இந்தியா செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்படுவர்


இலங்கையில் சகஜநிலை திரும்பியதும் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் செல்லுமாறு கோரப்படுவார்கள் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் மீண்டும் உள்துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, இலங்கையில் விடு தலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டதால் அங்கு இயல்பு நிலை திரும்பும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவார்களா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த சிதம்பரம், சகஜநிலை திரும்பினால் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்ல அகதிகளே ஆர்வமாய் இருப்பார்கள் என்றும், இலங்கையில் இயல்பு நிலை திரும்பும்போது அகதிகள் கண்டிப்பாகத் திரும்பிச் செல்வார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டது தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வெளிவருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம், இலங்கை அரசே அதை உறுதிப்படுத்திவிட்ட நிலையில், பிரபாகரன் மரணம் தொடர்பாக ஐயப்பாடுகளை எழுப்பத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

தமிழகக் கடலோரப் பகுதிகள் வழியாக விடுதலைப் புலிகள் ஊடுருவ வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதலளித்த சிதம்பரம், அது தொடர்பாக தமிழக அரசுக்கு உரிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வழங்கியிருப்பதாகவும், மாநில அரசும் அதை ஏற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியிருப்பதால் ஊடுருவல் நடைபெற வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

வன்னியில் இருந்து மக்களை வெளியேற்ற மேற்கொள்ளும் முயற்சியை இந்தியா கைவிட வேண்டும்:பிரணாப்புக்கு இலங்கை எம்.பி. கடிதம்


இந்தியா வன்னியில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை உடன் கைவிட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜிக்கு இலங்கை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் மேலும் அக்கடிதத்தில்,

’’இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போரினை சிங்கள அரசு மிகவும் தீவிரப்படுத்தியுள்ளது.

பொதுமக்களை இலக்கு வைத்து திட்டமிட்டு மேற்கொண்டு வரும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் கடந்த 01.01.2009 முதல் 24.02.2009 வரையிலான 55 நாட்களில் மட்டும் 2,076 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 4,727 தமிழ் மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் அதிகளவில் அடங்குகின்றனர்.

காயமடைந்தவர்களில் சிகிச்சைகளுக்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரால் 24 ம் தேதி வரை 1948 பேர் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளவர்கள் சிங்களவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு சிகிச்சைகளுக்காக பலவந்தமாக அனுப்பப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு உதவிக்காக வந்தவர்கள் பலவந்தமாகப் பிரிக்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உறவினர்கள், நண்பர்களின் உதவிகள் எதுவும் இன்றி மனிதாபிமான நெருக்கடிகளை காயமடைந்தவர்களும் உதவிக்கு வந்தவர்களும் எதிர்நோக்கி வருகின்றனர்.

சிகிச்சைகளுக்காக கொண்டு வரப்பட்டவர்கள் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள போதிலும் அவர்களின் உடல்கள் வன்னியில் உள்ள உறவினர்களிடம் அனுப்பி வைக்கப்படாமலேயே அடக்கம் செய்யப்படுகின்றது.

சிகிச்சைக்காக வந்த நோயளிகளும் உதவிக்கு வந்துள்ளவர்களும் மீண்டும் வன்னியில் உள்ள தமது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று இணைந்து கொள்ள அனுமதி மறுத்துள்ள சிங்கள அரசு, அவர்களை குடும்ப உறுப்பினர்களுடன் இணைவதனை தடுக்கும் வகையில் பலவந்தமாக முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர்.

இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசங்களுக்குள் வன்னியில் இருந்து இதுவரையில் 35,000 வரையான பொதுமக்கள் வந்துள்ளதாக அரசு கூறுகின்றது.

இவர்கள், அனைவரும் தாமாக விரும்பி வரவில்லை மாறாக மக்கள் வாழ்விடங்களை இராணுவம் திடீரென கைப்பற்றிய போது இராணுவத்தினரிடம் அகப்பட்டு இராணுவத்தினரால் பலவந்தமாக கொண்டு வரப்பட்டவர்களும் பெருமளவில் உள்ளனர்.

அவ்வாறு வந்த பொதுமக்களை ஆண்கள் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் வேறாகவும் தாய்மார் மற்றும் குழந்தைகள் வேறாகவும் பிரிக்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவ்வாறு அனுப்பப்படும்போது பெருமளவு பெண்களும் ஆண்களும் படையினரால் தெரிவு செய்யப்பட்டு இரகசிய முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஆண்கள் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.

எஞ்சியவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் பெயர் விபரங்களை இராணுவம் இரகசியமாக வைத்துள்ளது.

குடும்பங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுளமையினால் எத்தனை பேர் காணமல் போனார்கள் யாருடய உறவினர்கள் காணாமல் போனார்கள் என்ற விபரங்கள் எதுவும் தெரியாமல் முகாம்களில் உள்ள மக்கள் தவிக்கின்றனர்.

முகாம்களில் உள்ள இளம் பெண்களும் ஆண்களும் விசாரணைகளுக்காக என்று கூறி இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டு துன்புறுத்தப்படுவதுடன் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும்போது அக்கொடூரத்தினை படையினர் வீடியோ காமிராக்களில் பதிவு செய்யும் கொடூரங்களும் நடைபெற்று வருவதாக முகாம்களில் இருந்து நம்பகமான தகவல்கள் வெளிவந்துள்ளது.

மக்கள் தமது பிரச்சினைகளை வெளியே யாருக்கும் சொல்ல முடியாத அளவுக்கு இராணுவத்தினரதும் துணை இராணுவக் குழுவினரதும் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதாக முகாம்களில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் பெருமளவானோர் தாம் வன்னியில் உள்ள தமது உறவினருடன் சென்று மீண்டும் இணைந்து கொள்ள விரும்புவதாகவும் ஆனால் அது தொடர்பாக பேசினால் இராணுவத்தினரால் தாம் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட நேரிடும் என அஞ்சுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் கொழும்பு உட்பட தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் கடத்தப்பட்டும் உள்ளனர்.

அப்பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள், சித்திரவதைகள், கொள்ளைகள் என்பன தாராளமாக நடைபெற்று வருவதுடன் மிக வேகமான சிங்கள மயமாக்கலும் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திலும் ஏற்கனவே இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நிலை நிறுத்தவோ சிங்கள மயமாக்கலை தடுக்கவோ இந்திய அரசாங்கத்தினால் முடியாமல் போய் உள்ளது.

சிறிலங்கா அரசின் நடவக்கைகளை நோக்கும் போது வன்னியில் எஞ்சியுள்ள பகுதிகளை கைப்பற்றி முழு அளவிலான இன அழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராகி வருவதை தெளிவாக உணர முடிகிறது.

இந்நிலையில் வன்னியில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டுவர முயற்சி செய்வது சிங்கள-தமிழ் மக்களுக்கு இடையிலான 60 ஆண்டுகால பிரச்சினைகளை தீர்க்க ஒரு போதும் உதவப் போவதில்லை.

இவ்வாறான நிலையில் வன்னியில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கான நம்பகமான பாதுகாப்பான வழிமுறைகளை கண்டறியுமாறும் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயாராக உள்ளதாகவும் இந்தியா கூறுவது தமிழ் மக்களை முழுமையாக அகதிகளாக்கி சிங்கள பௌத்த பேரினவாததிற்கு அடிமைகளாக்கி அழிப்பதற்கே வழி வகுக்கும்.

எனவே, இந்தியா வன்னியில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை உடன் கைவிட வேண்டும்’’ குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மருத்துவ குழு இலங்கைக்கு பயணம்


இலங்கைக்கு உடனடியாக முழு அளவிலான அவசரகால மருத்துவ உதவி குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக செயலாளர் விஷ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைக்கு உடனடியாக முழு அளவிலான அவசரகால மருத்துவ உதவி குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது. மருத்துவர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், தேவையான மருத்துவ உபகரணங்களுடன் இந்த குழு இலங்கை செல்கிறது.

இந்தக் குழுவுக்கு தேவையான உதவிப் பொருட்களும் உடனுக்குடன் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுநிர்மாணம் செய்யவும், மறுவாழ்வு அளிக்கவும் இலங்கை அரசுடன் இந்தியா தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை ஊடாக பாகிஸ்தானின் உளவுப்பிரிவு (ஐ.எஸ்.ஐ) தென்னிந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயம்: அமைச்சர் சிதம்பரம் தெரிவிப்பு


பாகிஸ்தானின் புலனாய்வு நிறுவனம் (ஐ.எஸ்.ஐ.) இலங்கையூடாக தென்னிந்தியாவுக்குள் தமது இரகசிய முகவர்களை ஊடுருவச் செய்யும் அச்சுறுத்தல் உள்ளதாகவும், இதனை முறியடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் தெரிவித்தார்.

இதுதொடர்பில் உறுதியான அறிக்கைகள் இல்லாத போதிலும் பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினர் இலங்கையூடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவலாம் என்ற சாத்தியத்தை மறுக்க முடியாது என்றும் கூறினார்.

இதன் காரணமாக இலங்கையிலிருந்து இந்தியா வருவதற்காக விஸாவுக்கு விண்ணப்பிப்போரின் அனைத்து விண்ணப்பங்களும் மிகவும் உன்னிப்பாக பரிசீலிக்கப்படுவதாகவும் கூறினார். இந்திய பாராளுமன்றத்தில் இடம் பெற்ற கேள்வி நேரத்தின்போது விளக்கமளிக்கையிலேயே சிதம்பரம் மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

ஐ.எஸ்.ஐ. ஆனது ஏனைய தென் ஆசிய நாடுகளை அடையக் கூடிய வல்லமையை கொண்டிருப்பது தொடர்பில் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

இதன் காரணமாகவே இந்திய விஸாவுக்கு இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் அனைத்து விண்ணப்பங்களும் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மும்பாய் தாக்குதல்களுக்கு பின்னர் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள கடற்கரைப் பாதுகாப்பும் குறிப்பிடத்தக்க வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான உறவு வலுவடைந்து வருவது தொடர்பில் அரசாங்கம் விழிப்புணர்வுடன் இருக்கிறதா? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ராஜா சபையில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் பாகிஸ்தான் உள்ளக சேவை உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ. தென்னிந்திய கரையை முக்கிய இலக்காகக் கொள்ளலாம் என்று கூறியதுடன் மேற்படி விளக்கத்தையும் அளித்தார்.

அத்வானி பேச்சு : ஒரு திருப்பம்


ஈழத் தமிழர்கள் சிறிலங்க இராணுவத்தால் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் கவலையளிக்கும் விடயமல்ல, இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டிய பிரச்சனை என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அத்வானி பேசியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரியும், ஈழத் தமிழர்களை கொன்று குவித்துவரும் இனவாத சிறிலங்க அரசிற்கு ஆயுதம் உள்ளிட்ட இராணுவ உதவிகளை நிறுத்த வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வைகோ தலைமையில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் லால் கிஷண் அத்வானி, ஈழத் தமிழர் பிரச்சனையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எவ்வித அக்கறையும் காட்டாமல் பொறுப்பின்றி செயல்பட்டு வருகிறது என்று கூறியிருப்பது கூர்ந்து கவனிக்கத் தக்கதாகும்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஈழத் தமிழர் பிரச்சனையில் சிறிலங்க அரசை எவ்வித நிர்பந்தத்திற்கும் உட்படுத்தாத ஒரு மேம்போக்கான நிலையை கடைபிடித்துக் கொண்டு, ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை, பயங்கரவாததிற்கு எதிரான அந்நாட்டு அரசின் இராணுவ நடவடிக்கைதான் என்ற ஏமாற்று நிலைப்பாட்டை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு அதற்கு உதவியும் செய்து கொண்டு, அப்படிப்பட்ட (இராணுவ) உதவிகள் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத்தான் என்று தமிழக மக்களை ஏமாற்றி வரும் நிலையில், தமிழர்கள் கவலைப்படும் ஒரு பிரச்சனை இந்தியா கவலைப்பட வேண்டிய ஒரு பிரச்சனைதான் என்று அத்வானி அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பது, குறுகிய எதிர்காலத்தில் ஈழம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டிலும், செயல்பாட்டிலும் ஒரு தலைகீழ் மாற்றம் வரவிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

இலங்கையில் அப்பாவி மக்களைக் குறிவைத்து சிறிலங்க இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், “அது அந்நாட்டு உள்நாட்டுப் பிரச்சனை, அதில் ஒரு அளவிற்குத்தான் மத்திய அரசு தலையிட முடியும்” என்று தனது கூட்டணிக் கட்சியும், தமிழ்நாட்டின் ஆளும் கட்சியுமான தி.மு.க.வை பேச வைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு அத்வானியின் பேச்சு ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனனும், பிறகு அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அடுத்தடுத்து பயணம் மேற்கொண்டு சிறிலங்க அதிபர் ராஜபக்சவுடன் பேசியபோது கூட, போர் நிறுத்தம் பற்றிப் பேசவில்லை. மாறாக, ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் சிறிலங்க அரசிடமே, அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அளித்து, அதற்கான ‘உறுதிமொழியை’ பெற்று வந்துள்ளதாக கூறி ஒரு பெரிய கேலிக் கூத்தையே அரங்கேற்றியதால் மத்திய அரசு மீது தமிழ்நாட்டு மக்களிடையே ஏற்பட்ட கோபக் கொந்தளிப்பு பல்வேறு வகையிலும் போராட்டங்களாக வெடித்துவரும் நிலையில், தமிழர்களோடும், தமிழ்நாட்டு மக்களோடும் நாங்கள் நிற்கின்றோம் என்று அத்வானி கூறியிப்பது ஒரு பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

“இலங்கையில் கடந்த 23 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையினால் பெற்ற வெற்றிகள் தமிழர் பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை உருவாக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது” என்று சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் மறுகுரலாகவே ஒரு அறிக்கையை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி (இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து) வெளியிட்டார்.

இதற்கு நேர் மாறாக, இலங்கை இனச் சிக்கலிற்கு போர் மூலம் தீர்வு காண முடியாது என்றும், போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சு தொடங்கப்பட வேண்டும் என்றும், ஆ‌யுத‌த்தை‌க் கா‌ட்டி ஈழ‌த் த‌மிழ‌ர்களை ஒடு‌க்க மு‌ற்பட‌க்கூடாது எ‌ன்று‌ம் அத்வானி கூறியிருப்பது இலங்கை தொடர்பான இந்திய அரசின் இன்றைய நிலைப்பாடு நீடிக்கப்போவதில்லை என்பதையும் காட்டுகிறது.

ஈழத் தமிழருக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திவரும் இனப்படுகொலையை, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான போர் என்று ராஜபக்சவின் நிலையை ஏற்றுக் கொண்டு, அந்த நிலையை ஆதரிக்கிறது மன்மோகன் சிங் அரசு. அதற்கு நேர் மாறாக, அது இனச் சிக்கலே என்றும், இராணுவ நடவடிக்கை அதற்குத் தீர்வைத் தராது என்றும் அத்வானி கூறியிருக்கிறார். இது தமிழர்ளையும், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளையும் சிந்திக்கத் தூண்டும் நேர் எதிர் நிலைகளாகும்.

அதுமட்டுமல்ல, இலங்கை இனப் பிரச்சனைக்கு தனி ஈழமே தீர்வு என்பதிலும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காக போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிப்படையான ஆதரவாளருமான வைகோவின் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு அத்வானி பேசியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது.

அத்வானி மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தோழமைக் கட்சியான பிஜூ ஜனதா தள உறுப்பினர் பேசியதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டு உறுப்பினர்கள் பேசியதை விட அவர் பேசியது அழுத்தம் திருத்தமாக இருந்தது.

பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு இணக்கமான நிலைப்பாட்டை எடுத்திருப்பது அரசியல் ரீதியான முக்கியத்துவத்தையும் பெறுகிறது.

மக்களவைக்கு இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல் கூட்டணிகளை நிர்ணயிக்கும் காரணிகளாக இலங்கைத் தமிழர் பிரச்சனையும், தமிழக மீனவர் பிரச்சனையும் அமையும் சாத்தியக் கூறுகள் அத்வானியின் பேச்சைத் தொடர்ந்து வலிமை பெற்று வருகிறது.

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்?


நீரஜா சௌத்ரி (தினமணி )

மக்களவைக்குத் தேர்தல் முடிந்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால் யார் பிரதமர் என்பதை கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பாக உணர்த்தியுள்ளார். காங்கிரஸ் ஆதரவு ஏடான "சந்தே'ஷில் தொண்டர்களுக்கு அவர் எழுதிள்ள கடிதத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை மன்மோகன் சிங் சிறப்பாக வழிநடத்திச் செல்வதாகக் கூறி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு (2009) சுதந்திர தினத்தன்று மன்மோகன் சிங் தேசியக் கொடியை ஏற்றிவைப்பாரா என்று சோனியாவிடம் கேட்டதற்கு, ஏன் ஏற்றக்கூடாது? என்று பதிலுக்குத் திருப்பிக் கேட்டார்.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சோனியாவுடன் உறவுமுறை சுமுகமாக இருக்கிறது. நேருகாந்தி குடும்பத்தினரை அனுசரித்துச் செயல்படுகிறார். இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பிறகும் அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. தன்னால் எந்தப் பிரச்சினையும் வராது என்ற எண்ணத்தை அவர் சோனியாவிடம் ஏற்படுத்தியுள்ளார்.

எனவே, அவர் பிரதமருக்கான பந்தயத்தில் முதல் நிற்கிறார். கட்சியினரும் அவரை ஏற்றுக்கொள்ளக்கூடும். இதன் மூலம் முதல் தடையை அவர் தாண்டிவிட்டார். ஆனால், தேர் தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 272 இடங்களைப் பிடிப்பதற்கு அவரால் முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதை எப்படி அவர் சமாளிக்கப் போகிறார்?

வரும் பொதுத் தேர்தல் எந்த அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தேர்தலில் அதிக இடங்களை வென்ற தனிப் பெருங்கட்சியாக காங்கிரஸ் இருந்தால், ஆட்சியமைப்பதற்கு இடதுசாரிக் கட்சிகளின் உதவியை காங்கிரஸ் நாடலாம். காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு 2004ம் ஆண்டு தேர்தலில் கிடைத்த வெற்றி தொடருமா என்பது சந்தேகமே.

பிரதமர் மன்மோகன் சிங், "பைபாஸ்' அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவுடன் அவர் பூரண உடல்நலம் பெற வாழ்த்தி முதல் பூச்செண்டு கொடுத்தது மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பிரகாஷ் காரத்.

பிரணாப் முகர்ஜி மேற்கு வங்க மாநில பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு அவரை மார்க்சிஸ்ட் கட்சியினர் சுற்றிச்சுற்றி வருகின்றனர். மன்மோகன் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது இடதுசாரிக் கட்சியினருக்கும் காங்கிரஸுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சியுடன் இடதுசாரிக் கட்சிகள் மீண்டும் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மலரும் வாய்ப்பு ஏற்பட்டு, அதை இடதுசாரிகள் ஆதரிக்க முன்வந்தாலும் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. அதாவது, யாரைப் பிரதமராகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து தங்களிடம் ஆலோசனை கலக்க வேண்டும் என்று இடதுசாரிகள் நிபந்தனை விதிக்கக் கூடும்.

2004 ஆம் ஆண்டு தேர்தலின் போது பாராளுமன்றக் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதை காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கே விட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்டனர் இடதுசாரிகள். ஆனால், இந்த முறை அப்படிச் சொல்ல முடியாது. குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தை வலியுறுத்தும்போது பிரதமர் யார் என்பதையும் வலியுறுத்தக்கூடும்.

எனினும், மன்மோகன் மீண்டும் பிரதமராவதை இடதுசாரிகள் விரும்பாவிட்டால் அல்லது காங்கிரஸ் குறிப்பிடும் சிலரின் பெயரை அவர்கள் ஏற்காவிட்டால் என்ன செய்வது? அதற்காகத்தான் ஒருவரை சந்தடியில்லாமல் தயார்படுத்தி வருகிறது காங்கிரஸ் தலைமை. அவர்தான் சுஷில் குமார் ஷிண்டே. அசாதாரண சூழ்நிலையில் மற்ற காங்கிரஸ் தலைவர்களைவிட சுஷில் குமார் ஷிண்டே பெயரை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்குக்கு அடுத்தபடியாக களத்தில் நிற்பவர் பிரணாப் முகர்ஜிதான். அவரை இடதுசாரிகளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சியின் தலைவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடும். பிரதமர் இல்லாத சமயங்களில் அவர் பிரதமரின் பொறுப்புகளை திறம்பட வகித்து வந்துள்ளார்.

பல்வேறு அமைச்சரவைக் கூட்டங்களுக்கு அவர் தலைமை வகித்துள்ளார். அரசுக்கும் கட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம், தனது திறமையான பேச்சால் நிலைமையைச் சமாளித்துள்ளார்.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது புலனாய்வு அமைப்புகள் சரிவரச் செயல்படத் தவறிவிட்டதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், ஆளுங்கட்சிக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், வெளியுறவுத் துறை அமைச்சரான பிரணாப் முகர்ஜி, இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக அழுத்தம் திருத்தமாகக் கூறி நிலைமையைச் சமாளித்தார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற 6 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க உதவியது. அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டபோது கூட, நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளுமாறு அவரை சோனியா கேட்டுக் கொண்டார்.

பிரணாப் சிறந்த ராஜதந்திரி, கட்சியையும் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் திறன்பெற்றவர் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அவரை நம்புவதற்கு காங்கிரஸ் மேலிடமோ, சோனியா காந்தியோ தயாராக இல்லை.

மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை இடதுசாரிகள் பிரதமராக ஏற்கமாட்டார்கள். சிவராஜ் பட்டீல், சோனியா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தவர் என்றாலும் உள்துறை அமைச்சர் பதவியிருந்தபோது அவர் சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டிலிருந்து இன்னும் அவர் மீளவில்லை.

மேலும் பிரதமர் பதவிக்குப் போட்டியிட அவர் திட்டமிடுவதாகத் தெரியவில்லை. பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே.அந்தோனி, நல்லவர் மட்டுமல்ல; சோனியாவுக்கு வேண்டிய நபருந்தான். ஆனால், எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படும் சோனியா காந்தி, "ஒரு கிறிஸ்தவரை பிரதமராக்க முயல்கிறார்' என்ற குற்றச்சாட்டு எழுவதை விரும்பமாட்டார்.

இது ஒருபுறம் இருந்தாலும், மத்திய மின் துறை அமைச்சராக உள்ள சுஷில் குமார் ஷிண்டேவுக்கு சில சிறப்பு அம்சங்கள் உள்ளன. முதலில் அவர் நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவர். சோனியாவுக்கு நம்பிக்கையானவர். இவையெல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு தலித்.

2007 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்கு யாரை முன்னிறுத்துவது என்ற பேச்சு எழுந்தபோது ஷிண்டேயின் பெயர் அடிபட்டது. ஆனால், அப்போது மாயாவதி மற்றொரு தலித் அதிகாரப் பதவிக்கு வருவதை விரும்பவில்லை. இதனால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. சுஷில் குமார் ஷிண்டேயை பிரதமராக்க விரும்பினால் பல்வேறு தரப்பனரும் ஏற்றுக்கொள்ளக் கூடும்.

சென்ற ஆண்டு, அடுத்த பிரதமர் தலித்தாக இருக்க வேண்டும் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் எழுந்தபோது, மாயாவதியின் பெயரை இடதுசாரிகள் ஆதரித்தனர். வரும் தேர்தல் மாயாவதி பிரதமர் ஆக முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், தலித் வகுப்பைச் சேர்ந்த ஷிண்டேயை காங்கிரஸ் பிரதமராக்க முயன்றால் அதை இடதுசாரிகள் ஏற்கக்கூடும்.

ராம்விலாஸ் பாஸ்வானின் பரம எதிரியான லல்லு பிரசாத் யாதவ், ஷிண்டே பிரதமராவதை ஆதரிக்கக் கூடும். 1970களில் சுஷில் குமார் ஷிண்டேயை முதன் முதலாக அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர் சரத் பவார்தான் (அப்போது ஷிண்டே காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தார்).

ராகுல் காந்திக்கு பிரதமர் பதவி மீது ஆசையில்லை, மன்மோகன்தான் அடுத்த பிரதமர் என்று கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறிவந்தாலும் ராகுல் பிரதமராக வாய்ப்பு இல்லை என்று கூறிவிட முடியாது.

தேர்தலில் காங்கிரஸ் கட்சி 180 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று, கட்சிக்குள் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ராகுல் பிரதமராகக் கூடும். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எப்படியும் 150 இலிருந்து 155 இடங்களில் வென்றுவிடலாம் என்று காங்கிரஸ் கணக்குப் போடுகிறது.

பிரதமர் பதவிப் போட்டியாளராக சரத் பவார் பெயரும் அடிபடுகிறது. அவரைப் பிரதமராக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கூறிவருகின்றனர். சரத் பவார், சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவர் அல்ல.

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் தவிர்ந்த பிராந்தியக் கட்சிகள் அதிக இடங்களை வென்றாலோ அல்லது தேசிய வாத காங்கிரஸ் கட்சி 25 இடங்களைப் பிடித்தாலோ, சுயேச்சை எம்.பி.க்கள் சரத் பவாரை ஆதரிக்க முன்வந்தாலோ அவர் பிரதமராவதை காங்கிரஸ் ஆதரிக்கக் கூடும்.

இதேபோல மாயாவதி, ஜெயலலிதா, முலாயம்சிங் ஆகியோரும் தேர்தல் வெற்றியைப் பொறுத்து பிரதமர் ஆக முயற்சிக்கக் கூடும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானிதான் பிரதமர் வேட்பாளர். இதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தலில் அதிக இடங்களில் வென்ற தனிப் பெருங்கட்சியாக பாஜக இருந்தால் கூட்டணிக் கட்சிகளும் கணிசமான இடங்களைப் பெற்றால் அத்வானி பிரதமராவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. இப்போது இடதுசாரி பக்கம் உள்ள ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, ஏன் மாயாவதிகூட அணி மாறி அவரை ஆதரிக்கக் கூடும்.

இறுதியாகச் சொல்ல வேண்டுமானால், தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியைப் பொறுத்துதான் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும். தேர்தலுக்குப் பின் அரசியல் கட்சிகள் அணிமாறும் வாய்ப்பு உள்ளதால், யார் எத்தனை இடங்களில் ஜெயிக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும்!

காங்கிரசைவிட்டு தன்மானத் தமிழர்களே வெளியேறுங்கள்! - தமிழ்நாடு காங்கிரசைக் கழுவிக் கவிழ்த்துவிட்ட தில்லிக் காங்கிரசு!


காந்தியும் காமராசரும் பெரியாரும் பங்கெடுத்த ஒரு மாபெரும் இயக்கம் பேராயக்கட்சி (காங்கிரசுக் கட்சி)! வெள்ளையருக்கு எதிரான இந்திய தேசிய இயக்கத்தில் பேராயக் கட்சியின் பங்களிப்பு, ஈகம் அளப்பரியது! ஆனால் இந்தியத் துணைக்கண்டம் விடுதலை பெற்று வெள்ளையர் வெளியேறியபோது, இந்தப் பேராயப் பேரியக்கதின் போக்கு கண்டு வெகுண்டெழுந்தவர்களும் வெளியேறியவர்களும் சகித்துக் கொண்டு காலம் தள்ளுபவர்களும் ஏராளம், ஏராளம்! காந்தியடிகளே வெந்து நொந்து சொன்னார், “காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும்” என்று!
இன்றைக்கு மணிசங்கர ஐயர்வாளுக்கு செருப்படியும் கல்வீச்சும், தங்கபாலுவின் ஓராயிரம் உருவப்பொம்மைகளை மக்கள் ஆங்காங்கே எரிப்பதும், காங்கிரசுக் கொடிக் கம்பங்களை வீழ்த்துவதும் அன்றாட நடைமுறையாகி விட்டது. காங்கிரஸ் தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. மொத்தத் தமிழர்களின் எதிர்ப்பை வகை தொகையில்லாமல் சம்பாதித்துவிட்டது.

காங்கிரசுத் தொண்டரான தியாகி இரவிச்சந்திரன் தீக்குளித்து, உயிரை ஈகம் செய்து காங்கிரசுக் கட்சி செய்யும் துரோகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார்.

தனிநபர்களின் தன்நலத்திற்காகவும் ஒரு சிலரின் பதவிப் பற்றிற்காகவும் ஈகிகள் சிந்திய ரத்தமும் வியர்வையும் அன்றிலிருந்து இன்றுவரை மதிப்பிழந்து போனதுதான் உண்மை.

வல்லபாய் பட்டேல் போன்றவர்கள் இந்தியா ஒரு தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை மறுத்து தேசிய இனங்களின் கொட்டடியாகவே இதை மாற்றிவிட்டனர்.

காசுமீரத்தின் வரலாற்றை நாம் ஒரு முறை வாசித்துப் பார்தாலேயே இது புரியும். அவர்கள் பாக்கிசுத்தானுடனோ இந்தியாவுடனோ இணைய விரும்பாது தனியொரு நாடாகவே இருக்க விரும்பினார்கள்.


ஆனால், நேருவோ காசுமீரத்துக்காரர்! காசுமீர் போய்விட்டால் நேரு எப்படி தலைமையமைச்சராக இயலும்? நேருவிற்குப் பின் நேருவின் குடும்பத்தாரின் கொற்றமே கோலோச்சியது.. இன்றைக்கு பேராயப் பேரியக்கத்தையே எப்படி மாற்றிவிட்டார்கள் என்றால், பிரியங்காவிற்குக் குழந்தை பிறந்துவிட்டதா? என்று ஏங்கித் தவிக்கும் ஒரு மட்டமான கொத்தடிமைக் கூட்டமாகவே அதை மாற்றிவிட்டார்கள். காசுமீர விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க இன்று கோடிக்கணக்கான பணத்தை நாள்தோறும் கொட்டி நாட்டின் வளர்ச்சிப் பாதையில் பெரியதொரு முட்டுக்கட்டையை நாம் போட்டு வைத்துள்ளோம்!
இந்திராகாந்தி!

பின்னர் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் நாட்டின் தலைமையமைச்சர் ஆனார். அவருக்கு முன்பாக திரு. இலால் பகதூர் சாஸ்த்திரி அவர்கள் சில மாதங்கள் தலைமையமைச்சராக இருந்தார். மிக எளிமையானவர். அவருடைய மரணம் குறித்து இன்னும் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் இருக்கின்றன. தாஷ்கண்ட் சென்ற அவர் எப்படி மரணத்தைச் சந்தித்தார்? என்பது குறித்து இன்னும் குழப்பம் நிலவுகிறது. பின்னர் நடந்த நகர்வாலாப் படுகொலை! தேர்தல் செலவுகளுக்காக பணம் சேர்க்கும் இழிபோக்கிற்கு போட்ட பிள்ளையார் சுழி அது. திருமதி இந்திரா காந்தி அவர்களின் மரணத்தையொட்டி தில்லியிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடந்த சீக்கியர் படுகொலை, கொள்ளை, கற்பழிப்புகள் இந்தப் பேரியக்கம் எப்படி ஓர் உதிரி நிலைக்கு உருமாறியிருக்கிறது என்பதை மெய்ப்பித்தது! மத்திய அமைச்சராகயிருந்த செகதீசு டைட்லர் போன்ற காங்கிரசுத் தலைவர்கள் நடுத்தெருவில் நின்றுகொண்டு அப்பாவிச் சீக்கியர்களை கொன்றொழித்த கொடுமைகளுக்கு வழிநடத்தினார்கள் என்ற உண்மை உள்ளத்தை உலுக்குகிறது. குசராத் படுகொலைகள், ஒரிசாப் படுகொலைகள் என்று சங்கப்பரிவார அமைப்புகளின் படுபாதகச் செயல்களைக் குறித்து நாம் ஒப்பாரி வைக்கிறோம். பேராயப் பேரியக்கம் எந்த வகையிலாவது இதிலிருந்து மாறுபட்டதா? என்று சிந்தியுங்களேன்.

இந்திராகாந்தி அவர்கள் இருக்கும்போதே அவருடைய சின்ன மகன் சஞ்சய் காந்தி அவர் விருப்பம்போல நடந்துகொண்டார். கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு போன்ற குதர்க்கமான செயற்பாடுகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு காட்டுத் தர்பாரே நடத்தினார். அவரும் ஐயத்திற்கிடமான விதத்தில்தான் ஒரு வானூர்தி நேர்ச்சியில் காலமானார். அதிலும் சந்திராசாமியின் தொடர்பு என்ன? என்பது அவிழ்க்க முடியாத முடிச்சாகவே இன்னும் இருக்கிறது.

இராசீவ் காந்தி
பின்னர் இராசீவ் காந்தி வந்தார். “இழுத்து வரப்பட்டார்!” என்றே வைத்துக் கொள்ளுங்கள். இத்தாலியப் பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டவர். நாட்டின் பாதுகாப்பிற்காக வாங்கப்பட்ட பீரங்கிப் பேர ஊழலில் கோடிக்கணக்கான இந்தியர்களின் வரிப்பணம் குவத்ரோச்சி என்கிற இத்தாலியரின் கைகளில் விழுந்துவிட்டதற்கும் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும் என்ன தொடர்பு என்று ஒரு நடுநலைமைவாதியாக நின்று சிந்தியுங்களேன்.

தமிழர்களும் பேராயக்கட்சியும்
அந்தக் காலத்திலிருந்து இந்தக்காலம் வரை வடவர்களுக்குக் குற்றேவல் செய்யும் ஓர் அமைப்பாகவே தமிழகப் பேராயக்கட்சி இருந்திருக்கிறது. காமராசரைக் கிங்மேக்கர் என்று சொன்னார்களே தவிர கிங் ஆக்கவில்லை. மூப்பனாருக்கும் வாய்ப்பு வந்தது. அதுவும் தேவகவுடாவிற்கு தாரை வார்க்கப்பட்டதே தவிர தமிழர் ஒருவரை வரவிடக்கூடாது என்பதில் (கருணாநிதி உட்பட) தமிழரல்லாதவர்கள் அனைவரும் கவனமாகவே இருந்தார்கள்.

திரு. இராசீவ் காந்தி அவர்கள் இலங்கைக்கு இந்திப் படைகளை அனுப்பி அங்கு ஏறத்தாழ பத்தாயிரம் தமிழர்களைப் படுகொலை செய்ததை நாம் எந்த வகையிலாவது ஞாயப்படுத்துகிறோமா? அந்த அமைதிப் படைகள் 31 மாதங்கள் அங்கு அட்டகாசம் செய்துவிட்டுத் தலை குனிந்து இந்தியா திரும்பியபோது இன்றைய முதல்வரான கருணாநிதி அன்றைக்கும் முதல்வராக இருந்தார். படைகள் சென்னை வந்திறங்கியபோது அவர்களை வரவேற்க மறுத்துவிட்டார்! எவ்வளவுதான் நாம் மூடி மறைத்தாலும், அடக்கி அமுக்கினாலும் உண்மைகள் சாகாது என்பதற்குத் தமிழீழமும் தமிழகமும் இன்று கிளர்ந்தெழுவதிலிருந்தே தெரிகிறது.

இராசீவ் காந்தி அவர்களின் கொலையை நாம் ஞாயப்படுத்தவில்லை! ஆனால், ஓர் உண்மைக் காங்கிரசுத் தொண்டனாகச் சிந்தியுங்கள். அவரது படுகொலை குறித்து இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இருக்கின்றன. பல ஊடகங்களும், தலைவர்களும் நாயாய் பேயாய் கத்தினாலும் அந்த உண்மைகள் குறித்து ஆய்ந்தறிய யாரும் முன்வராதது ஏன்?

அவிழாத முடிச்சுகள்!
1. கொலையில் சந்திராசாமி, சுப்பிரமணியசாமி, நரசிம்மராவு போன்றவர்களின் தொடர்பு என்ன?
2. ஒற்றைக்கண் சிவராசனின் தாயார் ஒரு சிங்களவர் என்பதும் கொலையில் ஈடுபட்டவர்கள் புலிகள் இயக்கத்திலிருந்து விலகியவர்கள் என்பதும் உண்மையில்லையா? ஏற்கெனவே ஒரு சிங்கள படைவீரன் துப்பாக்கியால் அடித்து இராசீவைக் கொலை செய்ய முயன்றது உங்களுக்குத் தெரியாதா? அவன் இன்று சிங்கள இனவெறிக் கட்சி ஒன்று நடத்திக் கொண்டிருக்கிறான் என்பது உண்மையில்லையா?
3. ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் தவறான புரிதலின் அடிப்படையில், தான் தவறான முடிவு எடுத்துவிட்டதாகவும் அதை தான் பதவியேற்றதும் சரி செய்வதாகவும் மறைந்த புலிகளின் தலைவர் கிட்டு வழியாக பிரபாகரனுக்குச் செய்தி அனுப்பிய திரு. இராசீவை புலிகள் கொலை செய்து மாபெரும் எதிர்ப்பைச் சந்தித்திருப்பார்களா?
4. சிரிபெரும்பத்தூர் நிகழ்ச்சி நிரல் மாற்றி அமைக்கப்பட்டது முதல் சம்பவம் நடந்த இடத்திலிருந்து காங்கிரசுத் தலைவர்கள் விலகிக் கொண்டதும், எந்த ஒரு காங்கிரசுத் தலைவரும் அதில் சாகவில்லை போன்ற செய்திகளெல்லாம் நமக்குச் சொல்வது என்ன?
அதே வேளையில் இராசீவ் கொலையாளிகள் காங்கிரசுத் தலைவர் மரகதம் சந்திரசேகர் வீட்டில் தங்கியிருந்ததும் உண்மையில்லையா?
5. இப்படி நூற்றுக் கணக்கான கேள்விகள் விடை காணமுடியாமல் தத்தளிக்கும் நேரத்தில் ஓர் அவசியமான வினாவையும் நாம் எழுப்புவது நல்லது. கொலையின் மூலம் ஆதாயம் அடைந்தது யார்? இழப்புகளை சந்தித்தது யார்? பதவியும் ஆட்சியும் யாருக்குக் கிடைத்தது? தடையும் பின்னடைவும் யாருக்கு ஏற்பட்டது? இதையெல்லாம் கணக்குப் போடாமலா காய்கள் நகர்த்தப்பட்டன?
இன்றைக்கு ஒட்டு மொத்தத் தமிழினமும் ஈழத்தில் நடக்கும் போராட்டத்திற்குப் பின்னணியில் திரண்டு நிற்கிறது. ஆனால், காங்கிரசுக் கட்சி, தி.மு.க. தலைமை, அ.தி.மு.க. தலைமை ஆகியனவே இன்று எதிர்ப்பாகவும் இரண்டகம் செய்து கொண்டும் குறுக்குச்சால் ஓட்டிக்கொண்டும் நிற்கின்றன. இந்த எதிர்ப்பிற்கும் இரண்டகத்திற்கும் புலிகளைக் காரணம் காட்டுகின்றனர். தன்னுடைய போராளிகளில் 25000 பேரின் உயிரை ஈகம் செய்தவர்களை வன்முறையாளர்கள் என்று அறிவித்துக் கொண்டு ஒரு இலக்கம் அப்பாவித் தமிழர்களைக் காவு கொண்ட சிங்களப்படைகளோடு இந்தியா கொஞ்சிக் குலவி நம் வரிப்பணத்தில் ஆயுதங்கள் கொடுக்கிறது. எந்த ஊர் ஞாயம் இது?

ஈழப் போராட்டம் வெறும் ஈழத் தமிழரின் போராட்டம் என்றோ அல்லது விடுதலைப் புலிகளின் போராட்டம் என்றோ குறுக்கிப் பார்த்த மடமை என்றோ ஒழிந்து விட்டது. தமிழர் என்கிற மூத்த இனத்திற்கு உலகெங்கும் அடி, உதை, புறக்கணிப்பு என்று பன்னெடுங்காலமாகவே நடந்து வருகிறது.

பர்மாவிலிருந்து விரட்டப்பட்டோம். மலேசியாவில் இன்றும் அடி உதை படுகிறோம். சிங்கப்பூரில் அடக்குமுறைகளைச் சந்திக்கிறோம், கர்நாடகத்தில் கொல்லப்பட்டோம், விரட்டப்பட்டோம், மணிப்பூரிலிருந்து விரட்டப்பட்டோம், மும்பையிலிருந்து விரட்டப்பட்டோம், தமிழகத்திற்குள்ளும் ஆட்சியிழந்து அடிமையினமாக இருக்கிறோம், ஈழத்திலும் இலங்கையிலும் கடுமையான சிகல்களை 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சந்தித்து வருகிறோம்.

சிங்களர்கள் தமிழர்களுக்கு எதிராக நடத்திய கொடுமைகளையும் கொலைகளையும் யாரும் அறயாதிருக்கமாட்டீர்கள். ஒரு லட்சம் தமிழர்களை படுபயங்கரமாக அவர்கள் கொன்றொழித்திருக்கிறார்கள், கற்பழித்திருக்கிறார்கள், கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி நாடு நகரங்களைத் தரை மட்டமாக்கியிருக்கிறார்கள். நோயாளிகளைக் கொல்கிறார்கள், குழந்தைகளைக் கொல்கிறார்கள்! மறுபுறத்தில் இராணுவத்தோடும் துரோகக் கும்பல்களோடும் மட்டுமே விடுதலைப்புலிகள் போராடுகிறார்கள். யார் வன்முறையாளர்கள்? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தந்தை செல்வா போன்றவர்கள் அறவழியில்தான் போராடினார்கள். ஆனாலும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நசுக்குதலும் கொலைகளும் இன அழிப்பும்தான் தமிழர்களுக்குப் பரிசாகக் கிடைத்தது. உலகிலுள்ள மற்ற தமிழர்கள் அடக்குமுறையைச் சந்தித்தபோது அடங்கிப் போனார்கள். ஈழத் தமிழர் மட்டும் 25 ஆண்டுகள் பொறுமை காத்த பிறகு திருப்பி அடிக்கத் தொடங்கினார்கள், தனி நாடு கேட்டார்கள். அவர்கள் பிழைக்கப் போனவர்கள் இல்லையே! வந்தாரை வாழ வைத்தார்கள். சிங்களர்களை வரவேற்று வாழ விட்டதும், ஆள விட்டதும் தமிழர்கள்தானே! அவர்களுக்கென்று நாடு இருந்ததே! அதை இழந்த பின்னரும் குடியாட்சியை மதித்து அமைதியாத்தானே வாழ்ந்தார்கள்! காட்டாட்சி கட்டவிழ்த்துவிடப்பட்ட பிறகே அவர்கள் போரிடத் தள்ளப்பட்டார்கள். இழந்த அவர்களுடைய சொந்த நாட்டை அவர்கள் மீட்டு எடுக்க முயல்வது தவறா? யூதர்களும் பாலத்தீனியரும் வங்காளிகளும் தத்தமது நாட்டை மீட்டெடுத்தது சரி என்றால் ஈழத் தமிழரின் தனி நாட்டுப் போராட்டம் மட்டும் எப்படித் தவறாகும்? ஏன் தில்லிக்குக் கசக்கிறது?

நாம் இந்திய நாட்டுக்குள் இருந்தாலும் பல தேசிய இனங்களாக இருக்கிறோம். காவிரிப் பிரச்சனை என்று வந்துவிட்டால் நாடு, கட்சி, சாதி என்று எதையும் பாராமல் கன்னடர்கள் கன்னடர்களாத்தானே நிற்கிறார்கள். தமிழகத்திற்குக் காவிரியின் மீது என்ன உரிமை இருந்தாலும் அவர்கள் கிஞ்சித்தும் அவைகளை நினைப்பதில்லை, மதிப்பதில்லை என்பதைப் பார்க்கிறீர்களா?

மலையாளிகளைப் பாருங்கள். தமிழ்நாட்டோடு ஒரு பிரச்சினை என்றால் கட்சித் திரைகளைக் கழற்றிவிட்டு மலையாளியாக ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

மராத்தியத்தில் அவர்களின் தேசிய உணர்வைப் பாருங்கள்! தமிழ்நாடு மட்டும் இதற்கு விதிவிலக்கு. 1956ல் தேவிகுளம் பீர்மேட்டை நாம் கேரளாவிடம் இழந்தபோது, காமராசர்கூட, “மேடு போனால் என்ன? பள்ளம் வந்தால் என்ன? எல்லாம் இந்தியாவிற்குள்தானே இருக்கிறது” என்று விரிந்த மனதோடு பேசினார். இன்றும் காங்கிரசாரில் பலர் அப்படியே இருக்கிறார்கள். வடவர்களும் வங்காளிகளும் இதை நல்ல இளிச்சவாய்த்தனம் என்றே நினைக்கிறார்கள். தில்லியை ஆளும் பிராமணர்களுக்கு இந்தியா என்கிற கொட்டடி வேண்டும். மக்களுக்குத் தேசிய ஓர்மை வந்துவிடக்கூடாது என்று கருதுகிறார்கள். காரணம், அது நேர்ந்தால் அவர்கள் தலையில் அது இடியாய் இறங்கிவிடும். தேசியங்கள் முதன்மைப்பட்டுவிட்டால் பிராமணனைத் தவிர்த்து மற்றவர்களுக்கு இத் துணைக்கண்டத்தில் மண்ணுரிமை இருக்கும். அவர்களுக்கு இருக்காது. இதுதான் அவர்களை வாட்டும் நெருப்பு. இதை அறியாது இன்று பலிக்கடா ஆக்கப்பட்டிருப்பவர்கள் அப்பாவித் தமிழ்நாட்டுக் காங்கிரசுத் தொண்டர்கள்.

காவிரி பாயும் டெல்டா பகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு மணிசங்கர ஐயர்வாள்! 1999ல் சென்னையில் ஒரு கூட்டத்தில் காவிரி பற்றி தமிழ்நாட்டு ஞாயங்களை அழுத்தமாகப் பேசினார். உடனே, இதையே நாடாளுமன்றத்தில் பேசுங்கள் என்று சொன்னபோது, “நான் காங்கிரசுக்காரன், கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சி நடக்கிறது. நான் எப்படி பேச முடியும்? அ.தி.மு.க.வினரைப் பேசச் சொல்லுங்கள்!” என்று சொல்லிக் கைகழுவி விட்டார். ஆக, இவர்களைப் போன்ற தலைவர்களுக்கு பதவிக்காக வாக்கு தேடும்போதுமட்டும் தமிழ்நாடு வேண்டும், தமிழர்கள் வேண்டும்! பின்னர் இந்தி தேசியப் பிறங்கடைகளாக மாறிவிடுவார்கள். ஆனால், கர்நாடகக் காங்கிரசோ, கேரளக் காங்கிரசோ, ஆந்திரக் காங்கிரசோ இப்படியா நடக்கிறது? தமிழ்நாடு காங்கிரசு மட்டும் அடிமைக் காங்கிரசாக ஆக்கப்பட்டு கிடக்கிறது! அடக்கித்தான் வாசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது! தமிழர்களாக இருந்தாலும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவியாலா நிலைக்கு அவர்கள் குரல் நெரிக்கப்படுகிறது! வேறு வழியின்றி ஈகி இரவிச்சந்திரன் போன்றவர்கள் உயிரை மாய்க்கும் அளவிற்குப் போயிருக்கிறது!

தமிழ்நாட்டுக் காங்கிரசாரை தில்லிக் காங்கிரசார் முற்றாகக் கைகழுவி விட்டார்கள். இதை இப்போதாவது தமிழக காங்கிரசார் உணர்ந்து கொண்டு தங்கள் அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுகிறோம். காமராசர், மூப்பனார் போன்றவர்களின் காலத்தில் தமிழக காங்கிரசாரை தில்லி புறக்கணித்தது என்பது ஒரு விதம். காரணம், அப்போதும்கூட தில்லி நினைத்தது, “தமிழகத்தில் காங்கிரசு உயிர்த்தெழ ஒரு வாய்ப்பிருக்கலாம்” என்று! ஆனால், தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு மாற்றாக பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், தே.மு.தி.க., ச.ம.க., போன்ற கட்சிகள் வந்திருக்கின்றனவே தவிர காங்கிரசு துளிர்த்தெழுவதற்கான வாய்ப்பே இல்லை என்பது புலனாகிவிட்டது. அடுத்து தமிழ்நாடு காங்கிரசுக்குள் இருக்கும் பூசல்களும் பிரிவுகளும் எண்ணற்றவை. அவைகளைச் சரிக்கட்டிக் கொண்டுவருவது என்பது குதிரைக்குக் கொம்பு முளைப்பது போல என்றாகிவிட்டது. இவ்விரு காரணங்களும் தில்லி காங்கிரசுக்குத் தெரியாமல் இருக்குமா?

தமிழ்நாடு காங்கிரசில் இருக்கும் தமிழர்களின் உணர்வைக் குப்பையென நினைத்து தில்லிக் காங்கிரசு அதிலும் குறிப்பாக சோனியா அவர்கள் எடுத்த ஈழ நிலைப்பாட்டின் பின்னணி இதுதான். கர்நாடகத்தில் காங்கிரசுக்கு ஆட்சியேறும் வாய்ப்பு இருப்பதால் கன்னடர்களுக்கு எதிராக தில்லி ஒருக்காலமும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்காது. காவிரிப் பிரச்சனையில் எடுத்திருக்கிறதா? காவிரிக் கலவரம் பற்றி எடுத்திருக்கிறதா? ஆனால், தமிழகத்தில் நம்பிக்கையே இல்லாத நிலையில் முற்றாகக் கை கழுவி விட்டது தில்லிக் காங்கிரசு!

உலகில் வாழும் பத்தரைக் கோடித் தமிழ் மக்களும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த தமிழர்கள் மட்டும் ஏன் விலகி நிற்க வேண்டும்? உள்ளத்தில் கொதிப்பையும் குமுறலையும் அடக்கிக் கொண்டு ஏன் தமிழர்களிடமிருந்து இவர்கள் விலகி நிற்க வேண்டும்? தமிழ்நாட்டு காங்கிரசுத் தலைமைகூட தமிழர்களிடமா இருக்கிறது? ஈ.வி.கே.எசு. இளங்கோவன், தங்கபாலு, சுதர்சனம், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், ஞான தேசிகன், மணிசங்கரஐயர் போன்ற தமிழரல்லாதவர்கள் வைத்ததுதானே அங்கு சட்டமாகயிருக்கிறது! வாசன் எங்கே? குமரி அனந்தன் எங்கே? சிதம்பரம் எங்கே? பீட்டர் அல்போன்சு எங்கே? பதவிகள் சில கொடுத்து வாயடைத்து வைத்திருக்கிறார்கள். கிருஷ்ணசாமியை மொத்தமாக ஓரம் கட்டிவிட்டார்கள்.

தில்லிக் காங்கிரசு தமிழ்நாடு காங்கிரசை குப்பை என்று கருதிவிட்டால் அந்தக் குப்பைக்குள்ளும் வந்தேறிகளின் கொட்டம்தான் கொடிகட்டிப் பறக்கிறது.

மானமுள்ள தமிழர்கள் காங்கிரசை விட்டு இன்றே துணிவுடன் விலகுவது தமிழினத்திற்கு நீங்கள் செய்யும் மாபெரும் தொண்டாகும். தமிழர் கட்சிகள் எத்தனையோ இருக்கின்றன. அவைகளில் சேருங்கள். மூழ்கும் கப்பலைச் சுற்றி முன்னூறு கப்பல்கள் உங்களை வரவேற்க அணிவகுத்து நிற்க ஏனப்பா நீயும் மூழ்கித்தான் சாக வேண்டுமோ? ஏன், தெலுங்கர்கள் விலகினால்கூட விஜயகாந்து கட்சியில் சேரலாமே!
நாம், நம் இனம், நம் நாடு என்று இணைவோம்!

அப்படித்தானே கன்னடரும், தெலுங்கரும், மலையாளியும் நிற்கிறார்கள்!

ஈனம் அழிப்போம்!
மானம் காப்போம்!
தமிழர்களம்
தமிழர்நாடு

வந்தார் மேனன் நொந்தது தமிழர் மனம்


வடக்கில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்தும் வகையில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தான் இலங்கை வரவில்லையென்று கடந்த வாரம் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளரும் இந்தியாவுக்கான முன்னாள் உயர் ஸ்தானிகருமான சிவ்சங்கர் மேனன் தெரிவித்திருந்தது ஆச்சரியத்தை அளிப்பதாகத் தெரியவில்லை. சிவ்சங்கர் மேனனின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகமவும், சிவ்சங்கர் மேனன் வடபகுதி யுத்தம் குறித்தோ யுத்த நிறுத்தம் குறித்தோ இலங்கை அரசுடன் பேச வில்லையென்று தெரிவித்திருந்தார்.அவர் இலங்கைக்குப் புறப்படும் முன்னரே என்ன நோக்கத்துக்காக இங்கு வருகிறார் என்ற விடயம் பலருக்கும் தெரிந்ததொன்றே. பிரணாப் முகர்ஜியின் செயலாளராவது இலங்கை வந்து எமது பிரச்சினைகள் பற்றி அரசுடன் பேசி யுத்த நிறுத்தத்துக்கு வழிவகுப்பாரென எவரும் நினைத்திருந்தால் கூட அவர்களின் இந்த நினைப்பு தப்பானதென்றே கூற வேண்டும்.

சிவ்சங்கர் மேனன் இங்கு தெரிவித்தவை தமிழக அரசியல்வாதிகளான கலைஞர் கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன் போன்றோருக்கு அதிர்ச்சியுடன் கூடிய ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர் கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. வெளியுறவுச் செயலாளரின் இந்த விஜயத்தின் உண்மையான நோக்கம் வடபகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நலன் குறித்தானதும் யுத்த நிறுத்தத்துக்குமானதாகவும் அமைந்திருந்தால் கூட அதனைக் காலம் கடந்த நிலையில் இந்தியாவினால் எடுக்கப்பட்ட தீர்மானமாகவே கருத வேண்டும். இந்தத் தீர்மானத்தால் எந்த விமோசனமும் கிடைக்கப் போவதில்லை என்பது மட்டும் உண்மை. இலங்கையில் யுத்தம் உக்கிரமடையும் போதெல்லாம் இந்தியாவினால் செய்ய முடிந்தது நிவாரணத்தை வழங்குவதும் உணவுப் பொட்டலத்தைப் போடுவதும் இலங்கைக்கு யாரையாவது அனுப்பி எதையாவது பேசச் செய்வதுமேயாகும். கடந்த 25 வருட காலத்தில் இரு தடவைகள் இதனைக் கண்டுவிட்டோம்.

ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் இலங்கை இராணுவம் வடமராட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்ற போது இந்திய அரசாங்கம் அந்த மக்களுக்குப் படகுகள் மூலம் உணவுப் பொருட்களை விரைந்து அனுப்ப முயற்சித்தது. அந்த முயற்சி கைகூடா ததையடுத்து யுத்த விமானங்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு உணவுப் பொருட்களை போட்டது. இது இந்தியாவின் முதலாவது நிவாரணமாக அமைந்தது.

அடுத்த நிவாரண உதவிகள் அண்மைக்கால யுத்த நடவடிக்கைகளின்போது வழங்கப்பட்டவை. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் 1700 தொன் உணவுப் பொருட்களை இந்தியா அனுப்பியிருந்தது. சிவ்சங்கர் மேனன் இலங்கை வந்த போது 40 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களைக் கையளித் திருந்தார். விருந்தாளி ஒருவர் வீட்டுக்குப் போகும் போது ஏதாவது ஒன்றினைக் கொண்டு செல்ல வேண்டுமென்ற பாரம்பரியத்தின் அடிப்படையிலேயே இதுவும் நடந்திருக்கலாம். இவ்வாறு வழங்கப்பட்ட 40 மில்லியன் பெறுமதியான நிவாரணப் பொருட்களில் பெருந்தொகையானவை மருத்துவப் பொருட்களாகவே உள்ளதாகத் தெரிகிறது. ஆகவே, இந்த மருத்துவப் பொருட்கள் கூட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சரியான முறையில் சென்றடையுமா என்பதும் சந்தேகமே.

இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் அண்மைக் காலமாக இந்தியாவின் அணுகுமுறையானது முற்றிலும் வேறுபட்டதாகவே அமைந்துள்ளது. வடக்கில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் இலங்கைத் தமிழ் மக்களுக்காகத் தமிழகத்தில் உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. அதே போன்று தமிழக அரசும் ஏனோதானோவென்று இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அக்கறை காட்டுவது போல் சில நடவடிக்கைகளையும் எடுத்தது. ஆனால் இந்திய மத்திய அரசு எல்லோருக்கும், எல்லாவற்றுக்கும் சரியென்று தலையாட்டியதே தவிர, இலங்கைத் தமிழ் மக்கள் நலன் சார்ந்த ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டிருந்தால் இந்த நிலையேற்பட்டிருக்காது என்று சிவ்சங்கர் மேனன் இலங்கை வந்திருந்தபோது குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்தையே கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இந்திய வெளிவிகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கூறியிருந்த துடன் தமிழீழ விடுதலைப் புலிகளே இதன் அமுலாக்கத்துக்குத் தடையாகவிருந்ததாகவும் ஒருபடி மேல் சென்று தெரிவித்திருந்தார். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்டதே மாகாண சபை முறையாகும். வடக்கு,கிழக்கு தமிழ்ப் பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையைப் புலிகள் முற்றாக நிராகரித்து விட்டார்களென்று வைத்தாலும் முதலமைச்சராக சில காலம் பதவி வகித்த வரதராஜப் பெருமாள் ஈழப்பிரகடனம் ஒன்றைச் செய்ய வேண்டிய நிலைக்கு ஏன் தள்ளப்பட்டார்? அவ்வாறான நிலையேற்படக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் யார்? அமைந்த காரணிகள் எவை என்பது கூட இந்திய வெளிவிவாகார அமைச்சருக்கும் அவரது செயலருக்கும் தெரியாது போனது ஏனோ? இலங்கையின் ஏனைய மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கூட ஜே.ஆரும் பிரேமதாசவும் தனது மாகாண சபைக்குத் தரவில்லையென்று வரதராஜப் பெருமாள் அறிக்கை விட்டு ஈழப் பிரகடனம் செய்ததை இந்தியத் தலைவர்கள் மறந்துவிட்டனரா? இந்திய மத்திய அரசின் நிர்ப்பந்தத்திலேயே வடக்குகிழக்கு மாகாண சபையை ஜே.ஆர். உருவாக்கினார் என்பதும் அதன் பின்னர் அதற்கான அதிகாரங்களை மத்திய அரசிடம் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் ஆளுநர் நியமனம் செய்யப்பட்டமையும் அவரையடுத்து ஆட்சிக்கு வந்த பிரேமதாசாவும் ஜே.ஆரை அடியொற்றிச் செயல்பட்டதனையும் சர்வதேசம் அறிந்துள்ள நிலையில் இன்றைய இந்திய மத்திய அரசுக்கு அவ்வாறானதொரு சம்பவம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளதென்பது கூடத்தெரியாமல் இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

வடமராட்சி தாக்குதலின் பின்னராகக் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய (ராஜீவ் - ஜே.ஆர்.) ஒப்பந்தத்தையடுத்து இந்திய அமைதிப் படையினரின் வருகையையும் அதன் பின் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களையும் தமிழ் மக்கள் மறந்து விடப் போவதில்லை. 13 ஆவது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களையாவது அன்றைய வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு வழங்கியிருந்தால் சில வேளைகளில் இன்றைய இந்தப் பிரச்சினை இவ்வளவு பூதாகரமாக மாறியிருக்காது என்றே கூறலாம்.

வெறும் நிவாரணப் பொருட்களை மட்டும் இந்தியாவிடமிருந்து இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தியா இந்தப் பிரச்சினையில் தலையிட்டு யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு இலங்கை அரசை நிர்ப்பந்திக்குமென்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு சிவ்சங்கர் மேனனின் வரவுடன் ஏமாற்றமாக மாறிவிட்டது. இவ்வாறானதொரு நிலையில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கையை நிர்ப்பந்திக்கக் கூடாதென்றும் இது முழுமையான தீர்வைப் பெற்றுக் கொடுக்காது என்றும் தெரிவித்திருப்பது கேலிக்குரியதே. மேலும் ராஜீவ் காந்தி கொலையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பிருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. பிரபாகரன் கைது செய்யப்பட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்று காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இது வேறு பிரச்சினை. ஆனால் ஒருவர் அல்லது ஓர் இயக்கம் செய்த தவறுக்காக இவ்வாறான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஓர் இனத்தையே தண்டித்துப் பழிவாங்க இந்தியா நினைத்தால் அது வேதனைக்குரிய விடயமாகும். தமிழ் நாடு அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு என்ன அழுத்தம் கொடுத்தாலும் இலங்கை மீதான நிலைப்பாட்டில் இந்திய மத்திய அரசில் மாற்றம் எதுவும் இல்லையெனவும் இந்திய அரசாங்கம் இலங்கைக்குச் சார்பாகவே உள்ளதெனவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அண்மையில் தெரிவித்துள்ள கருத்தினையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். அதேவேளை, வேறொன்றினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இலங்கை அரசுடன் நட்புறவைப் பேணிவரும் பெரும்பாலான நாடுகள் இந்தியா போன்றே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஆர்வம் காட்டாத நிலையிலேயே உள்ளன. அண்மைக் காலப் போக்குகளிலிருந்து இதனை அறிந்து கொள்ள முடிகிறது.

பங்களாதேஷ் படைத்தரப்பு முக்கிய அதிகாரிகள் கடந்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்து இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவைச் சந்தித்துப் பேசியிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தைகளில் கூட இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக பங்களாதேஷ் எதனையும் தெரிவிக்கவில்லை. இதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கு இரு தடவைகள் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன் பயனாக சீன அரசாங்கம் எவ்வாறான உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகிறதென்பதும் இவ்வாறான உதவிகள் மூலம் சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது என்னவென்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயமே.

இதேபோன்று, பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து அந்த நாடுகளினது தலைவர்களையும் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசி வருகிறார். இந்த மாத ஆரம்பத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தோனேசியா சென்றிருந்தார்.

இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையிலான உளவுப் பரிமாற்றம், கூட்டுப் பாதுகாப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, இராணுவ பயிற்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக இந்தோனேசிய அரசாங்கத்துடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இலங்கையின் இன்றைய நிலவரம் குறித்த இந்தோனேசிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறியதுடன் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்டுவரும் யுத்த நடவடிக்கையால் தமிழ் மக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லையென உறுதிபடத் தெரிவித்திருந்தார். இலங்கை இராணுவத்தின் வடபகுதி யுத்த முன்னெடுப்புகளால் பொதுமக்கள் பாதிக்கப்படாமை காரணமாக மக்கள் இராணுவத்தின் மீது நன்மதிப்பை வைத்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இதேபோன்று கடந்த 19 ஆம் திகதி பாகிஸ்தானுக்குச் சென்றிருந்த பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இராணுவ உயரதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். புலனாய்வுத் தகவல் பரிமாற்றம், இராணுவப் பயிற்சி வழங்குதல் போன்றவை குறித்து இருதரப்பிலும் ஆராயப்பட்டதுடன் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் வகையில் பாகிஸ்தானும் இலங்கையும் இணைந்து செயல்படவும் இந்தச் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது. இலங்கைக்குத் தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் தமது நாடு தொடர்ந்து வழங்குமென பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் இந்தச் சந்திப்பின் போது உறுதியளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவத்துக்குத் தொடர்ந்து உதவிகள் அளித்து வரும் பாகிஸ்தான் அரசுக்கு கோத்தபாய ராஜபக்ஷ நன்றியும் தெரிவித்திருந்தார். சார்க் வலயமைப்பு நாடுகளில் வறுமைமிக்க நாடான வங்கதேசத்தின் புதிய ஜனாதிபதி அண்மையில் இலங்கை வந்திருந்த போது, அவர் கூட ஒரு கருத்தைத் தெரிவித்து விட்டே சென்றிருந்தார். வடக்கில் இடம்பெறும் யுத்தத்தில் படையினர் கண்டு வரும் வெற்றி பாராட்டுக்குரியதென கூறியிருந்தமையும் இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். ஆகவே, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழ் மக்களுக்குச் சார்பான நிலைப்பாட்டையோ அல்லது ஓர் அனுதாபப் பார்வையையோ இலங்கையுடன் நட்புறவைக் கொண்டுள்ள நாடுகள் வெளிக்காட்டுமா என்பது இப்போது கேள்விக்குரிய விடயமாகும். இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இலங்கை அரசுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதன் மூலம் இந்நாட்டில் ஏதாவது ஒரு வகையில் காலூன்றுவதே இவ்வாறான நாடுகளின் நோக்கமாகவுள்ளது என்பது மட்டும் வெளிப்படையான உண்மை