இயக்குனர் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்: பழ.நெடுமாறன்


ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களையும், திரை உலகை சேர்ந்தவர்களையும் ஒட்டு மொத்தமாக மிரட்டுவதற்காகவே சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி ஏவி இருக்கிறார். இதைநான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்டு புதுவை காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து பேச இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று புதுவை வந்தார்.

காலாப்பட்டு ஜெயிலுக்கு சென்ற அவர் ஒரு மணி நேரம் காத்திருந்து இயக்குனர் சீமானை சந்தித்து பேசினார். சுமார் 1/2 மணிநேரம் அவருடன் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இயக்குனர் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு ஏவி உள்ளது. இதைநான் வன்மையாக கண்டிக்கிறேன். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களையும், திரை உலகை சேர்ந்தவர்களையும் ஒட்டு மொத்தமாக மிரட்டுவதற்காகவே சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி ஏவி இருக்கிறார்.

இலங்கை தமிழர்களுக்காக பேசியதை தவிர தேசத்திற்கு எதிரான செயல்களில் சீமான் ஒருபோதும் ஈடுபடவில்லை. அவரின் பேச்சின் விளைவாக எந்த இடத்திலும் எத்தகைய கலவரமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் அவர் மீது இந்த கொடிய சட்டத்தை பயன்படுத்தி இருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத போக்காகும். சீமான் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கை உடனடியாக திரும்ப பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக புதுவை வந்த பழ.நெடுமாறனை புதுவை பெரியார் திராவிடர் கழக தலைவர் லோகு.அய்யப்பன், செந்தமிழர் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் தமிழ் மணி ஆகியோர் வரவேற்றனர்.

முகப்பு Print Send Feedback

புலிகள் மெளனம் ஏன்? மறைப்பது எதற்கு? எதிர்கொள்வது எப்படி?


பொய்ச் செய்திகளால் குவிந்துகிடக்கிறது போர்! பிரபாகரன் முல்லைத் தீவை விட்டு எப்போதோ போய்விட்டார். அங்கு முக்கியத் தளபதிகளே இல்லை. இன்னும் ஒரு சில நாட்களில் முல்லைத்தீவுப் பகுதியையும் இராணுவம் கைப்பற்றிவிடும். இப்போது சுமார் 600 போராளிகள்தான் அமைப்பில் இருக்கிறார்கள். அவர்கள்தான் மக்களைக் காட்டைவிட்டு வெளியில்விடாமல் துப்பாக்கி முனையில் மிரட்டிக்கொண்டு இருக்கிறார்கள்......
மரபுரீதியான இராணுவமாக இருந்த புலிகள், இன்று அதை இழந்துவிட்டார்கள். வெறுமனே காடுகளில் மறைந்திருந்து சில கெரில்லா தாக்குதல்களை நடத்த மட்டுமே அவர்களால் இனி முடியும். அவர்களது விமானப் படை ஓடுதளம் அத்தனையும் கைப்பற்றப்பட்டுவிட்டன. இனி அவர்களால் வான் படையை இயக்க முடியாது. சாலை என்ற கடற்படை முகாமையும் கைப்பற்றிவிட்டதால், அவர்களால் கடல் பகுதியிலும் எந்தத் தாக்குதலையும் செய்ய முடியாது. மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள், எரி பொருட்கள்தான் அவர்களிடம் இருக்கிறது. அத்தனை சக்திகளையும் இழந்துவிட்டார்கள். இப்படி தினந்தோறும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

'புலிகளால் இனி எழுந்திருக்க முடியாது. அவர்களது கதை முடிந்துவிட்டது' என்கிறார் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா. 'கடல் மார்க்கத்தின் அத்தனை வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன. கடலில் விழுவதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழி இல்லை' என்று கடற்படை தளபதி வசந்த கருணாகொட கர்ஜிக்கிறார். 'புலிகள் ஆயுதத்தைக் கீழே போடும் வரை போர் நிறுத்தம் கிடையாது. இன்னும் சில நாட்களில் எங்களது எண்ணம் நிறைவேறும்' என்று மகிழ்கிறார் அதிபர் மகிந்த ராஜபக்ஷ.

அத்தனைக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது மாதிரி கொழும்புக்குள் வான் படையைச் செலுத்தி மிரளவைத்துள்ளார்கள் புலிகள். ரூபன், சிரித்திரன் ஆகிய இரண்டு போராளிகள் இதில் இறந்து போனார்கள். நான்கு மாதங்களுக்கு முன்னால் புலிகளின் வான் படை இதுபோன்ற ஒரு தாக்குதலை நடத்தியது. எனவேதான், அவர்களது விமானங்களை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று இராணுவம் எத்தனையோ முயற்சிகளை எடுத்தது. அத்தனையும் வீண் என்பதைக் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் வெளிச்சப்படுத்தி இருக்கிறது.

இவை ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் இதே நபர்கள் சொல்லி வரும் கருத்துக்கள் பலத்த சந்தேகத்தைக் கிளப்பி வருகின்றன. 'எனக்கு இன்னும் ஓர் ஆண்டு அவகாசம் தரப்பட்டுள்ளது' என்று மெதுவாக ஆரம்பித்திருக்கிறார் சரத் ஃபொன்சேகா. அவரது எடுபிடியாக மாறிப்போன கருணா, 'புலிகளை ஒடுக்கி, முழுவதும் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வர இன்னும் 18 மாத காலம் ஆகலாம்' என்று கண்டு பிடித்திருக்கிறார். இலங்கை அரசாங்கம் சொன்னபடி பார்த்தால், அவர்கள் புலிகள் அனைவரையும் ஒழித்துவிட்டு, கடந்த 4-ம் தேதியுடன் 'இரண்டாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருக்க வேண்டும். மாறாக, தங்கள் கொடூரத்துக்கு இன்னும் ஓராண்டு காலம் ஒதுக்கி இருக்கிறார்கள். இப்படிக் காலத்தைத் தள்ளிப்போட, விடுதலைப் புலிகளின் ஆக்ரோஷமான எதிர்த் தாக்குதல்தான் காரணமாக இருக்க முடியும்.

பொதுவாக தங்களின் சிறு அசைவுகளையும் ஆபரேஷன்களையும் மக்களுக்கு வெளிப்படுத்தி வந்த புலிகள் இப்போது அடக்கி வாசிப்பது, அவர்கள் பற்றிய சந்தேகங்களைக் கிளப்பி உள்ளது. புலி ஆதரவாளர்களே சோர்ந்துபோய் 'இனி நல்ல செய்தி வராதா?' என்ற ஏக்கத்தோடு வலம் வர ஆரம்பித்தார்கள். ஆனால் உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது. புலிகளின் வியூகங்களால் மிரண்டு சிங்கள இராணுவம் உறைந்து போயிருப்பதாகத் தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன. 'இன்னும் சில அங்குலம் நிலத்தை இழந்தால் கூடத் தலை தப்புவது சிரமம்' என்பதால், கடைசிக்கட்டக் கோபத்தைப் புலிகள் காட்டி வருகிறார்களாம். அவர்களது வியப்பூட்டும் வியூகம். விறுவிறுப்பான வேகம். அச்சுறுத்தும் அமைதி. மூன்றும்தான் இன்று புலிகளுக்குக் கை கொடுத்து வருகிறதாம். சமீபத்தில் வெளியான சில தகவல்கள் அதிர்ச்சியைக் கிளப்புகின்றன.

மௌனம் ஏன்?

கடந்து போன ஆண்டு புலிகளுக்கு உண்மையில் கஷ்ட காலம். அவர்கள் கையில் இருந்த பரந்தன், ஆனையிறவு, கிளிநொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களை இழந்தார்கள். இந்தப் போரை ஆரம்பித்த ராஜபக்ஷவிடம், சரத் ஃபொன்சேகா புதிய உத்தியைச் சொல்லிக் கொடுத்தார். 'இதுவரை அவர்கள் வைத்திருந்ததை நாம் பறித்தோம். பிறகு அவர்கள் பறித்தார்கள். நாம் மறுபடி பறிக்கிறோம். இப்படியே போனால் ஆட்டம் நிற்காது. இன்னும் 30 வருஷத்துக்குத் தொடரும். எனவே முதலில் புலிகள் அமைப்பின் ஆள் பலத்தைக் குறைக்க வேண்டும். அதைச் செய்யாமல் அந்த அமைப்பை ஒழிக்க முடியாது' என்று சொன்னார். அதற்கான திட்டத்தை ஃபொன்சேகா போட்டார். அதாவதுஇ ஒவ்வொரு இடமாகப் போய் சும்மா தாக்குதல் நடத்திவிட்டுப் பின்வாங்குவது!
ஒவ்வொரு தாக்குதலிலும் பத்து, இருபது என்று இறந்தால் ஒரு வருஷத்தில் மொத்தத்தையும் முடித்துவிடலாம் என்று திட்டமிட்டார்கள். இலக்கே இல்லாமல் குண்டுகளைப் பயன்படுத்தியது இதனால்தான்.

இதையே கொஞ்சம் மாற்றி யோசித்தார்கள் புலிகள். 'இடத்தை எப்போது வேண்டுமானாலும் கைப்பற்றிக் கொள்ளலாம். போராளிகள் தான் முக்கியம். அவர்களில் யாரையும் இழக்கக் கூடாது. எனவே பின்வாங்கலாம்' என்று பிரபாகரன் முடிவெடுத்தார். எனவேதான் பல இடங்களை விட்டு வர ஆரம்பித்தார்கள். அப்போதும் சும்மா பின்வாங்காமல் எதிர்த் தாக்குதலைச் சில நாட்கள் நடத்துவார்கள். புலிகள் சண்டையைத் தொடங்கி விட்டார்கள் என்று படை வீரர்களை ஒரே இடத்தில் குவிக்க ஆரம்பித்ததும், அங்கு தாக்குதலை அதிகப்படுத்துவார்கள். பிறகு எந்தச் சத்தமும் இல்லாமல் பின் வாங்கி வேறு பகுதிக்கு இடம் பெயர்வார்கள். இந்தத் தாக்குதல்கள்தான் கடந்த ஐந்து மாதங்களாக நடந்திருக்கின்றன. 'சொற்ப இழப்பு, குறைந்த வெடிபொருட்களைப் பயன்படுத்துவது, இலக்கை மட்டுமே அடிப்பது, இராணுவ வீரர்களைக் கொல்வது, ஆயுதங்களைக் கைப்பற்றுவது' ஆகிய ஐந்து கட்டளைகள்தான் பிரபாகரன் தனது தளபதிகளுக்கு இட்டுள்ள பஞ்ச சீலம்.

இலங்கை நாடாளுமன்றத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு புள்ளிவிபரம் படிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் 3 ஆயிரம் இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 12 ஆயிரம் பேர் பலத்த காயம் அடைந்து உடல் ஊனமுற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. புலிகள் சும்மா இருந்தால், இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. அதே சமயம் புலிகள் தங்களது முழு அளவிலான பலத்தைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தவில்லை. அவர்கள் தங்களது முழு பலத்தையும் பயன்படுத்தி 'ஓயாத அலைகள்-1' நடத்தி முல்லைத்தீவைப் பிடித்தார்கள். அடுத்து கிளிநொச்சியைக் கைப்பற்றினார்கள். 'ஓயாத அலைகள்-3' ஆனையிறவை வாங்கிக் கொடுத்தது. அதாவது இரண்டு ஆண்டு இடைவெளியில் வரிசையாக இதைப் பிடித்துக் காட்டிய தளபதிகளில் பால்ராஜ் தவிர, அத்தனை பேரும் இன்றும் பிரபாகரனுடன் இருக்கிறார்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் அதைவிட ஆயுதங்கள் அதிகமாகி இருக்கின்றன. ஆட்கள் அதிகமாகி இருக்கிறார்கள். ஆனாலும, பிரபாகரன் முழு பலத்தையும் பயன்படுத்தவில்லை.

பல கிலோ மீற்றர் பகுதிகளை அவர்கள் இழந்துள்ளது உண்மைதான். ஆனால் தளபதிகள், போராளிகள், ஆயுதங்கள், பீரங்கிகள், கப்பல்களை இழக்காமல் பழைய பலத்துடன் அவர்கள் அப்படியே இருக்கிறார்கள்.

மறைப்பது எதற்கு?

மிகப் பெரிய தாக்குதல்களைச் சேதாரம் இல்லாமல் புலிகள் நடத்தி முடித்திருக்கிறார்கள் என்பதைத் தன்னை அறியாமல் ஒப்புக்கொண்டு இருக்கிறார் அதிபர் மகிந்த ராஜபக்ஷ. சிங்களப் பத்திரிகைக்கு அவர் கொடுத்த பேட்டியில் 'பிப்ரவரி முதல் நான்கு நாட்கள் எங்கள் படைக்கு பெரிய இழப்புகள்தான்' என்று அவர் சொல்லியிருக்கிறார். அதாவது பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொடர்ந்து 72 மணி நேரம் புலிகள் தங்கள் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். 'நாங்கள் தற்காப்புத் தாக்குதல்தான் நடத்துகிறோம்' என்று சொல்லி வந்த புலிகள், முதல் தடவையாகத் தாக்குதலை அவர்களாகவே தொடங்கினார்கள்.

புதுக்குடியிருப்புப் பகுதியை நோக்கி முன்னேறுவதற்கான ஏற்பாட்டில் சிங்கள இராணுவம் மும்முரமாக இருந்தது. 59-வது படையணியின் தளபதி பிரிகேடியர் நந்தன உடவத்த இதற்குத் தலைமை தாங்கினார். உடையார்கட்டுப் பகுதியில் 62-வது பிரிவும் இருந்தது. புலிகள் 59-வது படையை வளைத்துத் தாக்குதலை நடத்தியது. முள்ளியவளை, ஒட்டுசுட்டான், புதுக் குடியிருப்பு தெற்கு ஆகிய மூன்று இடங்களிலும் முக்கோணமாகச் சுற்றித் தாக்குதலை நடத்தினார்கள். ஆட்லறி மோட்டார் மூலம் ஷெல் அடித்தார்கள். ஒரு நாள் முழுவதும் அடித்த அடியில் இராணுவம் பின்வாங்கியது.

இது ஒரு பக்கம் நடக்கும்போதே வற்றாப்பளைக்கும் கோப்பாப்புலாவுக்கும் இடையில் புலிகளின் படை கடலில் இறங்கியிருக்கிறது. அவர்கள் இராணுவத்தைப் பின்னால் இருந்து வளைத்துள்ளார்கள். இதில் இராணுவத்தின் பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அழிக்கப்பட்டன. அதன் பிறகுதான் படை பின்வாங்கியிருக்கிறது. 150 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இரண்டு லாரிகள் நிறையத் துப்பாக்கிகளைப் பறித்ததாகவும் புலிகள் சொன்னார்கள். போர் டாங்கிகள், கவச வாகனங்கள், டிரக் வண்டிகள் எனப் பலவற்றையும் புலிகள் கைப்பற்றினார்கள்.

ஆனால் 59-வது படையணியின் 3-வது டிவிஷன் மொத்தமாக அழிந்ததாகக் கொழும்பில் உண்மைத் தகவல் பரவி, இராணுவத்தினரின் குடும்பத்தினர் கூடிவிட்டார்கள். இதன் பிறகே அங்கிருந்த மீடியாக்களின் குரல்வளை மொத்தமாக நெரிக்கப்பட்டது. அன்று முதல் இராணுவத்தை முன்னேறவிடாமல் கடுமையான தடுப்பரண்களைப் புலிகள் போட்டு வைத்துள்ளனர். 'சிங்கள இராணுவத்தின் குண்டு வீச்சில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தினமும் இறந்து வருவதைப் பார்த்து உலகமெங்கும் அனுதாப அலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் தங்களது பலமான தாக்குதல்கள் வெளியில் தெரிந்தால் அது அனுதாப அலையின் வீச்சைக் குறைத்துவிடும் என்று நினைக்கிறார்கள். எனவேதான் தாக்குதலையும் நடத்திக்கொண்டு அது வெளியில் பரவாமலும் வைத்துள்ளார்கள். இது ஒருவகையான அரசியல் தந்திரம்' என்று சொல்லப்படுகிறது. அது சிங்கள ராணுவத்துக்கும் தெரியும். ஊருக்குத் தெரியாமல் ஊமைக் காயமாகவே இருக்கட்டும் என்று நினைக்கிறது இராணுவம்.

எதிர்கொள்வது எப்படி?

இன்றைய நிலவரப்படி ஆனையிறவுக்குத் தென் கிழக்கே முள்ளியான், செம்பியன்பற்று, கட்டைக்காடு, சுண்டிக்குளம் பகுதிகளில்தான் புலிகள் இருக்கிறார்கள். இதையும் கைப்பற்றிய பிறகுதான் இராணுவத்தால் முல்லைத்தீவை நெருங்க முடியும். இந்த நான்கு ஊர்களைக் கைப்பற்றினால்தான், ஏ-35 சாலை (பரந்தன் முதல் முல்லைத்தீவு வரை) ஏ-34 (மாங்குளம் முதல் முல்லைத் தீவு வரை) ஆகிய இரண்டு சாலைகளுக்குள் புலிகளை முடக்க முடியும். 'ஏ-9' என்ற பாதையை இராணுவம் வைத்திருப்பதுதான் புலிகளுக்குப் பெரிய சிக்கல். இதைத் தாண்டிய பகுதிக்குள்தான் மூன்று இலட்சம் மக்கள் இருக்கிறார்கள். பொதுமக்களை வெளியேற்றாமல் இராணுவத்தால் எதுவும் செய்ய முடியாது. எனவேதான் தினந்தோறும் நூறு பேரைக் கொன்று தனது திட்டத்தைப் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது இராணுவம்.

சிங்கள இராணுவத்தின் எட்டு படையணிகள் இந்த பகுதியைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளன. 'இதில் சுமார் 50 ஆயிரம் பேரை இறக்கியிருக்கிறேன்' என்று ஃபொன்சேகா சொல்லியிருக்கிறார். புதுக் குடியிருப்பைக் கைப்பற்றுவதுதான் அடுத்த இலக்கு. 'இருபதுக்கும் மேற்பட்ட மேப்களை வைத்துப் படை நடத்திய எனக்கு இந்த சின்ன மேப் எம்மாத்திரம்?' என்று சொல்லியிருக்கிறார் அவர். அந்த அளவுக்கு புதுக் குடியிருப்பு சின்னப்பகுதி. ஆனாலும் மூன்று வாரங்களாக இராணுவம் அந்த இடத்தில் திணறிக்கொண்டுதான் இருக்கிறது. பொதுவாக காட்டுக்குள் இருந்துகொண்டு இராணுவத்தைத் தாக்குவார்கள் புலிகள். ஆனால் இம்முறை புதுக் குடியிருப்பு நகர் பகுதியை அவர்கள் வைத்துக்கொண்டு, காட்டுக்குள் இராணுவத்தை நுழைய விட்டுள்ளார்கள். புலிகள் எப்போதும் நள்ளிரவு நேரங்களில்தான் தாக்குதலை ஆரம்பிப்பார்கள். ஆனால் இப்போது பகல் நேரங்களில்தான் தாக்குதலை நடத்துகிறார்களாம். எனவே புதுக்குடியிருப்பைத் தாண்டி இன்னும் பல எல்லைகளை தாண்டிய பிறகுதான் முல்லைத்தீவுக்கு இராணுவம் வர முடியும்.

மொத்தம் 600 புலிகள்தான் இருப்பதாக இராணுவம் சொல்கிறது. ஆனால், புலிகள் ஆதரவு இணையத்தளங்கள் 15 ஆயிரம் பேர் என்கின்றன. கடந்த மூன்றாண்டுகளாக அங்குள்ள மக்கள் அனைவருக்கும் பயிற்சி கொடுத்தார்கள். மூன்று இலட்சம் மக்களில் 10 சதம் பேர் போர்ப் பயிற்சி பெற்றவர்கள் என்று வைத்துக்கொண்டாலும் 30 ஆயிரம் பேர் தற்காப்பு யுத்தத்துக்குத் தயாராக இருப்பார்கள். இந்த எண்ணிக்கையையும் சேர்த்து 45 ஆயிரம் பேர் ஆயத்தமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இ'ராணுவ முகாம்களைத் தேடிச் சண்டையிடுவதைவிட அவர்களை தங்கள் இடத்துக்கு வரவழைத்து யுத்தம் நடத்துவதன் மூலம் பஞ்ச சீல இலக்கை அடையலாம்' என்பது புலிகளின் கணக்கு.

தரைப் படைக்கு அடுத்த முக்கியத்துவம் கடற்புலிகளுக்குத்தான் இனி இருக்கும். அனைத்துலக கப்பல் மற்றும் காப்புறுதி நிறுவனத்தின் கணக்குப்படி புலிகளிடம் 15 கப்பல்கள் இருக்கின்றன. இவை பல நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாடகைக்கும் எடுத்துப் பயன்படுத்தி வருகிறார்கள். வர்த்தகத்தைத் தாண்டிய ஆயுதப் போக்குவரத்துக்கும் இது பயன்படுகிறது. 400-க்கும் மேற்பட்ட அதிவேகப் படகுகள் இருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னால் முல்லைத் தீவு கடல் பகுதியில் புலிகள் தப்பிவிடாமல் இருக்க, 25-க்கும் மேற்பட்ட அதிவிசேஷப் படகுகளை இலங்கை கடற்படை நிறுத்தியிருந்தது.

ஆனால் கடற்புலிகளின் லெப்டினென்ட் பதி தலைமையில் எதிர்த் தாக்குதல் நடத்திக் கலைத்ததில் கடற்படை இப்போது நடுக்கடலில் நிற்கிறது. முல்லைத்தீவு முதல் வடமராட்சி கிழக்கு வரை 40 கி.மீ. தூரக் கடற்கரைப் பகுதி புலிகளிடம் இருந்தது. இப்போது 20 கி.மீதான் உள்ளது. சண்டைக்கான ஆயத்தங்களை இரண்டு தரப்புமே இங்குதான் செய்துவருகின்றன.
ஆறு விமானங்கள் புலிகள் வசம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஒன்று வீழ்த்தப்பட்டுள்ளது. பொதுவாகஇ விமானங்களைக்

குறிவைப்பதை விசேஷ ஆபரேஷன்களாகப் புலிகள் சொல்வார்கள். பலாலியில் இருந்து விமானத்தில் சென்ற பேபி.சுப்பிரமணியம் வெடிகுண்டுப் பையை வைத்துவிட்டு இறங்க, விமானம் வெடித்துச் சிதறியது. முப்பதாண்டுகளுக்கு முன் இது நடந்தது. அடுத்ததாக கேப்டன் கண்ணன் தலைமையில் கரும்புலிகள் 15 பேர் பெரிய தாக்குதலை நடத்தி சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விமானங்களைத் தகர்த்தார்கள். மொத்த ராணுவமும் விமான நிலையத்தைச் சுற்றி வளைத்தபோதுஇ முகிலன் என்ற கரும்புலி மட்டும் அந்த இடத்தில் இருந்து தப்பித்துஇ மீண்டும் காட்டுக்குள் வந்து சேர்ந்து பிரபாகரனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாராம். அதன் பிறகுதான் வான்படை தொடங்கப்பட்டது.

நேவி பற்றிப் படிக்க பல நாடுகளுக்குத் தனது வீரர்களை அனுப்பியது மாதிரியே, ஏரோநாட்டில் படிக்கவும் சிலரைத் தேர்ந்தெடுத்தார் பிரபாகரன். தனது மூத்த மகன் சார்லஸ் அன்டனியையும் அதற்கே அனுப்பி வைத்தார். இந்த வான் படைத் தாக்குதல்கள் கொரிய பாணியைப் பின்பற்றுகின்றன. அமெரிக்காவும் தென் கொரியாவும் சேர்ந்து அதி உயர் ராணுவ உத்திகளைப் பயன்படுத்தியபோதுஇ வட கொரியா சிறு விமானங்களை வைத்து அமெரிக்காவை அச்சுறுத்தியது. அதைத்தான் புலிகள் செய்துகொண்டு இருப்பதாகப் போர் ஆய்வாளர்கள் சொல் கிறார்கள்.

முல்லைத்தீவு ஒரு காலத்தில் இராணுவம் தனது தளமாக வைத்திருந்த இடம். இப்போது புலிகளின் தளமாக இருக்கும் இடம். இது யாருக்கு தொல்லைத் தீவு என்பது போகப் போகத் தெரியும்!

ஈழத்தில் தமிழினம் அழியாமல் இருக்கவேண்டுமானால், பிரபாகரனால் தான் முடியும்: தமிழருவி மணியன் குமுதம் இதழுக்கு பேட்டி

பிரபாகரனைத் தவிர்த்துவிட்டு தமிழ்ஈழம் காண்பது இன்றைய சூழலில் இயலாது. ஈழத்தில் தமிழ் இனம் அழியாமல் இருக்கவேண்டுமானால், பிரபாகரனால்தான் முடியும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் தமிழக காங்கிரஸின் மாநிலப் பொதுச் செயலாளருமான தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையைக் கண்டுகொள்ளாத மத்தியிலுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசின் போக்குத்தான், தனது கட்சி விலகலுக்குக் காரணம் என்கிறார். மதுரையில் அவரைச் சந்தித்தோம். தன்னையொத்த கருத்துடைய சிறு கூட்டத்தினர் மத்தியில் இருந்தார். கேள்விகளை முன்வைத்தோம். ஆவேசத்துடன் அருவியாகக் கொட்டின வார்த்தைகள்.

நீங்கள் காங்கிரஸில் இருந்து விலகுவதற்கு இலங்கைப் பிரச்னை தான் காரணமா?

``நிச்சயமாக. இலங்கைப் பிரச்னையில் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் சுயநலப் பார்வையோடு நடக்கின்றன. தமிழகத்தின் நாற்பது எம்.பி.க்களும் தமிழின உணர்வோடு ஒன்றுபட்டு நின்றிருந்தால், மத்திய அரசின் மீது மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி இலங்கைப் பிரச்னைக்கு உரிய தீர்வினைக் கண்டிருக்க முடியும். ஈழத்தில் விடுதலைப் புலிகள் ஒழிப்பு என்ற போர்வையில் தமிழினம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், சிங்கள பௌத்த பேரினவாத பாசிச அரசுக்குப் பக்கபலமாக நிற்கும் மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசின் அணுகுமுறையை மானமுள்ள எந்தத் தமிழனாலும் அங்கீகரிக்க முடியாது. காகித நியமனத்தால் புளகாங்கிதம் அடையும் காங்கிரஸில் எனது இன, மொழி அடையாளங்களை அடகு வைக்க என் இதயம் இடம் தரவில்லை. எனவேதான் மொழி, இன உணர்வற்ற காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட நீடிக்க நான் விரும்பவில்லை.''

தமிழக எம்.பி.க்கள் மீது உங்களுக்கு இவ்வளவு காட்டம் ஏன்?

``மும்பையில் ஒரு பீகாரி தவறுதலாக சுடப்பட்டான். இதையடுத்து, பீகாரில் மாறுபட்ட கட்சிகளின் தலைவர்களான நிதீஷ்குமார், லாலு, பஸ்வான் போன்றவர்கள் ஒன்றிணைந்து அந்த சம்பவத்தைக் கண்டித்தார்கள். ஒரு நபர் கொல்லப்பட்டதற்கே அப்படியென்றால், தமிழினத்தையே அழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது ராஜபக்ஷே அரசு, குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை குவியல் குவியலாகக் கொல்லப்படுகிறார்கள். அதைக் கண்டித்து தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டாமா? குறைந்தபட்சம் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களாவது சோனியா காந்தியைச் சந்தித்து, ஈழத்தமிழர் பிரச்னை குறித்துப் பேசியிருக்க வேண்டாமா? தங்களையும் தங்கள் பதவிகளையும் அதன் மூலம் கிடைக்கும் சுகங்களையும் பாதுகாத்துக் கொள்ள, இனத்தையே காட்டிக்கொடுக்கும் மனிதர்கள் இவர்கள்.
ராமதாஸ் ஈழத்தமிழர் நலனில் அக்கறை காண்பிக்கிறார். அறிக்கை விடுகிறார். சோனியாவைச் சந்தித்தார். சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஆனால், இன்னும் நூறு நாட்கள் ஆயுள் கூட இல்லாத மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தனது மகனை விலகச் சொல்ல அவருக்கு மனம் வரவில்லை. பதவியைக் கூட தியாகம் செய்யாதவர்கள், செய்யச் சொல்லாதவர்கள் தீக்குளித்தவர்களுக்காக ஒப்பாரி வைக்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு இவ்வளவு மோசமான சூழல் உருவானதைத் தடுக்காமல்போன குற்றத்துக்குரியவர்கள் இந்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்கள் தமிழனத் துரோகிகள்.''

இலங்கைத் தமிழர் பிரச்னையில் சோனியா காந்தி கூட மௌனம் தானே சாதிக்கிறார்?

``உண்மைதான். காங்கிரஸ் தலைவர்கள், மத்திய காங்கிரஸ் அமைச்சர்கள் எல்லாம் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, `அன்னை சோனியாகாந்தி வழிகாட்டுதலின் பேரில் நடக் கும் மன்மோகன் தலைமையிலான அரசு' என அகமகிழ்ந்து சொல்வார்கள். இப்போது அன்னை சோனியா காந்தி வழிகாட்டுதலின் பேரில்தான் மன்மோகன் அரசு மறைமுகமாக ராஜபக்ஷேயின் பாசிச ராணுவத்துக்குத் துணை நிற்கிறதா? என்ற கேள்வி தமிழக மக்கள் மனதிலும் எழுந்துள்ளது. பாஸ்பரஸ் எரிகுண்டுகளால் அன்றாடம் கொத்துக்கொத்தாக தமிழினம் கரிக்கட்டைகளாகக் குவிக்கப்படும் சூழலில் கூட, சோனியா காந்தி ஈழத்தமிழர் நிலை குறித்து இன்று வரை வாய் திறக்கவில்லை. தமிழனுக்காகக் குரல் கொடுக்கவேண்டாம். அங்கு மனித உரிமை மீறப்படுகிறதே... அதற்காகவாவது குரல் கொடுக்கவேண்டாமா? ராஜபக்ஷே அரசுக்கு மறைமுகமாகத் துணை நிற்கிறது மத்திய அரசு.''

இலங்கைத் தமிழர் பிரச்னை வெளிநாட்டுப் பிரச்னை என்கிறாரே பிரணாப் முகர்ஜி?

``பிரணாப் முகர்ஜி மட்டுமா சொன்னார். பேராசிரியர் அன்பழகனும் சொல்கிறாரே. எவ்வளவு பொருத்தமற்ற பேச்சு இது? கிழக்கு வங்காளத்தில் இந்தியப் படையை அனுப்பி வங்கதேசத்தை உருவாக்கியபோது, அது வெளிநாட்டுப் பிரச்னையாகத் தெரியவில்லையா? விடுதலைப்புலிகளுக்குப் புகலிடம் கொடுத்து அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து இந்திராகாந்தி துணை நின்றபோது அது வெளிநாட்டுப் பிரச்னையாகத் தெரியவில்லையா? ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது வான்வழியாக இலங்கைத் தமிழர்களுக்கு உணவுப்பொட்டலம் அளித்தாரே, அப்போது அது வெளிநாட்டுப் பிரச்னையாகத் தெரியவில்லையா? ஈழத் தமிழர் பிரச்னையில் அரசியல்வாதிகள் அனைவரும் நடிக்கிறார்கள்.''

கலைஞர், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் ஈழத்தமிழர் பிரச்னையில் அக்கறை உள்ளவர்கள்தானே?

``அப்படி அக்கறையுள்ளவர்கள் என்றால், தமிழகத்தில் எதற்கு இரண்டு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்புகள்? தமிழ் இனத்தைப் பாதுகாக்கக் கூட ஒன்றுபடாதவர்கள் வேறு எதற்கு கட்சிமாச்சரியங்களைக் கடந்து ஒன்றுபடப் போகிறார்கள்? ஈழத்தமிழர் நலனுக்காக ஒரு கூட்டணி. கட்சிகளின் சுயநலனுக்காக ஓர் அரசியல் கூட்டணி என இரு வேடமிட்டு நடிக்கும் இந்த நடிகர்களை தமிழினம் முதலில் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்.''

அப்படியென்றால் ஈழத்தமிழர் நலன் காக்க கட்சிகள் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

``தமிழ் மொழி, இனத்தின் மீது அக்கறை கொண்டவர் கலைஞர். இலங்கைத் தமிழர்களுக்காக அவர் மூன்று முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் `ஐயகோ.. தமிழினம் அழிகிறது' என அபயக்குரல் கொடுத்தும் சற்றும் செவிசாய்க்காத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து அவர் விடுபடவேண்டும். ஈழத் தமிழர் நலனுக்காகக் குரல் கொடுக்கும் பா.ம.க., ம.தி.மு.க., இடதுசாரி இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும். அந்தக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால் நாற்பது தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினால், மாநிலத்தில் ஆட்சி போய்விடும் என கலைஞர் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. அப்படியே ஆட்சி போனாலும், 1971 தேர்தலைப் போல சரித்திரம் காணும் வெற்றியை அவர் பெறுவார். முதல்வர் என்ற மகுடம் பறி போனால் மீண்டும் பெறலாம். ஆனால், தமிழினத் தலைவர் என்ற தகுதியை இழந்துவிட்டால் மீண்டும் பெறமுடியாது.''

பிரியங்கா - நளினி சந்திப்புக் குப் பிறகுதான் இலங்கையில் தமிழர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது என்ற பேச்சு உள்ளதே?

``பிரியங்கா- நளினி சந்திப்பால் அகமகிழ்ந்ததில் நானும் ஒருவன். தவறு செய்தவர்களை மன்னிக்கும் மாண்பு சோனியா காந்தி குடும்பத்தினருக்கு இருக்கிறது என பெருமிதம் கொண்டேன். காந்திஜியின் தாக்கம் காங்கிரஸில் இருக்கிறது என மகிழ்ந்தேன். ஆனால், இன்றைக்கு ஈழத்தமிழர் பிரச்னையில் சோனியாகாந்தி வாய்மூடி மௌனமாக இருப்பதைப் பார்க்கிறபோது, நளினி - பிரியங்கா சந்திப்பு ஏற்படுத்திய நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் மறைந்து விட்டது. சந்தேகம்தான் எஞ்சி நிற்கிறது.''

விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் நீங்கள். அந்த இயக்கத்தைத் தவிர்த்து இலங்கையில் ஈழத்தமிழர்கள் அமைதியான வாழ்வு வாழ்வது சாத்தியமென நினைக்கிறீர்களா?

``ஆயுதம் தூக்கும் எந்த இயக்கத்தையும் ஆதரிக்க முடியாது. அதே நேரத்தில் இலங்கையில் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி. பௌத்தம் மட்டுமே ஆட்சி மதம் என்றிருந்தால் சமத்துவம், சகோதரத்துவம் எப்படி சாத்தியம்? இந்த இரண்டுமில்லாத இடத்தில் ஜனநாயகம் எப்படி இருக்கும்? வன்முறை கூடாது என்று கூறும் காந்திஜியே கூட ஒரு பெண்ணின் கற்புக்கு ஆபத்து வருமென்றால், அவள் தனது கூரிய நகத்தைக் கூட ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்கிறார். இலங்கையில் அறவழியில் நடந்த ஒப்பந்தங்கள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. பிரபாகரனைத் தவிர்த்துவிட்டு தமிழ்ஈழம் காண்பது இன்றைய சூழலில் இயலாது. ஈழத்தில் தமிழ் இனம் அழியாமல் இருக்கவேண்டுமானால், பிரபாகரனால்தான் முடியும் என உலகளவிலுள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் நினைக்கிறார்கள். வரலாறு திரும்பும் என்பார்கள். இப்போது அது நடந்திருக்கிறது. அன்றைய ஹிட்லர்தான் இன்றைய ராஜபக்ஷே.''

ஈழத்தமிழர் போராட்டத்துக்கு தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாகக் கருதுகிறீர்களா?

``என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது, `தி.மு.க. தூண்டுதலால் சிலர் நடத்தும் கிளர்ச்சி இது. இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்தில்லை' என ஆரூடம் சொன்னார் அப்போதைய முதல்வர் பக்தவத்சலம். ஆனால், அன்றைக்கு மக்கள் மனதில் இருந்த கொதிநிலையே தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இது அண்ணாவே எதிர்பார்க்காத வெற்றி. அந்தக் கொதி நிலை இன்று உள்ளது. மக்கள் மௌனமாக இருக்கிறார்கள். இனத்துக்குத் துரோகம் இழைப்பவனை என்றும் மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.''

நீங்கள் காங்கிரஸில் இருந்து விலகிவிட்டீர்கள். வேறு கட்சிக்கு செல்வீர்களா?

``இந்தத் சூழலில் தமிழக காங்கிரஸைப் பற்றிச் சொல்ல வேண்டும். தமிழக காங்கிரஸ் தற்போது இறுதி மூச்சை நிறுத்திவிடும் நிலையில் உள்ளது. தமிழக மக்களின் எந்த வாழ்வாதாரப் பிரச்னையிலும் தமிழக காங்கிரஸின் தலைமையை அலங்கரிப்பவர்களுக்கு அக்கறையில்லை. திராவிடக் கட்சிகளின் தோளில் அமர்ந்து கொண்டு சிலருக்கு எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளைப் பெற்றுத் தரும் ஒரு தரகு நிறுவனமாகி விட்டது தமிழக காங்கிரஸ். இனப்பற்றோ, மொழிப்பற்றோ தமிழக காங்கிரஸ் தலைமைக்கு இல்லை. இனத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டதென்றால், அதை எதிர்க்கும் தார்மீக ஆவேசமும் இம்மியளவு இல்லை. எந்த அரசியல்கட்சி மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. நாற்பதாண்டுகளை அர்த்தமற்று அரசியல் அரங்கில் வீணாக்கிவிட்டோமோ என்ற கழிவிரக்கம் ஏற்பட்டுள்ளது. இனி அரசியலுக்கு அப்பால் சமூக நலம் சார்ந்து என் எழுத்து, பேச்சின் மூலம் முனைப்பாகப் போராடுவேன். பணம் சம்பாதிக்கும் நோக்கம், அதிகாரப் பதவி வேட்கை என இரண்டுமற்ற, பொதுவாழ்வைத் தூய்மைப்படுத்த விரும்பும் அரசியல் சாராத அமைப்புகளுக்கு காந்தியவாதியாய்த் துணை நிற்பேன்...'' என முடித்தார் தமிழருவி மணியன்.

பிரணாப்புக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்த முயன்ற வைகோ உள்ளிட்ட 150 பேர் கைது

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்த முயன்ற மதிமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏ.,க்கள் உட்பட சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஈழம் என்பதை ஏற்றுக்கொண்டு ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரிலே பெரியார் திராவிடர் கழக தலைமைக்கழக உறுப்பினர் பால்.பிரபாகரன் ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அன்ல் மின் நிலையத்தை அமைக்கின்றன.108 ஹெக்டேர் பரப்பில் அமையும் இந்த அனல் மின் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி, எட்டயபுரம் சங்கரப்பேரி விலக்கு அருகே இன்று நடக்கிறது.


இதில் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அங்கிருந்து தூத்துக்குடி சென்றார்.


தமிழர் விரோதப்போக்கையே கடைப்பிடித்து இந்திய நாடாளுமன்றத்திலும் இராஜபக்சேயின் குரலையே ஒலித்த பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி இராஜாஜி பூங்கா அருகில் மதியம் 2.30 மணியளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் , தமிழர் தேசிய இயக்கத்தின் தூத்துக்குடி தமிழ்நேயன் ஏற்பாட்டில் , பெரியார் திராவிடர் கழக பால்.பிரபாகரன் ஒருங்கிணைப்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் பிரணாப் முகர்ஜியின் உருவப்படத்தினை செருப்பாலும் , துடைப்பத்தாலும் அடித்து நெருப்பால் எரித்தனர். பின்பு ஊர்வலமாக செல்ல முயன்ற அனைவரும் வி.வி.டி சிக்னல் அருகில் காவல்துறையால் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழர்கள் அனைவரும் வாகனங்களில் ஏற்றப்பட்டு மண்டபத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் தமிழர் தேசிய இயக்க சுக.மகாதேவன் , பெரியார் திராவிடர் கழக மாநகரத்தலைவர் கோ.அ.குமார் , தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் டி.பிரபு , மனித உரிமைக்கழக வழக்கறிஞர் அதிசயகுமார் , பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் சி.அம்புரோசு, மதிமுக தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜோயல், வழக்கறிஞர் நக்கீரன் , பெரியார் திராவிடர் கழக பால்ராசு சா.த.பிரபாகரன் , க.மதன், வ.அகரன் விருதுநகர் மதிமுக எம்.எல்.ஏ, வரதராஜன், சிவகாசி மதிமுக எம்.எல்.ஏ ஞானதாஸ் , இந்திய பொதுவுடைமைக்கட்சியின் க.மோகன் , சந்தானம் , விடுதலைச்சிறுத்தைகள் மாநகரத்தலைவர் செந்தமிழ்பாண்டியன் மற்றும் திரளான தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டு கைதாகினார்கள்.















ஊடகச் சுதந்திரத்தை நசுக்கும் சிறிலங்கா : தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் கண்டனம்

அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டிய கடமை ச‌ர்வதேச சமூகங்களுக்கு உண்டு. ஜனநாயகப் படுகொலைகளைச் செய்யும் சிறிலங்கா அரசை கண்டிப்பான முறையில் ச‌ர்வதேச நாடுக‌‌ள் அணுக வேண்டும் என 'ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர்' மன்றம் கூ‌றியுள்ளது.

'ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர்' மன்றத்தின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்களான டி.அருள்எழிலன், சரவணன் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

இலங்கையில் எழுந்துள்ள போர்ச்சூழல் என்பது அங்கு வாழும் தமிழ் மக்களின் இயல்பான சமூக வாழ்வை முற்றிலுமாக சீர்குலைத்திருப்பது நீங்கள் அறிந்ததே!

இலங்கையை ஒரு ஜனநாயக நாடாக அனைத்துலக சமூகம் அங்கீகரித்திருக்கும் சூழலில் சிறிலங்காவின் போர் வெறி மிக மோசமான அளவுக்கு பரவி வருகின்றது.

மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தினர் போன்றோர் கூட போர் பூமிக்குள் எப்பக்க சார்புமற்று பணி செய்ய முடியாத சூழல்.

ஒட்டுமொத்தமாக இந்தப் பிரிவினர் அனைவரும் சிறிலங்கா அரசால் அச்சுறுத்தப்படுகின்றனர். இம்மாதிரி மனித உரிமையாளர்களையும் சமூகப் பணியாளர்களையும் அச்சுறுத்த சட்டவிரோதக் குழுக்களை சிறிலங்கா அரசு உருவாக்கி வைத்திருக்கின்றது.

வெள்ளை வான் எனப்படும் சட்டவிரோத ஆயுதக்குழுவால் அரசியல் பணியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கடத்திக்கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இலங்கை, பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு நாடாக மாறிவிட்டது. போருக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டே அரசியல் கருத்துக்களை வெகு மக்களிடையே பகிர்ந்து கொள்ள நினைக்கும் பத்திரிகையாளர்கள் மிகக் கோரமாக கொல்லப்படுகின்றனர்.

2006 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை இருபதுக்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா அரசின் இனவாதப் போக்கை சுட்டிக்காட்டியும் விமர்சித்தும் எழுதியவர்களே!

இன்று கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு முல்லைத்தீவுக்குள் சிறிலங்கா இராணுவம் நுழைந்திருக்கும் சூழலில் பெரும் இராணுவ அடக்குமுறை இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் பத்திரிகையாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

நீண்டகால கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுவதன் அடையாளமாக, ஜயாத்துரை நடேச‌ன், மயில்வாகனம் நிமலராஜ‌ன், ரிச்சர்ட்டி டி சொய்ச, தேவிஸ் குருக, தர்மரத்தினம் சிவரா‌ம், ரேலங்கி செல்வரா‌ஜ், நடராஜா அற்புதராஜா, ஐ.சண்முகலிங்க‌ம், சுப்ரமணியம் சுகிர்தராஜ‌ன், சின்னத்தம்பி சிவமகாரா‌ஜ், சம்பத் லக்மால் சில்வ, இசைவிழி செம்பிய‌ன், ரி.தர்மலிங்க‌ம், சுரே‌ஸ், கேதீஸ் லோகநாத‌‌ன், சந்திரபோ‌‌ஸ், புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி எனப் பலரும் படுகொலையாகி வீழ்ந்திருக்கின்றனர்.

அறம் சார்ந்து எழுத நினைக்கும் ஒரு படைப்பாளி இன்று சிறிலங்கா அரசின் பேரினவாதத்திற்கு பலியாகும் சூழல் உருவாகி இருக்கிறது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் 8 ஆம் நாள் புகழ்பெற்ற 'சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியரும் வழக்கறிஞருமான லசந்த விக்ரமதுங்க கொழும்பில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

சமீபத்தில் அவரது மனைவி தனது மூன்று குழந்தைகளுடனும் இலங்கைத் தீவை விட்டு வெளியேறி உள்ளார். 'இதுவரை தன் கணவரின் கொலைக்கான விசாரணையை சிறிலங்கா அரசு தொடங்கவில்லை' என்று குற்றம் சுமத்தியும் இருக்கின்றார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக எப்படி சோனாலி சமரசிங்க வெளியேறினாரோ அதுபோல சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் அரசியல் அடைக்கலம் கேட்டு தலைமறைவாக இலங்கையில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கையின் புகழ்பெற்ற பத்திரிகையாளாரான இக்பால் அத்தாஸ் கூட இலங்கையில் வாழ முடியாமல் வெளியேறி இருக்கின்றார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (26.02.09) யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' பத்திரிகையின் ஆசிரியரும் கொழும்பில் இருந்து வெளிவரும் 'சுடரொளி' பத்திரிகையில் ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன் (வயது 51) கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

மூன்று வெள்ளை வான்களில் வந்த ஆயுததாரிகளும், காவல்துறை சீருடையில் வந்தவர்களும் இவரை கல்கிசையில் பொதுமக்கள் முன்னிலையிலேயே கடத்தியதாக தெரியவந்துள்ளது.

சிறிலங்கா அரசு நடத்தும் போர் தொடர்பாகவும் பாதிக்கப்படும் மக்கள் பற்றியும் செய்திகளை வெளிக்கொண்டு வருவதில் சுடரொளியும், உதயனும் மிக முக்கிய ஊடகப்பங்களிப்பை ஆற்றி வந்தன.

இந்நிலையில்தான் இந்த ஜனநாயக விரோத நிகழ்வு நடந்திருக்கின்றது.

இந்நிலையில் வித்தியாதரன் கடத்தப்படவில்லை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார் என்று இலங்கையின் ஊடகப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்திருக்கின்றார்.

இலங்கைக்குள் வாழும் சிங்கள தமிழ் பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது, தமிழகத்திலும் துணைத் தூதுவர் அம்சாவின் நடவடிக்கைகள் ஊடகச் சுதந்திரத்துக்கு எதிரான ஒன்றாக மாறிவருகின்றது.

அக்கிரமான போரில் மடிந்து வரும் தமிழ் மக்கள் சார்ந்து செய்தி வெளியிட்ட 'நக்கீரன்' இதழை மிரட்டும் வகையிலான அம்சாவின் அறிவிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

'மக்கள்' தொலைக்காட்சியை ஒளிபரப்பு செய்ய விடாமல் அச்சுறுத்தும் சிறிலங்கா அரசு ஊடகங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

ஒரு ஊடகவியலாளரை அரசே கடத்திக் கைது செய்து விசாரிக்கும் விசாரணை முறைகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

சந்தேகிக்கப்படும் நபர்களை விசாரணைக்கு உட்படுத்த வென்று நீதிமன்ற நடைமுறைகள் இருக்கும் போது இவ்விதமான நடவடிக்கைகள் அச்சமூட்டுகிற ஒன்றாக இலங்கையில் வளர்ந்து வருவது கவலையளிக்கின்றது.

சிறிலங்கா அரசின் இவ்விதமான ஊடக ஒடுக்குமுறைகளை, பத்திரிகையாளர்களின் படுகொலைகளைகளை ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் என்ற முறையில் ந.வித்தியாதரனின் கைது அல்லது கடத்தல் குறித்து மிகந்த கவலை அடைகின்றோம். மனித உரிமைகள் மீறப்பட்டு பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் சுழலில், இந்தக் கைதும் சிறிலங்கா அரசின் போர் வெறியை நமக்கு உணர்த்துகிறது.

ஏனைய பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்த கதி வித்தியாதரனுக்கும் நடந்து விடுமோ என்று அச்சப்படுகின்றோம்.

அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டிய கடமை அனைத்துலக சமூகங்களுக்கு உண்டு. ஜனநாயகப் படுகொலைகளைச் செய்யும் சிறிலங்கா அரசை கண்டிப்பான முறையில் அனைத்துலக சமூகம் அணுக வேண்டும்.

உடனடியாக ந.வித்தியாதரன் விடுதலை செய்யப்பட வேண்டும். வித்தியாதரன் மற்றும் அவரது உறவினர்களின் பாதுகாப்பை அனைத்துலக சமூகங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக இலங்கையில் வாழும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்துக்கும் அனைத்துலக சமூகங்கள் ஒரு உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என கோருகின்றோம்.

சிறிலங்கா அரசின் இனப்படுகொலைகளுக்கு எதிராக நாம் பேசுவோம்! எழுத்து உரிமைக்காக குரல் கொடுப்போ‌ம்.

இ‌வ்வாறு அ‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

போர்க்களத்தில் பொட்டுஅம்மன்:புலிகளை வழிநடத்தும் பொறுப்பு


முல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிருப்பு நகரையொட்டியுள்ள பகுதிகளில் இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.

தற்போது, இந்த போரில் புலிகள் இயக்க புலனாய்வு பிரிவின் பொறுப்பாளரும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வலது கரமாக கருதப்படுபவருமான பொட்டு அம்மன் குதித்து இருக்கிறார்.

நேற்று முன்தினம் இரவு முதல் சிங்கள ராணுவத்தின் 58-வது படைப்பிரிவினருக்கு எதிரான போரை அவர் வழிநடத்த ஆரம்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விடுதலைப்புலிகளின் தொலைத்தொடர்புகளை ஒட்டுக்கேட்டதன் மூலம் இந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டு உள்ளதாக இலங்கை பாதுகாப்பு படை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கி நேற்று காலை வரையில் நடந்த மோதல்களின்போது விடுதலைப்புலிகளை பொட்டு அம்மன் வழி நடத்தி இருக்கிறார் என்றும் ராணுவம் தெரிவித்து இருக்கிறது.

3 நாட்களுக்கு முன்பு, 58-வது படைப்பிரிவினர் பெரும் உயிர்ச்சேதங்களை சந்தித்திருந்ததும், ஆயிரத்துக்கும் மேலான ராணுவத்தினர் இறந்தும், 3 ஆயிரம் பேர் வரை காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம்

இலங்கையில் தற்போது தோன்றியுள்ள மனித அவலங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

இலங்கை தொடர்பான விவாதங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கைகள் விடுக்கப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை தலைவர் யூகியோ ரகாசோ கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இலங்கை விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பான விவாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் நிகழ்ச்சி நிரலில் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐந்து நிரந்தர உறுப்புரிமை உள்ள நாடுகளில் ஒரு நாட்டைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பது குறித்து கடந்த புதன்கிழமையே உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம் பாதுகாப்புச் சபையில் சேர்க்கப்பட்டது இலகுவான காரியம் அல்ல. சிறிலங்கா அரசுடனும் இது குறித்து தொடர்பு கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்கு அறிவித்தலும் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலை குறித்தான விவாதம் 'ஏனைய விவாதங்கள்' பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தே.மு.தி.க (விஜயகாந்த்) பிரமுகர் தீக்குளிப்பு

இலங்கையில் நடந்து வரும் போரில் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றக்கோரி தேமுதிக பிரமுகர் சீனிவாசன் என்பவர் தீக்குளித்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 36 அகவையான கூலித் தொழிலாளி சீனிவாசன் சிறு அகவை முதல் விஜயகாந்தின் தீவிர ரசிகர். விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்து வள்ளிப்பட்டு கிராமத்தின் தேமுதிக கிளைச் செயலாளராக உள்ளார். காதல் திருமணம் செய்துகொண்ட சீனிவாசனுக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

இவர் நேற்று வியாழக்கிழமை மாலை வாணியம்பாடி நகருக்கு சென்றபொழுது பேருந்து நிலையத்தில் இலங்கையில் நடக்கும் போரில் பாதிக்கப்படும் அப்பாவித் தமிழர்களை காக்கக் கோரி சென்னையில் தீக்குளித்த முத்துக்குமாரின் படம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இரவில் வீட்டுக்கு வந்தவர் தொலைக்காட்சி செய்திகளிலும் ஈழப்பிரச்சனை குறித்த நிகழ்ச்சியை பார்த்துள்ளார். இதனால் மனம் கலங்கிய சீனிவாசன், இலங்கையில் இப்படி கொடுமை நடக்கிறது இதை தடுக்க வேண்டும் என்று தனது குடும்பத்தாரிடம் சொல்லியுள்ளார்.







இரவு 10.50 மணியளவில் திடீரென்று மண்ணெண்ணெய் கானை எடுத்துக்கொண்டு தனது வீட்டருகே இருந்த தேமுதிக கொடி கம்பத்துக்கு சென்றவர் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.தீ பற்றி எரிய ஆரம்பித்தவுடன், தீயின் எரிச்சலால், அவர் கத்திக்கொண்டு ஓடிய அவரை குடும்பத்தாரும், ஊராரும் சேர்ந்து தீயை அணைத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் தீக்காயம் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சீனிவாசனை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

தீக்குளித்த சீனிவாசன் காவல்துறையினரிடம் கூறுகையில், " இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்ப்படுகிறார்கள். இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களை தமிழக அரசு காக்க வேண்டும். எங்களுடைய கட்சி (தே.மு.தி.க) இலங்கை தமிழர்களுக்காக அதிகம் போராட வேண்டும். எங்களுடைய கட்சி (தே.மு.தி.க) இலங்கை தமிழர்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுவதில்லை. தேமுதிக இலங்கை தமிழர்கள் வாழ்க்கையில் விடிவு பிறக்கும் வரையில் போராடிக்கொண்டிருக்க வேண்டும். நான் தீக்குளித்ததை கேப்டனிடம் (விஜயகாந்த்) சொல்லுங்கள் " என்றார்.

சிறிலங்காவின் வான், கடல், தரைப் படைகள் வன்னியில் கோரத் தாக்குதல்: 143 தமிழர்கள் படுகொலை; 350 பேர் காயம்

வன்னியில் சிறிலங்காவின் முப்படையினரும் இணைந்து நடத்திய கோரத் தாக்குதல்களில் நேற்றும் இன்றும் 143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 350 காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் மாலை வரை சிறிலங்காவின் தரை, கடல், வான் படையினர் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 98 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 265 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர் மடம் பகுதிகளில் நேற்று முழு நாளும் சிறிலங்காவின் தரை, கடல், வான் படையினர் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 45 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றும் இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களின் போது தரைப்படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களையும் கடலில் இருந்து கடற்படையினர் பீரங்கித் தாக்குதல்களையும் வான் படையினர் எம்.ஐ.-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் மூலம் தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்கிரமடைகின்றது வன்னிப் போர்; முன்னேற முடியாமல் சிங்களப் படைகள் முடக்கம்: 3 நாட்களில் 900 படையினர் பலி: 2,000-க்கும் அதிகமானோர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் ஆறாவது நாளாக தொடர்ந்து மேற்கொள்ளும் முன்நகர்வுப் படையெடுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளால் தடுத்து தேக்கமடைய வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 900 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை-மைய வட்டாரங்களை தெரிவித்துள்ளதாவது:

புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் கடந்த ஆறு நாட்களாக தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.

இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

சிறிலங்கா படையினரின் 4 டிவிசன் படையினர் பெருமளவிலான சூட்டு வலுக்களை பாவித்து முன்நகர்வுத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் சிறிலங்கா படையினர் தரப்பில் 900 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி வதைமுகாமில் வைத்து ஆண்கள் பெண்களை படையினர் கொடுமையான சித்திரவதை


வன்னியில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வருகின்ற தமிழ் மக்களில் இளைஞர், யுவதிகளை இலங்கை இராணுவம் வேறாகத் தெரிவுசெய்து கிளிநொச்சி வைத்தியசாலையில் நிறுவி உள்ள வதைமுகாமில் வைத்து பெண்களை துஸ்ப்பிரயோகப்படுத்தியும், ஆண்களை கொடுமையான சித்திரவதைகளுக்குட்படுத்தியும் வருகின்றனர்.
முல்லைத்தீவில் இருந்து படையினரின கட்டுப்பாடடுப் பிரதேசத்துக்குள் வந்த தமிழ் பொதுமக்களில் ஆண்கள் பெண்கள் என வேறுபடுத்தி அதில் இளைஞர்களையும் , யுவதிகளையும் கிளிநொச்சி வைத்தியசாலையில் இயங்கும் இலங்கைப்படையினரின் வதைமுகாமிற்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு ஆண்களை தமது பணிகளைச்செய்ய துன்புறுத்துவதோடு சித்திரவதைப்படுத்தி கொலையும் செய்து வருன்றனர். பெண்கள் கட்டடத்தின் மேல்பகுதியில் வைத்து இரவுநேரங்களில் தற்காலி விடுமுறையில் உள்ள படைவீரர்களினால் கற்பழிக்கப் பட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் இரவு நேரங்களில் கற்பழிக்கப்படுகின்ற பெண்களின் கூக்குரல் சத்தம் கேட்டுக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா மற்றும் விசுவமடு இடைத்தங்கள் முகாம்களில் உள்ளமக்களால் இலங்கை இராணுவத்தினரின் திரைமறைவிலான இந்தக்கொடுமைகளால் தமது பல பிள்ளைகள் தடுத்திவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது பிள்ளைகள் தொடர்பாக பெற்றோர் இராணுவத்தினரை வினவியபோதும் அவர்களுக்கு எவ்வித பதில்களும் கிடைக்கவில்லை என ககவலைதெரிவித்துள்ளனர்.

வவுனியா இடைத்தங்கல் முகாமிற்கு ஐ.நா. பிரதிநிதி ஜோன் கொல்ம்ஸ் விஜயம் செய்தபோது தாய் ஒருவர் தனது மகனை இராணுவத்தினர் கடத்திசென்றுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் விடுதலைப் புலிளே தமது மகனை கடத்திச்சென்றுள்ளனர் என அத்தாய் தெரிவிப்பதா கொல்ம்ஸிடன் மொழிபெயர்த்து கூறப்பட்டுள்ளது.

வன்னிப் பிரதேசங்ளில் அகப்படுககின்ற பொதுமக்கள் தொடர்பில் எந்தத்தடையும் இன்றி இராணுவத்தினர் தமது விருப்பத்திற்கேற்ப செயற்படும் வகையில் இராணுவத் தலைமைகளினால் இராணுவத்தினருக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ உயர்மட்ட அதிகாரி ஒருவரிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.

இலங்கை வான்படையின் விமானம் வன்னியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது

இலங்கை வான்படையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ்விமானம் வானில் வெடித்ததை பலபொதுமக்கள் கண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு அணியினர் இதனைச் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் விடுதலைப்புலிகள் இதுதொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவித அறிவித்தலும் வெளியிடவில்லை.

முன்னதாக சிறீலங்கா வான்படையின் விமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் ராடரைவிட்டு மறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

வன்னி வான்பரப்பில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடாத்த சென்ற போது காணமல் போயுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி வெளிவந்துள்ளது.

இதேநேரம் தேவிபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இன்று மட்டும் பல தடவைகள் சிறீலங்கா வானூர்திகள் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளன.

இதேவேளை விமானப்படையினர் இன்று வன்னியில் எவ்வித வான் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் புலிகளின் தாக்குதலுக்கு யுத்தவிமானம் எதுவும் இலக்காகவில்லை என்றும் விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

"உதயன்" ஆசிரியர் வித்தியாதரன் கைது! கடத்தல் பாணியில் கைவரிசை; பின்னர் கைது என அறிவிப்பு


"உதயன்" பத்திரிகையின் ஆசிரியரும் "சுடர் ஒளி" பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன் நேற்றுக் காலை வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் வலுக்கட்டாயமாக கடத்தல் பாணியில் கூட்டிச்செல்லப்பட்டார்.
கொழும்பு கல்கிஸைப் பகுதியில் தமது உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் அவர் கலந்து கொண்டிருந்தவேளை, வெள்ளை வான் ஒன்றில் பொலிஸ் சீருடையிலும், சிவில் உடையிலும் ஆயுதங்களுடன் வந்த ஏழுபேர் கொண்ட குழு ஒன்றே அவரை வலுக்கட்டாயமாக வானில் ஏற்றிச் சென்றது.

பொலிஸ் சீருடையில் இருந்த மூவர், முதலில் வானி லிருந்து ஆயுதங்களுடன் இறங்கிவந்து வித்தியாதரனை வலுக்கட்டாயமாக கையில் பிடித்து இழுத்துச் செல்ல முயன் றனர். எனினும் அங்கு நின்ற "உதயன்", "சுடர் ஒளி" பத்திரி கைகளின் நிர்வாக இயக்குநர் ஈ. சரவணபவன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

"எங்கே கொண்டுசெல்கிறீர்கள்?" என்று அவர் பொலிஸாரிடம் கேட்டார். அதற்கு பொலிஸார் "பொலிஸ் நிலையத்திற்கு" என்று கூறிவிட்டு மீண்டும் வித்தியாதரனை இழுத்தனர்.அந்தவேளையில் குறித்த வெள்ளை வானில் இருந்து இறங்கிய, சிவில் உடை தரித்த நால்வர் உரத்துச் சத்தமிட்டு அங்கிருந்தோரை பயமுறுத்தியவாறு, அவ்விடத்துக்கு வந்து வித்தியாதரனை தரதரவென இழுத்துச் சென்று வானில் தூக்கிப் போட்டனர். அவர்களின் பலாத்காரத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து குறுக்கே நின்றவர்களை அவர்கள் கீழே தள்ளி விழுத்திவிட்டு வானில் வேகமாகச் சென்றுவிட்டனர். இதன்போது நிர்வாக இயக்குநரும் வேறுசிலரும் சிறுகாயங்களுக்கு உள்ளாகினர்
.
"வெள்ளை வான் கடத்தல்" பாணியில், பலாத்காரமாக மேற்கொள்ளப்பட்ட இந்தச் சம்பவம் குறித்து அரசியல் உயர்வட்டாரங்களுக்கும் ஊடக அமைப்புக்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கல்கிஸை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது ஒரு கடத்தல் சம்பவம் என்றே முதலில் பலதரப்பிலும் இருந்து செய்திகள் வெளியாகின. கல்கிஸைப் பொலிஸார், இச்சம்பவம் குறித்து அங்கு முறைப்பாடு செய்யச் சென்றவர்களின் வாகனத்தில் தாமும் ஏறி, ரத்மலானை, பொரலஸ்கமுவ பகுதிகளுக்குச் சென்று குறித்த வெள்ளை வான் அந்தப் பகுதிகள் ஊடாகச் சென்றதா என்று ஆங்காங்கே இருந்த சோதனைச் சாவடிகளில் விசாரித்தனர். பின்னர் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்டதாக பின்னர் அறிவிப்பு.ஆனால் இந்த அமளிதுமளிகளுக்கு மத்தியில் சிறிது நேரத்தின் பின்னர் வித்தியாதரன் பொலிஸாரால் விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் கொழும்பில் விடுதலைப் புலிகள் விமானங்கள் மூலம் தற்கொலைத் தாக்குதல் நடத்திய வேளையில் வித்தியாதரன் தமது கைத் தொலைபேசி மூலம் உரையாடியமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதனாலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் குலுகல்லவும் தெரிவித்தனர்.

"கொழும்பில் புலிகள் விமானத் தாக்குதல் நடத்திய சந்தர்ப்பத்தில் வித்தியாதரனின் தொலைபேசிக்கு வழமைக்கு மாறாக கூடுதலான அழைப்புக்கள் வந்துள்ளன. இதனடிப்படையில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரிலேயே விசாரணைக்காக அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

"கைது செய்யப்படும் போது இவர் ஓர் ஊடகவியலாளர் என்றோ பத்திரிகையின் ஆசிரியர் என்றோ பொலிஸார் அறிந்திருக்கவும் இல்லை. இவர் நிரபராதியாக இருந்தால் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்படுவார். குற்றவாளியாக இருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்" என்று ஊடக அமைச்சர் யாப்பா கூறினார்.இதேவேளை ஆசிரியர் வித்தியாதரன் தெமட்டக் கொடையில் உள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் உறவினர்களுக்கு அறிவித்தனர்.அதனைத் தொடர்ந்து அவரது மனைவி, பிள்ளைகள் அவரைப் பார்க்கவும் பொலிஸார் அனுமதி வழங்கினர்.

அதன் பிரகாரம் அவர்கள் நேற்று மாலை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வித்தியாதரனைப் பார்வையிட்டு நலம் விசாரித்தனர் அவருக்கு உணவு மற்றும் மருந்து வகைகளையும் வழங்க பொலிஸார் அனுமதி வழங்கியிருந்தனர்.

வன்னியில் இருந்து மக்களை வெளியேற்ற மேற்கொள்ளும் முயற்சியை இந்தியா கைவிட வேண்டும்:பிரணாப்புக்கு இலங்கை எம்.பி. கடிதம்


இந்தியா வன்னியில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை உடன் கைவிட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜிக்கு இலங்கை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் மேலும் அக்கடிதத்தில்,

’’இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போரினை சிங்கள அரசு மிகவும் தீவிரப்படுத்தியுள்ளது.

பொதுமக்களை இலக்கு வைத்து திட்டமிட்டு மேற்கொண்டு வரும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் கடந்த 01.01.2009 முதல் 24.02.2009 வரையிலான 55 நாட்களில் மட்டும் 2,076 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 4,727 தமிழ் மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் அதிகளவில் அடங்குகின்றனர்.

காயமடைந்தவர்களில் சிகிச்சைகளுக்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரால் 24 ம் தேதி வரை 1948 பேர் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளவர்கள் சிங்களவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு சிகிச்சைகளுக்காக பலவந்தமாக அனுப்பப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு உதவிக்காக வந்தவர்கள் பலவந்தமாகப் பிரிக்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உறவினர்கள், நண்பர்களின் உதவிகள் எதுவும் இன்றி மனிதாபிமான நெருக்கடிகளை காயமடைந்தவர்களும் உதவிக்கு வந்தவர்களும் எதிர்நோக்கி வருகின்றனர்.

சிகிச்சைகளுக்காக கொண்டு வரப்பட்டவர்கள் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள போதிலும் அவர்களின் உடல்கள் வன்னியில் உள்ள உறவினர்களிடம் அனுப்பி வைக்கப்படாமலேயே அடக்கம் செய்யப்படுகின்றது.

சிகிச்சைக்காக வந்த நோயளிகளும் உதவிக்கு வந்துள்ளவர்களும் மீண்டும் வன்னியில் உள்ள தமது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று இணைந்து கொள்ள அனுமதி மறுத்துள்ள சிங்கள அரசு, அவர்களை குடும்ப உறுப்பினர்களுடன் இணைவதனை தடுக்கும் வகையில் பலவந்தமாக முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர்.

இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசங்களுக்குள் வன்னியில் இருந்து இதுவரையில் 35,000 வரையான பொதுமக்கள் வந்துள்ளதாக அரசு கூறுகின்றது.

இவர்கள், அனைவரும் தாமாக விரும்பி வரவில்லை மாறாக மக்கள் வாழ்விடங்களை இராணுவம் திடீரென கைப்பற்றிய போது இராணுவத்தினரிடம் அகப்பட்டு இராணுவத்தினரால் பலவந்தமாக கொண்டு வரப்பட்டவர்களும் பெருமளவில் உள்ளனர்.

அவ்வாறு வந்த பொதுமக்களை ஆண்கள் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் வேறாகவும் தாய்மார் மற்றும் குழந்தைகள் வேறாகவும் பிரிக்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவ்வாறு அனுப்பப்படும்போது பெருமளவு பெண்களும் ஆண்களும் படையினரால் தெரிவு செய்யப்பட்டு இரகசிய முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஆண்கள் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.

எஞ்சியவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் பெயர் விபரங்களை இராணுவம் இரகசியமாக வைத்துள்ளது.

குடும்பங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுளமையினால் எத்தனை பேர் காணமல் போனார்கள் யாருடய உறவினர்கள் காணாமல் போனார்கள் என்ற விபரங்கள் எதுவும் தெரியாமல் முகாம்களில் உள்ள மக்கள் தவிக்கின்றனர்.

முகாம்களில் உள்ள இளம் பெண்களும் ஆண்களும் விசாரணைகளுக்காக என்று கூறி இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டு துன்புறுத்தப்படுவதுடன் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும்போது அக்கொடூரத்தினை படையினர் வீடியோ காமிராக்களில் பதிவு செய்யும் கொடூரங்களும் நடைபெற்று வருவதாக முகாம்களில் இருந்து நம்பகமான தகவல்கள் வெளிவந்துள்ளது.

மக்கள் தமது பிரச்சினைகளை வெளியே யாருக்கும் சொல்ல முடியாத அளவுக்கு இராணுவத்தினரதும் துணை இராணுவக் குழுவினரதும் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதாக முகாம்களில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் பெருமளவானோர் தாம் வன்னியில் உள்ள தமது உறவினருடன் சென்று மீண்டும் இணைந்து கொள்ள விரும்புவதாகவும் ஆனால் அது தொடர்பாக பேசினால் இராணுவத்தினரால் தாம் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட நேரிடும் என அஞ்சுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் கொழும்பு உட்பட தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் கடத்தப்பட்டும் உள்ளனர்.

அப்பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள், சித்திரவதைகள், கொள்ளைகள் என்பன தாராளமாக நடைபெற்று வருவதுடன் மிக வேகமான சிங்கள மயமாக்கலும் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திலும் ஏற்கனவே இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நிலை நிறுத்தவோ சிங்கள மயமாக்கலை தடுக்கவோ இந்திய அரசாங்கத்தினால் முடியாமல் போய் உள்ளது.

சிறிலங்கா அரசின் நடவக்கைகளை நோக்கும் போது வன்னியில் எஞ்சியுள்ள பகுதிகளை கைப்பற்றி முழு அளவிலான இன அழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராகி வருவதை தெளிவாக உணர முடிகிறது.

இந்நிலையில் வன்னியில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டுவர முயற்சி செய்வது சிங்கள-தமிழ் மக்களுக்கு இடையிலான 60 ஆண்டுகால பிரச்சினைகளை தீர்க்க ஒரு போதும் உதவப் போவதில்லை.

இவ்வாறான நிலையில் வன்னியில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கான நம்பகமான பாதுகாப்பான வழிமுறைகளை கண்டறியுமாறும் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயாராக உள்ளதாகவும் இந்தியா கூறுவது தமிழ் மக்களை முழுமையாக அகதிகளாக்கி சிங்கள பௌத்த பேரினவாததிற்கு அடிமைகளாக்கி அழிப்பதற்கே வழி வகுக்கும்.

எனவே, இந்தியா வன்னியில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை உடன் கைவிட வேண்டும்’’ குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழர்களை காக்க தீக்குளிக்கும் தியாகம் நெஞ்சை உலுக்குகிறது:வைகோ


ஈழத்தமிழருக்காக தீக்குளிக்கும் தமிழர்கள் குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,

’’இந்திய வம்சாவளித் தமிழரான கோகுல ரத்தினம் இலங்கைக்கு மூன்று தலைமுறைக்கு முன்னால் சென்ற குடும்பத்தில் பிறந்தவர்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் வந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனையூர் ஊராட்சி காந்தி நகரில் சிலோன் காலனியில் வசித்து வந்தார்.

ஈழத்தமிழர்கள் படும் துன்பத்தை எண்ணி பல நாட்களாக வேதனையில் தவித்து வந்துள்ளார். தியாகி முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபோது மனம் வெதும்பி வருந்தி உள்ளார். அவர் வசிக்கின்ற அத்தெருவில் முத்துக்குமார் வீரவணக்க சுவரொட்டிகள் காணப்படுகின்றன.

அவர் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு முன்னால் தீக்குளித்து உடல்கருகி அந்த இடத்திலேயே மாண்டு விட்டார். அவர் எழுதிய கடிதமும், ரேசன் அட்டையும் பக்கத்தில் கிடந்தது.

அக்கடிதத்தில் இலங்கைத் தமிழருக்காகத் தீக்குளிக்கிறேன் என்று ஒன்றுக்கு மூன்று முறை குறிப்பிட்டு எழுதி உள்ளார். நான் ஒரு தி.மு.க. தொண்டன் உடன் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். உடன் காப்பாற்று. தமிழா எழுந்திரு, தமிழா உயிரைக்கொடு என் தமிழ்மக்களைக் காப்பாற்ற எனது உயிரை அர்ப்பணிக்கிறேன்.

இதுதான் எனது கடைசி ஆசை உடனடியாக என் தமிழர்களைக் காப்பாற்று என்று வேண்டி விரும்புகிறேன். டாக்டர் கலைஞர் உடல் நலம் முன்னேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என் உயிரை தமிழ் மக்களுக்காகவும், தமிழினத் தலைவர்களுக்காகவும் அர்ப்பணிக்கிறேன்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்காகவும், இந்தியாவில் வாழும் தமிழக மக்களுக்காகவும் நான் தீக்குளித்து எனது உயிரை தமிழ் உணர்வுக்காக என் உயிரை தமிழ் மண்ணுக்காக விட ஆசைப்படுகிறேன்.

தமிழினத் தலைவர் உடல்நிலை நல்லபடியாக குணமடைய என்னுடைய உயிரை விடுகிறேன். திருமாவளவனைக் கைது செய்யாதே- வைகோவை கைது செய்யாதே- ராமதாசை கைது செய்யாதே- பழ. நெடு மாறனைக் கைது செய்யாதே. நான் ஒரு தமிழன் என்று எழுதி கோகுலரத்தினம் என்று கையெழுத்து இட்டுள்ளார்.

இவருக்கு ஒரு மகனும், இரண்டு புதல்வியரும் உள்ளனர். மூத்த பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவரது மகன் கிருஷ்ண ஆனந்தராஜ் கும்பகோணம் கள்ளப்புலியூர் கல்லூரியில் பி.ஏ. படிக்கிறார்.

ஈழத்தமிழர்களுக்காக ஏற்கனவே தீக்குளித்து உயிர்துறந்த முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், சென்னை சிவப்பிரகாசம் வரிசையில் ஏழாவது தியாகியாக கோகுலரத்தினம் தீக்குளித்து ஈழத்தமிழருக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

அவரது உன்னதமான தியாகத்தைப் போற்றி அவரது உடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினேன். ஈழத்தமிழர்களைக் காக்க நெருப்பில் தங்களை கருக்கிக் கொள்ளும் துணிவும், தியாகமும் நம் நெஞ்சை உலுக்குகிறது எனினும், அந்தக் குடும்பங்களின் வேதனையும், துயரமும் அதைவிட கடுமையானதாகும்.

எனவே, இனியாரும் தீக்குளிக்க வேண்டாம். உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடி வேண்டுகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் படத்தை பார்த்து பயப்படும் காங்கிரசார்: மணிவன்னண்


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வடகாடு கிராமம். வடகாடு கிராமத்தில் தமிழின உணர்வாளர்கள் சார்பில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு பொதுக்கூட்டம் 26ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு அப்பகுதியின் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விசை ஆனந்த் தலைமை தாங்கினார். (இது புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் புஷ்பராஜின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.)

இந்தக் கூட்டத்தில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவன்னண், திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, ஓவியர் புகழேந்தி ஆகியோர் சிறைப்புரை ஆற்றினார்கள்.

மணிவன்னண் பேசும்போது, பிரபாகரன் படத்தைப் பார்த்து காங்கிரஸ் கட்சிக் காரர்கள் கோபம் அடைகிறார்கள். பிரபாகரன் படத்தை பார்க்கவே பயப்படுகிறார்கள். அத்வானி, வாஜ்பாய் போன்றவர்களின் படங்கள் சமீபத்தில்தான் தமிழ் நாட்டுக்குள் வந்தது. அதை எல்லாம் ஏற்றுக்கொண்டவர்கள் ஏன் பிரபாகரன் படத்தைப் பார்த்து பயப்படுகிறார்கள்.

பிரபாகரன் படத்தை செய்தித்தாள்களில் போடுகிறார்கள். ஆனால் சட்டையில் குத்திக்கொண்டால் கைது செய்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பிரபாகரனின் படங்களை எடுக்க காங்கிரஸ் கட்சியினர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இந்தப் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் தங்களின் தலைவர்கள் படங்களை வைத்தால், இந்தக் கூட்டத்தினர் சும்மா விடுவார்களா? வரும் தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வரக்கூடாது என்பதே நமது நோக்கம்.

படத்தில் நடிக்கிற மணிவன்னண், வடிவேலுவை விட காமெடிகாரர்களாக இருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். ஈழத்தை உடைத்து அதில் ஆட்சி செய்வது நமது நோக்கம் அல்ல. அமைதி நிலவ வேண்டும் என்பதே நமது நோக்கம்.

கடந்த 15 வருடங்களாக பிரபாகரன் இறந்துவிட்டார், இறந்துவிட்டார் என செய்திகளை பரப்பி வருகின்றனர். கடந்த 15 வருடமாக ஒரு நபர் தொடர்ந்து இறந்து கொண்டிருக்கிறார் என்றால் அது பிரபாகரன் மட்டும்தான்.

தமிழினத்துக்கு துரோகம் செய்யும் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டோம். தமிழகத்தை விட்டே துரத்துவோம் என்றார்.

இந்திய மருத்துவ குழு இலங்கைக்கு பயணம்


இலங்கைக்கு உடனடியாக முழு அளவிலான அவசரகால மருத்துவ உதவி குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக செயலாளர் விஷ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைக்கு உடனடியாக முழு அளவிலான அவசரகால மருத்துவ உதவி குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது. மருத்துவர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், தேவையான மருத்துவ உபகரணங்களுடன் இந்த குழு இலங்கை செல்கிறது.

இந்தக் குழுவுக்கு தேவையான உதவிப் பொருட்களும் உடனுக்குடன் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுநிர்மாணம் செய்யவும், மறுவாழ்வு அளிக்கவும் இலங்கை அரசுடன் இந்தியா தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளிடம் இருந்து வன்னி மக்களை காப்பது எப்படி?

இன அழிவைத் தடுக்குமாறு தமிழர்கள் பேரணிகள் நடத்த, ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு சொல்கின்றது உலகம். உருப்படியான அரசியல் தீர்வை கொண்டு வந்தால், ஆயுதங்களுக்கான தேவையே இருக்காது என்கின்றனர் விடுதலைப் புலிகள். போரும், இனப்படுகொலையும் தொடர்கின்றன. இந்தப் பின்னணியில் நிலைமையை ஆராய்கின்றார் தி.வழுதி.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு இந்த முழு உலகமும் முனைப்புப்பெற்று நிற்கின்றது என்பது எம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த விடயம்.

ஆனால் - தமக்கு எவ்வகையிலும் பயமுறுத்தலாக அமையாத - ஒரு தேசிய இனத்தின் அரசியல் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உரிய சகல அருகதைகளையும் பெற்ற ஒரு இயக்கத்தை அழிப்பதற்கு இந்த உலகம் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது எதற்காக...?

சுருக்கமாகச் சொல்வதானால் - உலகத்தைப் பொறுத்த வரை - 'இது ஒரு தவறான முன்னுதாரணம்.'

'ஹல்க்' என்ற ஆங்கிலப் படத்தின் ஒரு காட்சியில் - மிக நல்லவனாக இருந்த போதும், மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட சக்தி பெற்றவனாக வளர்ந்து விட்ட தனது மகனை அழிக்க உலகம் ஏன் விடாப்பிடியாக முயற்சிக்கின்றது என்பதை தந்தை ஒரே வரியில் சொல்கிறார்: "He is unique; this world couldn't tolerate him" ("அவன் தனித்துவமானவன்; இந்த உலகத்தால் அவனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.")

எமது கதையும் இதுதான்.

உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் - பெரிதும் அறியப்படாத ஒரு மிகச் சிறிய மக்கள் இனத்திற்குள் இருந்து - உருவாகிய ஒரு இயக்கம், உலக விடுதலைப் போராட்டங்கள் எல்லாவற்றுக்குமே ஒரு முன்னுதாரணமாக ஆகி, தனித்துவமாய் எழுந்து நிற்பதை இந்த உலகத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

உலகத்தைப் பொறுத்தவரை - புலிகள் இயக்கம் தமக்கு நேரடி அச்சுறுத்தலாக இல்லாத போதிலும், புலிகளின் இந்த வளர்ச்சி தமது நலன்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒரு 'தவறான முன்னுதாரணம்.'

எனவே, விடுதலைப் புலிகளை அழித்து விடுவதற்கு முடிவு செய்து விட்டார்கள்.

எமது பங்கிற்கு, வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்களும் விடுதலைப் புலிகள் தொடர்பாகப் பேசுவதனை தவிர்க்க முடிவெடுத்து விட்டோம்.


அவுஸ்திரேலியாவில் தமிழர் பேரணி - 05.02.09

விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு மேற்குலகம் சொன்னதையிட்டோ, ஆயுதங்களைக் கைவிடுமாறு இந்தியா சொன்னதையிட்டோ அவற்றின் மீது எனக்கு அவ்வளவாகக் கோபம் வரவில்லை. மேற்குலகிடமும், இந்தியாவிடமும் வேறு எதனை நாம் எதிர்பார்க்க முடியும்...?

கடந்த ஏழு வருடங்களாக - படிப்படியாகத் தமது சுயரூபத்தைக் காட்டி எம்மைச் சீரழித்தது அவர்கள் தானே.

இந்தியா எங்கள் தலைகள் மீது நிகழ்த்தும் திருவிளையாடல்கள் தொடர்பாக ஏற்கெனவே நான் சற்று எழுதிவிட்டதால், ஆயுதங்களை விடுதலைப் புலிகள் கைவிட வேண்டும் என சிதம்பரம் சொன்னதற்காக ஆச்சரியப்படவோ, அது தொடர்பாக இன்னும் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்கவோ விரும்பவில்லை.

விடுதலைப் புலிகளை சரணடையுமாறு மேற்குலகம் சொன்னதையிட்டுத் தான் நாம் சற்று யோசிக்க வேண்டும்.

மேற்குலகம் அவ்வாறு சொன்னதையிட்டு தமிழர்களில் பெரும் பகுதியினருக்கு கோபம். ஆனால், அவ்வாறு கோபப்படுவதற்கு எமக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை.

நாம் உண்மையில் கோபப்பட வேண்டியது எம் மீதே தான்.

மேற்குலகின் போக்கிற்கு இடமளித்து - விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக வாய் திறந்து பேசுவதனை நாம் தான் இவ்வளவு காலமாகத் தவிர்த்து வந்தோம்.

தமிழீழத்தின் 80 வீதமான நிலத்தை விடுதலைப் புலிகள் ஆளுகை செய்த காலத்தில் - வீதிகளில் இறங்கி, "விடுதலைப் புலிகள் தான் எம் அரசியல் பிரதிநிதிகள்" என்று நாம் முழங்கியிருக்க வேண்டும்; "தமிழீழத் தனியரசுக்கான எமது போராட்டத்தை அங்கீகரியுங்கள்" என மேற்குலக அரசுகளை வற்புறுத்தியிருக்க வேண்டும்.

அதனை விடுத்து விட்டு, நாம் என்ன செய்தோம்...?

விடுதலைப் புலிகளின் பெரும் இராணுவ வெற்றி ஒன்றிற்காக கடந்த இரண்டு வருடங்களாகக் காத்திருந்தோம்.

பெரும் போர் வெற்றியைப் படைத்து - தமிழீழத்தை எடுத்து தங்கத் தாம்பாளத்தில் வைத்து விடுதலைப் புலிகள் எமக்குத் தருவார்கள் என்று நாம் பார்த்திருந்தோம்.

விடுதலைப் புலிகளை ஏதோ "பந்தயக் குதிரைகள்" போல கருதி - நாம் கொடுத்த பணத்துக்கு எமக்காகப் போராடி விடுதலைப் புலிகள் நாட்டைப் பிடிக்க வேண்டும் என எதிர்பார்த்து, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசுவதற்கு மறுத்தோம்.

இன்னொரு பக்கத்தில் - இந்தப் பேராசையாலும், எதிர்பார்ப்பாலும் - விடுதலைப் புலிகளின் போர் வெற்றி ஒன்று தொடர்பான அதீத நம்பிக்ககையில் மயங்கி, வெறும் சில்லறை வேலைகளில் மினக்கெட்டோம்.

போராட்டத்திற்கு அடிப்படையான அரசியல் விவகாரங்களைப் பேசுவதை வேண்டும் என்றே தவிர்த்துவிட்டும், விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளிப்படையாகப் பேசுவதில்லை என்ற முடிவையும் ஒரு "தந்திரோபாயமாக" எடுத்துவிட்டும், வெறும் "மனிதாபிமானப்" பிரச்சினைகளைப் பேசிக்கொண்டும் மேற்குலகில் போராட்டங்களை நடத்தினோம்.

விளைவு - 2004 ஆம் ஆண்டில் சோனியா அம்மையார் அதிகாரத்தை எடுத்த பின், போரை நடத்தும் வேலையை இந்தியாவிடம் விட்டுவிட்டது மேற்குலகம் -

இப்போது - தமிழர் சீரழிந்து பேரவலப்படும் போது - நல்ல பிள்ளை வேடம் காட்டி - தமிழர் மீது அன்பானவர்கள் போல நடித்து - "மக்களைக் காப்பதற்காக" புலிகளைச் சரணடையச் சொல்கின்றது.

தமிழரைச் சீரழிக்கும் வேலையை மேற்குலகிடம் இருந்து தாம் பொறுப்பெடுத்த இந்தியாவோ - விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால், தாம் தலையிட்டு "மக்களைக் காப்பதாக" வாக்குறுதிகள் வழங்குகின்றது.

விடுதலைப் புலிகளை ஆதரித்த நாங்களோ -

80 வீதமான நிலத்தை ஆளுகை செய்து விடுதலைப் புலிகள் பலமான நிலையில் இருந்த போது சும்மா இருந்தவிட்டு - இப்போது, வெறும் 5 வீதமான நிலத்திற்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்ட பின்பு ஏமாற்றமடைந்து - அவர்களைச் சரணடையச் சொன்னதற்காக மேற்குலகத்தின் மீது கோபப்படுவதில் அர்த்தம் எதுவுமில்லை.

எங்களில் இன்னொரு சாராரோ - இவ்வளவு காலமும் விடுதலைப் புலிகள் தொடர்பாக புகழ் சொல்லிவிட்டு, இப்போது குறைகள் தேடி புறம் பேசவும் தொடங்கி விட்டார்கள்.

அது மட்டுமல்லாது -

அந்த "இன்னொரு சாரார்", விடுதலைப் புலிகளை எப்போதும் விமர்சித்தவர்களுடன் இப்போது சேர்ந்துகொண்டு - விடுதலைப் புலிகளின் கதை இனி முடிந்தேவிட்டது என இப்போது நம்பவும், வெளிப்படையாகப் பேசவும் தொடங்கி விட்டார்கள்.

"ஐயோ! சிங்களவன் எம்மை இனப்படுகொலை செய்கின்றான்!" என்று கூவி இந்த உலகத்தின் முற்றத்தில் நாம் கதறி அழுதால் - எம்மைக் காக்க எல்லோரும் ஓடோடி வருவார்கள் என்று நம்பவும், வெளிப்படையாகப் பேசவும் தொடங்கி விட்டார்கள்.

இதுவரை காலமும், "நேரம் வரும்போது" விடுதலைப் புலிகள் தொடர்பாக பேசலாம் என்று சாட்டுக்கள் சொல்லி வந்தவர்கள் - இப்போது - விடுதலைப் புலிகள் தொடர்பாக பேசாமலேயே தமிழரின் உரிமைகளைப் பெற்றுவிடலாம் என்று நம்பவும், வெளிப்படையாகப் பேசவும் தொடங்கி விட்டார்கள்.

ஐயா பராக் ஒபாமாவின் செல்வாக்கும், ஐக்கிய நாடுகள் சபை வைக்கும் பொது வாக்கெடுப்பும் (Referendum) தமிழருக்கு விடுதலையை வாங்கித் தந்துவிடும் என்று நம்பவும் வெளிப்படையாகப் பேசவும் தொடங்கி விட்டார்கள்.


கனடாவில் தமிழர் பேரணி - 17.02.09

ஆனால் -

எல்லாப் பழியையும் இவ்வாறாக வெளிநாட்டுத் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் மீது மட்டும் போட்டு விடவும் முடியாது.

வெளிநாட்டுத் தமிழ்ச் செயற்பாடுகளை உரிய முறையில் அரசியல் மயப்படுத்தும் தமது தலையாய கடமையில் இருந்து, விடுதலைப் புலிகளின் பரப்புரைச் செயற்பாடுகள் தவறிவிட்டன என்பதையும் இங்கே சொல்லியே ஆக வேண்டும்.

"நீங்கள் பணத்தை கொடுத்தால் போதும்; ஊரில் எல்லாம் பார்த்துக்கொள்வார்கள்" என்று புலம் வாழ் தமிழர்களைப் பார்வையாளர்களாக வைத்திருந்தது தான் இந்தச் செயற்பாடுகளின் மைய ஓட்டமாக இருந்த வந்தது.

இந்தவிதமான அணுகுமுறை தான் - விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அரசியல் முன்னெடுப்புக்கள் வெளிநாடுகளில் தேவையற்றவை என்ற எண்ணத்தையும், வெளிநாட்டுத் தமிழர்களின் வெளிப்படையான அரசியல் ஆதரவுகள் இல்லாமலேயே விடுதலைப் புலிகள் போரை வெல்வார்கள் என்ற நம்பிக்கையையும், ஊரில் புலிகள் வெற்றிவாகை சூடி இந்த உலகத்தின் போக்கையே தமிழர்க்குச் சார்பாக மாற்றுவார்கள் என்ற மாயையும் புலம் வாழ் தமிழ் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உருவாக்கி -

அவர்களை வெறுமனே அரசியலுக்கு அப்பாற்பட்ட "மனிதாபிமான" பிரச்சினைகளை மட்டும் பேச வைத்துவிட்டன.

உலகத் தமிழர் செயற்பாடுகளை நேர்த்தியாக ஒருங்கிணைத்து -

இராஜதந்திர மற்றும் அனைத்துலகப் பரப்புரைச் செயற்பாடுகளில் தெளிவான வழி நடத்தல்களை வழங்கி -

இன்றைய "மனிதாபிமான"ப் பிரச்சினைகள் எல்லாம் அரசியலையே அடிப்படையாகக் கொண்டவை என்பதைப் புரிய வைத்து -

அரசியலை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் புலம் வாழ் தமிழ் சமூகத்திற்குத் தெளிவுபடுத்தி -

அனைத்துலக ரீதியில் - எல்லா நாடுகளிலும் - ஒரே குரலில் தமிழர்களுக்கு என்ன தேவை என்ற அடிப்படையான அரசியல் கோரிக்கையை, எல்லா வழிகளிலும் தெளிவாகச் சொல்ல வைத்து -

தமிழ்த் தேசிய இனத்தின் அனைத்துலகக் குரலுக்கு ஒரு தேர்ந்த தலைமைத்துவத்தைக் கொடுக்கும் தம் பணியில் இருந்து விடுதலைப் புலிகளின் அனைத்துலகச் செயற்பாடுகள் இதுவரை தவறிவிட்டன.

குறிப்பாக - விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாதப் பட்டியலில் இடப்பட்ட நாடுகளில் - தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டதன் பின்னான காலத்தில் - ஏற்பட்ட அரசியல் தலைமைத்துவ வெற்றிடங்கள் சரிவர நிரப்பப்படாமல் விடப்பட்டு விட்டன.

விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் தமிழர்களின் அடிப்படையான அரசியல் போராட்டம் பற்றிய தர்க்கரீதியான - விஞ்ஞான பூர்வமான - தெளிவு ஊட்டப்படாமல், வெறுமனே "போர் வெற்றி" தொடர்பான அதீத நம்பிக்கைகள் மட்டும் மக்களுக்கு ஊட்டப்பட்டதன் விளைவு தான் -

துணிந்து - எவ்வித தயக்கமும் இன்றி - விடுதலைப் புலிகளை சரணடையுமாறு இன்று மேற்குலகம் சொல்வதும், விடுதலைப் புலிகள் இல்லாமலேயே எமக்கு விடுதலை எடுத்து விடலாம் என்று ஒரு பகுதித் தமிழர்கள் நம்ப தொடங்கியிருப்பதும் ஆகும்.



நோர்வேயில் தமிழர் பேரணி 04.02.09

இப்போது நாங்கள் இரண்டு விடயங்களில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.

அந்தத் தெளிவு இல்லை என்றால் - நாம் எடுக்கின்ற முயற்சிகள் எல்லாமே வீணாகிவிடும்; அந்தத் தெளிவு இருந்துவிட்டாலோ - குழப்பம் இல்லாமல் இலக்குகளை நிர்ணயித்துத் தமிழர்கள் முன்னேற முடியும்.

1) இன்று நடக்கின்ற போரை இந்த உலகில் யாருமே தடுத்து நிறுத்தப் போவதில்லை.

2) விடுதலைப் புலிகளின் பீரங்கியில் இருந்து கடைசிக் குண்டு வீசப்பட்ட பின்பு, தமிழர்கள் சொல்வதனை இந்த உலகில் யாருமே கேட்கப் போவதில்லை.

இன்று நடப்பது இது தான்; சுருக்கமான, புரிந்து கொள்வதற்கு கடினமற்ற விடயம்:

விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்குலகத்தால் "பயங்கரவாத" இயக்கமாகப் பட்டியல் இடப்பட்டிருக்கின்றது.

இந்த பட்டியல்களைச் சாட்டாக வைத்துக்கொண்டு, தான் நடாத்தும் இன அழிப்புப் போரை சிறிலங்கா புலிப் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கின்றது.

அதேவேளை, வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாம் போரை நிறுத்தி போருக்குள் சிக்குண்டுள்ள வன்னி மக்களைக் காக்குமாறு மேற்குலகத்திடம் வேண்டுகின்றோம்.

ஆனால், 'பயங்கரவாத' இயக்கம் ஒன்றிற்கு எதிரான போரை நிறுத்தும் படி யாருமே சிறிலங்காவுக்குச் சொல்ல முடியாது.

அப்படியானால் போரை நிறுத்தி, வன்னி மக்களைக் காக்க என்ன தான் வழி...?

அதற்கு இருக்கும் ஒரே வழி - ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும்.

புலிகள் சரணடைந்தவுடன் - போரும் நிற்கும், வன்னி மக்களும் காப்பாற்றப்படுவார்கள், "நடக்கின்றது!" என்று நாம் கதறும் "இனப்படுகொலை"யும் நடக்காது.

- இது தான் இன்றைய நிலை.

ஆனால் - தமிழர்களின் அரசியலில் விடுதலைப் புலிகள் பலமிழந்து போன பின்பு எமது எதிர்காலம் என்ன என்பதே எம் முன்னால் இன்று உள்ள ஒரே கேள்வி.

விடுதலைப் புலிகளை ஆதரிப்போர், வெறுப்போர், ஏற்றுக்கொண்டோர், நிராகரிப்போர் என யாராக இருந்தாலும் - இன்று எமக்குத் தேவையானது விடுதலைப் புலிகள் தொடர்பான ஒரு ஆழமான புரிந்துணர்வு.

கடந்த கலங்களில் விடுதலைப் புலிகள் எடுத்த முடிவுகள் எல்லாவற்றையும் சரியானவை என்று வாதிடுவது எனது நோக்கமல்ல.

அதே சமயம் - தவிர்க்க முடியாத சூழல்களின் நிர்ப்பந்தம் காரணமாகவும், "தவறானவை" எனக் கருதப்படக்கூடிய சில நடவடிக்கைகளை முன்னைய காலங்களில் விடுதலைப் புலிகள் எடுத்திருந்தனர் என்பதையும் மறந்துவிட முடியாது.

இப்போது நாம் செய்ய வேண்டியது - விருப்பு வெறுப்புக்களை ஒர் ஓரத்தில் வைத்துவிட்டு - யதார்த்தத்தைப் பார்க்க முனைவது.

பிரபாகரன் என்ற மனிதர் வாழ்கின்ற அதே சமகாலத்திலேயே நாமும் வாழ்வதால் - அவர் தொடர்பான செய்திகளையும், அவரது படங்களையும் அடிக்கடி பார்ப்பதால் - அந்த மனிதருக்கு உள்ளே இருக்கின்ற வரலாற்று நாயகனை நாங்கள் பார்க்கத் தவறுகின்றோம்.

சில விடயங்கள், நாம் வாழ்கின்ற அதே சமகாலத்திலேயே - சாதாரண நாளாந்த நிகழ்வுகளாய் கட்டவிழ்ந்து செல்வதால் - அந்த நிகழ்வுகளின் ஊடாக விரிந்து செல்கின்ற வரலாற்றின் பரிமாணங்களை நாங்கள் உணரத் தவறுகின்றோம்.

நிகழ்கால நிகழ்வுகளின் உடனடி விளைவுகளை வைத்து அவற்றுக்குத் தீர்ப்பளித்து, எதிர்கால வரலாறே அந்த நிகழ்வுகளின் தாக்கங்களைத் தீர்மானிக்கும் என்பதை உணரத் தவறுகின்றோம்.

ஆனால் - இந்த உலகம் அவற்றைச் சரிவர உணர்ந்து கொண்டதால் தான், இன்று எம்மையும், எமது போராட்டத்தையும் மட்டுமல்லாமல், நாம் படைத்து வரும் தனித்துவமான இந்த வரலாற்றையும் கூட அழித்துவிட முனைப்போடு நிற்கின்றது.


சுவிசில் தமிழர் பேரணி - 20.02.09

விடுதலைப் புலிகள் இயக்கம் - தமிழர் சரித்திரம் மட்டுமல்ல, இந்த உலக சரித்திரமே கண்டிராத ஓர் ஆச்சரிய உண்மை.

அந்த இயக்கம் எங்கள் இனத்தில் பிறந்தது என்பதும், நாங்களே அதனை வளர்த்து எடுத்தோம் என்பதும் தமிழர்கள் ஒவ்வொருவருக்குமே பெருமை.

ஓர் அரசு ஆகுவதற்கு முன்னதாகவே - எல்லா முட்டுக்கட்டைகளையும் கடந்து -

பீரங்கிகளையும் சிறப்புப் படையணிகளையும் கொண்ட ஒரு மரபுவழித் தரைப்படையையும், பெரும் தாக்குதல் படகுகளுடன் கூடிய ஒரு அரை-மரபு வழிக் கடற்படையையும், இவற்றின் மகுடமாய் ஒரு வான் படையையும், மிகத் திறமை வாய்ந்த ஒரு புலனாய்வுத்துறையையும் கொண்டிருப்பதை விடவும் -

ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய அனைத்து துறைசார் அலகுகளுடனும் கூடிய - கண்ணியமும், ஒழுக்கமும் நேர்மையும் மிக்க - ஒரு நடைமுறை அரசை உருவாக்கி, பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை ஆளுகை செய்வதை விடவும் -

பல்லாயிரம் ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட ஒரு பெரும் இனத்தினது மனக் குகைக்கு உள்ளேயே ஒரு போராட்டத்தை நிகழ்த்தி - "எம்மால் முடியும்!" என்ற நம்பிக்கையை ஊட்டி, துணிவோடு நிமிர வைத்து - ஒரு முழு இனத்தினது சிந்தனைப் போக்கையும், வாழ்வு முறையையும் மாற்றியமைத்தது தான் விடுதலைப் புலிகள் படைத்த உண்மையான வரலாறு.

போர் முனையில் ஏற்படும் வெற்றிக்கும் தோல்விக்கும் அப்பால் - முன்னேற்றத்திற்கும், பின்னடைவுக்கும் அப்பால் - அவற்றுக்குப் பின்னால் படைக்கப்படுகின்ற இந்த மாபெரும் வரலாற்றை நாங்கள் உணர வேண்டும்.

அந்த வரலாற்றின் படைப்பாளிகளாக - அந்த வரலற்றின் அங்கமாக - தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவருமே அதனோடு இணைந்திருப்பதை நாங்கள் உணர வேண்டும்.

நாமே படைத்த இந்த வரலாறு சிதைந்து போக நாமே இடமளித்து விடக்கூடாது.

25 வருடங்களுக்கு முன்னதாக தமிழர்கள் கற்பனை கூடச் செய்து பார்த்திருக்காத - இனி நாங்கள் திரும்பிப் போக முடியாத - ஓர் அரசியல் உச்ச நிலைக்கு தமிழினத்தை அழைத்து வந்து விட்டார் தலைவர் பிரபாகரன்.

எமது தேசத்தின் 24 ஆயிரம் வரையான போர் வீரர்களின் உடலங்களையும் 100 ஆயிரம் வரையான குடிமக்களின் உடலங்களையும் கடந்து -

இந்த நீண்ட பயணத்தில் - அவருக்குத் துணையாக, அவருக்குப் பலமாக நாம் எல்லோரும் அவரோடு சேர்ந்தே நடந்து வந்தோம்.

சோர்வுகள், தோல்விகள், துரோகங்கள், முரண்பாடுகள், மனக்கசப்புக்கள் எல்லாவற்றையும் நாங்களும் அவரோடு சேர்ந்தே கடந்து வந்தோம்.

தமிழினம் இனி அவருக்கு முன்னரிலும் விட வித்தியாசமான ஒரு பரிமாணத்தில் துணையிருக்க வேண்டும்; முன்னரிலும் பலமான, உறுதியான ஒரு வழிமுறையில் துணை இருக்க வேண்டும்.

இந்தப் புதிய பரிமாணம் - அரசியல் பரிமாணம். எமது போராட்டத்திற்கும், போராட்டத்தின் இலக்கிற்கும் ஓர் அனைத்துலக அங்கீகாரத்தைத் தேடும் பரிமாணம்.

அது தான் இன்று எமது அவசர, அவசியத் தேவை!



அமெரிக்காவில் தமிழர் பேரணி - 20.02.09

கடந்த 61 ஆண்டு கால தமிழர்களின் சரித்திரத்தைப் படித்து, அவதானித்து, அதற்குள் வாழ்ந்து பார்த்த பின் ஒரு விடயத்தை நாம் எந்தச் சலசலப்பும் இல்லாமல் மிகத் தெளிவாக ஏற்றுக்கொள்ள முடியும்.

பிரபாகரன் என்ற தனிமனிதரைச் சுற்றித் தான் - அவரைப் பற்றிப் பிடித்த வண்ணம் தான் - தமிழர்களின் கடந்த கால வரலாறும், எதிர்கால வாழ்வும் இருக்கின்றது. இது ஒர் உணர்ச்சிமயமான முழக்கம் அல்ல; ஒரு விஞ்ஞான ரீதியான நிரூபணம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தான் தமிழர்களது ஒரே அரசியல் சக்தி: விடுதலைப் புலிகளைத் தவிர்த்துவிட்டு தமிழர்களது அரசியல் எதிர்காலம் தொடர்பாகக் கற்பனை செய்வது கூட அறிவிலித்தனம்.

விடுதலைப் புலிகள் தொடர்பாகப் பேசுவதனை தவிர்த்துக்கொண்டு தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம் என நம்புவது நகைப்புக்கு இடமானது.

விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல.

நாங்கள் இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கின்ற ஒரு சாதாரண சிறிய மக்கள் குழு அல்ல; நாங்கள் இந்த உலகின் மிகப் பழையான - உயர் பண்புகளை உடைய - சுயமரியாதை மிக்க - ஒன்பது கோடி உயிர்களைக் கொண்ட - ஒரு மிகப் பெரிய தேசிய மக்கள் இனம்.

அது நாங்கள் பெருமைப்பட வேண்டிய விடயம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தான் எமது தமிழ் தேசிய இனத்தினது பெருமைகளின் முகமாக இந்த உலகில் இன்று விளங்குகின்றது.

புலிகள் இயக்கத்தைப் "பயங்கரவாதிகள்" என்று இந்த உலகம் சொல்லுவது - முழுத் தமிழ்த் தேசிய இனத்தையுமே "பயங்கரவாதிகள்" என்று சொல்லிச் சிறுமைப்படுத்துவது போன்றதாகும்.

அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்த உலகத்திற்கு நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்; விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்: எமது சுதந்திரத்திற்காகவும், தேசத்திற்காகவும், சுயமரியாதைக்காகவும் போராடுகின்ற ஒரு மக்கள் இனம் நாங்கள். விடுதலைப் புலிகள் எமது இனத்தின் சுதந்திரப் போராளிகளே என்பதை நாங்கள் வெளிப்படையாக இந்த உலகத்திற்குச் சொல்லிவிட வேண்டும்.

"பயங்கரவாத"ப் பட்டியல்களில் விடுதலைப் புலிகளைச் சேர்த்துவிட்டு, "பயங்கர வாதத்திற்கு எதிரான போர்" என்ற போர்வையில் அவர்கள் மீது நடாத்தப்பட்டும் போரை, எம் மீதே நடாத்தப்படும் போராகவே தமிழர்கள் கருதுகின்றோம் என்பதை நாங்கள் ஆணித்தரமாக இந்த உலகத்திற்குச் சொல்லிவிட வேண்டும்.

இரண்டாம் உலகப் போரில் - ஒவ்வொரு நாடுகளாக ஆக்கிரமித்து - "நாசி"ப் படைகள் நடத்திய நில விழுங்கும் போருக்கு நிகரானதாகவே, தமிழர் தாயகம் மீது இன்று நடத்தப்படும் நில ஆக்கிரமிப்புப் போரை நாங்கள் கருதுகின்றோம் என்பதை நாங்கள் குழப்பமில்லாமல் இந்த உலகத்திற்குச் சொல்லிவிட வேண்டும்.

இன்று -

விடுதலைப் புலிகளின் சின்னத்தைப் பொறித்த கொடி தான் தமிழர்களது கொடி.

தமிழர்களுக்கான உலக அடையாளமாக, தமிழர்களின் அரசியல் அபிலாசைகளின் குறியீடாக, தமிழர்களின் இன்பங்களினதும் துன்பங்களினதும் வெளிப்பாடாக, உலகத் தமிழினம் முழுவதையும் ஒன்றிணைக்கும் - ஒற்றுமையாக்கும் - ஒரு புனிதப் பொருளாக - ஒரு தாயிற்குச் சமமாக, அந்தக் கொடி தான் விளங்குகின்றது.

அந்தக் கொடி - தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற ஒரு இயக்கத்தின் கொடி என்ற குறுகிய வரைமுறையைக் கடந்து - எங்கள் மனங்களில் உண்மையாய் வாழும் 'தமிழீழம்' என்ற தேசத்தின் கொடியாக - எமது இனத்தின் ஆன்ம தாகத்தினை இந்த உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் ஒரு குறியீடாக - தமிழர்களின் கம்பீரமாக இன்று இந்த உலகில் விளங்குகின்றது.

இன்று -

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் "தமிழ்த் தேசியம்"

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் "தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை."

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் "தமிழர் தனியரசு"

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் "தமிழர்களது அரசாங்கம்"

தமிழீழ விடுதலைப் புலிகள் தான் இவை எல்லாவற்றினதும் காவலர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத தமிழர்களின் அரசியலில் இவை எதுவுமே இருக்கப் போவதில்லை: அதுதான் யதார்த்தம்.


பிரான்சில் தமிழர் பேரணி - 05.02.09

எமது உடனடிப் பணி

போகிற போக்கில் 2008 ஆம் ஆண்டு முடிவதற்கு முன்னதாகவே விடுதலைப் புலிகளின் கதையை முடித்து விடுவோம் என சிறிலங்கா இந்த உலகத்திற்கு நம்பிக்கைகளைக் கொடுத்தது.

தமிழினப் படுகொலை மெதுவாக நடக்கின்றது என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் - சிறிலங்கா கொடுத்த நம்பிக்கையை நம்பி - விடுதலைப் புலிகளின் கதையை முடிக்க சிறிலங்காவுக்கு காலத்தைக் கொடுத்தது உலகு.

அதாவது - "இனப்படுகொலை" என்ற விவகாரம் பூதாகாரமாக எழுந்து வெளியே வருவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளை சிறிலங்கா அழித்துவிடும் என இந்த உலகம் உண்மையாகவே நம்பியது.

விடுதலைப் புலிகள் அழிந்து போவதற்கும், "இனப் படுகொலை" பூதம் வெளியே வருவதற்கும் இடையில் இருக்கும் சிறிய இடைவெளியில் புகுந்து விளையாடி - தமிழர்களைத் தாங்கள் காப்பாற்றி விட்டது போல நடிப்பதற்காக இந்த உலகம், தமிழர்கள் கொல்லப்படுவது தெரிந்திருந்தும் வஞ்சகமாகக் காத்திருந்தது.

ஆனால், எல்லோருடைய ஆசைகளையும் முறியடித்து - விடுதலைப் புலிகள் போரில் நின்று பிடித்துப் போராட - உலகத் தமிழனம் ஒன்றாகத் திரண்டு "இனப்படுகொலை" பூதத்தை வெளியே கொண்டு வந்துவிட்டது.

இந்த உலகத்திற்கு தான் கொடுத்த நம்பிக்கையையும், இந்த உலகத்தின் எதிர்பார்ப்புக்களையும் சிறிலங்காவால் காப்பாற்ற முடியவில்லை.

விடுதலைப் புலிகளின் கதை முடிவதற்கு முன்னதாகவே "இனப்படுகொலை" விவகாரம் வெளியில் வந்துவிட்டதானது இந்த உலகம் எதிர்பார்த்திராத ஒரு திருப்பம்.

இப்போது - பெரும் தமிழினப் படுகொலை ஒரு புறத்திலும், பெரும் விடுதலைப் போர் மறுபுறத்திலுமாக, இரண்டும் ஒரு சேர நடக்கின்றன.

இந்த உலகத்தின் கவனத்தையும் நாங்கள் தேவையான அளவுக்கு ஈர்த்தாகி விட்டது: இப்போது - ஏதாவது செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்த சூழலுக்குள் உலக நாடுகள் தள்ளப்பட்டுவிட்டன.

தமிழர்களின் முன்னால் இப்போது உள்ள ஒரே பணி -

"இனப்படுகொலை" விவகாரத்தை மட்டும் சொல்லி - அதனைத் தடுத்து நிறுத்துமாறு மட்டும் கோரி - அழுதுகொண்டே இருக்காமல் -

"இனப்படுகொலை" விவகாரமும் வெளியே வந்து, விடுதலைப் போரும் உச்சம் பெற்று - காலம் எமக்கு அமைவாகக் கனிந்திருக்கும் சூழலைப் பயன்படுத்தி -

அடிப்படையான அரசியல் கேரிக்கைகளை முன்வைத்துப் போராடி எமது தேசத்தையும் அந்த மக்களையும் ஒரேயடியாக மீட்க வேண்டியது தான்.

நாம் இப்போது - மிகத்தெளிவான குரலில் - சுத்தி மழுப்பாமல் பேசி -

இரண்டு விடயங்களை இந்த உலகத்தை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும்; அந்த இரண்டு விடயங்களுக்குமான அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.

முதலாவது -

தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள்: தமிழர் தேசியப் போராட்டத்திற்கு முடிவு காணும் எந்தச் சமரச முயற்சியிலும், தமிழர்களின் சார்பாக விடுதலைப் புலிகளே பங்கேற்பர்; தமிழர்களின் சார்பில் விடுதலைப் புலிகளுடனேயே முன்னெடுக்கப்பட வேண்டும்.

இரண்டாவது -

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான, முழுச் சுயாட்சி அதிகாரம் கொண்ட - மாற்றப்பட முடியாத அரசியலமைப்பிற்குள் (Constitution) உள்ளடக்கப்பட்ட - ஒரு நிரந்தரத் தீர்வு: அந்தத் தீர்வானது - ஆகக்குறைந்தது - நிலம், இயற்கை வளம், நிதி, நீதி-ஒழுங்கு, பொருளாதார மேம்பாடு, வெளிநாட்டு உதவிகள், வர்த்தக மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள் அகியவற்றில் முழுமையான அதிகாரங்களைத் தமிழர்களுக்கு வழங்குவதாக மட்டும் அல்லாமல் -

தமிழர்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தமக்கு என ஒரு ஆயுதப் படையை வைத்திருக்கும் அதிகாரத்தையும் அவர்களுக்கு வழங்குவதாக இருக்க வேண்டும்.

இந்த இரண்டு விடயங்களுக்குமான உலக அங்கீகாரத்தைப் பெறுவதை நோக்கி - தமிழர் செயற்பாடுகள் எல்லா வழிகளிலும் - எல்லா முறைகளிலும் - முன்னெடுக்கப்பட வேண்டும்.

இது தான் எம் முன்னால் உள்ள அவசரமான - அவசியமான பணி.

அரசியல் தலைவர்களுடனான சந்திப்புக்கள், கொள்கை வகுப்பாளர்களுடனான கலந்துரையாடல்கள், ஆய்வுக் கட்டுரைகள், நிலைப்பாட்டு அறிக்கைகள், பல்கலைக்கழக கருத்தரங்குகள், ஊடகப் பேட்டிகள், ஆர்ப்பாட்டப் பேரணிகள் என எல்லா வழிகளிலும் - தமிழ் அல்லாத மற்றைய எல்லா மொழிகளிலும் - இந்த இரண்டு விடயங்களுக்குமான உலக அங்கீகாரம் பெறும் செயற்பாடுகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் செயற்பாட்டாளர்கள், தமிழர் அமைப்புக்கள், குறிப்பாக - உலக மொழிகளைப் பேசும் வல்லமை பெற்று, உலக மக்களின் வாழ்வு முறைகளில் பரிச்சயமும் கொண்ட தமிழ் இளம் சமூகத்தினர் எமக்கான இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முயற்சிகளை உடன் தொடங்க வேண்டும்.

முடிப்பதற்கு முன்னதாக ஒன்றை வலியுறுத்திச் சொல்லி விடுகின்றேன்: "இனப்படுகொலை" விடயத்தை இப்போது பார்த்துக் கொள்ளலாம், அரசியல் விடயங்களை "நாளை" முன்னெடுக்கலாம் என்று தயவு செய்து ஒத்திப் போடாதீர்கள்.

ஏனென்றால் - "நாளை" என்பது எமக்கு வராமலேயே போய் விடலாம்: எங்கள் கையில் நேரம் என்பது இப்போது இல்லவே இல்லை.

எப்போதாவது ஏதாவது செய்வதற்கு நாம் இதுவரை காத்திருந்தோம் எனில், நாம் செயற்படுவதற்கான அந்த சரியான நேரம் இதுவே தான்!

கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: t.r.vazhuthi@gmail.com

இலங்கை ஊடாக பாகிஸ்தானின் உளவுப்பிரிவு (ஐ.எஸ்.ஐ) தென்னிந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயம்: அமைச்சர் சிதம்பரம் தெரிவிப்பு


பாகிஸ்தானின் புலனாய்வு நிறுவனம் (ஐ.எஸ்.ஐ.) இலங்கையூடாக தென்னிந்தியாவுக்குள் தமது இரகசிய முகவர்களை ஊடுருவச் செய்யும் அச்சுறுத்தல் உள்ளதாகவும், இதனை முறியடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் தெரிவித்தார்.

இதுதொடர்பில் உறுதியான அறிக்கைகள் இல்லாத போதிலும் பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினர் இலங்கையூடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவலாம் என்ற சாத்தியத்தை மறுக்க முடியாது என்றும் கூறினார்.

இதன் காரணமாக இலங்கையிலிருந்து இந்தியா வருவதற்காக விஸாவுக்கு விண்ணப்பிப்போரின் அனைத்து விண்ணப்பங்களும் மிகவும் உன்னிப்பாக பரிசீலிக்கப்படுவதாகவும் கூறினார். இந்திய பாராளுமன்றத்தில் இடம் பெற்ற கேள்வி நேரத்தின்போது விளக்கமளிக்கையிலேயே சிதம்பரம் மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

ஐ.எஸ்.ஐ. ஆனது ஏனைய தென் ஆசிய நாடுகளை அடையக் கூடிய வல்லமையை கொண்டிருப்பது தொடர்பில் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

இதன் காரணமாகவே இந்திய விஸாவுக்கு இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் அனைத்து விண்ணப்பங்களும் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மும்பாய் தாக்குதல்களுக்கு பின்னர் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள கடற்கரைப் பாதுகாப்பும் குறிப்பிடத்தக்க வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான உறவு வலுவடைந்து வருவது தொடர்பில் அரசாங்கம் விழிப்புணர்வுடன் இருக்கிறதா? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ராஜா சபையில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் பாகிஸ்தான் உள்ளக சேவை உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ. தென்னிந்திய கரையை முக்கிய இலக்காகக் கொள்ளலாம் என்று கூறியதுடன் மேற்படி விளக்கத்தையும் அளித்தார்.