளுத்தித் தமிழ் மக்கள் அந்த அரசியலமைப்பை ஏற்கவில்லை எனப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

அதைத் தொடர் ந்து அதே ஆண்டில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு வருமாறு சகல தமிழ் அரசியல் கட்சிகட்கும் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் வந்திருந்தன. அங்கு அவர்கள் தமிழர் கூட்டணி என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.

1972 அக்டோபர் 3 ஆம் நாள் தனது பாராளுமன்றப் பதவியைத் திரு .செல்வநாயகம் உதறித் தள்ளினார். விலகுமுன் அவர் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றினார்.

"....தமிழர் கூட்டணியின் தலைவர் என்ற வகையில் இச்சபையில் எனது உறுப்புரிமையை நான் துறந்து, எனது கொள்கையை முன்வைத்து நான் மீண்டும் போட்டியிடும் பொழுது, அரசாங்கம் தனது கொள்கையை முன்வைத்து என்னோடு போட்டியிட வேண்டும் என்று கேட்கிறேன்' அத்தேர்தல் முடிவு தமிழ் மக்களது தீர்ப்பாகவே இருக்கும்.

"....தமது வருங்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை தமிழர்களுக்கு வேண்டும் என்பதே எனது கொள்கையாக இருக்கும். விடுதலை பெற்ற மக்களாக வாழவேண்டும் என்ற கொள்கைக்கு வாக்களிக்குமாறு மக்களை நான் கேட்பேன்.'

1972 இல் இடைத் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்திய அரசு 1975 பெப்ரவரி 6 ஆம் நாள் தேர்தலை நடத்தியது. அத்தேர்தலில் திரு. செல்வநாயகம் மிக அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்றார். பாராளுமன்றம் சென்றார். தமிழர்களின் விடுதலை முயற்சியை அங்கு அறிவித்தார். 1976 பெப்ரவரி 4 ஆம் நாள் "தமிழீழம் விடுதலைபெற்ற இறைமையுடைய நாடாகப்' பாராளுமன்றம் ஏற்றுக் கொள்கிறது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

"....இடைத் தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை விடுதலைபெற்ற இறைமையுடைய மதச்சார்பற்ற சமதர்ம நாடான தமிழீழத்தை அமைப்பதற்குரிய ஆற்றலுரிமையாக ஏற்றுக்கொள்வதென இப்பேரவை தீர்மானிக்கிறது'.

இத்தீர்மானம் இலங்கைப் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

1976 மே 14 ஆம் நாள் தமிழர் கூட்டணி தனது பெயரைத் தமிழர் விடுதலைக் கூட்டணி என மாற்றிக் கொண்டது. திரு. செல்வநாயகம், திரு. பொன்னம்பலம், திரு. தொண்டமான் ஆகிய மூவரையும் கூட்டுத் தலைவர்களாகத் தெரிவு செய்தது.

அந்நாளில் வட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் இறைமையும் தன்னாட்சியும் சுதந்திரமும் உடைய சுதந்திர நாடாகத் தன்னைத் தமிழீழம் அமைத்துக்கொள்ளும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். தனது வாழ்நாளில் இறுதிவரை செல்வநாயகம் எந்த அரசுப் பதவியையும் வகிக்கவில்லை. எந்தத் தனிப்பட்ட சலுகையையும் பெறவில்லை. செல்வந்தராக அரசியலில் நுழைந்த அவர், சில காலங்கள் தனது செலவுக்குக் கூடச் சக பாராளுமன்ற உறுப்பினர்களின் நன்கொடையை எதிர்பார்த்து வாழவேண்டி வந்தது.

1949 இல் இரு வழிகளைப் பற்றிக் கூறிய அவர், 1972 வரை கூட்டாட்சி அரசியலமைப்பைச் சிங்களவர் ஏற்றுக்கொள்ளப் பலவாறு முயன்று தோல்வியடைந்தார். அந்த வழியில் சென்று உரிமை பெறாத மக்கள், மற்ற வழியில் செல்லும் காலம் வந்துவிட்டதை உணர்ந்து அதற்காகத் தமிழ் மக்களைப் படிப்படியாக 1972 இல் இருந்தே தயார் செய்து 1976 இல் தீர்மானமாகக் கொண்டுவந்தார்.

தனது 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில் பல அரசியல் போராட்டங்களை நடத்தினார். அவை அனைத்தும் அறவழிப் போராட்டங்களாகவே அமைந்தன. அவரின் நேர்மையும் உறுதிகுன்றாக் கொள்கைத் தெளிவும் தமிழ்மக்களைக் கவர்ந்தன. அதனால், அவர்கள் அவரைத் தந்தை செல்வநாயகம் என அழைத்தனர். அவர் காட்டிய வழிகளைச் சரியான வழிகள் எனக் கைக்கொண்டனர்.

* அவர் சமயத்தால் கிறிஸ்தவரானாலும், சைவர்களான பெரும்பான்மையான தமிழர்கள் அவர் தலைமையை ஏற்று அவர் நடத்திய போராட்டங்களுக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர்.

"தமிழீழம் அமைப்பது வில்லங்கமான ஒரு காரியம்' என்று அவர் கூறினார். எனினும், அதைத் தவிர வேறுவழிகள் மூலம் தமிழ் மக்கள் அடிமைத் தளையை அகற்ற முடியாது என அவர் திரும்பத் திரும்பக் கூறினார். ஒரு முழுமையான விடுதலைப் போராட்டத்துக்குத் தமிழ் மக்களைச் சிந்தனை ரீதியாகத் தயார்செய்து விட்டுத்தான் அவர் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் விதைத்துச் சென்ற விடுதலை உணர்வுகள் இன்றும் மறையாமலே உள.

தந்தை செல்வாவின் 111 ஆவது பிறந்த தினத்தைமுன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது

பேச்சுவார்த்தைகளும் அரசின் நிலைப்பாடும்



நன்றி : வி.திருநாவுக்கரசு

எந்த மட்டத்திலிருந்து எந்த விதமான அழுத்தங்கள்தான் வந்தாலும் யுத்தம் நிறுத்தப்படமாட்டாது, இன்னும் ஒரு சில நாட்களில் விடுதலைப்புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விடுவார்களென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதாக இன்று நேற்று செய்தி வெளியாகியுள்ளது. இது ஒன்றும் புதிய விடயமல்ல. புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி சுருங்கிச் சுருங்கி, பாதுகாப்பு வலயமான 20 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் போக 1 சதுர கிலோ மீற்றர் பகுதியே அவர்கள் வசமுள்ளதென அரச தரப்பினர் கூறிவருகின்றனர். அதேநேரத்தில் நீண்ட நேர உக்கிர சமர்களும், முல்லைத்தீவு கடலில் கடும் மோதல்களும் சென்ற வார இறுதியில் இடம் பெற்றுள்ளதாகவும் அறியக்கிடக்கிறது.

இதனிடையில் பிரசாரப்போரும் அரச தரப்பினரால் தொடர்ந்து மும்முரமாக நடத்தப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது குறிப்பாகச் சொன்னால் பிரபாகரன் இருதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இன்னோரன்ன நோய்களால் பீடிக்கப்பட்டிருப்பதோடு, பாரிய மன உழைச்சலாலும் அவதிப்படுகின்றார் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. புலிகளின் சில முன்னணித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் அல்லது போடப்பட்டு விட்டனர். என்ற செய்திகளும் காணப்படுகின்றன. முன்பு, ஏறத்தாழ 17 வருடங்களுக்கு முன்னதாக அதாவது ஐக்கிய தேசியக்கட்சி (ஐ.தே.க.)ஆட்சிக்காலத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார். அவரைப்போன்ற ஒருவரே உலாவித்திரிகிறாரென. அன்றைய பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் மறைந்த ரஞ்சன் வியேரத்ன கூறிவந்தவர். எனவே, நாம் மிகப் பொறுப்புணர்ச்சியுடன் கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டிலுள்ள எஞ்சியுள்ள பகுதியையும் அரசாங்கம் கைப்பற்றிய பின்னர் கூட மோதல்கள் ஓயப்போவதில்லை. என்பதாகும், அதற்குரிய சமிக்ஞைகள் தான் தென்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆக, நாடு மேலும் மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகிக் கொண்டிருப்பதோடு நாட்டின் மீது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களின் பிடி இறுக்கப்போகும் துர்ப்பாக்கிய நிலை ஏற்கனவே ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ச.நா.நி.யிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ள 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மற்றும் அது தொடர்பாக விதிக்கப்படவுள்ள கடுமையான நிபந்தனைகள் பற்றி சென்ற வாரக் கட்டுரையில் ஓரளவு குறிப்பிட்டிருந்தேன். ஆனால் நாடு எதிர் நோக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி நிலைமையினை தென்னிலங்கை மக்களிடமிருந்து மறைப்பதற்கு யுத்தமே கேடயமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வீரவன்சவின் புகழாரம்

விடுதலைப்புலிகள் ஒரு சதுர கிலோமீற்றர் பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ள நிலை வெற்றிவாகை சூடி, படையினரின் உற்சாகத்தையும் பலப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ராஜபக்ஷ தகுந்த சூழலை உருவாக்கியுள்ளதாக தேசிய விடுதலை முன்னணி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேல் மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழேவைத்து சரணடைந்து விட்டால் நாளையே யுத்தம் முடிவடைந்து விடும் என்றும் வீரவன்ச சிலநாட்களுக்கு முன்னர், கூறியிருந்தார். என்ன அற்புதமான கண்டுபிடிப்பு? வீரவன்ச போன்றோர் 1950 கள் முதல் தீவிரமாகக் கடைப்பிடித்து வந்த பேரினவாத கைங்கரியங்கள் விடுதலைப்புலிகள் தோற்றம் பெற்றதற்கு வழிசமைத்தன என்பதை வாய்ச்சவடாலடிக்கும் வீரவன்ச போன்ற பிரகிருதிகளுக்கு ஏன் புரியப்போகிறது? நாட்டுப்பற்றுக்கான தேசிய இயக்கமொன்றின் செயலாளராகவும் வீரவன்ச விளங்கியவர்.

இத்தகைய அறிவிலிகளின் நாட்டுப்பற்று நாட்டை நட்டாற்றில் விட்டுள்ளதை இவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் தமிழ்தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்புடைய அரசியல் காணத்தவறியது மட்டுமல்லாமல் தமிழரின் சாத்வீகமான விடுதலைப் போராட்டங்களை படைபலம் கொண்டு அடக்கியொடுக்கியது மட்டுமல்லாமல் படையினர் வடக்கு கிழக்கை ஆக்கிரமித்து நிற்பதற்கும் அரசாங்கங்களின் செயற்பாடுகள் தான் காரணமாக அமைந்துள்ளன. இத்தகைய ஆக்கிரமிப்பானது சிங்கள பேரினவாதத்தின் வெளிப்பாடு என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. எனவே, வடக்கு கிழக்கிலிருந்து அரசபடையினரை விலக்கிவிட்டாலும் யுத்தம் முடிவடைந்து விடுமென வீரவன்ச போன்றோர் சிந்திக்க முடியாத அளவுக்கு அரசியல் குருட்டுத்தனம் அவர்களை ஆட்கொண்டுள்ளது எனலாம்.

சம்பிக்க ரணவக்கவின் கண்டு பிடிப்பு

அடுத்து, வீரவன்சவின் மறுபக்கமாகிய அமைச்சர் சம்பிக்கரணவக்க என்ன கூறுகின்றார். எப்பதைச் சற்று பார்த்து விடுவோம். அதாவது, சர்வதேச சதிகாரணமாகவே யுத்தம் நீண்டு செல்கிறது. கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளும் கோழைகளும். யுத்தம் நீடித்துச் செல்லப்போகிறதெனக்கனவு காண்கின்றனர். கடந்த கால தலைவர்கள் சமஷ்டித் தீர்வில் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் அது தோற்கடிக்கப்பட்டு விட்டதென ரணவக்க கூறியுள்ளார். 1950 களில் சமஷ்டித்தீர்வு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், தமிழர் தரப்பில் ஆயுதப் போராட்டமோ, பாரிய இரத்தக்களரியோ நாட்டில் ஏற்பட்டிருக்காது.

கொடிய யுத்தமும் பொருளாதார வீழ்ச்சியும்

இன்றைய நிலையில் வன்னி மக்கள் வரலாறு காணாத அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கையில், பொதுவாக தமிழ் மக்கள் பொலிஸ் பதிவுகள் போன்ற அவமரியாதைகளுக்கும் அசௌகரியங்களுக்கும் ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போல நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இதற்கு பிரதானமான காரணம் இந்த கொடிய யுத்தம் என்பதை இனிமேலாவது பேரினவாதிகள் புரிந்து கொள்வார்களா?

"இங்கே இருக்க வேண்டாம் திரும்பிப்போ' என நேற்று சர்வதேச நாணய நிதியத்தை (ச.நா.நி) வெளியேற்றியவர்கள் தான் இன்று முளந்தாளிட்டு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எடுக்கின்றனர். இது தொடர்பாக அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு சுவாரஸ்யமான கேலிச் சித்திரம் வெளியிடப்பட்டிருந்தது. ச.நா.நி.யின் அடைப்புத் துவாரம் அடைக்கப்பட்டேயிருக்க வேண்டுமென குறிப்பாக தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று நேற்றல்ல ஜே.வி.பி.யில் அங்கத்தவராயிருந்த காலம் முதல் வாய் கிழியச்சீண்டி வந்தவர். ஜனாதிபதி அந்த அடைப்புக்கருவியை (கடூக்எ) கழற்றி வீரவன்சவின் வாய்க்குள் செலுத்தி விடுவதாக அக்கேலிச்சித்திரத்தில் பிரதிபலிக்கப்பட்டிருந்தது.

நிற்க, விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டுமே ஒழிய அவர்களுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என அரசதரப்பினரால் வற்புறுத்தப்பட்டு வந்தது. மறுபுறத்தில், பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டுமென்று புலிகள் விரும்பினால் அவர்கள் ஆயுதங்களைக் கைவிடவேண்டுமென நாம் இப்போது கூறவில்லையென தனது முன்னைய நிலைப்பாட்டினை அரசாங்கம் சற்று தளர்த்தியுள்ளதென்ற அர்த்தப்பட தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும் புதுக்குடியிருப்பில் தங்கியிருக்கும் மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப்புலிகள் அனுமதித்தால் மட்டுமே அவர்களின் மேற்படி வேண்டுகோள் பரிசீலிக்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது. இலங்கை நிலைமை தொடர்பாக ஆங்கில இதழொன்றுக்கு சென்னையிலிருந்து வாராந்தக்கட்டுரை எழுதிவரும் என்.சந்தியமூர்த்தி போன்ற இந்திய ஆய்வாளர்கள் இதனை வரவேற்றுள்ளனர். தூரத்திலிருந்து தமக்குச் சரியெனப்பட்டதை அவர்கள் எழுதிவருகின்றனர். அவர்கள் கள நிலைமைகளையும், உள்நாட்டு தந்திரோபாயங்களையும் முற்றுமுழுதாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள் அல்ல என்பதே தெளிவாகிறது. எதுவாயினும் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் பாரிய வெறுப்புணர்வும் பரஸ்பர அவ நம்பிக்கையும் காணப்படும் நிலையில், பேச்சுவார்த்தைகள் சாத்தியமான காரியம் என்று சொல்வதற்கில்லை.

புதுக்குடியிருப்பு சனத்தொகை மீதான சர்ச்சை

அடுத்து, புதுக்குடியிருப்பில் தங்கியிருக்கும் மக்களின் எண்ணிக்கை மீதான சர்ச்சை தொடர்கிறது. அரசாங்கம் 70 ஆயிரம் பேர் வரை எனவும் , முல்லைத்தீவு அரச அதிகாரிகள் 3 இலட்சம் பேர் வரை எனவும் கூறிவருகின்றனர். முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களின் சனத்தொகை 4 இலட்சத்துக்கும் அதிகமாய் இருந்ததாக முன்னைய புள்ளிவிபர அறிக்கைகளில் கூறப்பட்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட தொகையினர் பல்வேறு காரணங்களின் நிமித்தம் வேளையோடு வெளியேறி இருக்கக்கூடும். இருந்தும், அங்கே தற்போதுள்ள சனத்தொகை 3 இலட்சம் எனப்படும் போது அரசாங்கம் அதனை நம்பவில்லை. ஏறத்தாழ 60 ஆயிரம் மக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளபடியால் இன்னும் 2 இலட்சத்து 40 ஆயிரம் வரையான மக்கள் அங்கே உள்ளனர் எனலாம். எனவே, அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின்படி 70 ஆயிரம் சனத்தொகைக்கான உணவு, மருந்துகள் அனுப்பப்பட்டுவந்துள்ளதென்றால் அங்கே பசி பட்டினி தாண்டவமாடுவதுடன், ஆயிரக்கணக்கில் காயப்பட்டவர்களும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளவர்களும் என்ன பாடுபடுவார்கள் என்பதை யாரும் மனச்சாட்சியுடன் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

மேல்மாகாணசபைத் தேர்தல் பற்றி

நிற்க, எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தல் பற்றி ஒரு வாரத்தை தேர்தலில் போட்டியிடும் இரு பெரிய கட்சிகளின் குணாம்சங்கள் மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே முந்திய கட்டுரைகளிலும் எடுத்துக்கூறியுள்ளேன். இவ்விரு கட்சிகளினதும் கையாலாகாதத்தனங்களையும், கண்கட்டி வித்தைகளையும் மக்கள் மென்மேலும் புரிந்துகொண்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கூடுதலான விழிப்புணர்வு ஏற்படவேண்டும். இரு பெரிய கட்சிகளை விட மேலும் பல சிறிய கட்சிகளும் சுயாதீனக் குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன. சில தமிழ்க் கட்சிகள் தமிழர், தமிழ் அபேட்சகர்களை மட்டுமே ஆதரிக்க வேண்டுமென அறைகூவல் விடுத்து வருகின்றன. இது தெரிந்தோ தெரியாமலோ படு பொல்லாத்தனமான சிங்களப் பேரினவாதத்திற்குத் தீனிபோடும் அணுகுமுறையாகும் என்பதை நாம் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் அழுத்தம் திருத்தமாகக் கூறிவைக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

உண்மையில் மக்கள் இத்தேர்தலை ஏனோ தானோ என்று எண்ணி வாழாதிருந்துவிடாமல் பேரினவாதத்துக்கெதிராக அயராது போராடிவரும் மேன்மையான இடதுசாரிகளை ஆதரித்து வாக்களிக்கவேண்டும். அலட்சியம், மனோபாவம் ஆபத்தானது என்பதை எவ்வாறு கூறிவைத்தார் என்பதைப்பார்ப்போம்;

மக்கள் தமது சுதந்திரத்தினைப் பயன்படுத்தாமல் இருப்பினராயின் அட்டூழியம் புரிபவர்கள் தொடர்ந்தும் தம் கைவரிசைகளில் ஈடுபட்டுக்கொண்டேயிருப்பர். ஏனென்றால், கொடுங்கோலோச்சுவோர் தம் மதம் மற்றும் இந்த வழியிலான எத்தனையோ கடவுள்களின் பேரில் ஆர்வமும் துடிப்பும் கொண்டு தூங்கிக் கிடப்பவர்கள் மீது விலங்கிடுவர்.

இவ்வாறு 18 ஆம் நூற்றாண்டில் வொல்ற்றெயர் கூறி வைத்தது இன்றும் மை காயாத மாதிரியானது போல் உள்ளது எனலாம். எனவே, மக்கள் பாராதீனப்படுத்த முடியாத தமது வாக்களிக்கும் சுதந்திரத்தை நல்லது நடப்பதற்காகப் பயன்படுத்துவது மிகமிக அவசியமாகும்.

இழப்பை மூடி மறைக்க சிறிலங்கா படைத்தரப்பு கையாளும் உத்தி


முல்லைத்தீவில் கடந்த சில நாட்களில் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை மூடி மறைப்பதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி காயடைந்துள்ளார் என்ற செய்தியினை மகிந்த அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுக்குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள ஆனந்தபுரம், இரணைப்பாலை ஆகிய இடங்களில் கடந்த ஒரு வாரமாக விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான தாக்குதல்களில் 1,412 படையினர் கொல்லப்பட்டும் 6,123 படையினர் காயமடைந்தும் உள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர்.

இச்செய்திகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடாத வகையில் திசை திருப்பும் நோக்கிலேயே புதுக்குடியிருப்பு பகுதியின் மீது படையினர் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி காயடைந்துள்ளார் என்று சிறிலங்கா படைத்தரப்பு ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது.

சாள்ஸ் அன்ரனி காயமடைந்த செய்தி கொழும்பில் செல்லிடப்பேசி மூலமான குறும் தகவல்கள் ஊடாக மிக வேகமாக பரப்புரை செய்யப்பட்டது.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை வெளியான சகல சிங்கள மற்றும் ஆங்கில நாளேடுகளில் இச்செய்திக்கு முன்பக்கத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரச மற்றும் தனியார் ஊடகங்களிலும் இச்செய்திக்கு மணிக்கு ஒரு தடவை முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல் நடத்துகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான பரப்புரைகளை சிறிலங்கா படைத்தரப்பு செய்வது வழமையானது என கொழும்பில் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய இளைஞர்களை போரில் ஈடுபடுத்திக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், தனது பிள்ளைகளையும் மனைவியையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டார் என்று இதே சிறிலங்கா படைத்தரப்புத்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கூறியிருந்தது.

தற்போதும் இதே சிறிலங்கா படைத்தரப்புத்தான் சாள்ஸ் அன்ரனி காயமடைந்தார் என்ற செய்தியையும் வெளியிட்டுள்ளது. ஆகவே இந்த முரண்பாடான தகவல்கள் குறித்து கொழும்பு ஊடகங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று அவதானிகள் கேட்கின்றனர்.